பின் தொடர்வோர்

Wednesday 28 November 2018

352.ஓதுமுத்தமிழ்

352
பொது

                 தான தத்தன தானன தானன
                 தான தத்தன தானன தானன
                 தான தத்தன தானன தானன        தந்ததான

ஓது முத்தமிழ் தேராவ்ரு தாவனை
   வேத னைப்படு காமாவி காரனை
   ஊன முற்றுழல் ஆபாச ஈனனை     அந்தர்யாமி
யோக முற்றுழல் ஆசாப சாசனை
   மோக முற்றிய மோடாதி மோடனை
   ஊதி யத்தவம் நாடாத கேடனை     அன்றிலாதி
பாத கக்கொலை யேசூழ்க பாடனை
   நீதி சற்றுமி லாகீத நாடனை
   பாவி யர்க்குளெ லாமாது ரோகனை மண்ணின்மீதில்
பாடு பட்டலை மாகோப லோபனை
   வீடு பட்டழி கோமாள வீணனை
   பாச சிக்கினில் வாழ்வேனை யாளுவ    தெந்தநாளோ
ஆதி சற்குண சீலாந மோநம
   ஆட கத்திரி சூலாந மோநம
   ஆதி ரித்தருள் பாலாந மோநம        உந்தியாமை
ஆன வர்க்கினி யானேந மோநம
   ஞான முத்தமிழ் தேனேந மோநம
   ஆர ணற்கரி யானேந மோநம        மன்றுளாடும்
தோதி தித்திமி தீதாந மோநம
   வேத சித்திர ரூபாந மோநம
   சோப மற்றவர் சாமீந மோநம              தன்மராச
தூத னைத்துகை பாதாந மோநம
   நாத சற்குரு நாதாந மோநம
   ஜோதி யிற்ஜக ஜோதீ மஹாதெவர்      தம்பிரானே


பதம் பிரித்தல்


ஓது முத்தமிழ் தேரா வ்ராதவனை
வேதனை படு காமா விகாரனை
ஊனம் உற்று உழல் ஆபாச ஈனனை அந்தர்யாமி
ஓது முத்தமிழ் தேரா -  ஓதத்தக்க முத்தமிழைத் தேர்ந்து அறியாத வ்ருதாவனை - வீணாகக் காலம் கழிப்பவனை வேதனைப்படு - துன்பப்படுகின்ற காம விகாரனை - விகாரமுடைய காமுகனை ஊனம் உற்று உழல் - பழி கொண்டு திரியும் ஆபாச ஈனனை - அசுத்தமான இழிவு உள்ளவனை அந்தர்யாமி - எங்கும் வியாபித்திருக்கும்

யோகம் அற்று உழல் ஆசா பசாசனை
மோகம் முற்றிய மோடாதி மோடனை
ஊதிய தவம் நாடாத கேடனை அன்றில் ஆதி
யோகம் அற்று உழல் - யோக நிலையைக் கடைப் பிடிக்காமல் திரியும் ஆசா பசானனை - ஆசையாகிய பேய் போன்றவனை மோகம் முற்றிய - காம மயக்கம் மிகுந்த மோடாதி மோடனை - மூடர்களுக்குள் தலைமையான மூடனை ஊதியத் தவம் - பயன் தரக் கூடிய தவத்தை நாடாத கேடனை - தேடாத கேடுடையவனை அன்றில் ஆதி - அன்றில் பறவை முதலான உயிர்களை

பாதக கொலையே சூழ் கபாடனை
நீதி சற்றும் இலா கீத நாடனை
பாவியார்க்கு எலாம் மா துரோகனை மண்ணின் மீதில்
பாதகக் கொலையே சூழ் - பாபத்துக்கு ஈடான கொலை செய்யவே கருதுகின்ற கபாடனை - வஞ்சகனை நீதி சற்றும் இலா - ஒழுக்க நெறி கொஞ்சமும் இல்லாத கீத நாடனை - இசைப் பாட்டுக்களில் களிப்புறுவானை பாவியர்க்குள் எ(ல்)லாம் - பாபம் செய்பவர்கள் எல்லேரையும் விட மா - பெரிய துரோகனை - துரோகம் செய்பவனை மண்ணின் மீதில் - இந்த உலகில்

பாடு பட்டு அலை மா கோப லோபனை
வீடு பட்டு அழி கோமாள வீணனை
பாச சிக்கினில் வாழ்வேனை ஆளுவது எந்த நாளோ
பாடுபட்டு அலை - பாடு பட்டு அலைகின்ற மா - பெரிய கோப லோபனை - கோபமும் உலோபத்தனமும் நிறைந்தவனை வீடு பட்டு அழி - கெடுதல் பட்டு அழிகின்ற கோமாள வீணனை - களித்து வீண் பொழுது போக்குபவனை பாச சிக்கினில் வாழ்வேனை - உலக மாயையில் சிக்குண்டு வாழ்பவனை ஆளுவது எந்த நாளோ - ஆட்கொள்ளுவது எந்நாளோ ?

ஆதி சற்குண சீலா நமோநம
ஆடகம் திரி சூலா நமோநம
ஆதரித்து அருள் பாலா நமோநம உந்தி ஆமை
ஆதி - முதல்வனே சற் குண சீலா - சீரிய குணங்களை உடைய பரிசுத்த மூர்த்தியே நமோ நம - உன்னை வணங்குகின்றேன் ஆடகம் - பொன்னாலாகிய திரி சூலா - மூன்று தலைகளை உடைய சூலாயுதனே நமோ நம -  ஆதரித்து அருள் பாலா - என்னை அன்புடன் பாதுகாக்கும் காவல் தெய்வமே நமோ நம - உந்தி - கடலில் ஆமை - ஆமை வடிவமாக

ஆனவர்க்கு இனியானே நமோநம
ஞான முத்தமிழ் தேனே நமோநம
ஆரணற்கு அரியோனே நமோநம மன்றுள் ஆடும்
ஆனவர்க்கு - சென்றவராகிய திருமாலுக்கு இனியோனே - விருப்பமானவரே நமோ நம -  ஞான முத்தமிழ் தேனே - ஞானப் பொருள் நிறைந்த முத்தமிழ் வல்ல தேனே நமோநம - ஆரணற்கு - வேதம் வல்ல பிரம்ம தேவனுக்கு அரியோனே - எட்டாத அருமையானவனே நமோ நம -  மன்றுள் ஆடும் - அம்பலத்தில் நடனம் செய்யும்

தோதி தித்தமி தீதா நமோநம
வேத சித்திர ரூபா நமோநம
சோபம் அற்றவர் சாமீ நமோநம தன்ம ராச
தோதி தித்திமி தீதா – தோதி என்று தாளங்களுடன் கூத்தாடுபவனே நமோ நம -  வேத சித்திர ரூபா - வேதங்களில் ஓதப்படும் அழகிய வடிவம் உள்ளவனே நமோ நம -  சோபம் அற்றவர் - துக்க நிலையில் இல்லாதவர் சாமீ - துதிக்கும் ஞானியே நமோநம -  தன்மராச - எம தர்மராசன்

தூதனை துகை பாதா நமேநம
நாத சற் குரு நாதா நமோநம
ஜோதியில் ஜக ஜோதி மஹா தேவர் தம்பிரானே
தூதனை - அனுப்பி வைத்த காலனை துகை பாதா - உதைத்த பாதங்களை உடையவனே நமோ நம -  நாத சற்குரு நாதா - சற்குரு நாதனே நமோ நம -  ஜோதியில் ஜக ஜோதீ - ஒளியிள் பேரொளியே மஹாதேவர் - மகா தேவனான சிவபெருமான் தம்பிரானே - போற்றும் தலைவனே

சுருக்க உரை

இந்தத் துதிப் பாடலில் அருணகிரி நாதர் தன் சிறுமைகளை எடுத்துரைத்து இறைவனைப் பலவாறு போற்றி வணங்கித் தன்னை ஆண்டு கொள்ள பிரார்த்திக்கின்றார். முத்தமிழைத் தேர்ந்து அறியாதவன், வேதனைக்கு இடமான காம விகாரன், பழிகள் மிகுந்த அசுத்தமானவன், யோக நிலையைக் கூடாத மூடன், தவத்தை நாடாதவன், உயிர்களைக் கொல்லும் பாதகன், நீதி இல்லாதவன், பாவி, மாயையில் சிக்கித் தவிப்பவன் ஆகிய என்னை ஆட் கொள்ளும் நாள் எந்த நாளோ என்று பாடுகின்றார் 

பாட்டின் பிற்பகுதியில் முருகனைப் பலவாறு பாடித் துதித்து வணங்குகின்றார்

விளக்கக் குறிப்புகள்

1.  உந்தி ஆமை ஆனவர்க்கு இனியோனே
திருமாலுக்கு இனியவர் திருமால்
தொனித்த நாத வேயூது சகஸ்ர நாம கோபால
சுதற்கு நேச நீப மாறாத   மருகோனே
                                                 --- திருப்புகழ்,அனித்தமான
2.  தன்மராச தூதனைத் துகை பாதா
கூற்றுவிழத் தாண்டி யென தாகமதில் வாழ்குமர தம்பிரானே
                                              —திருப்புகழ், வாட்டியெனை 
        ஏமனால் ஏவிவவிடு காலன்      --- திருப்புகழ்,  குருதிதோலி
3.  நமோ நமோ உன்னைத் திரும்பத் திரும்ப வணங்குகின்றேன் நாதவிந்துகலாதி, வேத வித்தகா, போத்கந்தரு, சீதளவாரிஜ, அரிமருகோனே, போத நிர்க்குண, சரவண ஜாதா, அவகுண எனத் தொடங்கும்  பாடல்களிலும் இவ்வாறு துதி செய்யப்பட்டுள்ன


No comments:

Post a Comment