பின் தொடர்வோர்

Wednesday 4 May 2022

502. முறுகுகாள

 

502




திருவேரகம்

       தனன தான தனன தந்த தனன தான தனன தந்த

       தனன தான தனன தந்த               தனதான

 

முறுகு காள விடம யின்ற இருகண் வேலி னுளம யங்கி

   முளரி வேரி முகைய டர்ந்த                              முலைமீதே

முழுகு காதல் தனைம றந்து பரம ஞான வொளிசி றந்து

   முகமொ ராறு மிகவி ரும்பி                                 அயராதே

அறுகு தாளி நறைய விழ்ந்த குவளை வாச மலர்க ரந்தை

   அடைய வாரி மிசைபொ ழிந்து                         னடிபேணி

அவச மாகி யுருகு தொண்ட ருடன தாகி விளையு மன்பி

   னடிமை யாகு முறைமை யொன்றை             அருள்வாயே

தறுகண் வீரர் தலைய ரிந்து பொருத சூர னுடல்பி ளந்து

   தமர வேலை சுவற வென்ற                                வடிவேலா

தரள மூர லுமைம டந்தை முலையி லார அமுத முண்டு

   தரணி யேழும் வலம்வ ருந்திண்                        மயில்வீரா

மறுவி லாத தினைவி ளைந்த புனம்வி டாம லிதணி ருந்து

   வலிய காவல் புனைய ணங்கின்                      மணவாளா

மருவு ஞாழ லணிசெ ருந்தி யடவி சூத வனநெ ருங்கி

   வளர்சு வாமி மலைய மர்ந்த                            பெருமாளே

பதம் பிரித்து உரை

முறுகு காள விடம் அயின்ற இரு கண் வேலின் உ(ள்)ளம் மயங்கி

முளரி வேரி முகை அடர்ந்த முலை மீதே

முறுகு = முற்றிய [பொங்கி எழுந்த]  காள விடம் = கரிய விஷத்தை அயின்ற = உண்ட இரு கண் = இரண்டு கண்களாகிய வேலின் உள்ளம் மயங்கி = வேலினால் மனம் மயங்கி முளரி = தாமரையின் வேரி = மணம் உள்ள முகை அடர்ந்த = மொட்டுப் போன்ற முலைமீதே = கொங்கையின் மேல்

[இரண்டு கண்களும் முற்றிய விஷத்தை கக்குவது போன்று இருப்பதாக உவமை]

முழுகு காதல் தனை மறந்து பரம ஞான ஒளி சிறந்து

முகம் ஒரு ஆறு மிக விரும்பி அயராதே

முழுகு காதல் தனை மறந்து = முழுகுகின்ற காதலை மறந்து பரம ஞான ஒளி சிறந்து = மேலான ஞான ஒளியை மிகுந்து முகம் ஒரு ஆறு = உனது ஆறு முகங்களையும் மிக விரும்பி = மிகவும் விரும்பி அயராதே = சோர்வில்லாமல் [இறைவனை மலர் கொண்டு அர்ச்சிப்பதில் தொய்வு ஏற்படக்கூடாது என்பதர்க்காக "அயராதே"]

அறுகு தாளி நறை அவிழ்ந்த குவளை வாச மலர் கரந்தை

அடைய வாரி மிசை பொழிந்து உன் அடி பேணி

அறுகு = அறுகம் புல் தாளி = ஊமத்தை நறை அவிழ்ந்த குவளை = மணம் வீசும் குவளை வாச மலர் கரந்தை = மணம் கொண்ட திரு நீற்றுப் பச்சை அடைய = இவைகளை எல்லாம் நிரம்ப  வாரி மிசை பொழிந்து = (உன் திருவடியின் மேலே) சொரிந்து உன் அடி பேணி = உனது திருவடியை விரும்பி  

அவசமாகி உருகு தொண்டர் உடன் அதாகி விளையும் அன்பின்

அடிமையாகும் முறைமை ஒன்றை அருள்வாயே

அவசம் ஆகி = தன் வசம் அழிந்து உருகும் = (மனம்) உருகுகின்ற தொண்டருடன் அதாகி = அடியார்களுடன் கலந்து கூடி விளையும் அன்பின் = அதனால் உண்டாகும் அன்பினால் அடிமையாகும் முறைமை = அடிமை  என்னும் ஒழுக்க முறைமையாகிய ஒன்றை = ஒரு பேற்றை அருள்வாயே = அருள்வாயாக

தறுகண் வீரர் தலை அரிந்து பொருத சூரன் உடல் பிளந்து

தமர வேலை சுவற வென்ற வடி வேலா

தறுகண் வீரர் = அஞ்சாமை கொண்ட வீரர்களின் தலை அரிந்து = அரிந்து பொருத = சண்டை செய்த சூரன் உடல் பிளந்து = சூரனுடைய உடலை (இரு கூறாகப்) பிளந்து தமர வேலை சுவற = ஒலிக்கும் கடல் வற்றும்படி வென்று = வென்ற வடிவேலா = கூரிய வேலனே

தரளம் ஊரல் உமை மடந்தை முலையில் ஆர அமுதம் உண்டு

தரணி ஏழும் வலம் வரும் திண் மயில் வீரா

தரளம் ஊரல் = முத்துப் போன்ற பற்களை உடைய உமை மடந்தை = உமை மாதின் முலையில் ஆர = கொங்கைகளில் நிரம்ப அமுதம் உண்டு = பால் அமுதம் உண்டு தரணி ஏழும் = ஏழு உலகங்களையும் வலம் வரும் = வலம் வந்த திண் = வலிய மயில் வீரா = மயில் வீரனே

மறு இலாத தினை விளைந்த புனம் விடாமல் இதணில் இருந்து

வலிய காவல் புனை அணங்கின் மணவாளா

மறு இலாத = குற்றம் இல்லாத தினை விளைந்த = தினை விளைந்த புனம் விடாமல் = புனத்தை விட்டு நீங்காது இதணில் இருந்து = பரண் மீது இருந்து வலிய = பலமாக காவல் புனை = காவல் புரிந்த அணங்கின் மணவாளா = அணங்காகிய வள்ளியின் கணவனே

மருவு ஞாழல் அணி செருந்தி அடவி சூத வன(ம்) நெருங்கி

வளர் சுவாமி மலை அமர்ந்த பெருமாளே

மருவும் = பொருந்திய ஞாழல் = புலி நகக் கொன்றை அணி = அழகிய செருந்தி அடவி = செருந்தி [ஒருவகை புல்] இவையுள்ள நந்த வனமும் சூத வனம் = மாமரக் காடும் நெருங்கி வளர் = நெருங்கி வளரும்  சுவாமி மலை அமர்ந்த பெருமாளே = திருவேரகத்தில் வீற்றிருக்கும் பெருமாளே

சுருக்க உரை

விலை மாதர்களின் கடுமையான, கரிய விஷம் போன்ற கண்களாகிய வேலால் உள்ளம் மயங்கி, தாமரை மொட்டுப் போன்ற அவர்களுடைய கொங்கைகளில் முழுகுகின்ற காதலை மறந்து, ஞான ஒளி மிகுந்து, உனது பன்னிரு முகங்களை விரும்பி, சோர்வின்றி, அறுகு, தாளி, கரந்தை இவைகளை நிரம்ப உன் திருவடியில் பொழிந்து, தன் வசம் அழிந்து, மனம் உருகும் தொண்டர்களுடன் கலந்து கூடி, அதனால் விளையும் அன்பினால் அடிமை என்னும் பேற்றை அடைய அருள் புரிவாயாக

அஞ்சாமை கொண்ட வீரர்களின் தலைகளை அரிந்து, சூரன் உடலை இரு கூறாகப் பிளந்து கடலும் வற்றும்படி செய்த கூரிய வேலனே! முத்துப் போன்ற பற்களை உடைய உமா தேவியின் கொங்கைகளில் பால் அமுதத்தை உண்டு, ஏழு உலகங்களையும் வலம் வந்த மயில் வீரனே! தினைப் புனத்தை நீங்காது காவல் புரிந்த அணங்காகிய வள்ளியின் மணவாளனே! புலி நகக் கொன்றை, செருந்தி இவைகள் நிறைந்த நந்தவனமும், மாமரக் காடுகளும் நெருங்கி வளரும் சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே! நான் உன் அடிமையாகும் முறைமை ஒன்றை எனக்கு அருள் புரிவாயாக

விளக்கக் குறிப்புகள்

தொண்டருடன தாகி விளையும் அன்பின் அடிமை

இந்த வரத்தை அருணகிரி நாதர் பெற்றார் என்பதைப் பின் கண்ட பாக்களால் அறியலாம்

இடுதலைச் சற்றுங் கருதேனைஅன்பாற் கெடுதலிலாத் தோண்டரிற் கூட்டியவா                                                                               - கந்தர் அலங்காரம்

சீரிற் கிரியிற் கதிர்வே லெறிந்தவன் தொண்டர் குழாம் சாரிற் கதியன்றி வேறிலை காண்                                                                    - கந்தர் அலங்காரம்

rev 30-5-22

பாடலை கேட்க



No comments:

Post a Comment