பின் தொடர்வோர்

Thursday 27 May 2021

448.இமராஜன்

 448



திருவருணை

 

              தனதானன தான தனத்தந்           தனதானா

 

இமராஜனி லாவதெ றிக்குங் கனலாலே

   இளவாடையு மூருமொ றுக்கும்    படியாலே

சமராகிய மாரனெ டுக்குங்  கணையாலே

   தனிமானுயிர் சோரும தற்கொன் றருள்வாயே

குமராமுரு காசடி லத்தன் குருநாதா

   குறமாமக ளாசைத ணிக்குந்       திருமார்பா

அமராவதி வாழ்வம ரர்க்கன் றருள்வோனே

   அருணாபுரி வீதியி னிற்கும்       பெருமாளே

 

 

பதம் பிரித்து உரை

 

இம ராஜன் நிலா அது எறிக்கும் கனலாலே

இள வாடையும் ஊரும் ஒறுக்கும் படியாலே

இம ராஜன் - பனிக்கு அரசனாகிய நிலா - சந்திரன் எறிக்கும் கனலாலே - வீசுகின்ற நெருப்பாலும் இள வாடையும் - மெல்லிய தென்றலும் ஊரும் ஒறுக்கும் - ஊராரும் வருத்துகின்ற படியாலே - தன்மையாலும்

சமர் ஆகிய மாரன் எடுக்கும் கணையாலே

தனி மான் உயிர் சோரும் அதற்கு ஒன்று அருள்வாயே

சமர் ஆகிய - போர்க்கென எழுந்த மாரன் - மன்மதன் எடுக்கும் கணையாலே - தொடுக்கும் மலர்ப் பாணங்களாலும் தனி மான் உயிர் - தனித்துக் கிடக்கும் மான் போன்ற இப்பெண்ணின் உயிர் சோரும் அதற்கான - சோர்வு அடைகின்றதே அதற்கு ஒன்று - ஒரு வழியை அருள்வாயே - அருள்வாயாக

 குமரா முருகா சடிலத்தன் குருநாதா

குற மா மகள் ஆசை தணிக்கும் திரு மார்பா

குமரா முருகா - குமரனே, முருகனே சடிலத்தன் - சடையை உடைய சிவபெருமானுக்கு குரு நாதா - குரு நாதரே குற மா மகள் - சிறந்த குறப் பெண்ணாகிய வள்ளியின் ஆசை தணிக்கும் திரு மார்பா - ஆசையை நிறைவேற்றிய அழகிய மார்பனே

அமராவதி வாழ் அமரர்க்கு அன்று அருள்வோனே

அருணா புரி வீதியில் நிற்கும் பெருமாளே

 அமராவதி - பொன் நகரில் வாழ் அமரர்க்கு - வாழும் தேவர்களுக்கு அன்று அருள்வோனே - அன்று அருள் செய்தவனே அருணா புரி வீதியினில் நிற்கும் பெருமாளே - திருவண்ணாமலையின் வீதிகளில் உறையும் பெருமாளே


சுருக்க உரை

 சந்திரன், தென்றல் ஆகியவை வருத்துகின்ற தன்மையாலும் மன்மதன் தொடுக்கும் மலர்ப் பாணங்களாலும் தாக்குண்ட தனியாக இருக்கும் இந்தப் பெண் மானின் உயிர் சோர்வை ஒழிக்க ஒரு வழி கூறுவாயாக

குமரா, முருகா, சடையை உடைய சிவனுக்கு உபதேசம் செய்தவனே குறமகளாகிய வள்ளியின் ஆசையை நிறைவேற்றியவரே தேவர்களுக்குப் பொன் உலக வாழ்வை அன்று அருளியவனே எனக்கு அருள் செய்வாயாக

(இப்பாடல் அகப் பொருள் துறையைச் சேர்ந்தது )

447.அழுதுமாவா


திருவருணை

 

            தனதனா தானனத் தனதனா தானனத்

              தனதனா தானனத்                   தனதான

 

திருவருணை முருகா!

அடியேன் மீண்டும் மீண்டும் பிறவியில் உழலாமல்,

உண்மை ஞானத்தைப் பெற்று உய்ய உபதேசித்து அருளாயோ?

 

அழுதுமா வாயெனத் தொழுதுமூ டுடுநெக்

     கவசமா யாதரக்                            கடலூடுற்

றமைவில்கோ லாகலச் சமயமா பாதகர்க்

     கறியொணா மோனமுத்                 திரைநாடிப்

பிழைபடா ஞானமெய்ப் பொருள்பெறா தேவினைப்

     பெரியஆ தேசபுற்                            புதமாய

பிறவிவா ராகரச் சுழியிலே போய்விழப்

     பெறுவதோ நானினிப்                  புகல்வாயே

பழையபா கீரதிப் படுகைமேல் வாழ்வெனப்

     படியுமா றாயினத்                          தனசாரம்

பருகுமா றானனச் சிறுவசோ ணாசலப்

     பரமமா யூரவித்                            தகவேளே

பொழுதுசூழ் போதுவெற் பிடிபடா பார்முதற்

     பொடிபாடா வோடமுத்                   தெறிமீனப்

புணரிகோ கோவெனச் சுருதிகோ கோவெனப்

     பொருதவே லாயுதப்                    பெருமாளே

 

 

பதம் பிரித்து உரை

 

அழுதும் ஆவா என தொழுதும் ஊடுடு நெக்கு

அவசமாய் ஆதார கடல் ஊடுற்று

அழுதும் ஆவா எனத் தொழுதும் - அழுதும் ஆவா என இரங்கித் தொழுதும் ஊடுடு - அவ்வப்போது நெக்கு - பக்தியால் நெகிழ்ந்து அவசமாய் - தன் வசமற்று ஆதரக் கடல் - ஆதாரம் என்ற அன்புக் கடலில் ஊடுற்று – மூழ்கி [திளைத்து]

 

அமைவில் கோலாகல சமய மா பாதகர்க்கு

அறி ஒணா மோன முத்திரை நாடி

அமைவில் - ஆறுதல் இல்லாத கோலாகல சமய மா பாதகர்க்கு - ஆடம்பரமான சமய வதப் பாதகர்களுக்கு அறி ஒணா - அறிதற்கு முடியாத மோன முத்திரை நாடி - மௌனக் குறியைத்தேடி

 

பிழை படா ஞான மெய் பொருள் பெறாதே வினை

பெரிய ஆதேச புற்பதம் ஆய

பிழை பட - தவறுதல் இல்லாத ஞானப் பொருள் பெறாதே - ஞான மெய்ப் பொருளை நான் அடையாமல் வினைப் பெரிய ஆதேசம் - வினைக்கு ஈடான பெரிய வேறுபாடு அடையும் புற்புதம் ஆய - நீர்க்குமிழி போல் நிலை இல்லாத

 

பிறவி வாராகரம் சுழியிலே போய் விழ

பெறுவதோ நான் இனி புகல்வாயே

பிறவி வாராகரம் சுழியிலே - பிறவி என்ற கடல் நீரச்சுழியிலே நான் இனி - நான் இனி மேல் போய் விழப் பெறுவதோ - போய் விழக் கடவேனோ புகல்வாயே - சொல்லி அருளுக

 

பழைய பாகீரதி படுகை மேல் வாழ்வு என

படியும் ஆறு ஆயின தன சாரம்

பழைய பாகீரதி - பழைய கங்கை என்னும் படுகை மேல் வாழ்வு எனப்படியும் - நீர் நிலைப் படுகையின் மேல் செல்வக் குமரர்களாய்த் தோன்றி ஆறு ஆயின - (கார்த்திகை மாதர்களாகிய) ஆறு தாய் மார்களின் தனசாரம் - முலைப்பாலை

பருகுமாறு ஆனன சிறுவ சோணாசல

பரம மாயூர வித்தக வேளே

பருகும் - உண்ட ஆனனச் சிறுவ - ஆறு திரு முகங்களை உடைய குழந்தையே சோணாசல பரம - திரு அண்ணாமலைப் பரமனே மாயூர - மயில் வாகனனே வித்தக வேளே - ஞான மூர்த்தியே [எல்லோராலும் விரும்பப்படும் பெரியவரே!]

பொழுது சூழ் போது வெற்பு இடிபடா பார் முதல்

பொடி படா ஓட முத்து எறி மீன

பொழுது சூழ் போது - மாலை வேளையில் வெற்பு - கிரௌஞ்சம் பிடிபடா - பொடிபட பார் முதல் பொடிபடா ஓட - பூமி முதலியவை பொடி பட்டு ஓட முத்து எறி - முத்துக்களை வீசுவதும் மீன - மீன்களைக் கொண்டதுமான

புணரி கோ கோ என சுருதி கோ கோ என

பொருத வேலாயுத பெருமாளே

புணரி - கடல் கோ கோ என - கோ கோ என்று கதற சுருதி கோ கோ என - வேதங்கள் கோகோ என்று கதற பெருத- போர் செய்த வேலாயுதப் பெருமாளே - வேலாயுதத்தை ஏந்தும் பெருமாளே

 

சுருக்க உரை

 அழுதும், இரங்கித் துதித்தும் மனம் நெகிழ்ந்தும், பக்தி என்னும் கடலில் திளைத்து ஆறுதல் இல்லாத ஆடம்பரமான சமய வாதப் பாதகர்களால் அறிந்து கொள்ள முடியாத மௌனக் குறியைத் தேடி, தவறுதல் இல்லாத ஞான மெய்ப் பொருளை

அடையாமல் நீர்க்குமிழி போல் நிலை இல்லாத பிறவிக் கடலாகிய நீர்ச் சுழியில் விழுவதற்கு நான் கடவேனோ?

கங்கையின் படுகையில் தோன்றி, ஆறு கார்த்திகைப் பெண்களின் முலைப்பாலை உண்ட, ஆறு திரு முகங்களை உடையவனே! மயில் வாகனனே! ஞான மூர்த்தியே! கிரௌஞ்ச மலை, பூமி முதலியவை பொடிபட, கடல், வேதங்கள் ஆகியவை முறையிட வேலைச் செலுத்திப் போர் செய்தவனே! நான் பிறவிச் சுழலில் வீழப்பெறுவதோ?


விளக்கக் குறிப்புகள்

 

அழுதும் ஆவா எனத் தொழுது

(நெக்கு நெக்கு உள் உருகி உருகி

நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும்

நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி

நானா விதத்தால் கூத்து நவிற்றி)-- மாணிக்க வாசகர் திருவாசகம்

 

புற்புதம் - நீர்க்குமிழி.  நீர்க்குமிழி போல் தோன்றி உடனே அழியக் கூடிய பிறவியாகிய கடலில் நான் விழலாமோ?  விழுந்து துன்புறலாமோ?  என்பது பிரார்த்தனை.

மோன முத்திரை - மோனத்தின் அடையாளம்.மோனம்தான் ஞானத்தின் முடிவு. "மோனம் என்பது ஞானவரம்பு" என்பது கொன்றைவேந்தன்.

 

ஒப்புக

 

அழுது அழுது ஆட்பட முழுதும் அலாப் பொருள் தந்திடாயோ.

                                                               --- திருப்புகழ்,  விரகற.