பின் தொடர்வோர்

Saturday 12 January 2019

373.தசையுமுதிரம்

373
பொது

             தனன தனதன தனதன தனதன
             தனன தனதன தனதன தனதன
             தனன தனதன தனதன தனதன     தனதான

தசையு முதிரமு நிணமொடு செருமிய
      கரும கிருமிக ளொழுகிய பழகிய
      சடல வுடல்கடை சுடலையி லிடுசிறு             குடில்பேணுஞ்
சகல கருமிகள் சருவிய சமயிகள்
      சரியை கிரியைகள் தவமெனு மவர்சிலர்
      சவலை யறிவினர் நெறியினை விடஇனி          யடியேனுக்
கிசைய இதுபொரு ளெனஅறி வுறவொரு
      வசன முறஇரு வினையற மலமற
      இரவு பகலற எனதற நினதற                                   அனுபூதி
இனிமை தருமொரு தனிமையை மறைகளின்
      இறுதி யறுதியி டவரிய பெறுதியை
      இருமை யொருமையில் பெருமைதை வெளிபட மொழிவாயே
அசல குலபதி தருமொரு திருமகள்
      அமலை விமலைக ளெழுவரும் வழிபட
      அருளி அருணையி லுறைதரு மிறையவ                அபிராமி
அநகை அநுபவை அநுதயை அபிநவை
      அதல முதலெழு தலமிவை முறைமுறை
       அடைய அருளிய பழையவ ளருளிய               சிறியோனே
வசுப பசுபதி மகிழ்தர வொருமொழி
       மவுன மருளிய மகிமையு மிமையவர்
      மரபில் வனிதையும் வனசரர் புதல்வியும்           வடிவேலும்
மயிலு மியலறி புலமையு முபநிட
       மதுர கவிதையும் விதரண கருணையும்
      வடிவு மிளமையும் வளமையு மழகிய                பெருமாளே.

பதம் பிரித்து உரை
தசையும் உதிரமும் நிணமொடு செருமிய
கரும கிருமிகள் ஒழுகிய பழகிய
சடல உடல் கடை சுடலையில் இடு சிறு குடில் பேணும்

தசையும் உதிரமும் நிணமொடு செருமிய = சதை, இரத்தம், மாமிசம் ஆகியவை நெருங்கியுள்ள, கரும = செயல்கள் நிறைந்துள்ள, கிருமிகள் ஒழுகிய =         புழுக்கள் இருந்து பழகிய = பழகும், சடல உடல் =அறிவில்லாத பொருளாகிய உடல் கடை இறுதியில்= சுடலையில் இடு = சுடு காட்டில் இடப்படுகின்ற சிறு குடில் =  சிறிய வீடு பேணும் =   (இதைப்) போற்றி வளர்க்கும்.

சகல கருமிகள் சருவிய சமயிகள்
சரியை கிரியைகள் தவம் எனும் அவர் சிலர்
சவலை அறிவினர் நெறியினை விட இனி அடியேனுக்கு

சகல = (சாத்திர முறைப்படி) அனைத்து. கருமிகள் = கிரியைகளையும் செய்பவர்கள். சருவிய = போராடுகின்ற. சமயிகள் = சமய வாதிகள். சரியை கிரியைகள் தவம் எனும் = சரியை, கிரியை, தவம் என்று. அவர் சிலர் = சொல்லும் சிலர். சவலை அறிவினர் = மனம் குழப்பம் உள்ள அறிவில்லாதவர்கள். நெறியினை = (ஆகியோர்) கொண்டுள்ள மார்க்கத்தை. விட = (நான்) விட்டொழிக்க. இனி அடியேனுக்கு = இனி மேல் அடியவனாகிய எனக்கு.

இசைய இது ஒரு பொருள் என அறிவு உற ஒரு
வசனம் உற இரு வினை அற மலம் அற
இரவு பகல் அற எனது அற நினது அற அநுபூதி

இசைய = பொருந்தும்படி. இது பொருள் என = இது தான் (ஞானப்) பொருள் [முழுதுமலாப் பொருள் ] என்று அறிவு உற = என் மனதில் படும்படி [ இதுவும் அருணகிரியாருக்குக் கிட்டியது,  ‘அறிவும் அறி தத்துவமும் அபரிமித வித்தைகளும் அறி என அமைப்பொழுதில் வாழ்வித்த வேதியன் வேடிச்சிக் காவலனே] ஒரு = ஒப்பற்ற வசனம் உற = உபதேசத்தை நான் பெறவும் இரு வினை அற = நல்வினை, தீ வினை எனப்படும் இருமைகள் நீங்கவும். மலம் அற = என்னுடைய மும்மலங்களும் நீங்கவும். இரவு பகல் அற = (ஆன்மாவின்) கேவல(மறப்பு)  சகல(நினைப்பு)  நிலைகள் நீங்கவும் எனது அற = என்னுடைய மமகாரம் ஒழியவும் நினது அற = உன்னுடைய த்வைத நிலை நீங்கவும் அநுபூதி = அனுபவ உண்மையை.

இனிமை தரும் ஒரு தனிமையை மறைகளின்
இறுதியில் அறுதி இட அரிய பெறுதியை
இருமை ஒருமையில் பெருமையை வெளிபட மொழிவாயே

இனிமை தரும் = இன்பத்தைத் தருகின்ற. ஒரு தனிமையை = ஒப்பற்ற தனி நிலையை. [நீயே நானாய், நானே நீயாய் அனுபவிக்கும் இன்பத்தை நல்கும், 36 தத்துவங்களுக்கு அப்பால்பட்ட தனி நிலையில் தன்ன தனி நின்றது தான் இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ]
மறைகளின் = வேதங்களின் இறுதியில் = முடிவான பொருள்களும் அறுதி இட அரிய = முடிவு செய்து கூறுதற்கு அரிதான பெறுதியை = பேற்றினை இருமை ஒருமையில் = சக்தி, சிவம் என்னும் இரண்டு பேதங்களின் ஒன்றாத் தன்மையின் பெருமையை = பெருமை மிக்க விளங்க வெளி இட = அடியேனுக்கு வெளிப்படுத்தும்படி மொழிவாயே = உபதேசித்து அருள்வாயாக.

அசல குல பதி தரும் ஒரு திரு மகள்
அமலை விமலைகள் எழுவரும் வழிபட
அருளி அருணையில் உறை தரும் இறையவள் அபிராமி

அசல குல பதி = மலைகளுள் சிறந்த இமய மலை அரசன். தரு = ஈன்ற ஒரு = ஒப்பற்ற திருமகள் = அழகிய பார்வதி அமலை = மலம் அற்றவள், மாசற்றவள் விமலைகள எழுவரும் = சப்த மாதர்கள் ஏழு பேரும் (தன்னை) வழிபட = வணங்க அருளி = அருள் செய்து அருணையில் உறை தரும் இறையவள் = திரு அண்ணாமலையில் வீற்றிருக்கும் தேவி அபிராமி = அழகி.

அநகை அநுபவை அநுதயை அபிநவை
அதல முதல் எழு தலம் இவை முறை முறை
அடைய அருளிய பழையவள் அருளிய சிறியொனே
அநகை = பாவம் அற்றவள் அநுபவை = ஞான அனுபவம் உடையவள் அதல முதல் எழு தலம் இவை = அதலம் முதலான ஏழு உலங்களுக்கும் முறை முறை அடைய = முறைப்படி பல முறை அருளிய = அருள் செய்த பழையவள் = பழமை வாய்ந்தவள் அருளிய சிறியோனே = பெற்றருளிய குழந்தையே.

வசுவ பசுபதி மகிழ் தர ஒரு மொழி
மவுனம் அருளிய மகிமையும் இமையவர்
மரபில் வனிதையும் வனசரர் புதல்வியும் வடிவேலும்

வசுவ பசுபதி = அக்கினி சொரூபியாகிய சிவ பெருமான் மகிழ் தர = மகிழும்படி ஒரு மொழி = ஒப்பற்ற உபதேச மொழியான மவுனம் அருளிய = மவுன உபதேசத்தை [சின்முத்திரையாகக் காட்டிய] அவருக்கு அருளிய மகிமையும் = விசேடப் பெருமையும் இமையவர் = தேவர்கள் மரபில் வனிதையும் = அமரர்கள் குலத்தில் வந்த தேவ சேனையும் வனசர் புதல்வியும் = வேடர் குலப் பெண்ணாகிய வள்ளியும் வடிவேலும் = கூரிய வேலும்

மயிலும் இயல் அறி புலமையும் உப நிட
மதுர கவிதையும் விதரண கருணையும்
வடிவும் இளமையும் வளமையும் அழகிய பெருமாளே.

மயிலும் = மயிலும் இயல் அறிவு புலமையும் = இயற்றமிழில் வல்ல புலமையும் உப நிட மதுர கவிதையும் = உபநிடக் கருத்துக்கள் அடங்கிய தேவாரமும் விதாரண கருணையும் = கொடைத் திறம் நிறைந்த உனது கருணையும் வடிவும் = உனது வடிவமும் இளமையும் = இளமையும் வளமையும் = செழுமையும் சிறந்து விளங்கும் அழகிய = அழகு மிக்க பெருமாளே = பெருமாளே.
 [ ] அடைப்புக்குள் கொடுக்கப்பட்டவை திரு நடராஜன் விளக்கம்
சுருக்க உரை
சதை, இரத்தம், மாமிசம் ஆகியவை நெருங்கியுள்ளதும், புழுக்கள் நிறைந்ததுமான இந்த உடலைப் போற்றி வளர்த்து, சாத்திரப்படி எல்லா கிரியைகளையும் செய்பவர்களும், போராடும் சமய வாதிகளும், சரியை, கிரியை, தவம் என்று சொல்லி மனக் குழப்பம் உள்ள அறிவினர்களும் சொல்லும் மார்க்கத்தை நான் விட்டு ஒழிக்க, இது தான் ஞானப் பொருள் என்று என் மனதில் நன்கு படும்படியும், ஒப்பற்ற உபதேசத்தை நான் பெறவும், இருமைகள் நீங்கவும், மலங்கள் அழியவும், மமகாரம் நீங்கவும், உனது துவித நிலை நீங்கவும், அனுபவ உண்மையை உபதேசித்து அருளுக. இன்பம் தரும் ஒப்பற்ற தனி நிலையையும், வேதங்களும் முடிவில் சொல்ல அரிதான பேற்றினையும், இருமைகள் நீங்கிய தன்மையையும், எனக்கு நன்கு புலப்படும்படி உபதேசித்து அருள்க.
இமய மலை அரசன் ஈன்ற பார்வதி மலமற்றவள், சப்த மாதர்களும்  வணங்குபவள், பாவமற்றவள், அழகிய பார்வதி பெற்றருளிய குழந்தையே. அக்கினி வடிவினனாகிய சிவபெருமான் மகிழ அவருக்கு மவுன உபதேசத்தை அருளியவனே. வள்ளி, தேவசேனை, மயில், வேல், தமிழ்ப் புலமை, கொடைத்திறம் மிக்க கருணை, இனிய வடிவம், இளமை ஆகியவற்றுடன் திருவண்ணாமலையில் விளங்கும் பெருமாளே. உன் பெருமை வெளிபட அருள்வாயே.
திரு.நடராஜன் விளக்கவுரை
இருமை ஒருமையில் பெருமையை வெளிபட மொழிவாயே
1.  சக்தி, சிவம் எனும் இரண்டு மூலப் பொருட்கள் உலகைப்ப படைத்து, காத்து, அடக்கும் போது இரண்டு தத்துவங்களாகவும் எல்லாம் லயமுற்று அடங்கி இருக்கும் சமயத்தில் ஒரே பொருளாகவும் விளங்கும் தன்மையின் பெருமையை (பிணை பெணோடு ஒருமையின் இருமையும் உடைய அண்ணல் = சம்பந்தர், உடையாள் உந்தன் நடுவிருக்கும் (சொரூப நிலை), உடையாள் நடுவில் நீ இருத்தி (தடத்த நிலை) அடியேன் நடுவுள் நீவீர் இருப்பதானால் = திருவாசகம். இச்செய்யுளில் முதலடி சிவத்தைக் குறிக்கும் சி= காரம், இரண்டாம் அடி சக்தியைக் குறிக்கும் வ = காரம், மூன்றாம்  அடி ஆன்மாவைக் குறிக்கும் ய = காரம். ஆதலால் இது காரண  பஞ்சாக்கரமாகிய சிவய மறைந்து நிற்கிறது. தொல்லை முதல் தான் ஒன்று மெல்ல இரு பேதங்கள், இருமையில் ஒருமையும் ஒருமையின் பெருமையும்.

2.  ஜீவாத்மா, பரமாத்மா எனும் இரண்டில் ஜீவன் சிவனுடன் ஒன்று  பட்டு சாயுட்ச்சிய நிலை அடைவதால், இருவினையும் மும்மலமும்  அறுபட்டு போகும். ஒன்றிரண்டாகி நின்று ஒன்றி  ஒன்றாயினோருக்கு ஒன்றும் இரண்டும் ஒருகாலும்  கூடிடா. சிவன்  ஜீவன் இரண்டும் ஏக போகமாய் கலந்து ஒரே சிவமயமாய்  நிற்பவருக்கு மும்மலம் கிடையாது.

3.  சிவனின் ஐந்து திருமுகங்களும் சக்தியின் ஒருமுகமும் ஒன்று  பட்டு ஆறுமுகமான ரகசியப் பெருமையை எனக்கு விளக்கி அருளுக. சிவபெருமான் தேவியிடம் கூறுகிறார். ஓகோ, இது மிகவும் ஆச்சரியம் சுந்தரி, அந்த ரகசியத்தைக் கூறுகிறேன் கேள். நானோ கலங்கமற்ற பரிபூரண சிவன், நீயோ என்றும் அழியாத பராசக்தி. நான் சிருஷ்டியாதி பஞ்சக்ருத்தியங்களுக்கு அதிபன். நீ பலவாய் விளங்கினாலும் ஒரு முகத்தை உடைய பரமேஸ்வரி. நமது மைந்தனாகும் இவனோ உனது சொரூபத்தையும் எனது சொரூபத்தையும் உடையவன். ஆதலின் இவன் ஷண்முகங்களோடு விளங்குகிறான்.

4.  ஓம் எனும் பிரணவமே விரிந்து சரவணபவ எனும் ஆறு எழுத்தாகிறது. சத்தாகிய சிவனும் சித்தாகிய சக்தியும் ஒன்று சேரும் போது உதிக்கும் ஆனந்தம் சத்து வழியாக வெளிப்படும் போது ஏகாட்சர் பிரம்மத்திற்கு தலைவராகிய விநாயகர், சித்து வழியாக வெளிப்படும் போது சுப்ரமண்யன். இந்த தத்துவத்தின் பெருமையை உபதேசித்து அருளுக என்கிறார்.

வள்ளிமலை சுவாமிகளின் வரலாற்றில் இந்த பாட்டு பெரும்
முக்கியத்துவமாக விளங்குகிறது. அவர் வள்ளி மலையில் தவம் செய்து கொண்டிருந்தபோது ஒரு நாள் கனவில் வடக்குப் பட்டு
சுப்ரமணிய பிள்ளை தோன்றி, பெருமையை வெளி பட மொழிவாயே என்று சொல்லுவதை உணர்ந்தார். அடுத்த நாள் காலை திருப்புகழ்  புத்தகத்தை  தேடிப் பார்த்து இது தசையும் உதிரமும் திருப்புகழில் வருவதைத் தெரிந்து கொண்டார். திருப்புகழின் பெருமையை எல்லோரும் தெரிந்து கொள்ளும் படி அதைப் பரப்புக என்று தனக்கு வழி காட்டினதாக இக்கனவை புரிந்து கொண்டார். அதன் படி நாடெங்கிலும் மற்றும் சிங்களத்திலும் திருப்புகழைப் பாடி பரப்பினார். முருகப் பெருமானின் 12 ஆயுதங்களின் பெயர் வைத்து 12 திருப்புகழ் சபைகளை நிறுவினார்.

விளக்கக் குறிப்பு
இருமை யொருமையில் பெருமை....
சிவம், சக்தி இருமைகளைக் குறிக்கும்.
ஒப்புக:
பிணை பெணொ டொருமையின் இருமையும் உடைய(ண)ல் இடம் இடைமருதே
                                                                                            ... சம்பந்தர் தேவாரம்.
தொல்முதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள்
சொல்லுலுண மூவந்த மெனவாகி                        ... திருப்புகழ், தொல்லைமுதல்.

எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்.    ..சித்தியார் சுபக்கம் 165.
ஒன்றிரண் டாகிநின் றொன்றியொன் றாயினோர்க்
கொன்றும் இரண்டும் ஒருகாலுங் கூடிடா                                       ...திருமந்திரம்