பின் தொடர்வோர்

Thursday 24 February 2022

485. சுடரனைய

 

485

சிதம்பரம்




 

                தனதனன தனதான தனதனன தனதான

                    தனதனன தனதான                 தனதான

 

சுடரனைய திருமேனி யுடையழகு முதுஞான

     சொருப கிரி யிடமேவு                          முகமாறும்

சுரர்தெரிய லளிபாட மழலைகதி நறைபாய

     துகிரிதழின் மொழிவேத                        மணம்வீச

அடர்பவள வொளிபாய அரியபரி புரமாட

     அயில்கரமொ டெழில்தோகை                மயிலேறி

அடியனிரு வினைநீறு படஅமர ரிதுபூரை

     அதிசயமெ னருள்பாட                       வரவேணும்

விடைபரவி அயன்மாலொ டமரர்முநி கணமோட

     மிடறடைய விடம்வாரி                       யருள்நாதன்

மினலனைய இடைமாது இடமருவு குருநாதன்

      மிகமகிழ அநுபூதி                         யருள்வோனே

இடர்கலிகள் பிணியோட எனையுமருள் குறமாதி

     னிணையிளநிர் முலைமார்பி           னணைமார்பா

இனியமுது புலிபாத னுடனரவு சதகோடி

     யிருடியர்கள் புகழ்ஞான                  பெருமாளே

 

பதம் பிரித்து உரை

 

 

சுடர் அனைய திருமேனி உடை அழகு முது ஞான

சொருப கிரீடம் மேவும் முகம் ஆறும்

 

சுடர் அனைய திருமேனியுடை = (காலைக்) கதிர் போன்ற உடலின் அழகும் = அழகும் முது ஞான சொருப = முற்றின ஞானத்தின் திருவுருவமும்  கிரீடம் மேவும் = மகுடம் பொருந்திய முகம் ஆறும் = ஆறு முகங்களும்

 

சுரர் தெரியல் அளி பாட மழலை கதி நறை பாய

துகிர் இதழின் மொழி வேத மணம் வீச

 

சுரர் = தேவர்கள் (சூட்டிய) தெரியல் = மாலைகளிலிருக்கும் அளி பாட = வண்டுகள் பாட மழலைகதி = (அதனால் அம்மாலைகளிலிருந்து) மெதுவான வகையில் நறை பாய = துளித் துளியாகத் தேன் பாய துகிர் இதழின் = பவளம் போன்ற

வாயிதழிலிருந்து சொல்லப்படும் மொழி வேத = வேத மொழிகளின் மணம் வீச = நறு மணம் வீச

 

அடர் பவள ஒளி பாய அரிய பரிபுரம் ஆட

அயில் கரமொடு எழில் தோகை மயில் ஏறி

 

அடர் பவள ஒளி பாய = அடர்ந்த பவள நிறத்தின் ஒளி பாய அரிய = அருமையான பரிபுரம் ஆட = கால் சிலம்பு ஒலிக்க அயில் கரமொடு = வேல் ஏந்திய திருக் கரத்தோடு எழில் தோகை மயில் ஏறி = அழகிய கலாபம் உள்ள மயிலின் மீது ஏறி

 

அடியன் இரு வினை நீறுபட அமரர் இது புரை

அதிசயம் என அருள் பாட வரவேணும்

 

அடியன் = அடியேனுடைய இரு வினை நீறுபட = அடியேனாகிய என் இரண்டு வினைகளும் பொடிபட்டு அழிய அமரர் = (அதைக் கண்டு) தேவர்கள் இது பூரை அதிசயம் என = (இவன் ஒன்றுக்கும் உதவாதவன் கடவுள் இவனுக்கு அருள் செய்வது) என்ன ஆச்சரியம் என அருள் பாட = (உனது) திருவருளைக் கொண்டாடிப் பாட வர வேணும் = நீ எழுந்தருளி என் முன் வர வேண்டும்

 

விடை பரவி அயன் மாலொடு அமரர் முநி கணம் ஓட

மிடறு அடைய விடம் வாரி அருள் நாதன்

 

விடை பரவி = நந்தி எம்பெருமானைப் போற்றி வணங்கி அயன் மாலொடு = பிரமன், திருமாலுடன் அமரர் முநி கணம் = தேவர்களும் முனிவர் கூட்டங்களும் ஓட = ஓடி வந்து தம்மிடம் சரணம் புக மிடறு அடைய = தமது நெஞ்சிடையே பொருந்தி நிற்கும்படி விடம் வாரி அருள் நாதன் = விடத்தை வாரி உண்டு (சரணம் அடைந்தவர்களுக்கு) அருள் புரிந்த தலைவன்

 

மி(ன்)னல் அனைய இடை மாது இடம் மருவு குரு நாதன்

மிக மகிழ அநுபூதி அருள்வோனே

மி(ன்)னல் அனைய இடை மாது = மின்னல் போன்ற

இடையை உடைய பார்வதியை இடம் மருவு குரு நாதன் = (தனது) இடப்பாகத்தில் பொருந்தி உள்ள குரு மூர்த்தியாகிய சிவபெருமான் மிக மகிழ = மிகவும் மகிழ அநுபூதி அருள்வோனே = அவருக்கு ஞான உபதேசத்தை அருளியவனே

 

இடர் கலிகள் பிணி ஓட எனையும் அருள் குற மாதின்

இணை இளநீர் முலை மார்பில் அணை மார்பா

 

இடர் கலிகள் = துன்பங்களும், வறுமையும் பிணி ஓட = நோய்களும் விலக எனையும் அருள் = என்னையும் ஒரு பொருளாகக் கருதி அருளியவனே குற மாதின் = குறப் பெண் வள்ளியின் இணை இள நீர் முலை மார்பில் = இரண்டு இள நீர் போன்ற கொங்கைகள் அமைந்த மார்பில் அணை மார்பா = அணையும் மார்பனே

 

இனிய முது புலி பாதன் உடன் அரவு சதகோடி

இருடியர்கள் புகழ் ஞான பெருமாளே

 

இனிய = இன்ப நிலையில் முது புலி பாதன் உடன் = பழைய முனிவரான வியாக்ரபாதருடன் அரவு = பாம்பு உருவமுள்ள (பதஞ்சலி முனிவரும்) சத கோடி = நூறு கோடி இருடியர்கள் = முனிவர்களும் புகழ் = புகழும் ஞான பெருமாளே = ஞான மூர்த்தியாகிய பெருமாளே 

சுருக்க உரை 

ஒளி வீசும் திரு மேனியின் அழகும், முதிர்ந்த ஞான வடிவும், ஆறு திருமுகங்களும் விளங்க, பவள வாயினின்று சொல்லப்படும் வேத மொழி மணம் வீச, காலில் சிலம்புகள் ஒலிக்க, தோகை மயிலின் மீது ஏறி, அடியேனுடைய இரு

வினைகளும் பொடிபட, தேவர்கள் ஒன்றுமில்லாதவனுக்கு இறைவன் திருவருள் செய்தது ஆச்சரியம் என்று சொல்லும்படி, உன் திருவருளைக் கொண்டாட, நீ என் முன் எழுந்தருளி வரவேண்டும்

 

நந்தி பகவானை வணங்கி, பிரமன், திருமால், தேவர்கள், முனிவர் கூட்டங்கள் ஓடி வந்து சரணம் புக, நந்தி அளித்த விடையைப் பெற்றுதம் நெஞ்சில் விடம் அடைந்து

நிற்கும்படி, அதை உண்டு, சரண் புகுந்தவர்களுக்கு அருள் புரிந்த சிவபெருமானுக்கு, அவருடைய இடப் பாகத்தில் உள்ள உமை மகிழும்படி, ஞான உபதேசத்தை அருளியவனே !  எனது துன்பங்கள், வறுமை, நோய் எல்லாம் விலக எனக்கு

அருளியவனே ! வள்ளியின் கொங்கைகளை  அணைந்தவனே ! பழைய முனிவரான வியாக்ரபாதருடன், பதஞ்சலியும் புகழ்கின்ற ஞான மூர்த்தியாகிய பெருமாளே ! என் முன்னே வர வேண்டுகிறேன்


விளக்கக் குறிப்புகள்

  பூரை = ஒன்றும் இல்லாதவன் திருமாது = பார்வதி

 முது புலிபாதரு டனரவு சத கோடி

 தில்லையில் முதலில் தவம் செய்தவர் வியாக்கிரபாதர் பின்பு தான் பதஞ்சலி வந்து   அவருடன் கூடினார்

rev 30-5-2022


பாடலை கேட்க





484. கைத்தருணசோதி

 484

சிதம்பரம்

 


                   தத்த தனதான தத்த தனதான

                       தத்த தனதான              தனதான

 

கைத்த ருணசோதி யத்தி முகவேத

     கற்ப கசகோத்ரப்                       பெருமாள்காண்

கற்பு சிவகாமி நித்ய கலியாணி

     கத்தர் குருநாதப்                       பெருமாள்காண்

வித்து ருபராம ருக்கு மருகான

     வெற்றி யயில்பாணிப்                பெருமாள்காண்

வெற்பு ளகடாக முட்கு திரவீசு

     வெற்றி மயில்வாகப்                  பெருமாள்காண்

சித்ர முகமாறு முத்து மணிபார்பு

      திக்கி னினிலாதப்                    பெருமாள்காண்

தித்தி மிதிதீதெ னொத்தி விளையாடு

     சித்ர ரகுராமப்                           பெருமாள்காண்

சுத்த விரசூரர் பட்டு விழவேலை

      தொட்ட கவிராஜப்                     பெருமாள்காண்

துப்பு வளியோடு மப்பு லியுர்மேவு

     சுத்த சிவஞானப்                            பெருமாளே.

 

பதம் பிரித்து உரை

 

கை தருண சோதி அத்தி முக வேத

கற்பக சகோத்ர பெருமாள்காண்

கை = துதிக்கை உடையவரும். தருண = இளமை வாய்ந்தவரும். சோதி = சோதி வடிவானவரும். அத்தி முக = யானை முகத்தை உடையவரும். வேத = வேதப் பொருளானவரும். கற்பக = கற்பக விநாயகர் என்னும் நாமம் உடையவரும் (ஆகிய கணபதியின்). சகோத்ரப் பொருமாள் காண் = தம்பி நீ தான் 

கற்பு சிவகாமி நித்ய கலியாணி

கத்தர் குரு நாத பெருமாள் காண்

கற்பு சிவகாமி = கற்பு நிறைந்த சிவகாம சுந்தரியும். நித்ய கலியாணி = நித்திய கல்யாணியுமாகிய பார்வதியின். கத்தர் = தலைவனாகிய சிவபெருமானின். குரு நாதப் பெருமாள்காண் = குரு நாதப் பெருமான் நீ தான் 

வித்து ரூப ராமருக்கு மருகான

வெற்றி அயில் பாணி பெருமாள் காண்

விந்து ரூப ராமருக்கு = மழைத் துளி பெய்யும் மேக நிறம் கொண்ட ராமனுக்கு. மருகான = மருகனான. வெற்றி அயில் பாணிப் பெருமாள் காண் = வெற்ற வேலைக் கையில் ஏந்திய பெருமான் நீ தான் 

வெற்பு உள கடாகம் உட்கும் திர வீசு

வெற்றி மயில் வாக பெருமாள் காண்

வெற்பு உள கடாகம் = மலைகள் உள்ள அண்ட கோளகைகள். உட்கும் = அஞ்சுகின்ற. தீர = வலிமையுடன். வீசு = தோகையை வீசும். வெற்றி மயில் வாகப் பெருமாள் காண் = வெற்றி மயிலை வாகனமாகக் கொண்டவன் நீ தான் 

சித்ர முகம் ஆறும் முத்து மணி மார்பு(ம்)

திக்கினின் இ(ல்)லாத பெருமாள் காண்

சித்ர முகம் ஆறும் = அழகிய ஆறுமுகங்களும். முத்து மனி மார்பும் = மாலைகள் அணிந்துள்ள திரு மார்பும். திக்கினின் = எந்தத் திசையிலும். இ(ல்)லாதப் பெருமாள்காண் = இல்லாத (அழகைக் கொண்ட) பெருமான் நீ தான் 

தித்திமிதி தீதென் ஒத்தி விளையாடு

சித்ர குமார பெருமாள் காண்

தித்திமிதி தீதென் ஒத்தி விளையாடு = தித்திமி திதே என்று தாளம் இட்டு விளையாடும். சித்திர = அழகிய. குமாரப் பெருமாள் காண் = குமாரப் பெருமான் நீ தான் 

சுத்த வீர சூரர் பட்டு விழ வேலை

தொட்ட கவி ராஜ பெருமாள் காண்

சுத்த வீர = சுத்த வீரனே. சூரர் பட்டு விழ = அசுரர்கள் அழிந்து விழும்படி. வேலை தொட்ட = வேலாயுதத்தைச் செலுத்திய. கவி ராஜப் பெருமாள் காண் = கவிராஜப் பெருமான் நீ தான்

துப்பு வ(ள்)ளி ஓடும் அப்புலியூர் மேவு

சுத்த சிவ ஞான பெருமாளே.

துப்பு = தூய்மையான. வ(ள்)ளி ஓடும் = வள்ளி நாயகியுடன். அப் புலியுர் மேவும் = அந்தப் புலியூர் என்னும் தலத்தில் மேவும். சுத்த ஞானப் பெருமாளே = சுத்த சிவ ஞானப் பெருமாளே.

 

சுருக்க உரை 

துதிக்கையை உடையவரும், இளமை வாய்ந்தவரும், சோதி வடிவானவரும், யானை முகத்தை  உடையவரும், வேதப் பொருளானவரும் ஆகிய கணபதியின் தம்பி நீ தான். கற்புள்ள சிவகாம சுந்தரியின் தலைவனான சிவபெருமானுடைய குரு நாதர் நீ தான். மேக வண்ண

இராமனுக்கு மருகன் நீ தான். தோகையை வலிமையுடன் விரித்தாடும் மயில் வாகனன் நீ தான். அழகிய ஆறு முகங்களும் எத்திக்கிலும் இல்லாத அழகுடையவன் நீ தான்தாளத்துடன் விளையாடும் குமாரப் பெருமாள் நீ தான். வீரம் பொருந்திய அசுரர்கள் அழியும்படி வேலை விட்ட கவி ராஜன் நீ தான். தூய்மையான வள்ளியோடு சிதம்பரத்தில் மேவிய பெருமாளே. என்னைக் காத்தருள் வேண்டும்.

 

  விளக்கக் குறிப்புகள்

 

சகோத்ரப் பெருமாள் காண்...

ஒரே கோத்திரத்தைக் கொண்டவர்கள்.

ஒப்புக:  என் தாதை சதாசிவ கோத்திரன்அருள் பாலா...

                           -       திருப்புகழ்,  அந்தோமனமே.

 

வீசு வெற்றி மயில் வாக....

ஒப்புக: வாசி விசைகொண்ட வாகனப் பீலியின் கொத்

தசைபடு கால்பட் டசைந்தது மேரு..கந்தர் அலங்காரம் 11. 

Rev 30-8-2022