பின் தொடர்வோர்

Sunday 13 March 2022

493 விடுங்கை

 493

சிதம்பரம்

 


          தனந்தத் தத்தன தானன தானன

             தனந்தத் தத்தன தானன தானன

             தனந்தத் தத்தன தானன தானன  தனதான

 

விடுங்கைக் கொத்தக டாவுடை யானிட

   மடங்கைக் கைச்சிறை யானஅ நேகமும்

   விழுங்கப் பட்டற வேயற லோதியர்          விழியாலே

விரும்பத் தக்கன போகமு மோகமும்

   விளம்பத் தக்கன ஞானமு மானமும்

   வெறுஞ்சுத் தச்சல மாய்வெளி யாயுயிர்   விடுநாளில்

இடுங்கட் டைக்கிரை யாயடி யேனுடல்

   கிடந்திட் டுத்தம ரானவர் கோவென

   இடங்கட் டிச்சுடு காடுபு காமுன                மனதாலே

இறந்திட் டுப்பெற வேகதி யாயினும்

   இருந்திட் டுப்பெற வேமதி யாயினும்

   இரண்டிற் றக்கதொ ரூதியம் நீதர          இசைவாயே

கொடுங்கைப் பட்டம ராமர மேழுடன்

   நடுங்கச் சுக்ரிவ னோடம ராடிய

   குரங்கைச் செற்றும கோததி தூளெழ      நிருதேசன்

குலங்கட் பட்டநி சாசரர் கோவென

   இலங்கைக் குட்டழ லோனெழ நீடிய

   குமண்டைக் குத்திர ராவண னார்முடி      அடியோடே

பிடுங்கத் தொட்டச ராதிப னாரதி

   ப்ரியங்கொட் டக்கநன் மாமரு காஇயல்

   ப்ரபஞ்சத் துக்கொரு பாவல னாரென      விருதூதும்

ப்ரசண்டச் சொற்சிவ வேதசி காமணி

   ப்ரபந்தத் துக்கொரு நாதச தாசிவ

   பெரும்பற் றப்புலி யூர்தனில் மேவிய     பெருமாளே.

 

   பதம் பிரித்து உரை

  

விடுங்கைக்கு ஒத்த கடா உடையான் இடம்

அடங்கி கை சிறையான அநேகமும்

விழுங்கப்பட்டு அறவே அறல் ஓதியர் விழியாலே

விடுங்கைக்கு ஒத்த = ஏறி நடத்துவதற்கு ஏற்ற. கடா = எருமைக் கடாவை உடையான் இடம் = உடைய யமன் வசத்தே    அடங்கி அடங்கி. கைச்சிறையான = கை வசத்திலிருந்த அநேகமும் = பல     பொருள்களும் அறல் = கருமணலைப் போல் கரு நிறம் கொண்ட ஓதியர் = கூந்தலை உடைய விலை மாதர்களின்   விழியாலே = கண்களால் விழுங்கப்பட்டடு = கவரப்பட்டு

 விரும்ப தக்கன போகமும் மோகமும்

விளம்ப தக்கன ஞானமும் மானமும்

வெறும் சுத்த சலமாய் வெளியாய் உயிர் விடும் நாளில்

விரும்பத் தக்கன = விரும்பி அடையத் தக்கனவான போகமும் = சுக போகங்களும் மோகமும் = ஆசைகளும்   விளம்பத் தக்கன வெளியாய் விடு = ஆவி வெளிப்பட்டுப் போகின்ற. நாளில் = அந்த நாளில்.

 இடும் கட்டைக்கு இரையாய் அடியேன் உடல்

கிடந்திட்டு தமர் ஆனவர் கோ என

இடம் கட்டி சுடு காடு புகா முனம் மனதாலே

அடியேன் = அடியேனுடைய உடல் = இவ்வுடல் இடும் கட்டைக்கு = (சுடு காட்டில்) அடுக்கப்படும் விறகு கட்டைகளுக்கு  இரையாய் = உணவாகி கிடந்திட்டு = கிடக்கும் போது தமர்ஆனவர்    = சுற்றத்தார்கள் கோ என கோ என்று கதற இடம் கட்டி = கிடக்கும் இடத்தில் (பாடையில்) கட்டி சுடு காடு புகா முனம் = சுடு காட்டுக்குப் போவதற்கு முன்னே மனதாலே = என் மனம்.

 இறந்திட்டு பெறவே கதியாயினும்

இருந்திட்டு பெறவே மதியாயினும்

இரண்டில் தக்கது ஒரு ஊதியம் நீ தர இசைவாயே

இறந்திட்டு =(உன்னுடன் இரண்டறக்)     கலந்திட்டு கதியாயினும் பெறவே = நற்கதி அடையும் பலனைப் பெறவாவது   இருந்திட்டு = (அல்லது) இந்த உலகில் இருக்கும் போதே மதியாயினும் பெறவேஅறிவைப் பெறவாவது இரண்டில் தக்கதொரு மேற் சொன்ன இரண்டில் எனக்குத் தகுந்ததான ஊதியம்    = வரத்தை நீதர இசைவாயே = நீயே முடிவு செய்து அதைக் கொடுக்க இசைந்தருளுக

கொடுங்கை பட்ட மராமரம் ஏழுடன்

நடுங்க சுக்ரிவன் அவனோடு அமர் ஆடிய

குரங்கை செற்று மகா உததி தூள் எழ நிருதேசன்

கொடுங்கைப் பட்ட = கொடுமைக்கு இடமான மரா மரம் ஏழுடன் =    ஏழு மராமரங்களுடன் சுக்ரீவன் நடுங்க சுக்ரீவன் நடுங்கும்படி அவனோடு  அமர் ஆடிய =   அவனுடன்  சண்டை  செய்து   குரங்கைச் செற்று = குரங்காகிய வாலியை அழித்து மகா உததி = பெரிய கடல் தூள் எழ தூள் படும்படி நிருதேசன்    அரக்கர்தலைவனுடைய

குலம் கண் பட்ட நிசாசரர் கோ என

இலங்கைக்குள் தழலோன் எழ நீடிய

குமண்டை குத்திர ராவணனார் முடி அடியோடே

குலம் கண் பட்ட குலத்தைச் சார்ந்த நிசாசரர் அரக்கர்கள் எல்லாம் கோ என கோவென அலற   இலங்கைக்குள் = இலங்கை நகருள்   தழலோன் அக்கினி பகவான்   எழ =   எழுந்துவேலை செய்ய   நீடிய =   பெருத்த குமண்டை = செல்வம் மேலீட்டால் செருக்குண்ட குத்திர = வஞ்சகம் கொண்ட இராவணனார் = இராவணனனுடைய முடி =   தலைகள் அடியோடே = அடியோடு

 பிடுங்க தொட்ட சர அதிபனார் அதி

ப்ரியம் கொள் தக்க நல் மா மருகா இயல்

ப்ரபஞ்சத்துக்கு ஒரு பாவலனார் என விருது ஊதும்

பிடுங்க =பிடுங்கப்படும்படிதொட்ட = செலுத்திய சராதிபன் அம்பைக் கொண்ட மேலோனாகிய இராமன். அதி அதிக ப்ரயம் கொள் தக்க அன்பு கொள்ளத் தக்க   நல்   = நல்ல மா சிறந்த மருகா = மருகனே இயல் = இயற்றமிழ் ஆதிய முத்தமிழ் வழங்கும்   ப்ரபஞ்சத்துக்கு = உலகத்துக்கு ஒரு ஒப்பற்ற பாவலன் = கவி அரசன் என என்று விருது ஊதும் = வெற்றிச் சின்னங்கள் ஊதும்.

 ப்ரசண்ட சொல் சிவ வேத  சிகாமணி

ப்ரபந்தத்துக்கு ஒரு நாத சதாசிவ

பெரும்பற்றப் புலியூர் தனில் மேவிய பெருமாளே.

 ப்ரசண்ட = வீரம்வாய்ந்த சொல் = பதிகங்களை ஓதிய சிவ வேத சிகாமணி = சிவ வேத சிகாமணியாகிய ஞான சம்பந்த மூர்த்தியே ப்ரபந்தத்துக்கு ஒரு நூல் வகைகளுக்கெல்லாம் ஒரு நாத = ஒப்பற்ற தலைவனே சதாசிவ = என்றும்

மங்களமானவனே பெரும்பற்றப் புலியூர் தனில் மேவிய பெருமாளே = சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே!

( வியாக்கிரபாதர் பெரும் பற்று வைத்துச் சிவநடனத்தைத் தரிசிக்கத் தவஞ்செய்த

திருத்தலம் சிதம்பரம்)

 சுருக்க உரை

 கரு மணல் போல் கறுத்த கூந்தலை உடைய விலைமாதர்களின் கண்களால் கவரப்பட்டுவிரும்பி அடையும் போகப் பொருள்களும்புகழத் தக்க அறிவும் பெருமையும் முழுப் பொய்யாகியமன் வசத்தே அடங்கி, என் உயிர் பிரிந்துநான் இறக்கும் நாளில்என் உடல் விறகுக் கட்டைகளுக்கு உணவாகும் நாளில்சுற்றத்தார் அலறசுடு காட்டுக்குப் போவதற்கு முன்னம்என் மனம் உன்னோடு ஒருமைப்பட்டு நற்கதி அடையும் பலனைப் பெறவாவதுஅல்லது இவ்வுலகில் இருக்கும் போதே நான் நல்ல அறிவைப் பெறவாவது,இந்த இரண்டில் எனக்குத் தகுந்தது எது என்று நீயே முடிவு செய்துஅதை எனக்குக் கொடுக்க இசைந்தருளுக.

 கொடுமைக்கு இடமான ஏழு மராமரங்களுடன்சுக்ரீவன் நடுங்கஅவனோடு போர் செய்த வாலியாகிய குரங்கை அழித்துகடல் தூள் படஅரக்கர்கள் அலறஇலங்கை நகரம் தீப்புகவஞ்சகம் கொண்ட இராவணன் தலைகள் அடியோடு பிடுங்கப்படும்படி அம்பைச் செலுத்திய இராமபிரான் விரும்பும் மருகனே!. முத்தமிழ் வழங்கும் உலகத்தில் கவி அரசன் என்ற வெற்றி சின்னங்கள் ஊதும் வீரம் வாய்ந்த சம்பந்த மூர்த்தியே!. நூல் வகைகளுக்கெல்லாம் தலைவனே! தில்லையில் வீற்றிருக்கும் பெருமாளே!. எனக்குத் தகுந்த வரத்தை நீயே முடிவு செய்து தந்தருளுக.


விளக்கக் குறிப்புகள்

 மராமரம் ஏழுடன் நடுங்கச் சுக்ரீவன்....

   இவை கிட்கிந்தைக்கு அருகில் இருந்த ஏழு ஆச்சா மரங்கள். இவற்றை   இராமர் ஒரு பாணத்தால் பிளந்தார்.

 எழுவகை மராமரமு நிகரொன்றுமில்

   வலிய திறல் வாலி யுரமும் நெடுங்கட லலையேழும்.

.                  ..திருப்புகழ்விடமும்வடி

 

மராமரம் ஏழும் எய்த வலத்தினான் ...பெரிய திருமொழி    

 

வாலியைக் கொன்று அரசி இளைய வானரத்துக் களித்தவனே                      ...பெருமாள்   திருமொழி

 

ப்ரபந்தத்துக்கு ஒரு நாத.....

அணைந்த மாமறை முதல் கலை அகிலமும் ஓதாது உணர்ந்த முத்தமிழ் விரகன் வந்தான் என ஊத

    ...பெரிய புராணம், திருஞான சம்பந்தர்.

 

அருணகிரி நாதர் வரம் கேட்கும் நயம் கவனிக்கத் தக்கது.





492 வாத பித்தமொடு.

 




492

சிதம்பரம்

             தான தத்ததன தான தத்ததன

            தான தத்ததன தான தத்ததன

            தான தத்ததன தான தத்ததன   தந்ததான

     வாத பித்தமொடு சூலை விப்புருதி

   யேறு கற்படுவ னீளை பொக்கிருமல்

   மாலை புற்றெழுத லூசல் பற்சனியொ     டந்திமாலை

மாச டைக்குருடு  காத டைப்புசெவி

   டூமை கெட்டவலி மூல முற்றுதரு

   மாலை யுற்றதொணு றாறு தத்துவர்க    ளுண்டகாயம்

வேத வித்துபரி கோல முற்றுவிளை

   யாடு வித்தகட லோட மொய்த்தபல

   வேட மிட்டுபொரு ளாசை பற்றியுழல்       சிங்கியாலே

வீடு கட்டிமய லாசை பட்டுவிழ

   வோசை கெட்டுமடி யாமல் முத்திபெற

   வீட ளித்துமயி லாடு சுத்தவெளி              சிந்தியாதோ

ஓத அத்திமுகி லோடு சர்ப்பமுடி

   நீறு பட்டலற சூர வெற்பவுண

   ரோடு பட்டுவிழ வேலை விட்டபுக             ழங்கிவேலா

ஓந மச்சிவய சாமி சுத்தஅடி

   யார்க ளுக்குமுப காரி பச்சையுமை

   ஓர்பு றத்தருள்சி காம ணிக்கடவுள்            தந்தசேயே

ஆதி கற்பகவி நாய கற்குபிற

   கான பொற்சரவ ணாப ரப்பிரம

   னாதி யுற்றபொருள் ஓது வித்தமைய       றிந்தகோவே

ஆசை பெற்றகுற மாதை நித்தவன

   மேவி சுத்தமண மாடி நற்புலியு

   ராடக கப்படிக கோபு ரத்தின்மகிழ்            தம்பிரானே.

பதம் பிரித்து  உரை

 வாதம் பித்தமோடு சூலை விப்புருதி

ஏறு கல் படுவன் ஈளை பொக்கு இருமல்

மாலை புற்று எழுதல் ஊசல் பற்ச(ன்)னி ஓடு அந்தி மாலை

வாதம் = வாயுவினால் ஏற்படும் நோய்கள். பித்தமொடு = பித்தம் மிகுதியால் ஏற்படும் நோய்கள். சூலை = வயிற்று உளைவு     விப்புருதி = சிலந்தி ஏறு கல் படுவன் =    கல் போன்ற ஒரு வகைப் புண்    கட்டி. ஈளை = கோழை. பொக்கு இருமல்  = குத்திருமல். மாலை =    கண்ட    மாலை புற்று எழுதல் = புரை வைத்த புற்றுப் புண்.ஊசல் = (உடல்,    மனம்தடுமாற்றம் பல் =பல விதமான ச(ன்)னியோடு = சன்னி நோய் இவற்றுடன் அந்தி மாலை =    மாலைக்கண்

மாசு அடை குருடு காது அடைப்பு செவிடு

ஊமை கெட்ட வலி மூலம் முற்று தரு

மாலை உற்ற தொ(ண்)ணூறு ஆறு தத்துவர்கள் உண்ட காயம்

மாசு அடைக் குருடு = அழுக்கு அடைவதால் வரும் குருடு    காதடைப்பு செவிடு = காது    அடைப்பினால்  வரும்    செவிட்டுத்   தன்மை   ஊமை =    ஊமை. கெட்ட வலி = தாங்க முடியாத வலிகள். மூலம் = மூல நோய். முற்று தரு = (ஆகிய நோய்வகைகள்)    முதிர்கின்ற மரம் போன்ற இந்த உடல் மாலை உற்ற = முறையாகப் பொருந்திய தொண்ணூறு ஆறு தத்துவர்கள் =தொண்ணூற்றாறு தத்துவங்கள் இடம் பெறுகின்ற உடல்

வேத வித்து பரிகோலம் உற்று விளையாடுவித்த

கடல் ஓடம் மொய்த்த பல

வேடம் இட்டு பொருள் ஆசை பற்றி உழல் சிங்கியாலே

வேதவித்து = கடவுள் பரிகோலம் உற்று =    பாதுகாக்கின்ற திருக் கோலத்தைப் பூண்டு    விளையாடுவித்த = விளையாட்டாக ஆட்டுவிக்கின்ற கடல் ஓடம் =    கடலிடைத் தோணி போல    (அலைப்புறும் உடல்) மொய்த்த =    சூழ்கின்ற பல வேடம் இட்டு =    பலவிதமான வேடங்களைப்   பூண்டு பொருள் ஆசை பற்றி உழல்  =    பொருளாசை கொண்டு திரிகின்ற. சிங்கியாலே = விடம் போன்ற அழி செயலாலே

வீடு கட்டி மயல் ஆசை பட்டு விழ

ஓசை கெட்டு மடியாமல் முத்தி பெற

வீடு அளித்து மயில் ஆடு சுத்த வெளி சிந்தியாதோ

வீடு கட்டி = வீடு கட்டி மயல் ஆசை பட்டு விழ = காம மயக்க ஆசையில் பட்டு வீழ்ந்து. ஓசை கெட்டு =    (உள்ளோசையாகியநாதம் அழிந்து. மடியாமல் = நான் இறந்து படாமல் முத்தி பெற வீடு அளித்து =   முத்தியை அடையுமாறு மயில் ஆடு சுத்த வெளி = நீ மயில் மீது நடனம் செய்கின்ற வெட்ட வெளியான பரமானந்த நிலையைப் பெற சிந்தியாதோ = என் உள்ளம் தியானிக்காதோ?

 ஓத அத்தி முகிலோடு சர்ப்ப முடி

நீறு பட்டு அலற சூர(ன்) வெற்பு அவுணரோடு

பட்டு விழ வேலை விட்ட புகழ் அங்கி வேலா

ஓத அத்தி = அலைகளை உடைய கடல். முகிலோடு = மேகங்கள். சர்ப்பம் முடி = (ஆதிசேடனாகியபாம்பின் முடி (இவை எல்லாம்). நீறு பட்டு அலற = பொடிபட்டுக் கலங்க    சூரன் =சூரனும் வெற்பு= அவனுடைய எழுகிரியும்அவுணரோடு=அங்கிருந்த அசுரர்களோடு பட்டு விழ=   அழிந்து    விழும்படி வேலை விட்ட = கடலில் செலுத்திய புகழ் = புகழ்மிக்க அங்கி வேலா = நெருப்புப் போன்ற வேலை உடையவனே

 ஓம் நமச்சிவய சாமி சுத்த அடியார்களுக்கும்

உபகாரி பச்சை உமை

ஓர் புறத்து அருள் சிகா மணி கடவுள் தந்த சேயே

ஓம் நமச்சிவாய சாமி = ஓம் நமசிவய என்னும் பிரணவத்தோடு கூடிய ஐந்தெழுத்துக்கு மூலப் பொருளாய கடவுள் சுத்தஅடியார்களுக்கு = பரிசுத்தமானஅடியார்களுக்கு உபகாரி உதவி செய்பவர்    பச்சை உமை=பச்சை நிறங்    கொண்ட  உமை ஓர் புறத்து அருள் =    தமது ஒரு பாகத்தில் இருந்து அருள் சுரக்கும் சிகாமணிக் கடவுள் = சிகா மணித் தெய்வ மாகிய சிவபெருமான் [சிகாமணி-தலைச்சிறந்தோன்] தந்த சேயே =    பெற்ற (கொடுத்த) குழந்தையே

ஆதி கற்பக விநாயகற்கு பிறகான

பொன் சரவணா பர பிரமன்

ஆதி உற்ற பொருள் ஓதுவித்தமை அறிந்த கோவே

ஆதி = முதலில் தோன்றிய. கற்பக விநாயகற்கு = கற்பக விநாயக ருக்கு பிறகான = பின்னர் தோன்றிய பொன் சரவணா = அழகிய சரவண    மூர்த்தியே பரப்பிரமன்=   முழு முதற்  கடவுளான சிவ பெருமான்ஆதி உற்ற பொருள் =     ஆதியாயுள்ள மூல    மந்திரப்    பொருளை ஓதுவித்தமை=ஓதுவிக்கும் தன்மை அறிந்த   கோவே   =    எவ்வண்ணம்   என்று தெரிந்திருந்த தலைவனே

ஆசை பெற்ற குற மாதை நித்த(ம்) வனம்

மேவி சுத்த மணம் ஆடி நல் புலியூர்

ஆடக படிக கோபுரத்தின் மகிழ் தம்பிரானே.

ஆசை பெற்ற குற மாதை = உன் காதலைப் பெற்ற குற மாதாகிய வள்ளியை நித்தம் = நாள் தோறும். வனம் மேவி = தினைப் புனத்துக்குச் சென்றுசுத்த மணம் ஆடி =    பரிசுத்தமான வகையில் திரு மணம் புரிந்து நல் புலியூர் = நல்ல புலியூர் என்னும் தலத்தில் ஆடகம் படிக கோபுரத்தில் = பொன்னும் பளிங்கும் போல அழகு வாய்ந்த கோபுரத்தில் மகிழ் தம்பிரானே = மகிழ்ந்து மேவும் தம்பிரானே.

 

சுருக்க உரை

 வாதம்பித்தம்சூலைமுதலிய நோய்கள் முதிர்கின்ற இந்த உடல்தொண்ணூற்றாறு தத்துவங்கள் இடம் பெறும் இந்த உடல்இறைவன் பாதுகாக்கின்ற கோலத்தைப் பூண்டு விளையாட்டாக ஆட்டுவிக்கும் இந்த உடல்பல வேடங்களைப் பூண்டுபொருள் ஆசை கொண்டு திரியும் அழி செயலால்வீடு கட்டிகாம மயக்கத்தில் வீழ்ந்துஉள்ளே இருக்கும் நாதம் போய் இறந்து போகாமல்முத்தி வீட்டை அளிக்க நீ மயிலின் மேல் நடனம் ஆடும் வெட்ட வெளியான ஆனந்த நிலையைப் பெற என் உள்ளம் தியானிக்காதோ?

 

கடல்மேகங்கள்ஆதிசேடனுடைய முடி ஆகியவை பொடி பட்டுக் கலங்கசூரனும் அவனுடைய எழுகிரியும் அழிந்து விழும்படி கடலில் வேலைச் செலுத்தியவனே ! ஒம் நமசிவாய என்னும் ஐந்தெழுத்துக்கு மூலப் பொருளாய்  நின்று அடியார்களுக்கு உதவி செய்பவர்உமா தேவி தமது ஒரு பக்கத்தில் இருந்து அருள் செய்யும் சிகாமணித் தெய்வமாகிய சிவபெருமான் அருளிய குழந்தையே ! விநாயகருக்குப் பின் தோன்றிய சரவணனே ! முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் மூல மந்திரப் பொருளை ஓதுவிக்கும் தன்மை எவ்வண்ணம் என்று தெரிந்திருந்த தலைவனே ! உன் ஆசையைப் பெற்ற வள்ளியை நாள் தோறும் சென்று திருமணம் புரிந்துபுலியூரில் கோபுரத்தில் மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும் தம்பிரானே ! முத்தி பெற மயிலோடு சுத்த வெளியை என் மனம் சிந்தியாதோ?

 

விளக்கக் குறிப்புகள்

 

சிங்கியால் = அழிசெயலால்.

பற்சனி = பதின்மூன்று வகைப்பட்ட சன்னி நோய்.

 96 தத்துவர்கள் கண்ட காயம்...

அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமென

அறையு மறையென அருந் தத்துவங்களென

                                                    ....திருப்புகழ், அதலவிதல.

 

தத்துவங்கள் 96.

மூலப் பொருள்களின் கூறுகள் = 36. (அசுத்த தத்துவம் = 24. சுத்தா சுத்த  தத்துவம் =7. சுத்த தத்துவம் 5).

புற நிலைக் கருவியின் கூறுகள் = 60 (பிருதிவி (5) அப்பு (5), வாயு = 5

தேயு (5), தச வாயு (10) ஆகாயம் (5). நாடி = 10. வாக்கு = 4. வசனாதி = 5. குணம் = 3. அகங்காரத் திரயம் = 3.

 

ஆதி உற்ற பொருள் ஓதுவித்தமை அறிந்த கோவே...

‘மூலப் பொருள் இன்னதென்று அறிந்திலன் பிரமன் என்று அவனை சிறைலிட்டனையே, உனக்கு அப்பொருள் கூற வருமோ?’ என்று தந்தையார் முருகனை கேட்ட போதுதம்மால் கூற முடியும் என்றும்தந்தையார் ரகசியமாகதத் தாய்பார்வதிக்கு உபதேசித்த போதுதாம் தாயின் கூந்தலில்  ஒரு வண்டாக இருந்து அந்த ரகசிய உபதேசத்தை உணர்ந்ததாகவும் முருக வேள் கூறிய வரலாறு இங்கு உணர்த்தப்பட்டுள்ளது.