பின் தொடர்வோர்

Friday 23 August 2019

386.நாளும் மிகுத்த

386
பொது

                                                தான தனத்த     தனதான

நாளு மிகுத்த        கசிவாகி
  ஞான நிருத்த    மதைநாடும்    
ஏழை தனக்கு        மனுபூதி
   ராசி தழைக்க அருள்வாயே
பூளை யெருக்கு      மதிநாக
   பூண ரளித்த  சிறியோனே
வேளை தனக்கு      சிதமாக
   வேழ மழைத்த  பெருமாளே.

பதம் பிரித்து உரை

நாளும் மிகுத்த கசிவாகி
ஞான நிருத்தம் அதை நாடும்

நாளும் - தினந்தோறும் மிகுத்த - மிக்க. கசிவாகி - மனம் நெகிழ்ந்தவனாய் ஞான நிருத்தம் அதை - உனது ஞான நடனக் கோலத்தை நாடும் - காண விரும்பும்.

ஏழை தனக்கும் அனுபூதி
ராசி தழைக்க அருள்வாயே

ஏழை தனக்கும் - ஏழையான எனக்கும் அனுபூதி - அனுபவ ஞானம் என்னும் ராசி - யோகம் செய்யும் பாக்கியம் தழைக்க - பெருகி விளங்க அருள வேண்டும்.

பூளை எருக்கு மதி நாக(ம்)
பூணர் அளித்த சிறியோனே

பூளை எருக்கு மதி நாகம் - பூளைப் பூ, எருக்கு, நிலவு பாம்பு. பூணர் - (இவைகளைப்) ஜடாமுடியில் தரித்துள்ள (சிவபெருமான்) அளித்த - ஈன்றருளிய சிறியோனே - குழந்தேயே.

வேளை தனக்கு உசிதமாக
வேழம் அழைத்த பெருமாளே.


வேளை தனக்கு - உனக்கு வேண்டியிருந்த சமயத்தில் உசிதமாக - தக்க சமயத்தில் வேழம் அழைத்த பெருமாளே - யானையாகிய விநாயகரை வரவழைத்த பெருமாளே.

சுருக்க உரை

தினந்தோறும் மனம் கசிவுற்று, உனது ஞான நடனக் கோலத்தைக் காண விரும்பும் எளியோனாகிய எனக்கும் அனுபவ ஞானம் என்னும், யோகம் செய்யும் பாக்கியத்தை அருள் புரிய வேண்டும். பூளைப்பூ, எருக்கு, மதி, பாம்பு ஆகியவற்றைப் பூண்ட சிவபெருமான் ஈன்ற குழந்தையே, உனக்கு வேண்டும் சமயத்தில் யானை முக கணபதியை வரவழைத்த பெருமாளே, எனக்கு அனுபவ ராசி தழைக்க அருள் புரிவாயாக.

ஒப்புக
வேளை தனக்கு உசிதமாக...
உம்பலைக் கொணர்ந்து ஒளிர் வஞ்சியைப் புணர்ந்த மணி மார்பா                                                             ... திருப்புகழ், பருவம்பணை
அக்கைப் புனை கொச்சைக் குறமகள்
    அச்சத்தை ஒழித்துக் கரி வரும்
     அத்தத்தில் அழைத்துப் பரிவுடன் அணைவோனே
                                          ..   .திருப்புகழ்,  தொக்கைக்கழு.

வேழம் அழைத்த பெருமாளே -   தினைப்புனத்தில் வள்ளியை பயமுறுத்த விநாயகரை வரவழைத்தது




Wednesday 7 August 2019

385. நாலிரண்டு


385
பொது

                 தான தந்தன தானா தானன
                 தான தந்தன தானா தானன
                 தான தந்தன தானா தானன        தனதான

நாலி ரண்டித ழாலே கோலிய
   ஞால முண்டக மேலே தானிள
   ஞாயி றென்றுறு கோலா காலனு     மதின்மேலே
ஞால முண்டபி ராணா தாரனும்
   யோக மந்திர மூலா தாரனு
   நாடி நின்றப்ர பாவா காரனு               நடுவாக
மேலி ருந்தகி ரீடா பீடமு
  நூல றிந்தம ணீமா மாடமு
   மேத கும்ப்ரபை கோடா கோடியு           மிடமாக
வீசி நின்றுள தூபா தீபவி
   சால மண்டப மீதே யேறிய
   வீர பண்டித வீரா சாரிய                 வினைதீராய்
ஆல கந்தரி மோடா மோடிகு
   மாரி பிங்கலை நானா தேசிய
   மோகி மங்கலை லோகா லோகியெ வுயிர்பாலும்   
ஆன சம்ப்ரமி மாதா மாதவி
   ஆதி யம்பிகை ஞாதா வானவ
   ராட மன்றினி லாடா நாடிய                 அபிராமி
கால சங்கரி சீலா சீலித்ரி
   சூலி மந்த்ரச பாஷா பாஷணி
   காள கண்டிக பாலீ மாலினி               கலியாணி
காம தந்திர லீலா லோகினி
   வாம தந்திர நூலாய் வாள்சிவ
   காம சுந்தரி வாழ்வே தேவர்கள்        பெருமாளே

பதம் பிரித்து உரை

நாலிரண்டு இதழாலே கோலிய
ஞால் அம் முண்டகம் மேலே தான் இள 
ஞாயிறு என்று உறு கோலா கலனும் அதின் மேலே

நாலு இரண்டு இதழாலே - ஆறு இதழ்த் தாமரையால் கோலிய - வகுக்கப்பட்ட ஞால் அம் - தொங்கிப் பொருந்தி உள்ள அந்த முண்டகம் மேலே - தாமரையின் மேல் உள்ள (சுவாதிட்டானம் என்னும்) ஆதார நிலையில் தான் இள ஞாயிறு என்று உறு - உதிக்கும் செஞ் சூரியன் என்று சொல்லும்படியான செம்பொன் நிறமுள்ள கோலாகலனும் - ஆடம்பரம் உள்ள பிரமனும் அதின் மேலே - அந்த ஆதாரத்தின் மேல்  நிலையில்.

ஞாலம் உண்ட பிராண ஆதாரனும்
யோக மந்திர மூலாதாரனு(ம்)
நாடி நின்ற ப்ரபாவ ஆகாரனு(ம்) நடுவாக

ஞாலம் உண்ட - பூமியை உண்டவரும். பிராண ஆதாரனும் - உயிர்களைக் காக்கும் தொழிலைக் கொண்டவரும் (மணி பூரகம் என்னும் ஆதார நிலையில் உள்ள) திருமாலும் யோக மந்திர மூலாதாரனும் - யோகத்துக்கும் மந்திரங்களுக்கும் மூலமான இருதய கமலத்தில் (அனாகதம் என்ற ஆதார நிலையில்) உள்ள ருத்திரனும். நாடி நின்ற - (இம்மூவரும்) தேடி நிற்கும். ப்ரபாவ ஆகாரனும் - ஒளியும் மேன்மையும் கொண்ட உருவத்தனாய் (புருவ மத்தியில் உள்ள சதாசிவ மூர்த்தியும்) நடுவாக - நடு நிலையில் வீற்றிருக்க.

மேல் இருந்த கிரீடா பீடமு(ம்)
நூல் அறிந்த மணி மா மாடமும்
மே தகு ப்ரபை கோடா கோடியும் இடமாக

மேல் இருந்த - (இவர்களுக்கு) மேலான நிலையில் இருந்த கிரீடா பீடமும் - (உனது) லீலைகளுக்கு வேண்டிய இருப்பிடமும். நூல் அறிந்த - சாத்திர நூல்கள், இறைவன் வீற்றிருக்கும் இடம் இது என்று அறிந்து கூறுவதுமான மணி - இரத்தின மயமான. மா - அழகிய மாடமும் - மண்டபமும்
ஆன மே தகு - மேன்மை வாய்ந்த. ப்ரபை - ஒளி கோடா கோடியும் - கோடிக் கணக்காய் விளங்கும் இடமாக - (உனது) இடமாகக் கொண்டு

வீசி நின்று உள தூபா தீப
விசால மண்டபம் மீதே ஏறிய
வீர பண்டித வீர ஆசாரிய வினை தீராய்

வீசி நின்றுள - வீசி நின்று காட்டப்படும். தூபா தீப - விளக்குகள் விளங்கும் விசால மண்டப மீதே ஏறிய - விசாலமான மண்டபத்திலே ஏறி அமர்ந்துள்ள வீர பண்டித - வீர பண்டிதனே வீர ஆசாரிய - வீர குரு மூர்த்தியே வினை தீராய் - எனது வினைகளைத் தீர்த்து அருள்வாயாக.

ஆல கந்தரி மோடா மோடி
குமாரி பிங்கலை நானா தேசி
அமோகி மங்கலை லோக லோகி எவ்வுயிர் பாலும்

ஆல கந்தரி - விஷம் பொருந்திய கழுத்தை உடையவள் மோடா மோடி - ஆடம்பரமுள்ள துர்க்கை (காடுகாள்) குமாரி - மூப்பு இல்லாதவள். பிங்கலை - பொன்னிறத்தவள். நானா தேசி - பலவிதமான ஒளிகளில் மோகி - விருப்பம் உள்ளவள் அமோகி - ஆசையற்றவள் மங்கலை - சுமங்கலி லோகா லோகி - எல்லா உலகங்களையும் ஈன்று காப்பவள்  எவ்வுயிர் பாலும் - எல்லா உயிர்களிடத்தும்

ஆன சம்ப்ரமி மாதா மாதவி
ஆதி அம்பிகை ஞாதா ஆனவர்
ஆட மன்றினில் ஆடா நாடிய அபிராமி

ஆன சம்ப்ரமி - அன்பு வைத்துள்ள பெருமிதம் உடையவள் மாதா - தாய் மாதவி - துர்க்கை ஆதி - ஆதி நாயகி. அம்பிகை - அம்பிகை ஞாதா ஆனவர் - எல்லாம் அறிந்த இறைவன் ஆட - நடிக்க மன்றினில் - (அவருடன்) அம்பலத்தில் ஆடா - நடனம் புரிந்து நாடிய - விரும்பிய. அபிராமி - அழகி.

கால சங்கரி சீலா சீலி த்ரி
சூலி மந்த்ர சபாஷா பாஷிணி
காள கண்டி கபாலி மாலினி கலியாணி

கால சங்கரி - காலனை அழித்தவள் சீலா சீலி - பரிசுத்த தேவதைகளுக்குள் தூயவள் த்ரி சூலி - முத்தலைச் சூலத்தை உடையவள். மந்த்ர சபாஷா - மந்திரங்களின் நல்ல சொற்களை பாஷிணி - பேசுபவள் காளகண்டி - கறுத்த நீல நிறக் கழுத்தை உடையவள் கபாலி - கபாலத்தை ஏந்தியவள். மாலினி - மாலையை அணிந்தவள்
கலியாணி - நித்ய கல்யாணி

காம தந்திர லீலா லோகினி
வாம தந்திர நூல் ஆய்வாள் சிவகாம
சுந்தரி வாழ்வே தேவர்கள் பெருமாளே.

காம தந்திர - காம சாத்திரம் கூறும் லீலா லோகினி - லீலைகளை உலகில் நடத்தி வைப்பவள் வாம தந்திர - சத்தி வழிபாடு முறைகளைக் கூறும் ஆகம நூல்களால் ஆய்வாள் - ஆராயப்படுபவள் சிவகாம சுந்தரி வாழ்வே - சிவகாம சுந்தரியான பார்வதியின் பெருஞ் செல்வமே தேவர்கள் பெருமாளே - தேவர்கள் பெருமாளே.

சுருக்க உரை

யோக முறையில் கூறப்படும் பல ஆதார நிலைகளையும் கடந்து, சாஸ்திர நூல்கள் இறைவனிருக்குமிடம் இதுதான் என்று சொல்லப்படும் ஒளி விளங்கும் மண்டபத்தினேறி அமர்ந்துள்ள வீரபண்டிதனே, வீரகுருவே எனது வினைகளை ஒழித்தருளுக.

விஷம் பொருந்திய கழுத்தை உடையவள்; துர்க்கை; குமாரி; பொன்னிறம் கொண்டவள்; ஆசை இல்லாதவள்; எல்லா உலகங்களையும் ஈன்று காப்பவள்; எல்லா உயிர்களிடத்தும் அன்பு வைத்துள்ளவள்; தாய், ஞானம் நிறைந்த சிவ பெருமான் நடனம் செய்ய உடனிருந்து அம்பலத்தில் ஆடும் அழகி, யமனை அழித்தவள்; தூயவள்; முத்தலைச் சூலத்தை ஏந்தியவள்; கபாலம் ஏந்தியவள்; மாலை அணிந்தவள்; காம சாஸ்திரம் கூறும் லீலைகளை  உலகில் நடத்தி வைப்பவள்; ஆகம நூல்களால் ஆராயப்படுபவ;, இத்தகைய சிவகாம சுந்தரியின் பெருஞ் செல்வமே, தேவர்கள் பெருமாளே, என் வினைகளைத் தீர்ப்பாயாக.

விளக்கக் குறிப்புகள்

நமது உடலில் எப்படி யோக அல்லது குண்டலினி சக்தி ஆதரங்களிலிருந்து மேலே எழும்பி ஓவ்வொரு ஆதாரத்தையும் கடந்து எப்படி நமது சிரசில் உள்ள சஹஸ்ராரம் என்று சொல்லபடுகிற ஆயிரம் இதழ் தாமரையில் எப்படி ஐக்கியமாகின்றது  என்பதை மிக அழகாகக்  கூறுகிறார்

இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் : நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்தி வைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன. 'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம். 'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம். 'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது. 'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.  - http://www.tamilsurangam.in/literatures/arunagirinathar/thiruppugazh

இப்பாடலில் குறிப்பிட்ட யோக முறைகள் ‘நாவேறு பாமணத்தில்’  பாடலில் விளக்கப்பட்டுள்ளன.
 ஒப்புக
இள ஞாயிறு என்று உறு கோலாகலனும் அதின் மேலே... 
செம்பொனின் மேனியன் ஆம் பரமன் திருமாலும் தேட நின்ற...சம்பந்தர் தேவாரம்





384.நாராலே


384
பொது

                     தானா தானா தானா தானா
                   தானா தானா                      தனதான

நாரா லேதோல் நீரா லேயாம்
   நானா வாசற்                             குடிலூடே
ஞாதா வாயே வாழ்கா லேகாய்
   நாய்பேய் சூழ்கைக்                   கிடமாமுன்
தாரா ரார்தோ ளிரா றானே
   சார்வா னோர்நற்                 பெருவாழ்வே
தாழா தேநா யேனா வாலே
   தாள்பா டாண்மைத்                திறல்தாராய்  
பாரே ழோர்தா ளாலே யாள்வோர்
   பாவார் வேதத்                          தயனாரும்
பாழூ டேவா னூடே பாரூ
   டேயூர் பாதத்                       தினைநாடாச்
சீரார் மாதோ டேவாழ் வார்நீள்
   சேவூர் வார்பொற்                      சடையீசர்
சேயே வேளே பூவே கோவே
   தேவே தேவப்                         பெருமாளே.

பதம் பிரித்து உரை

நாராலே தோல் நீராலே ஆம்
நானா வாசல் குடிலூடே

நாராலே - நார் போன்ற நரம்புகளாலும். தோல் நீரால் ஆ(கு)ம் - தோலாலும் நீராலும் ஆகிய நானா - பல வகையான வாசல் குடிலூடே - வாயில்களை உடைய குடிசையாகிய இந்த உடலுள்.

ஞாதாவாயே வாழ் கால் ஏகாய்
நாய் பேய் சூழ்கைக்கு இடம் ஆ(கு)ம் முன்

ஞாதாவாயே - அறிவு வாய்ந்தவனாய் வாழ்கால் - வாழ்கின்ற காலத்தில் ஏகு ஆய் - இறந்து போய். நாய் பேய் - நாயும் பேயும் (என் உடலை). சூழ்கைக்கு இடமா(கு)ம் முன் - சூழுவதற்குக் காலம் வருவதற்கு முன்பு.

தார் ஆர் ஆர் தோள் ஈரு ஆறு ஆனே
சார் வானோர் நல் பெரு வாழ்வே

ஆம் தார் ஆர் - ஆத்தி மாலை நிறைந்த. தோள் ஈராறு ஆன - பன்னிரு தோள்களை உடையவனே சார்வானோர் - உன்னைச் சார்ந்த அடியவர்களுக்கு பெரு வாழ்வே - பெரிய செல்வமே.

தாழாதே நாயேன் நாவாலே
தாள் பாடு ஆண்மை திறல் தாராய்

தாழாதே - தாமதிக்காமல் நாயேன் - அடியேனை நாவாலே - என் நாவைக் கொண்டு. தாள் - உனது திருவடிகளை பாடு ஆண்மைத் திறல் - பாடும் வலிமைத் திறமையை அருள் தாராய் - தந்து அருளுக.

பார் ஏழு ஓர் தாளாலே ஆள்வோர்
பாவார் வேதத்து அயனாரும்

பார் ஏழு - ஏழு உலகங்களையும்  ஓர் தாளாலே - ஒப்பற்ற தமது முயற்சியால் ஆள்வோர் - காத்தருளுகின்ற (திருமாலும்) வேதத்து பாவார் - வேதம் ஓதும் அயனாரும் - பிரமனும்.

பாழ் ஊடே வான் ஊடே பார் ஊடே
ஊர் பாதத்தினை நாடா

பாழ் ஊடே - வெட்ட வெளியிலும் வான் ஊடே - விண்ணிலும் பார் ஊடே - மண்ணிலும் ஊர் பாதத்தினை - பரவி நிற்கும் திருவடியை நாடா - நாட முடியாத

சீர் ஆர் மாதோடே வாழ்வார் நீள்
சே ஊர்வார் பொன் சடை ஈசர்

சீர் ஆர் - சிறப்பினை உடையவரும் மாதோடே வாழ்வார் - பார்வதி தேவியைப் பாகத்தில் கொண்டு வாழ்பவரும் நீள் - பெரிய, சே - இடபத்தை ஊர்வார் - வாகனமாகக் கொண்டவரும் பொன் சடை - அழகிய சடையை உடையவருமாகிய ஈசர் - சிவபெருமானுடைய.

சேயே வேளே பூவே கோவே
தேவே தேவ பெருமாளே.

சேயே - குழந்தையே வேளே - செவ்வேளே. பூவே - அழகனே கோவே - தலைவனே தேவே - தேவனே தேவர் பெருமாளே - தெய்வப் பெருமாளே.

சுருக்க உரை

நரம்புகள், தோல், நீர் இவைகளால் ஆக்கப்பட்டதும், ஒன்பது துவாரங்களை உடையதுமான குடிசையாகிய இந்த உடலுள், அறிவு வாய்ந்தனவாய் வாழ்ந்து, இறந்து போன பிறகு நாயும், பேயும் இந்த உடலை உண்ணுவதற்கு முன்னே, ஆத்தி மாலை அணிந்த பன்னிரு தோள்களை உடையவனே, உன்னைச் சார்ந்த அடியார்களுக்கு நல்ல பெரு வாழ்வே, தாமதிக்காமல் நாய் போன்ற அடியேன் எனது நாவினால் உன் திருவடிகளைப் பாடும் திறனை எனக்குத் தருவாயாக.

ஏழு உலகங்களையும் காக்கும் திருமாலும், வேதம் ஓதும் பிரமனும், எங்கேயும் காண முடியாத திருவடியை உடையவரும், பார்வதியைப் பாகமாகக் கொண்டவரும், அழகிய சடையை உடையவரும், இடபத்தை வாகனமாகக் கொண்டவரும், ஆகிய சிவபெருமானுடைய குமாரனே, சேவ்வேளே, அழகனே. தேவர்கள் பெருமாளே, உன் புகழைப் பாடும் திறனை எனக்குத் தந்து அருளுக.

ஒப்புக

1. பார் ஏழ் ஓர் தாளாலே ஆள்வோர்...
ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறைவு உடையம்
                                                                     ..நாலாயிர திவ்யப் பிரபந்தம்
2. பாவார் வேதத்தயனாரும்....
அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஓதும் அயன் நெடுமால்
தம் கணாலும் நேட நின்ற சங்கரன் தங்கும் இடம்
.                                                                                  ..சம்பந்தர் தேவாரம்