பின் தொடர்வோர்

Wednesday 28 November 2018

353.கடலை பயறொடு

353
பொது

               தனன தனதன  தனதன  தனதன
               தனன  தனதன  தனதன  தனதன
               தனன  தனதன  தனதன  தனதன       தனதான

கடலை  பயறொடு  துவரையெ   ளவல்பொரி
      சுகியன்  வடைகனல்  கதலியி  னமுதொடு
      கனியு  முதுபல  கனிவகை  நலமிவை         யினிதாகக்
கடல்கொள்  புவிமுதல்  துளிர்வொடு  வளமுற
      அமுது துதிகையில்  மனமது  களிபெற
      கருணை  யுடனளி  திருவருள்  மகிழ்வுற       நெடிதான
குடகு  வயிறினி  லடைவிடு  மதகரி
      பிறகு  வருமொரு  முருகசண்  முகவென
      குவிய  இருகர  மலர்விழி  புனலொடு        பணியாமற்
கொடிய  நெடியன  அதிவினை  துயர்கொடு
      வறுமை  சிறுமையி  னலைவுட  னரிவையர்
      குழியில்  முழுகிய  மழுகியு  முழல்வகை  யொழியாதோ
நெடிய கடலினில்  முடுகியெ  வரமுறு
      மறலி  வெருவுற  ரவிமதி  பயமுற
      நிலமு  நெறுநெறு  நெறுவென வருமொரு    கொடிதான
நிசிரர்  கொடுமுடி  சடசட  சடவென
      பகர  கிரிமுடி  கிடுகிடு  கிடுவென
      நிகரி  லயில்வெயி  லெழுபசு  மையநிற        முளதான
நடன  மிடுபரி  துரகத  மயிலது
      முடுகி  கடுமையி  லுலகதை   வலம்வரு
      நளின  பதவர  நதிகுமு குமுவென          முனிவோரும்
நறிய  மலர்கொடு  ஹரஹர  ஹரவென
      அமரர்  சிறைகெட  நறைகமழ்  மலர்மிசை
      நணியெ  சரவண  மதில்வள  ரழகிய          பெருமாளே
 
பதம் பிரித்து உரை

கடலை  பயிறொடு  துவரை   எள்  அவல் பொரி
சுகியன்  வடை  க(ன்)னல்   கதலி  இ(ன்)னமுதொடு           
கனியும் முது பல கனி வகை  நலம்  இவை  இனிதாக
கடலை பயறொடு - கடலை பயறு இவைகளுடன்  துவரை, எள், பொரி - துவரை, எள், பொரி சுகியன் - சுகியன்( ஒரு இனிப்பு) வடை, கனல் - வடை,   கரும்பு  கதலி - வாழை  இன் அமுதொடு - இனிய அமுது போன்ற சுவையுடன் கனியும் - பழத்துள்ள  முது பல கனி வகை - முதிர்ந்த பலவிதமான பழ வகைகள் நலம் இவை இனிதாக - நல்ல படியாக இவைகளை இன்பத்துடன்

கடல் கொள் புவி  முதல் துளிர்வொடு வளம் உற
அமுது துதி கையில் மனம் அது களி பெற
கருணையுடன் அ(ள்)ளி  திருவருள்  மகிழ்வுற  நெடிதான
கடல் கொள் - கடலால் சூழப்பட்ட  புவி முதல் - பூமியில் உள்ளவர்கள்  முதல் யாவரும் துளிர்வொடு வளமுற - தழைத்து வளப்பம் பெற  அமுது  - அமுதாக  துதி கையில் - தனது துதிக்கையில் மனம் அது களி பெற - மனம் மகிழ்ச்சி பெற கருணையுடன் - கருணை மிகுந்து அளி - அள்ளி எடுத்து திருவருள் மகிழ்வுற - திருவருள் பாலிக்க நெடிதான - பெரிய

குடகு  வயிறினில் அடைவிடு மத கரி
பிறகு வரும் ஒரு முருகு சண்முக  என
குவிய இரு கரம் மலர் விழி புனலொடு பணியாமல்
குடகு வயிறினில் - குடம் போன்ற வயிற்றினில் அடைவிடு - அடைக்கின்ற மத கரி - மத யானை போன்ற (கணபதியின்) பிறகு வரும் - பின் தோன்றிய ஒரு முருக - ஒப்பற்ற முருகனே சண்முக - ஷண்முகனே என - என்று  குவிய இரு கரம் - இரண்டு கைகளும் குவிய  மலர் விழி புனலொடு - மலர்ந்த கண்களிலிருந்து நீர் பெருக பணியாமல் - உன்னைப் பணியாமல்

கொடிய நெடியன அதி வினை துயர் கொடு
வறுமை சிறுமையில் அலைவுடன்  அரிவையர்
குழியில் முழுகியும் அழுகியும்  உழல் வகை  ஒழியாதோ
கொடிய நெடியன - கொடியதும் பெரிதானதுமான அதி வினை துயர் கொடு - மிக்க வினையால் ஏற்படும் துயரத்துடன் வறுமை  சிறுமையில் - வறுமையால் வரும் தாழ்வினால் அலைவுடன் - மனம் அலைச்சல் அடைந்து அரிவையர் - விலை மாதர்கள் குழியில் முழுகியும் - படு குழியில் முழுகியும் அழுகியும் - பாழடைந்தும் உழல் வகை - திரிகின்ற தன்மை  ஒழியாதோ - நீங்காதோ?

நெடிய  கடலினில் முடுகியே வரம் உறு 
மறலி வெரு உற ரவி மதி பயம் உற
நிலமும் நெறு நெறு நெறு என வரும்  ஒரு கொடிதான
நெடிய கடலினில் - பெரிய கடல் போல முடுகியே - விரைந்து எழுந்து  வரம் உறு -  (உயிர்களைக் கவரும்) வரம் பெற்ற  மறலி - யமன் வெருவுற - பயப்படவும்  ரவி மதி  பயம் உற - சூரியனும் சந்திரனும் பயப்படவும் நிலமும் - பூமியும் நெறு நெறு நெறு என - நெறு நெறு என அதிரவும் வரும் ஒரு கொடிதான - வந்த கொடியர்களான

நிசிரர்  கொடுமுடி  சட  சட  சட என
பகர கிரி முடி கிடு கிடு கிடு  என
நிகர்  இல்  அயில் வெயில் எழு  பசுமைய நிறம்  உளதான
நிசிரர் - அசுரர்கள் கொடி முடி - கொடிய தலைகள் கிடு கிடு கிடு என - கிடு கிடு என்று  அதர்ச்சி உற  பகர - சொல்லப்படும கிரி முடி சட சட சட என - மலைச் சிகரங்கள் சட சட சட என்று அதிர நிகர் இல் - உவமை இல்லாத அயில்- வேலாயுதத்துடன் வெயில் எழு பசுமைய நிறமுளதான - ஒளி வீசும் பச்சை நிறமுள்ளதும்

நடனம்  இடும்  பரி  துரகதம் மயில்  அது
முடுகி  கடுமையில் உலகதை  வலம் வரும்
நளின பத வர நதி  குமு  குமு என முநிவோரும்
நடனமிடும் - நடனம் செய்யும்  பரி துரகத மயில் அது - வாகனமான குதிரை போன்ற மயில்  முடுகி வேகமாக  கடுமையில் - உக்கிரத்துடன் உலகதை - புவியை வலம் வரும் - வலம் வந்த நளின பத - தாமரை போன்ற திருவடிகளை உடையவனே வர நதி - கங்கை குமு குமு என - கொந்தளிக்க முனிவோரும் - முனிவர்களும்

நறிய  மலர்  கொடு  ஹர  ஹர  ஹர  என
அமரர்  சிறை  கெட  நறை  கமழ்  மலர்  மிசை
ந(ண்)ணியே  சரவணம்  அதில்  வளர்  அழகிய  பெருமாளே
 
நறிய மலர் கொடு - வாசனை மிகுந்த மலர்களோடு ஹர ஹர ஹர என - ஹர ஹர என்று போற்ற அமரர் சிறை கெட - தேவர்கள் சிறை நீங்க நறை கமழ் - நறு மணம் வீசும் மலர் மிசை - தாமரை மலர் மீது ந(ண்)ணியெ - தங்கி சரவணம் அதில் - சரவணப் பொய்கையில் வளர் அழகிய பெருமாளே - வளர்ந்த அழகிய பெருமாளே


சுருக்க உரை

கடலை, பயறு, பழம் ஆகியவைகளைக் வயிறு புடைக்க உண்ணும் யானை முகனான கணபதியின் பின்னர் தோன்றிய முருகனே, ஷண்முகனே என்று உன்னைப் பணியாமல், கொடிய வினையால் துக்கமுற்று, விலைமாதர்களின் ஆசையால் பாழாகும் என் தன்மை
என்னை விட்டு என்று நீங்கும்?  
யமனும், சூரிய சந்திரர்களும் பூமியும் பயப்படும்படி விரைந்து வரும்  அசுரர்களின் தலைகள் முறிய, மலைகள் சிதற, வேலாயுதத்துடன் மயில் மீது ஏறி உலகைச் சுற்றி வந்த திருவடியை உடையவனே, கங்கை கொந்தளிக்க, முனிவர்கள் போற்ற,  தேவர்கள் சிறை நீங்கும்படி சரவணப் பொய்கையில் வளர்ந்த பெருமாளே, நான் விலை
மாதர்கள் ஆசையிலிருந்து நீங்குவது ஒழியாதோ?

விளக்ககக் குறிப்புகள்  

கடல் கொள் புவி முதல்துதி கையில்
 மகர சலநிதி  வைத்த  துதிக்கரம் வளரு கரிமுக
                                                        -- திருப்புகழ்,  நினது திருவடி
 
கணபதி  ஆமையைஅடக்கிய போது அவர் தமது துதிக்கையால் கடல்   நீரெல்லாம் உறிஞ்சினர் என்பது வரலாறு




No comments:

Post a Comment