பின் தொடர்வோர்

Saturday 21 November 2020

432.தலைவலையத்து

 

432


காஞ்சீபுரம்

இத் திருப்புகழ் காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மை திருக்கோயிலில் உள்ள முருகன் மீது பாடியது.

            தனதன தத்தத் தனந்த தந்தன

                   தனதன தத்தத் தனந்த தந்தன 

                   தனதன தத்தத் தனந்த தந்தன   தந்ததான

 தலைவலை யத்துத் தரம்பெ றும்பல

   புலவர் மதிக்கச் சிகண்டி குன்றெறி

   தருமயில் செச்சைப் புயங்க யங்குற          வஞ்சியோடு

தமனிய முத்துச் சதங்கை கிண்கிணி

   தழுவிய செக்கச் சிவந்த பங்கய

   சரணமும் வைத்துப் பெரும்ப்ர பந்தம்வி       ளம்புகாளப்

புலவனெ னத்தத் துவந்த ரந்தெரி

   தலைவனெ னத்தக் கறஞ்செ யுங்குண

   புருஷனெ னப்பொற் பதந்த ருஞ்சன      னம்பெறாதோ

பொறையனெ னப்பொய்ப் ப்ரமஞ்ச மஞ்சிய

   துறவனெ னத்திக் கியம்பு கின்றது

   புதுமைய லச்சிற் பரம்பொ ருந்துகை          தந்திடாதோ

குலசயி லத்துப் பிறந்த பெண்கொடி

   யுலகடை யப்பெற் றவுந்தி யந்தணி

   குறைவற முப்பத் திரண்ட றம்புரி              கின்றபேதை

குணதரி சக்ரப் ப்ரசண்ட சங்கரி  

   கணபண ரத்நப் புயங்க கங்கணி

   குவடுகு னித்துப் புரஞ்சு டுஞ்சின                  வஞ்சிநீலி

கலபவி சித்ரச் சிகண்டி சுந்தரி

   கடியவி டத்தைப் பொதிந்த கந்தரி

   கருணைவி ழிக்கற் பகந்தி கம்பரி               யெங்களாயி

கருதிய பத்தர்க் கிரங்கு மம்பிகை

   சுருதிது திக்கப் படுந்த்ரி யம்பகி 

   கவுரிதி ருக்கொட் டமர்ந்த இந்திரர்           தம்பிரானே.


 

பதம் பிரித்து உரை

 

தலை வலையத்து தரம் பெறும் பல

புலவர் மதிக்க சிகண்டி குன்று எறி

தரும் அயில் செச்சை புயம் கய(வஞ்சி) குற வஞ்சியோடு

 

தலை வலையத்து = முதல் தரமான. தரம் பெறும் = தக்கத் தகுதிகளைப் பெற்றுள்ள. புலவர் மதிக்க = புலவர்கள் போற்றித் துதிக்க. சிகண்டி = (உனது) மயிலையும் குன்று எறி தரும் = (கிரௌஞ்ச) மலையைப் பிளந்து எறிந்த அயில் = வேலையும் செச்சைப் புயம் = வெட்சி மாலை அணிந்த புயங்களையும் கயவஞ்சி  = யானை வளர்த்த தேவசேனையையும்  குற வஞ்சியோடு = வள்ளி நாயகியையும்.

 

தமனிய முத்து சதங்கை கிண்கிணி

தழுவிய செக்க சிவந்த பங்கய

சரணமும் வைத்து பெரும் ப்ரபந்தம் விளம்பு(ம்) காள

 

தமனிய = பொன்னாலாகிய. முத்து தசங்கை = முத்துச் சதங்கை கிண்கிணி = கிண்கிணி (இவைகளை) தழுவிய = தழுவி. செக்கச் சிவந்த = மிகச் சிவந்த பங்கய = தாமரை போன்ற. சரணமும் வைத்து = திருவடியையும் வைத்து. பெரும் = பெரிய ப்ரபந்தம் விளம்பும் = பாமாலைகளைப் பாடவல்ல.

 

புலவன் என தத்துவம் தரம் தெரி

தலைவன் என தக்க அறம் செய்யும் குண

புருஷன் என பொன் பதம் தரும் சனனம் பெறாதோ

 

காளப் புலகன் = காளமேகம் போன்ற புலவன் இவன்.  என = என்று சொல்லும்படியும் தத்துவம் தரம் தெரிந்த தலைவன் = உண்மையான ஞானமும் தகுதியும் கொண்ட தலைவன் இவன் என்று கூறும்படியும் தக்க அறம் செய்யும் குண புருஷன் என = சரியான தருமங்களைச் செய்யும் நல்ல குணம் படைத்தவன் இவன் என்று கூறும்படியும். பொன் பதம்  = மேலான பதவியை தரும் சனனம் பெறாதோ = தருகின்ற பிறப்பை நான் பெற மாட்டேனோ?

 

பொறையன் என பொய் ப்ரபஞ்சம் அஞ்சிய 

துறவன் என திக்கு இயம்புகின்ற அது 

புதுமை அ(ல்)ல சிற்பரம் பொருந்துகை தந்திடாதோ

 

பொறையன் என = பொறுமை உடையவன் இவன் என்றும். பொய்ப் ப்ரபஞ்சம் அஞ்சிய = பொய் உலகத்தைக் கண்டு பயந்த. துறவன் என = துறவி எவன் என்றும். திக்கு இயம்புகின்றது = திக்குகளில் உள்ளோர் சொல்லுவது. புதுமை அல்ல = ஓர் அதிசயம் அன்று. சிற்பரம் = அறிவுக்கு. பொருந்துகை தந்திடாதோ = மேம்பட்ட பெரு நிலையைச் சேர்ந்து பொருந்தும் பேற்றை எனக்குத் தந்து அருளாதோ?

 

குல சயிலத்து பிறந்த பெண் கொடி

உலகு அடைய பெற்ற உந்தி அந்தணி  

குறைவு அற முப்பத்திரண்டு அறம் புரிகின்ற பேதை

 

குல சயிலத்து = சிறந்த மலையாகிய (இமயத்தில்). பிறந்த பெண் கொடி = பிறந்த கொடி போன்ற பெண். உலகு அடைய பெற்ற உந்தி = உலகம் முழுவதையும் ஈன்ற திருவயிற்றை உடையவள். அந்தணி = அழகிய தட்பம் உடையவள். குறைவு அற = குறைவு இல்லாத வகையில். முப்பத்திரண்டு அறம் புரிகின்ற பேதை = முப்பதிரண்டு அறங்களையும் செய்து வந்த தேவி.

 

குண தரி சக்ர ப்ரசண்ட சங்கரி

கண பண ரத்ந புயங்க கங்கணி

குவடு குனித்து புரம் சுடும் சின வஞ்சி நீலி

 

குண தரி = நற் குணம் உடையவள். சக்ரப் ப்ரசண்ட = மந்திர யந்திரத்தில் வீரத்துடன் விளங்கும். சங்கரி = சங்கரி. கண பண = கூட்டமான படங்களை உடையதும். ரத்ந = இரத்தின மணிகளைக் கொண்டதுமான.  புயங்க = பாம்பை. கங்கணி = கைவளையாக அணிந்தவள். குவடு குனித்து = மேரு மலையை வளைத்து. திரிபுரம் = முப்புரங்களையும். சுடும் சின வஞ்சி = சுட்டெரித்த கோபம் கொண்ட வஞ்சிக் கொடி போன்றவள். நீலி = நீல நிறம் உடையவள்.

 

கலப விசித்ர சிகண்டி சுந்தரி

கடிய விடத்தை பொதிந்த கந்தரி

கருணை விழி கற்பகம் திகம்பரி எங்கள் ஆயி

 

கலப விசித்ரச் சிகண்டி = விசித்திமான தோகையைக் கொண்ட மயில் போன்றவள். சுந்தரி = அழகி. கடிய விடத்தை = பொல்லாத ஆலகால விடத்தை. பொதிந்த கந்தரி = அடக்கிய கண்டத்தை உடையவள்  கருணை விழிக் கற்பகம் = வேண்டுவோர்க்கு வேண்டியதை அளிக்கும் கற்பகம் போன்றவள். திகம்பரி = திசைகளையே ஆடையாகக்கொண்டவள்.  எங்கள் ஆயி = எங்கள் தாய்.

 

கருதிய பத்தர்க்கு இரங்கும் அம்பிகை

சுருதி துதிக்கப்படும் த்ரி அம்பகி

கவுரி திரு கோட்டு அமர்ந்த இந்திரர் தம்பிரானே.

 

கருதிய பத்தர்க்கு இரங்கி = தன்னைத் தியானிக்கும் அடியவர்களுக்கு இரக்கம் கொள்ளும்.  அம்பிகை = அம்பிகை. சுருதி துதிக்கப்படும் = வேதம் துதிக்கும். த்ரி அம்பகி = முக்கண்ணி. கவுரி = (ஆகிய) கவுரியின். திருக் கோட்டம் அமர்ந்த = (காமாட்சி அம்மன்) கோயிலில் வீற்றிருக்கும்  இந்திரர் = தேவேந்திரர்களுடைய. தம்பிரானே = தம்பிரானே.

 

சுருக்க உரை

 

தகுதியுள்ள புலவர்கள் போற்றித் துதிக்க, உனது மயிலையும், கிரௌஞ்ச மலையைப்பிளந்த வேலையும், வெட்சி மாலை அணிந்த புயங்களையும், தேவசேனை, வள்ளி ஆகிய இரு பெண்களும் கூட வர, பொன் சதங்கை, கிண்கிணி அணிந்த உனது திருவடியையும் வைத்துப் பெரிய பாக்களைப் பாட வல்ல காளமேகம் போன்ற புலவன் இவன் என்றும், உண்மையான ஞானம் படைத்தவன் என்றும், நற் குணம் கொண்டவன் என்றும், தருமங்களைச் செவ்வனே செய்பவன் என்றும் உலகோர் கூறும்படியான மேலான பதத்தைத் தருகின்ற பிறப்பை நான் பெற மாட்டேனோ?

 

இமவான் மடந்தையும், உலகம் முழுமையும் ஈன்றவளும், முப்பத்திரண்டு அறங்களைச் செய்தவளும், பாம்பைக் கைவளையாக அணிந்தவளும், மேரு வளைத்துத், திரிபுரங்களையும் எரித்தவளும் ஆகிய பார்வதி எங்கள் தாயாவாள். விடத்தைக் கழுத்தில் அடக்கியவள். தன்னைத் தியானிக்கும் அடியார்களுக்கு வேண்டியதை அருள் செய்பவள். முக்கண்ணி, இந்தக் கவுரி அம்மை உறையும் காமாட்சி அம்மன்

கோயிலில் வீற்றிருக்கும் தேவர்கள் தம்பிரானே.

 

விளக்கக் குறிப்புகள்

அந்தணி = அந்தணன் என்பதின் பெண்பால்.

அந்தணி = அழகிய தட்பத்தை உடையவள் – வாரியார் ஸ்வாமிகள்

 

கய வஞ்சி = கயம் - யானை. இங்கே இந்திரனின் யானையான ஐராவதத்தைக் குறித்தது. கயவஞ்சி - தெய்வயானை.  குறவஞ்சி - வள்ளியம்மை.

 

குவடு குனித்து =  மேருமலையை வில்லாக வளைத்தது.  வில்லை எடுத்தது சிவபெருமானுடைய இடக்கரம்.  இடக்கரம் அம்பிகைக்கு உரியது.

 

குல சயிலத்துப் பிறந்த பெண்கொடி = தவம் செய்த குலமலை அரசராம் இமவானிடம் அம்பிகை தாமரை மலரில் தோன்றி, அம் மலையரசனிடம் வளர்ந்தருளினாள்.

 

உலகு அடைய பெற்ற உந்தி அந்தணி = எல்லாவுலங்களையும் ஈன்ற அன்னை.

 

ஒப்புக

 அபயவ ரம்புரி உபயக ரந்திகழ் அந்தணி

                                                                   ...வேல் வாங்கு வகுப்பு

அகிலதலம்பெறும் பூவை  =       திருப்புகழ், தமரகுரங்களும்

 

கலப விசித்ரச் சிகண்டி சுந்தரி...

தேவியை மயில் என்பது மயிலையிலும், மயிலாடு துறையிலும் பார்வதி மயில்   வடிவம் கொண்டு சிவபெருமானைப் பூசித்ததைக் குறிக்கும்.

இமயமயில் தழுவுமொரு  திருமார்பிலாடுவதும்

                                              ...சீர் பாத வகுப்பு

இரணகிரண மட மயிலின்ம்ருக மத                    

                                           ..தேவேந்திர வகுப்பு

 

சக்ர ப்ரசண்ட சங்கரி -  மந்திரம் பொறித்த யந்த்ர பீடத்தில் வீரத்துடன் விளங்குபவள்.

சக்ரதலத்தி த்ரியட்சி சடக்ஷரி  --  பூதவேதாள வகுப்பு.

 

குவடு குனித்து 

அதிகை வருபுரம் நொடியினில் எரிசெய்த அபிராமி

                               ...  திருப்புகழ், முகிலுமிரவியும்  

கருதலர் திரிபுரம் மாண்டு நீறெழ

மலைசிலை ஒருகையில் வாங்கு நாரணி   

                               ...  திருப்புகழ்,  பரிமள மிகவுள


'கவுரி திருக்கொட் டமர்ந்த இந்திரர் தம்பிரானே' என்று இரண்டு திருப்புகழ் பாடலில் வருகிறது.  இது ஒன்று. இன்னொன்று ‘சலமலம் விட்டத் தடம்பெ ருங்குடில்’ இங்கு மயில் என்பது மயிலான இந்திரனைக் குறிக்கும். இந்த மயிலில் ஏறி சூரனுடன் முருக வேள் சண்டை செய்தார். சூரன் மயில் வாகனமாவதற்கு முன்பு போர்க்களத்தில் இந்திரன் மயிலாக முருகவேளைத் தாங்கினான் என்பர்.

 

Friday 13 November 2020

431.செறிதரும்

 431

காஞ்சீபுரம்

 


            தனதனந் தத்தத் தத்தன தத்தந்

            தனதனந் தத்தத் தத்தன தத்தந்

            தனதனந் தத்தத் தத்தன தத்தந்       தனதான

 

செறிதரும் செப்பத் துற்பல வெற்பும்

   பிறிதுமங் கத்தைக் குற்றவி ருப்புஞ் 

   சிகரிதுண் டிக்கக் கற்றத னிச்செஞ்             சுடர்வேலும்

திரள்புயங் கொத்துப் பட்டவ னைத்துந்

  தெளியநெஞ் சத்துப் புற்றும யக்கம்

  திகழ்ப்பரஞ் சத்தைப் புற்பத மொக்கும்            படிநாடும்

அறிவறிந் தத்தற் கற்றது செப்புங்

  கடவுளன் பத்தர்க் கச்சம றுத்தன்

  பருள்பவன் பொற்புக் கச்சியுள் நிற்கும்   பெருமானென்

றவிழுமன் புற்றுக் கற்றும னத்தின்

  செயலொழிந் தெட்டப் பட்டத னைச்சென்

  றடைதரும் பக்வத் தைத்தமி யெற்கென்    றருள்வாயே

குறியவன் செப்பப் பட்டஎ வரக்கும்

    பெரியவன் கற்பிக் கப்படு சுக்ரன்

  குலைகுலைந் துட்கச் சத்யமி ழற்றுஞ்           சிறுபாலன்

குதலையின் சொற்குத் தர்க்கமு ரைக்குங்

    கனகனங் கத்திற் குத்திநி ணச்செங்

  குடர்பிடுங் கத்திக் குற்றமு கச்சிங்               கமுராரி

பொறிவிடுந் துத்திக் கட்செவி யிற்கண்

  துயில்கொளுஞ் சக்ரக் கைக்கிரி சுத்தம்

  புயலெனும் பொற்புப் பெற்றநி றத்தன்     ஜகதாதை

புனிதசங் கத்துக் கைத்தல நிர்த்தன்

  பழையசந் தத்தைப் பெற்றம டப்பெண்

  புகலுகொண் டற்குச் சித்திய ளிக்கும்          பெருமாளே

 

பதம் பிரித்து உரை

 

செறி தரும் செப்பத்து உற்பல வெற்பும்

பிறிதும் அங்கு அத்தைக்கு உற்ற இருப்பும்

சிகரி துண்டிக்க கற்ற தனி சுடர் வேலும்

 

செறி தரும் = நிறைந்து நெருங்கி மலரும். செப்பத்து = செம்மை வாய்ந்த. உற்பல வெற்பும் = செங்கழு நீர் மலையாகிய திருத்தணிகையும். பிறிதும் = பின்னும். அங்கு அத்தைக்கு உற்ற = அங்கு அதனைப் போன்ற. இருப்பும் = பிற தலங்களும். சிகரி = (கிரௌஞ்ச) மலையும். துண்டிக்கக் கற்ற = துண்டுபடச் செய்ய வல்லதான. தனி = ஒப்பற்ற. செம் சுடர் வேலும் = செவ்விய ஒளி வேலும்.

 

திரள் புயம் கொத்துப்பட்ட அனைத்தும்

தெளிய நெஞ்சம் துப்பு உற்று மயக்கம்

திகழ் ப்ரபஞ்சத்தை புற்பதம் ஒக்கும்படி நாடும்


திரள்
= திரண்ட. புயம் கொத்துப் பட்ட அனைத்தும் = புயங்கள் கொத்தாக உள்ள யாவும் (பன்னிரண்டும்). தெளிய = தெளிதர. நெஞ்சம் = மனதில். துப்பு உற்று = அறிவு அடைந்து. மயக்கம் திகழ் = மயக்கம் விளங்குகின்ற ப்ரபஞ்சத்தை = இவ்வுலகு. புற்புதம் ஒக்கும் படி நாடும்= நீர்க் குமிழை ஒத்தது என்னும் தன்மையை ஆய்ந்து உணரும்.

 

அறிவு அறிந்து அத்தற்கு அற்றது செப்பும்

கடவுளன் பத்தர்க்கு அச்சம் அறுத்து அன்பு

அருள்பவன் பொற்பு கச்சியுள் நிற்கும் பெருமான் என்று

 

அறிவு அறிந்து = அறிவை அறிந்து. அத்தற்கு = தந்தையாகிய சிவபெருமானுக்கு. அற்றது = (ஒரு பற்றும் அற்றுத் தத்துவம் கடந்து நிற்கும் பொருளை). செப்பும் = உபதேசித்த. கடவுளன் = இறைவன் என்றும். பத்தர்க்கு = அடியவர்களுக்கு. அச்சம் அறுத்து = பயத்தை நீக்கி. அன்பு அருள்பவன் = அன்பைக் கொடுத்து அருள்பவன் என்றும். பொற்புக் கச்சியுள் = அழகிய காஞ்சியில். நிற்கும் = நின்றருளும். பெருமான் என்று = பெருமான் என்றும் கூறி.

 

அவிழும் அன்பு உற்று கற்று மனத்தின்

செயல் ஒழிந்து எட்ட பட்டதனை சென்று

அடைதரும் பக்வத்தை தமியெற்கு என்று அருள்வாயே

 

அவிழும் = நெகிழ்ந்து உருகும். அன்பு உற்று = அன்பு பூண்டு. கற்று = (திருவருளைக் கற்று). மனத்தின் செயல் ஒழிந்து = மனத்தின் தொழில் ஒழிந்து. எட்டப்பட்டதனை = கிட்டப்படுவதான பொருளை. சென்று அடைதரும் = போய் அடையும். பக்வத்தை = ஆன்ம பக்குவத்தை. தமியெற்கு = அடியேனுக்கு. என்று அருள்வாயே = எப்போது அருள்வாய்?

 

குறியவன் செப்பப்பட்ட எவர்க்கும்

பெரியவன் கற்பிக்கப்படு சுக்ரன்

குலைகுலைந்து உட்க சத்யம் மிழற்றும் சிறு பாலன்

 

குறியவன் = குறள் உருவம் (வாமனாவதாரம்) எடுத்தவன் செப்பப்பட்ட = புகழந்து சொல்லப்படும் எவர்க்கும் = எவரினும். பெரியவன் = பெரியவன் கற்பிக்கப்படு = கல்வி கற்றுக் கொடுக்க வந்து சுக்ரன் = சுக்ராச்சாரியார் குலைகுலைந்து = உள்ளம் நடுநடுங்கி உட்க = அஞ்ச. சத்யம் மிழற்றும் = உண்மையைச் சாதித்து மேலாகச் சொன்ன சிறு பாலன் = சிறு குழந்தையாகிய பிரகலாதனின்.

 

குதலையின் சொற்கு தர்க்கம் உரைக்கும்

கனகன் அங்கத்தில் குத்தி நிணம் செம்

குடர் பிடுங்கி திக்கு உற்ற முகம் சிங்க முராரி

 

குதலையின் சொற்கு = மழலைச் சொல்லுக்கு. தர்க்கம் உரைக்கும் = தருக்கம் பேசிய. கனகன் = இரணியனுடைய. அங்கத்தில் குத்தி = உடலைக் குத்தி. நிணம் செம் குடர் பிடுங்கி = மாமிசம் நிறைந்த செவ்விய குடலைப் பிடுங்கி. திக்கு உற்ற = திசைகளை எட்டிய. சிங்க முக முராரி = நரசிங்க முகத்தைக் கொண்ட திருமால்.

 

பொறி விடும் துத்தி கண் செவியின் கண்

துயில் கொளும் சக்ர கை கிரி சுத்தம்

புயல் எனும் பொற்பு பெற்ற நிறத்தன் ஜக தாதை

 

பொறி விடும் துத்தி = ஒளி வீசும் படப் பொறிகளை உடைய. கண் செவியின் கண் = (ஆதி சேடனாகிய) பாம்பின் மேல். துயில் கொளும் = தூங்கும். சக்ரக் கை = சக்கரத்தை ஏந்திய கையை உடைய. கிரி = மலை போன்றவன். சுத்தம் = பரிசுத்தம் வாய்ந்த. புயல் எனும் = மேகம் எனத் தக்க. பொற்பு = அழகு வாய்ந்த. நிறத்தன் = நிறம் உடையவன். ஜக தாதை = உலகுக்குத் தந்தை.

 

புனித சங்கத்து கைத்தலம் நிர்த்தன்

பழைய சந்தத்தை பெற்ற மட பெண்

புகலும் கொண்டற்கு சித்தி அளிக்கும் பெருமாளே.

 

புனித சங்கத்துக் கைத்தலம் = பரிசுத்தமான பாஞ்ஜ ஜன்னியம் என்னும் சங்கைத் திருக்கையில் கொண்ட. நிர்த்தன் = கூத்தன். பழைய சந்தத்தை = பழைய வடிவைக் கொண்ட. மடப் பெண் = அழகிய பெண். புகலும் = புகழப்படும். கொண்டற்கு = (மேக நிறத்) திருமாலுக்கு. சித்தி அளிக்கும் பெருமாளே = வீடு பேறளித்த பெருமாளே.

 

சுருக்க உரை

 

செங்கழுநீர் மலர் நிறைந்த திருத்தணிகையையும், அதைப் போன்ற மற்ற தலங்களையும், கிரௌஞ்ச மலையும் பொடியாக்க வல்லதான ஒளி வேலும், பன்னிரண்டு திருப்புயங்களும்,

தெளிiவாக என் மனத்தில் ஊன்றி, மயக்கமே விளங்கும் இவ்வுலகு நீர்க்குமிழி போன்றது என்னும் தன்மையை ஆய்ந்து உணரும் அறிவை அடைந்து, சிவபெருமானுக்கு, பற்றுக்களுக்கு அப்பால் உள்ள உண்மைப் பொருளை உபதேசித்த இறைவன் என்றும், அழகிய கச்சியில் நின்ற பெருமான் என்றும் கூறி, நெகிழ்ந்து மனம் உருகி, உன் திருவருயைக் கற்று, மன ஒடுக்கம் உற்று, அந்த நிலையில் அடையும் ஆன்ம பக்குவத்தை அடியேனுக்கு எப்போது அருள்வாய்?

 

குறள் வடிவம் எடுத்து, கல்வி கொடுக்க வந்த சுக்ராச்சாரியார் நடுங்க, மழலைப் பேசும்

பிரகலாதனின்மழலைச் சொல்லுக்குத் தருக்கம் பேசிய இரணியனின் உடலைக் குத்திக்

கிழித்து, குடலைப் பிடுங்கிய நரசிங்க முகத் திருமால் ஆதிசேடன் மீது துயில்பவன்,

சக்கரத்தைக் கையில் ஏந்தியவன், மேக நிறம் உடையவன், பாஞ்ச சன்னியம் என்ற

சங்கைக் கையில் கொண்டவன்.  அவருக்கு வீடு பேறளித்த பெருமாளே.

 

 

விளக்கக் குறிப்புகள்

 எவர்க்கும் பெரியவன் கற்பிக்கப்படு சுக்ரன்......

 கூடமுறை நீடு செம்பொன் மாமதலை யூடெழுந்த

கோபவரி நார சிங்கன்   மருகோனே...திருப்புகழ், நீலமயில் சேரு

 புனித சங்கத்துக் கைத்தல நிர்த்தன்.....

 பாஞ்ஜ ஜன்னியம் = இப்பி ஆயிரம் சூழ்ந்தது இடம் புரி. இடம்புரி ஆயிரம் சூழ்ந்தது  வலம்புரி. வலம்புரி ஆயிரம் சூழ்ந்தது சலஞ்சலம். சலஞ்சலம் ஆயிரம் சூழ்ந்தது பாஞ்ஜ ஜன்னியம்

 பழைய சந்தத்தைப் பெற்ற மடப் பெண்....

 அரனுடைய சத்தியே அரி ஆதலால் அந்தப் பூர்வ நிலையைக் குறித்தது.  இதை (அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே) என்னும்  நாவரசர் தேவாரத்தால் உணரலாம்  

சிவ சக்தி அபரை, பாரபரை, பரை என முத்திறப்படும். அபரை = பிராமி.  சிருட்டித்தல் காரணமாக இருப்பவள். வைஷ்ணவி = ரட்சித்தல் காரணமாக  இருப்பவள். ரௌத்திரி = சங்கரித்தல் காரணமாக இருப்பவள்.

 கொண்டற்குச் சித்தி யளிக்கும் பெருமாளே.

முருகவேள் சம்பந்தராக அவதரித்த காலத்தில் சிவ சாரூபம் வேண்டிக்  கச்சியில் திருமேற்றளியில் தவம் செய்த திருமாலுக்கு சிவ சாரூபம்  அளித்த வரலாற்றைக் குறிக்கின்றது.

சோதி காட்ட வராச்சுத நாத னார்க்கருள் போற்றிய

தூரி தாப்பர மார்த்தம   தருள்வாயே...திருப்புகழ், ஏகமாய்ப்பல.

ஞால வட்ட முற்ற வுண்டு நாக மெத்தை யிற்று யின்ற

நார ணற்க ருட்சு ரந்த   மருகோனே... திருப்புகழ், ஓலமிட்டிரை