பின் தொடர்வோர்

Saturday 27 May 2017

315. வதனசரோருக

315

வெள்ளிகரம்

இங்கு முருகன் நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் முன் வலக்கரம் அபய ஹஸ்தமாகவும் முன் இடக்கரம் இடுப்பிலும், பின் இருகரங்களில் வஜ்ர சக்தியும் கொண்டு காட்சி அளிக்கிறார்.

வள்ளியை மணக்க விரும்பிய முருகன் அவளைத் தேடி வள்ளிமலைக்கு செல்கிறான். அவளின் மேல் காதால் வசப்பட்டதினால் வள்ளி, என்னுடைய ஊருக்கு வருகிறாயா? இங்கே கிட்டத்தான் இருக்கிறது. இருபத்தைந்தே மைல் தான். குறுக்கே சென்றால் இடையே ஒரு வயல் மட்டும்தான். என்று அவன் அழைத்த வேண்டுகோள்தான் இந்த பாடல்.

     தனன தனாதன தனன தனாதன தனன தனத்த தந்த
          தானாதன தானந் தானன              தந்ததான

வதன சரோருக நயன சிலீமுக வள்ளி புனத்தில் நின்று
   வாராய்பதி காதங் காதரை                              யொன்றுமூரும்
வயலு மொரேவிடை யெனவொ ருகாவிடை வல்ல பமற்ற ழிந்து
   மாலாய்மட லேறுங் காமுக                                 எம்பிரானே
இதவி யகாணிவை ததையெ னவேடுவ னெய்தி டுமெச்சில் தின்று
   லீலாசல மாடுந் தூயவன்                                 மைந்தநாளும்
இளையவ மூதுரை மலைகிழ வோனென வெள்ள மெனக்க லந்து
   நூறாயிர பேதஞ் சாதமொ                                ழிந்தவாதான்
கதைக னசாபதி கிரிவ ளைவாளொடு கைவ சிவித்த நந்த
   கோபாலம கீபன் தேவிம                                 கிழ்ந்துவாழக்
கயிறொ டுலூகல முருள வுலாவிய கள்வ னறப்ப யந்து
   ஆகாய கபாலம் பீறநி                                        மிர்ந்துநீள
விதர ணமாவலி வெருவ மகாவ்ருத வெள்ள வெளுக்க நின்ற
   நாராயண மாமன் சேயைமு                              னிந்தகோவே
விளைவ யலூடிடை வளைவி ளையாடிய வெள்ளி நகர்க்க மர்ந்த
   வேலாயுத மேவுந் தேவர்கள்                              தம்பிரானே

             
பதம் பிரித்து உரை

வதன சரோருக நயன சிலீ முக வள்ளி புனத்தில் நின்று
வாராய் பதி காதம் காதம் அரை ஒன்றும் ஊரும்
வதன - முகம் சரோருகம் - தாமரை போலவும் நயனம் - கண்கள் சிலீமுகம் - அம்பு போலவும் (கொண்ட) வள்ளி - வள்ளி நாயகியின் புனத்தில் - (தினைப்) புனத்தில் நின்று - போய் நின்று வாராய் - வருவாயாக பதி - (எனது) ஊர் காதம் காதம் அரை - இருபத்தைந்து காத தூரம்தான் (10+10+5-25) ஒன்று ஊரும் - எம் பதியாகிய தணிகையும், உன் ஊராகிய வள்ளி மலையும் ஒன்றேதான் (ஒன்றுக்கொன்று மிக நெருங்கி இருக்கின்றன)

வயலும் இரே இடை என ஒரு கா இடை வல்லபம் அற்று அழிந்து
மாலாய் மடல் ஏறும் காமுக எம்பிரானே
வயலும் ஒரே இடை - இரண்டு ஊருக்கும் மத்தியில் ஒரே வயல் தான் உள்ளது என - என்றெல்லாம் கூறி ஒரு கா இடை - (வள்ளியைச் சேர்ந்த) ஒரு சோலையில் வல்லபம் அற்று அழிந்து - உன் வலிமை அற்று அழிந்து மாலாய் - (வள்ளியின் மீது) மோகம் கொண்டவனாய் மடல் ஏறும் காமுக - மடல் ஏறிய காமுகனே எம்பிரானே - எம்பெருமானே (என்றும்)

இதவிய காணிவை ததை என வேடுவன் எய்திடும் எச்சில் தின்று
லீலா சலம் ஆடும் தூயவன் மைந்த நாளும்

இதவிய காண் இவை - இனிப்புள்ளவை இவை ததை எனசதையுடன் கூடியது எனக் (கூறக் கேட்டு) வேடுவன் - வேடனாகிய கண்ணப்பன் எய்திடும் - கொடுத்திட எச்சில் தின்று - எச்சில் உணவைத் தின்று சலம் லீலை - பொய்ம்மையான விளையாடலை ஆடும் தூயவன் - விளையாடிய சுத்த மூர்த்தியாகிய சிவபெருமானின் மைந்த - குமாரனே நாளும் - எப்போதும்


இளையவ மூதுரை மலை கிழவோன் என வெள்ளம் என கலந்து
நூறாயிரம் பேதம் சாதம் ஒழிந்தவா தான்

இளைவ - இளையவனே என்றும் மூதுரை - மூதுரையாகிய திருமுருகாற்றுப் படையில் சொன்னபடி மலை கிழவோனே என - மலைக் கிழவோனே என்றும் (ஓதினால்) வெள்ளம் எனக் - வெள்ளக் கணக்காக எண்ணிக்கை உடையதாய் கலந்து - கூடி நூறாயிர பேதம் - பல ஆயிரக் கணக்கான பேதமாக வரும் சாதம் - பிறப்புக்களை ஒழிந்தவா தான் - ஒழிந்த அற்புதம் தான் என்ன

கதை கன சாப(ம்) திகிரி வளை வாளோடு கை வசிவித்த
நந்த கோபால மகீபன் தேவி மகிழ்ந்து வாழ்
கதை - (கெளமோதகி என்னும்) கதையும் கன - பெருமை வாய்ந்த சாபம் - சாரங்கம் என்னும் வில்லும் திகிரி - சுதரிசனம் என்னும் சக்கரமும் வளை - (பாஞ்ச சன்னியம் என்னும்) சங்கமும் வாளொடு - (நாந்தகம் என்னும்) வாளும் (ஆகிய ஐந்து படைகளை) கை - கையில் வசிவித்த - தங்க வைத்த நந்த கோபால மகீபன் - நந்த கோபாலன் என்னும் அரசனுடைய தேவி - தேவியாகிய யசோதை மகிழ்ந்து வாழ - மகிழ்ந்து வாழ

கயிறோடு உலூகலம் உருள உலாவிய கள்வன் அற பயந்து
ஆகாய கபாலம் பீற நிமிர்ந்து நீள

உலூகலம் - உரலோடு கயிறோடு - கயிற்றால் கட்டப்பட்டு உருள - (அந்த உரலை இழுத்து) உருள உலாவிய - உலாவிய கள்வன் - (வெண்ணெய், தயிர் ஆகியவற்றைத்) திருடிய கண்ணன் அறப் பயந்து - மிகப் பயப்படும்படி ஆகாய - வானத்தையும் கபாலம் - (தமது) தலை பீற - கிழியும்படி நிமிர்ந்து நீள - நிமிர்ந்து நீண்டு

விதரண மாவலி வெருவ மகா விருத வெள்ள வெளுக்க நின்ற
நாராயண மாமன் சேயை முனிந்த கோவே

விதரண மாவலி
- கொடையில் சிறந்த மகாபலிச் சக்கரவர்த்தி வெருவ - அச்சம் உற மகா விருத - சிறந்த விரத சீல உருவத்து (வாமனனாக) வெள்ள வெளுக்க - பகிரங்கமாய் நின்ற - எதிரில் நின்ற நாராயண மாமன் - நாராயணனாகிய திருமாலின் சேயை - குழந்தையாகிய பிரமனை முனிந்த கோவே - கோபித்தத் தலைவனே

விளை வயல் ஊடு இடை வளை விளை ஆடிய வெள்ளி நகர்க்கு அமர்ந்த
வேலாயுத மேவும் தேவர்கள் தம்பிரானே

விளை வயலூடு இடை - விளைச்சல் உள்ள வயலிடையே வளை - சங்குகள் விளையாடிய - விளையாடுகின்ற வெள்ளி நகர்க்கு அமர்ந்த - வெள்ளி நகரில் வீற்றிருக்கும் (வேலாயுதனே) மேவும் - (உன்னை) விரும்பும் தேவர்கள் தம்பிரானே - தேவர்கள் தம்பிரானே

சுருக்க உரை

முகம் தாமரை போலவும், கண் அம்பு போலவும் உள்ள வள்ளி நாயகி வாழ்ந்த தினைப்புனத்துக்குப் போய், என்னுடன் வருக, என் ஊர் கொஞ்ச தூரத்தில் தான் இருக்கின்றது இரண்டு ஊர்களுக்கும் இடையே ஒரே ஒரு வயல் தான் இருக்கின்றது என்றெல்லாம் கூறி, அந்தச் சோலையில் உன் வலிமையை இழந்து, அவள் மேல் காதல் பூண்டு, மடல் ஏறிய பெருமானே, தான் கொண்டு வந்த உணவு இனிப்பானது என்று வேடனாகிய கண்ணப்பர் கொடுத்த எச்சில் உணவைத் தின்று, திருவிளையாடல் புரிந்த சிவபெருமானின் குமாரனே இளையவனே, மலைக் கிழவனே, என்று ஓதினால், பல்லாயிரக் கணக்கான பிறப்புக்கள் ஒழிந்து போயின. இது என்ன அற்புதம்!

கெளமோதகி என்னும் கதையும், சாரங்கம் என்னும் வில்லும், சுதரிசனம் என்னும் சக்கரமும், பாஞ்ச சன்னியம் என்னும் சங்கமும் கையில் எந்திய, அசோதை மகிழ்ந்தவனும், வெண்ணெய், தயிர் ஆகியவைகளைத் திருடி, உரலோடு கட்டப்பட்டக் கள்வனும்வாமனனாக வந்து மகா பலிச் சக்கரவர்த்தி அச்சம் உற, நெடிய உருவம் எடுத்தவனுமாகிய திருமாலின் மகனான பிரமனைக் கோபித்தத் தலைவனே, செழிப்பான வயல்கள் இடையே சங்குகள் தவழ்ந்து விளையாடும் வெள்ளி நகரில் வீற்றிருக்கும் வேலாயுதனே, தேவர்கள் தம்பிரானே உன்னை மலைக் கிழவன் என்று ஓதினால் பிறப்புக்கள் ஒழியும் அற்புதம் தான் என்ன

விளக்கக் குறிப்புகள்

பதி - திருத்தணிகை

மாலாய் மடலேறு காமுக
மடல் ஏறுதல் - தலைவன் ஒவ்வாக் காமத்தால் பனங்கருக்கால் குதிரை, வண்டில் முதலிய உருவம் செய்து, உடல் எங்கும் நீறு பூசி, அக்குதிரையின் மேல் ஏறுதல். முருகன் மடலேறுவது மானிடப் பெண்டிரைக் கடவுள் நயப்பது

இதவிய காணிவை ததை என வேடுவன்
இது கண்ணப்பர் வரலாற்றைக் குறிகும் இதன் விளக்கம்
திண்ணனார் என்னும் வேடன் வேட்டை ஆடக் காளத்தி மலைக்குச் சென்ற போது, அம்மலையில் சிவபிரானது திருவுருவச் சிலையைக் கண்டு மனம் நெகிழ்ந்தார் தம்முடன் வந்த நாணன் என்பவரைப் பச்சிலையையும், பூவையும் அச்சிலைக்கு இட்டது யார் என்று வினவினார் ஒரு அந்தணர் இங்ஙனம் பூசை செய்வதாக அறிந்து, அது முதல் தாமும் அங்ஙனமே தினமும் பூசை செய்யத் தொடங்கினார் இதை அறிந்த சிவகோசரியார் ஆகிய அந்தணர் சீற்றம் கொண்டு, இறைவனை அபசாரம் செய்தவனைத் தண்டிக்க வேண்டினார் இறைவன் மறு நாள் மறைந்திருந்து திண்ணப்பரின் அன்பைக் காணுமாறு பணித்தார் திண்ணப்பர் மறு நாள் வந்ததும் இறைவன் கண்ணிலிருந்து இரத்தம் வடிவதைக் கண்டு பதை பதைத்தார் பச்சிலையில் உதிரம் நிற்காமல் போகவே, தன் ஒரு கண்ணைக் கொய்து இறைவன் கண்ணில் அப்பினார் இரத்தம் நின்றது ஆனால் இரத்தம் மற்ற கண்ணிலிருந்து வடிய ஆரம்பித்தது கண்ணப்பராகிய திண்ணனார் தமது அடுத்த கண்ணையும் பறிக்க முயன்ற போது, இறைவன் நில்லு கண்ணப்ப என்று அவரைத் தடுத்து ஆட்கொண்டார்

வாய் கலசம் ஆக வழிபாடு செயும் வேடன் மலர் ஆகும் நயனம்
காய் கணையினால் இடந்து ஈசன் அடி கூடு காளத்தி மலைய
            சம்பந்தர் தேவராம்

 கூசாது வேட னுமிழ்தரு நீராடி யூனு ணெனுமுரை
 கூறாம னீய அவனுகர் தரு சேடங் ,,,                 திருப்புகழ், ஆசாரவீன

  --------------------------புன வேடன்
பச்சிலைக்கும் வாய்க்குள் எச்சிலுக்கும் வீக்கு
பை சிலைக்கும் ஆட்கொள் அரன் வாழ்வே    .... . திருப்புகழ், மச்ச மெச்சு

நூறாயிர பேதம் சாதம் ஒழிந்தவா
உரைசேரும் எண்பத்துந் நான்கு நூறாயிரமாம் யோனி பேதம்
`         சம்பந்தர் தேவாரம்
ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானிடம்
நீர்பறவை நாற்காலோர் பப்பத்தாம்......                        ...கலி வெண்பா

முடியாப் பிறவிக் கடலில்                            .    ...  கந்தர் அலங்காரம்


கயிறோடு லூகல முருள
பொத்த உரலைக் கவிழ்ந்து அதன் மேலேறி
தித்தித்த பாலும் தடவினில் வெண்ணெயும்
மெத்தத் திருவயிறார விழுங்கிய அத்தன்                  ...பெரிய திருமொழி

மாவலி வெருவ மகா வ்ருத
மாபலியைச் சிறை வைத்தவன்                         திருப்புகழ், எலுப்புநாடி
வடிவுகுறகாலி மாபலியை கவலிய சிறையிட .           ... சீர்பாத வகுப்பு          
மூவடி கேட்டன்று மூதண்ட கூட முகடுமுட்டச்      ..  கந்தர் அலங்காரம் 

திருமால் காசிபரிடத்து வாமனனாக அவதரித்து, அசுர சக்ரவர்த்தி 
மாபலியிடம்  மூன்று அடி மண் கேட்டார் அசுரப் புரோகிதன் சுக்கிரன் 
இது விஷ்ணுவின் மாயை என்று தடுத்தார் வாமனர் இரண்டு 
அடியால் மூவுலகை அளந்து, ஓரடி வைக்க இடம் பெறாமலிருக்க
மாவலி தன் தலையைக் காட்டினார் திருமால் மூன்றாவது 
அடியால் மாவலியைப் பாதளத்தில் அழுத்திச் சிறை இட்டார் 

குறியவன் செப்பப் பட்ட எவர்க்கும்
பெரியவன் கற்பிக் கப்படு சுக்ரன்
குலைகுலைந் துட்கச் சத்ய மிழற்றுஞ் சிறுபாலன் ...திருப்புகழ், செறிதரும்

நாராயண மாமன் சேயை முனிந்த கோவே
மறையன்றலை யுடையும்படி நடனங் கொளு மாழைக் கதிர்வேல்
                                                                 திருப்புகழ், முகசந்திர
மேருவை நீறெ ழுப்பி நான்முக னார்பதத்தில்
வேலடையாள மிட்ட பெருமாளே            ,,, திருப்புகழ், தேதெனவாச