பின் தொடர்வோர்

Monday 24 July 2017

323. அகர முதல் என

323
பொது
 
சாதகர்கள் நிஷ்டையில் இருக்கும்பொழுது பல செய்திகள் அவர்கள் காதில் ஒலிக்கின்றன. உலக நன்மையின் பொருட்டு அவர்கள் அவற்றை மந்திரங்களாக எடுத்து உரைக்கின்றனர் இதுவே வேதம். முதல் முதலில் காதின் வழியாக கேட்கப்பட்டு இது வந்ததால் சுருதி என்று பெயர். இவை பல கைப்பட்டாலும் கடைசியில் ஒரே பரம் பொருளைத்தான் உணர்த்துகிறது. இந்த தனிப் பொருளை உணர்த்தி அருள்வாயே. அபரிமித சுருதியும் அடங்கும் தனி பொருளை எப்பொருளும் ஆய விளங்கும்படிக்கு இனிது உணர்த்தி அருள்வாயே
                                                குகஸ்ரீ ரசபதி விளக்கம்



           தனனதன தனனதன தந்தந்த தத்ததன
           தனனதன தனனதன தந்தந்த தத்ததன
           தனனதன தனனதன தந்தந்த தத்ததன   தத்ததனதான
 
 அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும்
    அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும்
    அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை       எப்பொருளுமாய
 அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய
    முடிவையடி நடுமுடிவில் துங்கந்த  னைச்சிறிய
    அணுவையணு வினின்மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு மற்றதொரு காலம்
 நிகழும்வடி வினைமுடிவி லொன்றென்றி ருப்பதனை
    நிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனை
    நிகர்பகர அரியதைவி சும்பின்பு ரத்தரயமெ       ரித்தபெருமானும்
 நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு
   பரவஅரு ளியுமவுன மந்த்ரந்த னைப்பழைய
     நினதுவழி யடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது  ணர்த்தியருள்வாயே
 தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு
   டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு
   தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத           தத்ததகுதீதோ
தனதனன தனதனன தந்தந்த னத்ததன
   டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு
   தரரரர ரிரிரிரிரி யென்றென்றி டக்கையுமு          டுக்கையுமியாவும்
மொகுமொகென அதிரமுதி ரண்டம்பி ளக்கநிமிர்
   அலகைகர ணமிடவுல கெங்கும்ப்ர மிக்கநட
   முடுகுபயி ரவர்பவுரி கொண்டின்பு றப்படுக       ளத்திலொருகோடி
முதுகழுகு கொடிகருட னங்கம்பொ ரக்குருதி
    நதிபெருக வெகுமுகக வந்தங்கள் நிர்த்தமிட
    முரசதிர நிசிசரரை வென்றிந்தி ரற்கரச           ளித்தபெருமாளே.
 
பதம் பரித்தல்
 
அகர முதல் என உரை செய் ஐம்பந்தொரு அக்ஷரமும்
அகில கலைகளும் வெகு விதம் கொண்ட தத்துவமும்
அபரிமித சுருதியும் அடங்கும் தனி பொருளை எப்பொருளும் ஆய

அறிவை அறிபவர் அறியும் இன்பம் தனை துரிய
முடிவை அடி நடு முடிவு இல் துங்கம் தனை சிறிய
அணுவை அணுவினின் மலமும் நெஞ்சும் குண த்ரியமும் அற்றது ஒரு காலம்

நிகழும் வடிவினை முடிவில் ஒன்று என்று இருப்பதனை
நிறைவு குறைவு ஒழிவு அற நிறைந்து எங்கும் நிற்பதனை
நிகர் பகர அரியதை விசும்பின் புர த்ரயம் எரித்த பெருமானும்

நிருப குருபர குமர என்று என்று பத்தி கொடு
பரவ அருளிய மவுன மந்த்ரந்தனை பழைய
நினது வழி அடிமையும் விளங்கும்படிக்கு இனிது உணர்த்தி அருள்வாயே

தகுதகுகு......என்று என்று இடக்கையும் உடுக்கையும் இயாவும்

மொகு மொகு என அதிர முதிர் அண்டம் பிளக்க நிமிர்
அலகை கரணம் இட உலகு எங்கும் ப்ரமிக்க நடம்
முடுகு பயிரவர் பரிவு கொண்டு இன்புற படு களத்தில் ஒரு கோடி

முது கழுகு கொடி கருடன் அங்கம் பொர குருதி
நதி பெருக வெகு முக கவந்தங்கள் நிர்த்தம் இட
முரசு அதிர நிசிசரரை வென்று இந்திரற்கு அரசு அளித்த பெருமாளே.

 
பத உரை
அகர முதல் என உரை செய் ஐம்பந்தொரு அக்ஷரமும்
அகில கலைகளும் வெகு விதம் கொண்ட தத்துவமும்
அபரிமித சுருதியும் அடங்கும் தனி பொருளை


அகர முதல் என உரை செய் - அகரத்தை முதல் எழுத்தாகக் கூறப்படும்
ஐம்பந்தொறு அக்ஷரமும் - ஐம்பத்தொன்று   எழுத்துக்களையும்
அகில கலைகளும் - அறுபத்து நான்கு கலைகளையும்
வெகு விதம் கொண்ட தத்துவமும் - பல வகையான உண்மைப் பொருள்களையும்
அபரிமித சுருதியும் - எண்ணரிய மறைப் பொருள்களையும்
அடங்கும் தனிப் பொருளை - தனக்குள் அடக்கிக் கொண்டிருக்கும் ஒப்பற்ற பொருளை

                                                எப்பொருளும் ஆய
அறிவை அறிபவர் அறியும் இன்பம் தனை துரிய
முடிவை அடி நடு முடிவு இல் துங்கம் தனை சிறிய
அணுவை அணுவினின் மலமும் நெஞ்சும் குண த்ரியமும் அற்றது ஒரு காலம்



எப் பொருளும் ஆய - எல்லாப் பொருள்களாக விளங்கும்.
அறிவை - ஞான நிலையை
அறிபவர் அறியும் - அறிந்தவர்கள் அறிந்து அனுபவிக்கும்.
இன்பம் தனை - இன்பப் பொருளை
துரிய முடிவை - தன் மயமாய் நிற்கும் உயர் நிலையில் விளங்கும் முடிவுப் பொருளை
அடி நடு முடிவு இல் - முதல், நடு, இறுதி இல்லாத
துங்கம் தனை - உயர் பொருளை
சிறிய அணுவினின் அணுவை - மிகச் சிறிய அணுவுக்கும் அணுவாய் விளங்கும் பொருளை
மலமும் - ஆணவம், கருமம், மாயை என்று மும்மலங்களும்.
நெஞ்சும் - மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய நான்கு கரணங்களும்
குண த்ரியமும் - சத்துவம், இராசதம், தாமதம் என்ற முக்குணங்களும்
அற்றதொரு காலம் - இவைகள் பலவும் நீங்கின ஒரு கால நிலையில்


நிருப குருபர குமர என்று என்று பத்தி கொடு
பரவ அருளிய மவுன மந்த்ரந்தனை பழைய
நினது வழி அடிமையும் விளங்கும்படிக்கு இனிது உணர்த்தி அருள்வாயே


நிருப - அரசே
குருபர குமர - குரு மூர்த்தியே, குமரனே
என்று என்று - என்றெல்லாம்
பத்தி கொடு - பக்தியுடன்
பரவ - போற்றிய பொழுது
அருளிய - நீ அவருக்கு உபதேசித்து அருளிய மவுன மந்த்ரந்தனை - மவுன மந்திரத்தை
பழைய நினது - உன்னுடைய பழமையான
வழி அடிமையும் விளங்கும்படிக்கு - வழி அடிமையாகிய   அடியேனுக்கும் விளங்குமாறு இனிது உணர்த்தி அருள்வாயே - இனிமை தரும் வகையில் உபதேசித்து அருள்வாயாக.

நிகழும் வடிவினை முடிவில் ஒன்று என்று இருப்பதனை
நிறைவு குறைவு ஒழிவு அற நிறைந்து எங்கும் நிற்பதனை
நிகர் பகர அரியதை விசும்பின் புர த்ரயம் எரித்த பெருமானும்

நிகழும் - விளங்குவதான
வடிவினை - சொரூபத்தை  முடிவில் - (யுகாந்த காலத்தில்) முடிவுப் பொருளாய்
ஒன்று என்று இருப்பதனை - ஒன்று என்னும்படி நிலைத்திருக்கும் பொருளை [எல்லாம் அழிந்த நிலையிலும்  ஏகவஸ்துவாக விளங்கும் தத்துவத்தை விளக்கி அருள்வாயே]

நிறைவு குறைவு - நிறைந்தது குறைந்தது  ஒழிவு அற நிறைந்து - சிறிதும் இன்றியும் நீங்கும் தன்மை இல்லாமலும்
எங்கும் நிற்பதனை - எங்கும் நிற்கும் பொருளை
[பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைகின்ற அந்த பரிபூரணாந்த சொருபத்தை விளக்கி அருள்வாயே]
நிகர் பகர அரியதை - இணை இது என்று சொல்ல முடியாது திகழும் பொருளை விசும்பின் புரத்ரயம் - ஆகாயத்தில் பறந்து செல்லும் முப்புரங்களை
எரித்த பெருமானும் - எரித்த சிவபெருமானும்



தகுதகுகு............என்று என்று இடக்கையும் உடுக்கையும் இயாவும்

தகுதகு............. என்று என்று - தகுதகுகு... என்று பல முறை இடக்கை உடுக்கை இயாவும் - இடக்கை, உடுக்கை என்னும் வாத்தியங்கள் இவை எல்லாமும்

குகஸ்ரீ ரசபதி தந்த பதவுரை

தகு - இயல்புடன் செலுத்தும் தகு - உரிமை, கு -  குற்றமே ( எல்லாமே எமதுடையது, எல்லோரும் எமது அடிமைகளே என்று மோதி உரிமை கொண்டாடுவது உமது முதல் பிழை), தகு - நமக்கு தகுதி என்று மேற்கொண்ட தகு -  உங்கள் ஒழுக்கம் கு - அற்பமானது ( ஏன் தீய ஒழுக்கத்தை மேற்கொண்டிர். அதனால் தான் சாவு இப்போது உங்களைத் தழுவுகிறது என்று எண்ணி சாடுவது இரண்டாவது பிழை) தம் தந்த - தாம் செய்த தவத்தின் குத்த - பாதுகாப்பு, குகு - இப்போது இருண்டு விட்டது ( திரியும் நெய்யும் உள்ளவரை தின் தீபம் எரியும். பின்பு அணைந்து விடும். அது போல ஈட்டின புண்ணியத்தின் பலனை அனுபவித்த பின் வாழ்வு பொய்த்துவிடும்)  டி - பாவத் தீ, குகு - நரம்புகளில் குடி -  நிலைத்து குடி இருக்கின்றன (நீங்கள்  இது காரும் செய்த பாவத் தீ உங்கள் நாடி நரம்புகளில் அனைத்தும் றைந்துகாணப்படுகின்றன) டிகு டிகுகு டிகு - திகு திகு  என்று கு - உங்கள் செழிப்பெல்லாம் மண் ஆயின டிண் டிண்டி- டிண் டிண்டி எனக் கொட்டும்  உங்கள் அந்திமக் கால பறையின் பேரொலி, கு - நிலவும் இந்த உலகெல்லாம்  குடிகு - நிறைந்து குடி கொண்டுள்ளன தகுத - இது உங்களுக்கு தகுதியே, கெண  கெண - உங்கள் கணங்கள் முழுவதும்  செகுத - கால் வேறு தலை வேறாக  சேதிக்கப் பட்டன, தந்தந் தரித்த - தம் தம் பெரிய வாய்களை குத - இப்போது  குழப்புகிறீர்கள் தகு - முருகனால் அளிக்கப் பட்ட இந்த தகுதியான தண்டனை,  தத்த - ஆபத்தைக் கொடுக்கும் தீதோ - ஆனால் தனுமை அல்ல (உங்கள் மும்  மலங்களை அழித்து பரிசுத்தம் நன்மையே அன்றி தீமை இல்லை) தன -  பொன்னும், தன - போகானுபவமும் னத -  இதுவரை பெற்றிருந்தீர்கள், ன தன  - அவை இன்று காத துரம் ஓடி ஒளிந்து கொண்டன தந்தந் தனத்த - யானைத் தந்தம் போன்ற பெண்ணின் மார்பு சுகமும் தன - கனந்த செல்வம் மிகுந்த வாழ்கையும், டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு - சடு குடு வாழ்வாகி  பல் இளைத்து ன - காணாமல் போய் விட்டது தர - உங்கள் தரமான உயிரும் உடமையும் ரரர - ராட்டினம் சுற்றும் இந்த சூழ்நிலை ரிரி ரிரிரி - ஐந்து இந்திரிய  சேஷ்டை யினால் விளைந்த துர்பாக்கியம்தான் என்று என்று- என்று பல முறை,

மொகு மொகு என அதிர முதிர் அண்டம் பிளக்க நிமிர்
அலகை கரணம் இட உலகு எங்கும் ப்ரமிக்க நடம்
முடுகு பயிரவர் பரிவு கொண்டு இன்புற படு களத்தில் ஒரு கோடி

மொகு மொகு என அதிர - மொகு மொகு என்று பேரொலியுடன் முழங்க நிமிர் - நிமிர்ந்து நின்று அலகை - பேய்க்  கூட்டங்கள்
கரணம் இட - கூத்து வகைகள் ஆட
உலகு எங்கும் ப்ரமிக்க - உலகில் எங்கு உள்ளாரும் திகைத்து மயங்க
நடம் முடுகு - வேகமாக நடனம் இடும்
பயிரவர் - பயிரவ மூர்த்திகள் பவுரி கொண்டு இன்புற - மண்டலமிட்டுக் கூத்தாடி மகிழ
படு களத்தில் - (அசுரர்கள்) இறந்து படும் போர்க் களத்தில் ஒரு கோடி - ஒரு கோடிக் கணக்கான

முது கழுகு கொடி கருடன் அங்கம் பொர குருதி
நதி பெருக வெகு முக கவந்தங்கள் நிர்த்தம் இட
முரசு அதிர நிசிசரரை வென்று இந்திரற்கு அரசு அளித்த பெருமாளே.
 
முது கழுகு  - வயது முதிர்நத கழுகுகள்
கொடி கருடன் - காகங்களும் கருடன்களும்
அங்கம் பொர - (பிணங்களின்) அங்கங்களைக் கொத்தித் தாக்க குருதி நதி பெருக - இரத்த ஆற்று வெள்ளம் பெருக
வெகு முக கவந்தங்கள் - பல வகையான தலை அற்ற உடல்கள் நிர்த்தம் இட - கூத்தாட
முரசு அதிர - முரசு வாத்தியம் பேரொலி எழுப்ப
நிசிசரரை வென்று - அசுரர்களை வெற்றி கொண்டு
இந்திரற்கு - இந்திரனுக்கு
அரசு அளித்த - விண்ணுலக ஆட்சியைத் தந்தருளிய
பெருமாளே -  பெருமாளே
 
சுருக்க உரை
 
அகரம் முதலான எழுத்துக்களையும், எல்லா கலைகளையும், மறைகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் ஒப்பற்ற மெய்ப்பொருளை, ஞான நிலையில் மட்டும் அறியக் கூடும் இன்பப் பொருளை, யோகியர் தன் மயமாக நிற்கும் உயர் நிலையில் மட்டும் விளங்கும் பொருளை, முதல் நடு, முடிவு இல்லாத உயர் பொருளை, மும்மலங்களும், முக்கரணங்களும் கடந்து விளங்கும் முடிவுப் பொருளை, முப்புரம் எரித்த சிவ பெருமான் போற்றிய போது நீ உபதேசித்து அருளியப் பொருளை, வழி அடிமையாகிய எனக்கும் உபதேசம் செய்க.

பல வாத்தியங்கள் பேரொலி செய்யவும், கழுகுகளும், காகங்களும், பேய்களும் பிணங்களைத் தின்று நடனம் செய்யவும், போர்க்களத்தில் அசுரர்களை அழித்து இந்திரனுக்கு விண்ணுலக ஆட்சியைத் தந்தருளிய பெருமாளே, மவுன மந்திரத்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்ததைப் போல் எனக்கும் உணர்த்தி
அருள்வாயே. 
 
விளக்கக் குறிப்புகள்
 
அகரமுத லெனவுரை செய் ஐம்பந்தொ ரக்ஷரமும்....
மூலாதாரம் – 4, சுவாதிஷ்டானம் – 6, மணி பூரகம் – 10, அனாகதம்
-12, விசுத்தி – 16. ஆஞ்ஞை - 3. மொத்தம் - 51.

ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும்
ஐம்ப தெழுத்தே அனைத்தாக மங்களும்
ஐம்ப தெழுத்தின் அடைவை அறிந்தபின்
ஐம்ப தெழுத்தே அஞ்செழுத் தாமே          --- திரு மந்திரம்.

அகர மாதி யாமக்ஷ ரங்க
அவணி கால்வி ணாரப் பொடங்கி
அடைய வேக ரூபத்தி லொன்றி முதலாகி
                                         ---திருப்புகழ், முகமெலாநெய்

அகர முதலுருகொ ளைம்பபந் தொரக்ஷரமொ
டகில புவனநதி யண்டங் களுக்குமுத
இருண கிரணவொளி யெங்கெங் குமுற்றுமுதல் நடுவான
                                               - திருப்புகழ்,  அமலகமல

விளங்கும்படிக்கு இனிது உணர்த்தி அருளாயோ...
அருணகிரி நாதர் சிவனுக்கு உபதேசித்த இரகிசியத்தைத் தமக்கும் உபதேசிக்குமாறு பல உத்திகளைக் கையாண்டு உள்ளார்.

நயமாகக் கேட்டது -

நாதா குமரா நமஎன் றரனார்
ஓதாய்என ஓதிய தெப்பொருள்தான்            --- கந்தர் அனுபூதி

நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு பரவ 
                            - திருப்புகழ் 323 (இப்பாடல்)         
          
ஏமாற்றும் வகையில் கேட்டது -
வேண்டாமை யொன்றைய டைந்துள
 மீண்டாறி நின்சர ணங்களில்
வீழ்ந்தாவல் கொண்டுரு கன்பினை யுடையோனாய்
                   --திருப்புகழ்  412 ,மாண்டாரெலும்              
ஏசும் வகையில் கேட்டது -
செயல்மாண்டு சித்த மவிழ நித்தத்
 த்வம்பெ றப்ப கர்ந்த வுபதேசம்
சிறியேன்த னக்கு முரைசெயிற்சற் றுங்கு ருத்து வங்கு
றையுமோதான்        - திருப்புகழ்  293, சயிலாங்கனை.

விசும்பின்பு ரத்ரயமெ ரித்தபெரு மானும்.....
அரிய திரிப்புர மெரிய விழித்தவன்... திருப்புகழ், குருவியென