பின் தொடர்வோர்

Tuesday 29 June 2021

458.அமுதமூறு

 

458


திருவருணை

               தனன தானன தானன தானன

                 தனன தானன தானன தானன

                 தனன தானன தானன தானன         தனதான

  

அமுத மூறுசொ லாகிய தோகையர்

 பொருளு ளாரையெ னாணையு னாணையெ

 னருகு வீடிது தானதில் வாருமெ       னுரைகூறும்

அசடு மாதர்கு வாதுசொல் கேடிகள்

 தெருவின் மீதுகு லாவியு லாவிகள்

 அவர்கள் மாயைப டாமல்கெ டாமல்நி னருள்தாராய்

குமரி காளிவ ராகிம கேசுரி     

  கவுரி மோடிசு ராரிநி ராபரி

  கொடிய சூலிசு டாரணி யாமளி                    மகமாயி

குறளு ரூபமு ராரிச கோதரி

  யுலக தாரிஉ தாரிப  ராபரி

  குருப ராரிவி காரிந மோகரி            அபிராமி

சமர நீலிபு ராரித னாயகி

  மலைகு மாரிக பாலிந னாரிணி

  சலில மாரிசி வாயம னோகரி         பரையோகி

சவுரி வீரிமு நீர்விட போஜனி

 திகிரி மேவுகை யாளிசெ யாளொரு

 சகல வேதமு மாயின தாயுமை        யருள்பாலா

திமித மாடுசு ராரிநி சாசரர்

 முடிக டோறுக டாவியி டேயொரு

 சிலப சாசுகு ணாலிநி ணாமுண       விடும்வேலா

திருவு லாவுசொ ணேசர ணாமலை

 முகிலு லாவுவி மானந வோநிலை

 சிகர மீதுகு லாவியு லாவிய           பெருமாளே

 

 

பதம் பிரித்து உரை

 

 

*********

 

அசடு மாதர் குவாது சொல் கேடிகள்

தெருவின் மீது குலாவி உலாவிகள்

அவர்கள் மாயை படாமல் கெடாமல் நினது அருள் தாராய்

அசடு மாதர் - மூட விலை மாதர் குவாது சொல் - குதர்க்கம் பேசும் கேடிகள் - கேடுறுவோர் தெருவின் மீது குலாவி உலாவிகள் - தெருவில் குலவி உலவுபவர்கள் அவர்கள் மாயை - அத்தகையோரது மாயை படாமல் - என் மீது தாக்காமலும் கெடாமல் - நான் கெடாமலும் இருக்க நின் அருள் தாராய் - உனது திருவருளைத் தந்து அருளுக

 

 

குமரி காளி வராகி மகேசுரி

கவுரி மோடி சுராரி நிராபரி

கொடிய சூலி சுடாரணி யாமளி மகமாயி

குமரி - இளமையுடையவள்,காளி -தேவி வராகி - வராகி மகேசுரி - பெரிய செல்வத்தையிடையள் கவுரி - மொன்னிறமுடையவள் மோடி - பகைவர்களுக்கு அச்சத்தைச் செய்பவள் முதலிய பெயர்களை உடையவள் சுராரி - தேவர்களுக்குக் கண் போன்றவள் நிராபரி - பொய்யிலி கொடிய சூலி - உக்ரமான சூலத்தை ஏந்தியவள் சுடாரணி - ஒளி மயத்தவள் யாமளி - ஒரு வகைப் பச்சை நிறம் உடையவள் மகமாயி - மகமாயி

 


குறள் ரூப முராரி சகோதரி

உலக தாரி உதாரி பராபரி

குருபராரி விகாரி நமோகரி அபிராமி

குறள் ரூபம் - குட்டை (வாமன) உருவம் கொண்ட முராரி - திருமாலின் சகோதரி உலக தாரி - உலகத்தைப் தரித்துப் புரப்பவள் உதாரி - தயாள குணம் உடையவள் பராபரி - முதன்மை பூண்டவள் குரு பராரி - குருவாகிய சிவனுக்குக் கண் போன்றவள் விகாரி - வேறுபாடுகளைப் பூண்டவள் நமோகரி - வணங்கப் படுபவள் அபிராமி - அழகுள்ளவள்

 

 

சமர நீலி புராரி தன் நாயகி

மலை குமாரி கபாலி நல் நாரணி

சலில மாரி சிவாய மனோகரி பரை யோகி

சமர நீலி - போர் வல்ல துர்க்கை புராரி தன் நாயகி- திரி புரம் எரித்த சிவபெருமானின் தலைவி மலை குமாரி - இமயவன் புதல்வி கபாலி - கபாலம் ஏந்தியவள் நல் நாரணி - நல்ல குணம் வாய்ந்த துர்க்கை சலில - நீர் பொழியும் மாரி - மழை போன்றவள் சிவாய மனோகரி - சிவ சம்பத்தப்பட்டு விரும்பத்தக்கவள் பரை - பரா சக்தி யோகி - யோகி

 


சவுரி வீரி முநீர் விட போஜனி

திகிரி மேவு கையாளி செயாள் ஒரு

சகல வேதமும் ஆயின தாய் உமை அருள் பாலா

சவுரி - வலிமை உள்ளவள் வீரி - வீரம் உள்ளவள் மு(ந்)நீர் - கடலில் (எழுந்த) விட போஜனி - விடத்தை உண்டவள் திகிரி மேவு கையாளி - சக்கரம் ஏந்திய திருக்கரத்தை உடையவள் செ(ய்)யாள் - இலக்குமி ஒரு - ஒப்பற்ற சகல வேதமும் ஆயின தாய் - எல்லா வேதமுமாய் நிறைந்த தாய் உமை - உமா தேவி (ஆகிய பார்வதி) அருள் பாலா - ஈன்றருளிய பாலனே

 


திமிதம் ஆடு சுராரி நிசாசரர்

முடிகள் தோறும் கடாவி இ(ட்)டு ஏய் ஒரு

சில பசாசு குணாலி நிணம் உண விடும் வேலா

 

திமிதம் ஆடு - பேரொலி செய்து போராடிய சுராரி நிசாசரர் - தேவர்களின் பகைவர்களாகிய அசுரர்களுடைய முடிகள் தோறும் கடாவி இ(ட்)டு - தலைகளில் எல்லாம் ஆயுதங்கள் படும்படி செலுத்தி வைத்து ஏய் - அங்குக் கூடிப் பொருந்திய சில பசாசு - சில பேய்கள் குணாலி - ஆரவாரத்துடன் கூத்தாடி நிணம் உண - கொழுப்புள்ள மாமிசத்தை உண்ணும்படி விடும் வேலா - வேலை விட்டவனே

 


திரு உலாவு சொணேசர அ(ண்)ணாமலை

முகில் உலாவு விமான நவோ நிலை

சிகர மீது குலாவி உலாவிய பெருமாளே

 

திரு உலாவு - செல்வம் நிறைந்த சோணேசர அணாமலை - சோணேசரது அண்ணாமலையில் முகில் உலாவும் - மேகம் உலவும் விமானம் - கோயிலில் நவோநிலை - ஒன்பது நிலைகளை சிகரமீது - கோபுர உச்சியில் கலாவிய - விளக்கமுற்று உலாவிய பெருமாளே - உலாவிய பெருமாளே

 


சுருக்க உரை

 

அமுதம் போன்ற இனிய சொற்களை உடைய விலை மாதர்கள் பொருள் உள்ளோரைத் தம் வீட்டுக்கு அழைத்து, இனியப் பேசும் மூடர்கள் இத்தகையோரது யையில் நான் மயங்கிக் கெடாமல் உனது திருவருளைத் தந்து அருளுக.  குமரி, காளி முதலிய பல பெயர்களை உடைய பார்வதி ஈன்றருளிய பாலனே! பேரொலி செய்து போராடிய சுரர்களின் தலைகள் அறுந்து போகும்படி ஆயுதங்களைச் செலுத்தி, அப்போர்க்களத்தில் பேய்கள் மாமிசத்தை உண்ணும்படி வேலை எய்தியவனே! செல்வம் மிக்க சோணேசரது திருவண்ணாமலையில் உயரமான

கோபுரத்தில் விளக்கம் உற்று உலாவிய பெருமாளே! விலை மாதர் மாயை என் மீது படாமல் இருக்க உன் அருளைத் தந்து அருளுக


விளக்கக் குறிப்புகள்

 

தேவி துதி நிறைந்த பாடல் இது