பின் தொடர்வோர்

Wednesday 19 September 2018

342.உறிவின்முறை

342
பொது

தனனதன தனனதன தானான தானதன
தனதனன தனனதன தானான தானதன
தனதனன தனனதன தானான தானதன    தந்ததான

உறிவின்முறை கதறியழ ஊராரு மாசையற
   பறைதிமிலை முழவினிசை யாகாச மீதுமுற
   உலகிலுள பலரரிசி வாய்மீதி லேசொரியு         மந்தநாளில்
உனதுமுக கருணைமல ரோராறு மாறிருகை
   திரள்புயமு மெழில்பணிகொள் வார்காது நீள்விழியும்
   உபயபத மிசைகுலவு சீரேறு நூபுரமும்           அந்தமார்பும்
மறையறைய அமரர்தரு பூமாரி யேசொரிய
   மதுவொழுகு தரவில்மணி மீதேமு நூலொளிர
   மயிலின்மிசை யழகுபொலி யாளாய்மு னாரடியர்    வந்துகூட
மறலிபடை யமபுரமு மீதோட வேபொருது
   விருதுபல முறைமுறையி லேயூதி வாதுசெய்து
   மதலையொரு குதலையடி நாயேனை யாளஇஙன் வந்திடாயோ
பிறையெயிறு முரணசுரர் பேராது பாரில்விழ
   அதிரஎழு புவியுலக மீரேழு மோலமிட
   பிடிகளிறி னடல்நிரைகள் பாழாக வேதிசையில்   நின்றநாகம்
பெரியநெடு மலையிடிய மாவாரி தூளியெழ
   பெரியதொரு வயிறுடைய மாகாளி கூளியொடு
   பிணநிணமு முணுவுசெய்து பேயோடு மாடல்செய  வென்றதீரா
குறமறவர் கொடியடிகள் கூசாது போய்வருட
   கரடிபுலி திரிகடிய வாரான கானில்மிகு
   குளிர்கணியி னிளமரம தேயாகி நீடியுயர்          குன்றுலாவி
கொடியதொரு முயலகனின் மீதாடு வாருடைய
   வொருபுறம துறவளரு மாதாபெ றாவருள்செய்
   குமரகுரு பரஅமரர் வானாடர் பேணஅருள்         தம்பிரானே


பதம் பிரித்து உரை

உறவின் முறை கதறி அழ ஊராரும் ஆசை அற
பறை திமிலை முழவின் இசை ஆகாச(ம்) மீது உற
உலகில் உள பலர் அரிசி வாய் மீதிலே சொரியும் அந்த நாளில்

உறவின் முறை - உறவு முறை கொண்ட சுற்றத்தினர் கதறி அழ - கதறி அழ ஊராரும் - ஊரில் உள்ளவர்களும் ஆசை அற - (இனி என்ன செய்வது என்று) ஆசையற்றுக் கைவிட பறை திமிலை முழவின் இசை - பறை, திமிலை, முரசு ஆகிய வாத்தியங்களின் ஒலி ஆகாசம் மீது உற - ஆகாய முகடு வரை எழ உலகில் உ(ள்)ள பலர் - உலகில் உள்ள பலரும் அரிசி வாய் மீதிலே சொரியும் - வாக்கரிசி இடும் அந்த நாளில் - அந்தக் கடை நாளில்
உனது முக கருணை மலர் ஓராறும் ஆறு இரு கை
திரள் புயமும் எழில் பணி கொள் வார் காது நீள் விழியும்
உபய பதம் மிசை குலவு(ம்) சீர் ஏறு நூபுரமும் அந்த மார்பும்


உனது முக கருணை மலர் - உன்னுடைய கருணைத் திருமுக மலர்கள் ஓராறும் - ஒரு ஆறும் ஆறு இரு கை - பன்னிரண்டு திருக்கரங்களும் திரள் புயமும் - திரண்ட தோள்களும் எழில் - அழகிய பணி கொள் - அணி கலன்களாகியக் குண்டலங்களைக் கொண்ட வார் காது - வரிசையான காதுகளும் நீள் விழியும் - நீண்ட கண்களும் உபய பதம் மிசை - இரண்டு திருவடிகளின் மீதும் குலவும் - விளங்கும் சீர் ஏறு நூபுரமும் - சிறப்பு மிக்க சிலம்பும் அந்த மார்பும் - அழகிய அந்த மார்பும்

மறை அறைய அமரர் தரு பூமாரியே சொரிய
மது ஒழுகு தரவில் மணி மீதே முன்னூல் ஒளிர
மயிலின் மிசை அழகு பொலி ஆளாய் முன் ஆர் அடியர் வந்து கூட

மறை அறைய - வேதங்கள் ஒலிக்க அமரர் தரு - கற்பகம் முதலான தேவ லோக மரங்கள் பூ மாரியே சொரியும் - பூ மழை சொரிய மது ஒழுகு - தேன் ஒழுகும் தரவில் மணி மீதே - மணி மாலையின்மேல் முன்னூல் ஒளிர - பூணூலும் விளங்க மயிலின் மிசை - மயிலின் மேல் அழகு பொலி - அழகு விளங்கும் ஆளாய் - நம்பியாக முன் - முன்பு ஆர் அடியர் - நிறைந்த அடியார்கள் வந்து கூட - உடன் வந்து கூட

மறலி படை யமபுரமும் மீது ஆடவே பொருது
விருது பல முறை முறையிலே ஊதி வாது செய்து
மதலை ஒரு குதலை அடி நாயேனை ஆள இ(ங்)ஙன் வந்திடாயோ

மறலி படை - யமனுடைய படைகள் யமபுரமும் மீது ஓடவே - யமபுரத்தை நோக்கி ஓட்டம் பிடிக்கும்படி பொருது - அவர்களுடன் போர் புரிந்து விருது பல - பல வெற்றிச் சின்னங்கள் முறை முறையிலே ஊதி - வரிசை வரிசையாக ஊதி வாது செய்துதர்க்கம் செய்து மதலை - குழந்தை அன்பு கொண்டவனான ஒரு குதலை அடி நாயேனை - ஒரு மழலைச் சொல் பேச்சுள்ள அடி நாயேனை ஆள - ஆட்கொள்ள (ங்)ஙன் வந்திடாயோ - இவ்வாறு வந்து உதவ மாட்டாயோ?

பிறை எயிறு முரண் அசுரர் பேராது பாரில் விழ
அதிர எழு புவி உலகம் ஈரேழும் ஓலம் இட
பிடி களிறின் அடல் நிரைகள் பாழாகவே திசையில் நின்ற நாகம்

பிறை எயிறு - பிறைச் சந்திரன் போன்ற பற்களும் முரண் அசுரர் - முரண் வலிமையும் கொண்ட அசுரர்கள் பேராது - வேறு இடங்களுக்குப் போக முடியாமல் பாரில் விழ - பூமியில் மாண்டு விழ எழு புவி அதிர - ஏழு உலகத்தினரும் நடுங்க உலகம் ஈரேழும் ஓலம் இட - பதினாலு உலகத்தினரும் அபயக் கூச்சலிட பிடி - பெண் யானை களிறு - ஆண் யானை (இவற்றின்) அடல் நிரைகள் - வலிமை பொருந்திய வரிசைகள் பாழாகவே - பாழ் பட்டு அழிய திசையில் நின்ற நாகம் - அஷ்ட திக்குகளில் உள்ள பாம்புகள்

பிரிய நெடு மலை இடிய மா வாரி தூளி எழ
பெரியது ஒரு வயிருடைய மா காளி கூளியொடு
பிண நிணமும் உணவு செய்து பேயோடும் ஆடல் செய வென்ற தீரா

பிரிய - இடம் விட்டு ஓட்டம் கொள்ள நெடு மலை இடி - மேரு முதலிய மலைகள் இடிந்து விழ  மா வாரி - பெரிய கடல் தூளி எழ - வற்றிப் புழுதி கிளம்ப பெரியதொரு வயிறுடைய - பெரிய வயிற்றை உடைய மா காள - மகா காளி கூளி ஒடு - பேய்களோடு பிண நிணமும் உணவு செய்து - பிணத்தின் கொழுப்பையும் மாமிசத்தையும் உண்டு பேயோடும் ஆடல் செய - அந்தப் பேய்களோடு கூத்தாடும் வண்ணம் போர் செய்து வென்ற தீரா - வெற்றி கொண்ட தீரனே

குற மறவர் கொடி அடிகள் கூசாது போய் வருட
கரடி புலி திரி கடிய வாரான கானில் மிகு
குளிர் கணியின் இள மரமதே ஆகி நீடி உயர் குன்று உலாவி


குறு மறவர் - குறக்குல மலை வேடர்களின் கொடி - கொடி போன்ற வள்ளி நாயகியின் அடிகள் - திருவடிகளை  கூசாது - வெட்கம் இல்லாமல் போய் வருட - (நீ) காலைப் பிடிக்க கரடி புலி திரி - கரடியும், புலியும் திரிகின்ற கடிய வாரான - கடுமையான நீண்ட கானில் மிகு - காட்டில் விளங்கி எழுந்த குளிர் கணியின் இள மரம் அதே ஆகி - வேங்கையின் இள மர உரு எடுத்து நீடி உயர் - நீண்டு உயர்ந்திருந்த குன்று உலாவி - வள்ளி மலையில் உலவியவனே

கொடியது ஒரு முயலகனின் மீது ஆடுவாருடைய
ஒரு புறம் அது உற வளரும் மாதா பெறா அருள் செய்
குமர குரு பர அமரர் வான் நாடர் பேண அருள் தம்பிரானே

கொடியது ஒரு பொல்லாதவ னாகிய முயலகனின் மீது - முயலகன் என்னும் பூதத்தின் மீது ஆடுவாருடைய - நடனம் புரிகின்ற சிவபெருமானுடைய ஒரு புறம் அது வளரும் - ஒரு பாகத்தில் பொருந்தி விளங்கும் மாதா பெறா அருள் செய் - தாய் பார்வதி பெற்றருளிய குமர - குமரனே குருபர- குரு மூர்த்தியே அமரர்- தேவர்களும் வான் நாடர் - விண்ணோர்களும் பேண விரும்பிப்  போற்ற அருள் தம்பிரானே - அவர்களுக்குத் அருள் செய்த தம்பிரானே

சுருக்க உரை
உறவு முறையினர் அழ, பறைகள் முழங்க, பலரும் வாக்கரிசி இட, அந்தக் கடை நாளில், வேதம் ஒலிக்க, உன் திரு உருவம் நன்கு விளங்க, என் முன் தோன்றி, யமபடர்களைத் துரத்தி, அடியேனை ஆளுவதற்கு வந்து உதவ மாட்டாயா?
பதினான்கு உலகத்தினரும் நடுங்கி ஓலமிடவும், அட்ட திக்குகளிலுள்ள பாம்புகள் பிரியவும், மலைகள் இடிந்து விழவும், அசுர்களுடன் போர் புரிந்து வென்ற தீரனே, வேடுவர் மகளான வள்ளியின் அடிகளை வருடியவனே, முயலகன் மீதாடும் சிவபெருமானின் ஒரு பாகத்தில் உறையும் பார்வதி பெற்ற குமரனே, நாய் அடியேனை ஆள இங்கு வந்திடாயோ?

விளக்கக் குறிப்புகள்
1மறலி படை
எமனது படையைக் குக கணங்கள் பொருது வெருட்டி ஒட்டுவதைக் கூறினார் யமனைத்  தாமே பொருது வீழத்தியது 
  கொடிய மறலியு மவனது கடகமு மடியதிருப்புகழ், கொடிய மறலியு
2குதலை  
  அடியார்களுக்கு முருகன் குழந்தை போல் இருப்பவன்


அடியவர்,கருணை நிலையாமை, வள்ளி, சிவன், உமை,