பின் தொடர்வோர்

Wednesday 7 April 2021

438.மக்கட்கு

 

438

காஞ்சீபுரம்

 


       தத்தத்தத் தானன தானன

        தத்தத்தத் தானன தானன

        தத்தத்தத் தானன தானன  தனதான

 

மக்கட்குக் கூறரி தானது

   கற்றெட்டத் தான்முடி யாதது

   மற்றொப்புக் கியாதுமொ வாதது     மனதாலே

மட்டிட்டுத் தேடவொ ணாதது

   தத்வத்திற் கோவைப டாதது

   மத்தப்பொற் போதுப கீரதி              மதிசூடும்

முக்கட்பொற் பாளரு சாவிய

   அர்த்தக்குப் போதக மானது

   முத்திக்குக் காரண மானது             பெறலாகா

முட்டர்க்கெட் டாதது நான்மறை

   யெட்டிற்றெட் டாதென வேவரு

   முற்பட்டப் பாலையி லாவது           புரிவாயே

செக்கட்சக் ராயுத மாதுலன்

   மெச்சப்புற் போதுப டாவிய

   திக்குப்பொற் பூதர மேமுதல்          வெகுரூபம்

சிட்டித்துப் பூதப சாசுகள்

   கைக்கொட்டிட் டாடக கோததி

   செற்றுக்ரச் சூரனை மார்பக            முதுசோரி

கக்கக்கைத் தாமரை வேல்விடு

   செச்சைக்கர்ப் பூரபு யாசல

   கச்சுற்றப் பாரவ யோதர        முலையாள்முன்

கற்புத்தப் பாதுல கேழையு

   மொக்கப்பெற் றாள்விளை யாடிய

   கச்சிக்கச் சாலையில் மேவிய        பெருமாளே

 

பதம் பிரித்து உரை

 

மக்கட்குக் கூற அரிதானது

கற்று எட்டத்தான் முடியாதது

மற்று ஒப்புக்கு இயாதும் ஒவ்வாதது மனதாலே

 

மக்கட்குக் கூற அரிதானது = மக்களுக்கு அது இத்தன்மைத்து என்று எடுத்துச் சொல்லுவதற்கு அரிதானது. கற்று எட்டத் தான் = கல்வியின் மூலமாக எட்டிப் பிடிக்கலாம் என்றால் முடியாதது = அங்ஙனம் எட்டுதற்கும் முடியாதது மற்று = பின்னர் ஒப்புக்கு = ஒன்றை ஒப்பிடலாம் என்றால் இயாதும் ஒவ்வாதது = (ஒப்பிடுவதற்கு) எப்பொருளுமே ஒப்பிட ஒண்ணாதது மனதாலே = மனதைக் கொண்டு

 மட்டிட்டு தேட ஒணாதது

தத்வத்தில் கோவை படாதது

மத்த பொன் போது பகீரதி மதி சூடும்

 

மட்டிட்டு = அளவிட்டு தேட ஒணாதது = தேடுதற்கு முடியாதது தத்வத்தில் = அறிவு அராய்ச்சிக்கும் கோவை படாதது = ஒரு வழியான வரிசையில் அமையாதது மத்தப் பொன் போது ஊமத்த மலரின் மகரந்தப் பொடி கொண்ட மலரையும் பகீரதி = கங்கை நதியையும் மதி =  நிலவையும் சூடும் = சடையில் அணிகின்ற

 

முக்கண் பொற்பாளர் உசாவிய

அர்த்த(த்து)க்கு போதகமானது

முத்திக்கு காரணம் ஆனது பெறலாகா

 

முக்கண் பொற்பாளர் = மூன்று கண்களை உடைய அழகர் உசாவிய = சொல்லுக என்று கேட்க அர்த்தத்துக்கு = பொருளுக்கு போதகம் ஆனது = உபதேச வித்தாக இருப்பது முத்திக்கு = வீட்டின்பத்துக்கு காரணம் ஆனது = காரணமாக விளங்குவது பெறலாகா = பெறுதற்கு முடியாததாய்

 

முட்டர்க்கு எட்டாதது நான் மறை

எட்ட இல் தெட்டாது எனவே வரும்

முற்பட்டு அப்பாலையில் ஆவது புரிவாயே

 

முட்டர்க்கு எட்டாதது = மூடர்களுக்கு எட்டாததாய் இருப்பது நான் மறை = நான்கு வேதங்களுக்கும் எட்ட இல் = எட்ட முடியவில்லை என்று விளக்கம் தெட்டாது எனவே வரும் முற்பட்டும் = உறாத வழியில் முற்பட்டும் அப்பாலையில் ஆவது = அந்த நிலைக்கு அப்பாலான நிலையில் உள்ளது எதுவோ அந்தப் பொருளை புரிவாயே = (அடியேனுக்கு) உபதேசித்து அருள்வாயாக.

 

செக்கண் சக்ராயுத மாதுலன்

மெச்ச புல் போது படாவிய

திக்கு பொன் பூதரமே முதல் வெகு ரூபம்

 

செக் கண் = சிவந்த கண்களை உடைய சக்ராயுத = சக்கரம் ஏந்திய மாதுலன் = மாமன். மெச்ச = மெச்சிப் புகழ புல் = புல்லும். போது = மலரும். படா = படர உள்ள. வியம் = பெரிய திக்கு = திசைகளில் உள்ள. பொன் பூதரமே = மேரு மலை முதல் = முதலான. வெகு ரூபம் = பலப்பல உருவ பேதங்களை.

 

சிட்டித்து பூத பசாசுகள்

கை கொட்டிட்டு ஆட மகோததி

செற்று உக்ர சூரனை மார்பகம் முது சோரி

 

சிட்டித்து = படைத்தும் பூத பசாசுகள் = பூதங்களும், பேய்களும் கைக்கொட்டிட்டு ஆட = கை கொட்டி ஆட. மகோததி = பெரிய கடலை செற்றும் = அடக்கியும் உக்ரச் சூரனை = கொடுமையுடன் எழுந்த சூரனை = சூரனது மார்பகம் = மார்பிடத்தில் முது = முற்றின சோரி = இரத்தத்தை

 கக்க கை தாமரை வேல் விடு

செக்கர் கர்ப்பூர புய அசல

கச்சு உற்ற பார பயோதர முலையாள் முன்

 

கக்க = சொரியவும் கைத்தாமரை = தாமரை போன்ற

கைகளிலிருந்து வேல் விடு = வேலைச் செலுத்திய செச்சை = சந்தனக் குழம்பு கர்ப்பூர = பச்சைக் கற்பூரம் இவைகளை பூசியுள்ள புய அசல = மலை போன்ற புயங்களை உடையவனே கச்சு உற்ற = கச்சு அணிந்ததும் பார = கனமானதும் பயோதர = பால் கொண்டதுமான முலையாள் = கொங்கைகளை உடையவளும் முன் = முன்பு ஒரு நாள்

 

கற்பு தப்பாது உலகு ஏழையும்

ஒக்க பெற்றாள் விளையாடிய

கச்சி கச்சாலையில் மேவிய பெருமாளே.

 

கற்பு தப்பாது = கற்பு நிலை தவறாமல் உலகம் ஏழையும் = ஏழு உலகங்களையும் ஒக்கப் பெற்றாள் = ஒருங்கே ஈன்றவளுமான (காமாட்சி தேவி) விளையாடிய = தவம் செய்து மகிழ்ந்த கச்சி = கச்சிப் பதியில் கச்சாலையில் = கச்சபாலயம் என்ற திருக் கோயிலில் மேவிய = வீற்றிருக்கும் பெருமாளே = பெருமாளே

  சுருக்க உரை

 

மக்களுக்கு எடுத்துக் கூற முடியாததும், நூல்களைக் கற்று எட்ட முடியாததும், எதையாவது ஒப்பிடலாம் என்றால் எதுவுமே ஒப்பிட ஒண்ணாததும், மனதால் அளவிட முடியாததும், ஆராய்ச்சிக்கு அமையாததும், ஆகிய பொருளைத் தமக்கு உபதேசம் செய்யும்படி, ஊமத்தை மலரையும், கொன்றையையும், கங்கையையும்,

நிலவையும் அணிந்த சிவபெருமான் கேட்க, அத்தகைய பொருளுக்கு உபதேச வித்தாக இருப்பது, வீட்டின்பத்துக்குக் காரணமாக இருப்பது,  தங்களுக்கும்

எட்டாதது, எல்லாவற்றுக்கும் அப்பால் உள்ள அந்தப் பொருளை அடி யேனுக்கு உபதேசித்து அருள்வாயாக.

 

சக்கரம் ஏந்திய மாமனாகிய திருமால் மெச்சிப் புகழ, பல உருவ பேதங்களைப் படைத்து, பெரிய கடலை அடக்கி, சூரனது மார்பில் வேலாயுதத்தைச் செலுத்திய திருப் புயங்களை உடையவனே ! கற்பு நிலை தவறாமல் ஏழு உலகங்களையும் ஈன்ற காமாட்சி தேவி தவம் செய்து மகிழ்ந்த, கச்சிப் பதியில் வீற்றிருக்கும்  பெருமாளே ! எல்லாவற்றுக்கும் அப்பால் உள்ள ஒப்பற்ற பொருளை எனக்கும் உபதேசித்து அருள்வாயாக.

 

 

முதல் நான்கு அடிகள் மெய்ப் பொருள் தத்துவத்தை விளக்குகின்றன. இதே கருத்துள்ள மற்ற திருப்புகழ்ப் பாடல்கள்:

வாசித்துக்காணொ, காணொதாதது, வேதத்திற்கேள்வி, சுருதியூடு.

 

ஒப்புக

 

உலகு ஏழயும் ஒக்கப் பெற்றாள்.....

பொற்பட்டுத்தரி அப்பெண்

பழய அண்டத்தைப் பெற்ற மடப் பெண் பணிவாரை

          ... திருப்புகழ், புனைமடந்தைக்கு

 

 

நான்மறை எட்ட இல் தெட்டாது....

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே   

                      ... திருவாசகம், சிவபுராணம்.

வான நாடரும் அறி ஒணாத நீ

மறையில் ஈறும் முன் தொடர் ஒணாத நீ

ஏனை நாடரும் தெரி ஒணாத நீ

 என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா

                                            ... திருவாசகம், திருச்சதகம்.

 

விளக்கக் குறிப்பு

 

கச்சிக் கச்சாலையில் மேவிய..

திருப்பாற்கடலைக் கடைந்த போது, மத்தாகிய மந்திர மலை அழுந்த, அதைத் திருமால் ஆமை உருவம் எடுத்து முதுகில் தாங்கினார். இதனால் இறுமாப்படைந்து கடலைக் கலக்க, சிவபெருமான் ஏவ, விநாயகர், அந்த ஆமையைக் கொன்று, அதன் ஓட்டை சிவபெருமான் அணியத் தந்தனர். திருமால் தமது குற்றம் தீர பூசித்த சோதி லிங்கமே கச்சபேசர்.

 

437. பொக்குப்பை

 

437

காஞ்சீபுரம்

 


தத்தத்தத் தத்தத் தத்தத்தத் தத்தத்

தத்தத்தத் தத்தத்                         தனதான

 

பொக்குப்பைக் கத்தத் தொக்குப்பைக் குத்துப்

      பொய்த்தெத்துத்  தத்துக்             குடில்பேணிப்

பொச்சைப்பிச் சற்பக் கொச்சைச்சொற் கற்றுப்

      பொற்சித்ரக் கச்சுக்                    கிரியார்தோய்

துக்கத்துக் கத்திற் சிக்கிப்பட் டிட்டுத்

      துக்கித்துக் கெய்த்துச்                        சுழலாதே

சுத்தச்சித் தத்துப் பத்திப்பத் தர்க்கொத்

      துச்சற்றர்ச் சிக்கப்                        பெறுவேனே

திக்குத்திக் கற்றுப் பைத்தத்தத் திக்குச்

      செற்பத்ரக் கொக்கைப்             பொரும்வேலா

செப்பச்சொர்க் கத்துச் செப்பொற்றத் தைக்குச்

      செச்சைக்கொத் தொப்பித்           தணிவோனே

கக்கக்கைத் தக்கத் கக்கட்கக் கக்கிக்

      கட்கத்தத் தர்க்குப்                       பெரியோனே

கற்றைப்பொற் றெத்தப் பெற்றப்பொற் சிற்பக்

      கச்சிக்குட் சொக்கப்                      பெருமாளே.

 

பதம் பிரித்து உரை

 

பொக்கு பை கத்தம் தொக்கு குத்து

பொய்த்து எத்து தத்து குடில் பேணி

 

பொக்கைப் பை - குற்றம் நிறைந்த பை கத்த(ம்) மலம் தொக்குப் பை  - கூடிய பை குத்து பொய்த்து - சுடு சொல் பொய்யோடு கலந்து எத்து - வஞ்சகம். தத்து - ஆபத்து (இவை எல்லாம் கூடிய) குடில் பேணி - குடிசையாகிய இந்த உடலை விரும்பி.

 

பொச்சை பிச்சு அற்ப கொச்சை சொல் கற்று

பொன் சித்ர கச்சு கிரியார் தோய்

 

பொச்சை - குற்றமானதும் பிச்சு - பைத்தியம் கொண்டதும் அற்ப - அற்பமானதும் கொச்சை - இழிவானதுமான. சொல் கற்று - சொற்களைக் கற்று பொன் - அழகிய சித்ர - விசித்திரமான கச்சுக் கிரியார் - கச்சு அணிந்த மலை போன்ற கொங்கைகளை உடைய விலை மாதர்களை தோய் சேருதலால் வரும்

 

துக்க துக்கத்தில் சிக்கு பட்டிட்டு

துக்கித்து எய்த்து சுழலாதே

 

துக்க துக்கத்துக்கு - பெருந் துக்கத்தில் சிக்குப் பட்டிட்டு - மாட்டிக் கொண்டு துக்கித்து - வேதனை உற்று எய்த்து -

இளைத்து சுழலாதே - சஞ்சலப் படாமல்

 

சுத்தர் சித்தத்து பத்தி பத்தர்க்கு ஒத்து

சற்று அர்ச்சிக்க  பெறுவேனோ

 

சுத்த - பரிசுத்தமான சித்தத்து - மனதுடன் பத்தி பக்தி பூண்ட பத்தர்க்கு - பக்தர்களுக்கு ஒத்து - இணையாக (நான் ஒழுகி) சற்று அர்ச்சிக்கப் பெறுவேனோ உன்னைச் சிறிதள்வேனும் பூசிக்கும் பாக்கியத்தைப் பெறுவேனோ?

 

திக்கு திக்கு அற்று பை தத்து அத்திக்கு

செல் பத்திர(ம்) கொக்கை பொரும் வேலா

 

திக்கு - எந்தத் திக்கிலும் திக்கு அற்று - உதவி இல்லாமல் போய் பை - பசிய. தத்து அத்திக்கு செல் - அலை மோதுகின்ற கடலுள் போய்ச் சேர்ந்த பத்ரம் கொக்கை -  இலையோடு கூடிய மாமரமாகிய சூரனோடு பொரும் வேலா - சண்டை செய்த

வேலனே.

 

செப்ப அ சொர்க்கத்து செம் பொன் தத்தைக்கு

செச்சை கொத்து ஒப்பித்து அணிவோனே

 

செப்பச் சொர்க்கத்து - செவ்விய விண்ணுலகில் செம் பொன் - செம் பொன் போன்ற. தத்தைக்கு - கிளி போன்ற தேவசேனைக்கு.

செச்சைக் கொத்து - வெட்சி மலர்க் கொத்தால் ஒப்பித்து - அலங்கரித்து அணிவோனே - மாலை சூட்டுபவனே.

 

கக்கு அக்கை தக்க அக்கங்கட்கு அக்கு அக்கி

கண் கத்த அத்தர் பெரியோனே

 

கக்கு - (பிரமன் முதலியோர்  சரீரத்தினின்றும்) கழன்ற அக்கை - எலும்பை. தக்க - தகுந்த அக்க்கட்கு - (தமது) அங்கங்களுக்கு. அக்கு - (ஆபரணம்) ஆக்கிய. அக்கி - அக்கினி கண் கத்த அத்தர் - கண்ணை உடைய கர்த்தராகிய

தந்தையாகிய (சிவபெருமானுக்கு) பெரியோனே - (குரு நாதராக வந்த) பெரியோனே.

[அத்தர் – பெரியவர், உயர்ந்தவர்]

 

கற்றை பொற்று ஏத்த பெற்ற பொன் சிற்ப

கச்சிக்குள் சொக்க பெருமாளே.

 

கற்றை - திரளான போற்று ஏத்தப் பெற்ற - துதிப் பாடல்களால் போற்றிப் பாடப்பட்ட பொன் சிற்ப - சிற்ப வேலைப்பாடுகள்

உள்ள கச்சிக்குள் - காஞ்சீபுரத்துக்குள் சொக்கப் பெருமாளே எழுந்தருளிய அழகிய பெருமாளே.

 

சுருக்க உரை

 

குற்றம் நிறைந்த மலங்களோடு கூடி, பொய்யும், வஞ்சனையும் கலந்த இந்தக் குடிசையாகிய உடலை விரும்பி, அற்பமானச் சொற்களைப் பயின்ற, மலை போன்ற கொங்கைகளை உடைய விலைமாதர்களுடன் சேர்வதால் வரும் வேதனைகளில் மாட்டிக் கொண்டு, மனம் சஞ்சலப்  படாமல், பரிசுத்தமான நெஞ்சம் கொண்ட பக்தர்களுக்கு இணையாக நான்  ஒழுகி, உன்னைப் பூசிக்கும் பாக்கியத்தைச் சிறிதளவேனும்

பெறுவேனோ?

 

எல்லா திக்குகளிலும் ஒரு உதவியும் கிட்டாத சூரன் கடலினுள் புகுந்து, மாமரமாக நிற்க, அவனையும் அவனுடைய ஏழு கிரிகளையும் அழித்த வேலாயுதனே!

செவ்விய் விண்ணுலகில் உள்ள கிளி போன்ற தேவ சேனையை மலர்களால் அலங்கரித்து சூட்டுபவனே ! பிரமன் முதலியோர் எலும்பை ஆபரணமாக ஆக்கி,

அக்கினிக் கண்ணை உடைய சிவபெருமானுக்குக் குருநாதனே ! துதி பாடல்கள் பலவற்றால் போற்றப் படும் கச்சியில் வீற்றிருக்கும் அழகிய பெருமாளே ! உன்னைப் போற்றிப் பாடும் பாக்கியம் எனக்குக் கிட்டுமோ?

 

ஒப்புக

 

சுத்தர் சித்தத்துப் பத்திப் பத்தர்....

அவசமாகி உருகு தொண்டருடன தாகி விளையு மன்பு

னடிமை யாகு முறைமை யொன்றை அருள்வாயே.

                                                                           ..திருப்புகழ் முறுகுகாள.

 

கற்றைப் பொற் றெத்தப் பெற்ற....

துதிப் பாடல்கள் நிரம்பப் பெற்ற காஞ்சீபுரம். சைவ சமயக் குரவர் நால்வர், ஐயடிகள் காடவர் கோன் நாயனார், பரண தேவர்,  பட்டினத்தார் முதலியோர் கச்சியைப் போற்றிப் பாடியதைக் குறிக்கும்.