பின் தொடர்வோர்

Wednesday 28 November 2018

351.ஒழுகூனிரத்த

351
பொது


            தனதான தத்த தனதான தத்த
            தனதான தத்த                     தனதான


ஒழுகூனி ரத்த மொடுதோலு டுத்தி
        உயர்கால்க ரத்தி                         னுருவாகி
ஒருதாய்வ யிற்றி னிடையேயு தித்து
        உழல்மாய மிக்கு                          வருகாயம்
பழசாயி ரைப்பொ டிளையாவி ருத்த
        பரிதாப முற்று                            மடியாமுன்
பரிவாலு ளத்தில் முருகாஎ னச்சொல்
        பகர்வாழ்வெ னக்கு                     மருள்வாயே
எழுவான கத்தி லிருநாலு திக்கில்
        இமையோர்த மக்கு                         மரசாகி
எதிரேறு மத்த மதவார ணத்தில்
        இனிதேறு கொற்ற               முடன்வாழுஞ்
செழுமாம ணிப்பொ னகர்வாழ்ப டுத்து
        செழுதீவி ளைத்து                    மதிள்கோலித்
திடமோட ரக்கர் கொடுபோய டைத்த
        சிறைமீள விட்ட                         பெருமாளே

பதம் பிரித்தல்

ஒழுகு ஊன் இரத்தமொடு  தோல் உடுத்தி
உயர் கால் கரத்தின் உருவாகி
ஒழுகு - பரந்துள்ள ஊன் இரத்தமொடு - மாமிசம், உதிரம் இவைகளுடன் தோல் உடுத்தி - தொல் கொண்டு மேயப்பட்டு உயர் கால் - உயரமாயுள்ள கால்கள் கரத்தின் - கைகள் இவைகளுடன் உருவாகி - ஒரு உருவமாகி

ஒரு தாய் வயிற்றின் இடையே உதித்து
உழல் மாயம் மிக்கு வரு காயம்
ஒரு தாய் வயிற்றின் இடையே - ஒரு தாயினுடைய வயிற்றில் உதித்து - தோன்றி உழல் - அலைகின்ற மாயம் மிக்கு - மாய உணர்ச்சி மிகுந்த வரு காயம் - இந்த உடல்

பழசாய் இரைப்பொடு இளையா விருத்த
பரிதாபம் உற்று மடியா முன்
பழசாய் - பழமை அடைந்து இரைப்பொடு - மூச்சு வாங்குவதால் இளையா - சோர்வு அடைந்து விருத்த பரிதாபம் உற்று - கிழவன் என்னும் பரிதாப நிலையை அடைந்து மடியாமுன் - இறப்பதற்கு முன்

பரிவால் உளத்தில் முருகா என சொல்
பகர் வாழ்வு எனக்கும் அருள்வாயே
பரிவால் உள்ளத்தில்- அன்பு கலந்த உள்ளத்தில் முருகா எனச் சொல் - முருகா என்னும் சொல்லை நான் பகர் - சொல்லும்படியான வாழ்வு - வாழ்வை எனக்கும் அருள்வாயே - என்னையும் பொருள் படுத்தி அருள்வாயாக

எழு வான் அகத்தில் இரு நாலு திக்கில்
இமையோர் தமக்கும் அரசாகி
எழு வான் அகத்தில் - விளங்குகின்ற விண்ணுலகிலும் இரு நாலு திக்கில் - எட்டு திசைகளிலும் உள்ள இமையோர் தமக்கு - தேவர்களுக்கு அரசாகி - அரசனாகி

எதிர் ஏறு மத்த மத வாரணத்தில்
இனிது ஏறு கொற்முடன் வாழும்
எதிர் ஏறு - அத்தேவர்களுக்கு எதிரில் விளங்கும் மத்த மத - செருக்குள்ளதும் மதம் பொழிவதுமான வாரணத்தில் - வெள்ளை யானையாகிய ஐராவதத்தில் இனிது ஏறு - இன்பகரமாக ஏறிவரும் கொற்றமுடன் வாழும் - வெற்றி நிலையுடன் வாழ்ந்த

செழுமா மணி பொன் நகர் பாழ் படுத்து
செழு தீ விளைத்து மதில் கோலி
செழு மா மணி - செழுமை வாய்ந்த அழகிய பொன் நகர் பாழ் படுத்து - பொன் உலகத்தைப் பாழ் படுத்தி செழு தீ விளைத்து - பெருந் தீயிட்டு மதிள் கோலி - அவ்வூரை மதில் போல வளைத்து
திடமோடு அரக்கர் கொடு போய் அடைத்த
சிறை மீளவிட்ட பெருமாளே

திடமோடு அரக்கர் - வலிமையுடைய அரக்கர்கள் கொடு போய் அடைத்த - கொண்டு போய்ச் சிறையிலிட்ட (தேவர்களின்) சிறை -  சிறையை மீள விட்ட பெருமாளே - நீக்கி அவர்களை வெளிவிட்ட பெருமாளே


சுருக்க உரை

மாமிசம், இரத்தம், தோல், கால், கைகள் இவை கொண்ட உடலுடன் ஒரு தாயின் வயிற்றில் உருவாகி, வளர்ந்து, மூப்பு எய்தி, சோர்ந்து, இறந்து போகு முன், என்னையும் பொருட்படுத்தி, அன்பு கலந்த உள்ளத்துடன், முருகா என்னும் உன் பெயரைச் செல்லும்படியான நல் வாழ்வை  அருள்வாயாக

விண்ணுலகிலும், எட்டு திசைகளிலும் உள்ள தேவர்களுக்கு அரசனாகி, மத யானையாகிய ஐராவதத்தில் இன்பகரமாக ஏறி வந்து, வெற்றியுடன் வாழ்ந்த தேவர்களின் பொன்னுலகத்தை அழித்து, அசுரர்களிடமிருந்து,  திடத்துடன் தேவர்களைச் சிறையினின்றும் மீட்ட பெருமாளே, எனக்கு முருகா என்று சொல்லும்படியான நல்ல வாழ்வைத் தந்து அருள்வாயாக

விளக்கக் குறிப்புகள்

பொன்னகர் பாழ்படுத்து
அசுரர்கள் பொன்னுலகைப் பாழ் படுத்தியதைக்  குறிக்கும் பாடல்
திருவான கற்ப தரு நாடழித்து
விபுதேசர் சுற்ற மவைகோலி --- திருப்புகழ், கருவாய்வயிற்றி




No comments:

Post a Comment