பின் தொடர்வோர்

Sunday 4 August 2019

380.துள்ளுமத


380
பொது

                 தய்யதன தானத்    தனதானா

துள்ளுமத வேள்கைக்     கணையாலே
   தொல்லைநெடு நீலக்   கடலாலே   
மௌfளவரு சோலைக்     குயிலாலே   
   மெய்யுருகு மானைத்    தழுவாயே   
தௌfளுதமிழ் பாடத்    தெளிவோனே       
   செய்யகும ரேசத்     திறலோனே   
வள்ளல்தொழு ஞானக்    கழலோனே       
   வள்ளிமண வாளப்    பெருமாளே.

பதம் பிரித்தல

துள்ளும் மத வேள் கை கணையாலே      
தொல்லை நெடு நீல கடலாலே   
துள்ளும் - செருக்குடன் வரும். மதவேள் - மன்மத வேளின். கைக் கணையாலே - கையிலிருக்கும் மலர்ப் பாணத்தாலும். தொல்லை - பழமையான. நெடு - பெரிய. நீலக் கடலாலும் - நீல நிறக் கடலாலும்.

மெள்ள வரு(ம்) சோலை குயிலாலே
மெய் உருகும் மானை தழுவாயே

மெள்ள வரும் - மெதுவாக வந்து (குரலைக் காட்டும்). சோலைக் குயிலாலே - சோலைகளில் உள்ள குயிலாலும். மெய் உருகும் - உடல் உருகி வாடும். மானை - மான் போன்ற இந்தப் பெண்ணை. தழுவாயே - அணைந்தருள்க.

தெள்ளு தமிழ் பாட தெளிவோனே   
செய்ய குமரேச திறலோனே

தெள்ளு - தெளிவு கொண்ட. தமிழ் பாட - தமிழ்ப் பாக்களைப் பாட. தெளிவோனே - தெளிவு கொண்ட (சம்பந்தராக வந்தவனே). செய்ய - செம்மை வாய்ந்த. குமரேச - குமரேசன் எனப் பெயர் பெற்ற. திறலோனே - வல்லவனே.

வள்ளல் தொழு(ம்) ஞான கழலோனே   
வள்ளி மணவாள பெருமாளே.

வள்ளல் - வள்ளல் பெருமானாகிய சிவபெருமானும். தொழும் - வணங்கும். ஞானக் கழலோனே - ஞானத் திருவடிகளை உடையவனே. வள்ளீ மணவாளப் பெருமாளே - வள்ளி நாயகியின் கணவனாகிய பெருமாளே.

சுருக்க உரை

செருக்குடன் வரும் மன்மதனின் கையில் உள்ள மலர்ப் பாணத்தாலும், பெரிய நீலக் கடலாலும், சோலைக் குயிலாலும், காம வாசப்பட்டு வாடும் இந்தப் பெண்ணை அணைந்தருள்க.

தெள்ளிய தமிழ்ப்பாக்களை பாட வல்ல சம்பந்தராக
வந்தவனே, குமரேசன் என்னும் பெயர் படைத்தவனே,
சிவபெருமானும் வணங்கும் ஞானத் திருவடிகளை
உடையவனே, வள்ளி மணவாளனே,
காம வேட்கையால் வாடும் இந்தப்
பெண்ணை அணைந்தருள்க.

விளக்கக் குறிப்புகள்

இந்தப் பாடல் அகப்பொருள் துறையைச் சார்ந்தது.


காம வசப்பட்டவர்களுக்கு வேதனை கொடுப்பன மன்மதனின் பாணம், கடல், குயில் முதலியவைகள். இவற்றை தெருவினில்நடவா, இரவியென என்று தொடங்கும் திருப்புகழ்ப் பாடல்களிலலும் காணலாம்.

வள்ளல் தொழும் ஞானக் கழலோனே...
     உபதேசம் பெற்ற போது சிவபெருமான் பிள்ளையை வணங்கினார்.   
    நாதா குமரா நம என்று அரனார்...கந்தர் அனுபூதி.

இத்திருப்புகழ் நாயகி நாயகத் தன்மையில் அமைந்தது.
இறைவனை அடைகிற நெறிகள் நான்கு. 
தாசநெறி:  ஆண்டவனிடம் தம்மை அடிமையாகக் கருதல்
சற்புத்ர நெறி: தந்தையும் மைந்தனுமாக கருதல்
தோழ நெறி: தோழமை கொண்டு கடவுளை வணங்குதல்.
நாயகி நாயக நெறி. இறைவனைக் கணவனாக் கொண்டு தன்னை நாயகியாகியாய் அன்பு செய்தல்.
முதல் நெறியான தாச நெறியில் ஆண்டவன் அடிமைத்திறத்தில் ஒரு அச்சம் இருக்கும். இறைவனின் அருள் ஒரு வேலைக்கரானுக்கு கொடுக்கும் ஊதியத்தைப் போலவே இருக்கும். நாவுக்கரசரின் பக்தி இத்தகையததாகக் கருதுதப் படுகிறது,

தந்தையும் மைந்தனுமாக இருக்கும் சற்புத்ர நெறியில் தந்தையின் சொத்து அத்தனையும் மகனுக்காவது போல இறைவனின் அருள் பூர்ணமாக அடியவருக்கு கிடைக்க ஏதுவாகிறது. சம்பந்தர் இறைவனை நேசித்தது போல.
 
தோழமை நெறியில் இறைவனை மைந்தனை விட நெருங்கி பழக வாய்பிருக்கிறது. சுந்தரரின் பக்தி இதற்க்கு எடுத்துக் காட்டு.

எல்லாவற்றுக்கும் மேலாக கருதப்படுவது நான்காவது நெறியாகிய நாயகி - நாயக நெறிதான். இந்த நெறியை நமக்கு நன்கு உணர்த்தியவர் மாணிக்கவாசகர். 
இந்நெறியில் அருணகிரி பாடிய பலப்பாடல்களில் இதுவும் ஒன்று. சில இதர பாடல்கள் நீலங்கொள், இரவியென், தெருவினில் நடவார்

இவ் நான்கு நிலையில் நின்றோர் பெரும் முக்திகள் முறையே சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம். இவை பற்றிய குறிப்பை 369 பாடல் விளக்கத்தில் காணலாம்




No comments:

Post a Comment