பின் தொடர்வோர்

Tuesday 18 May 2021

445.பரிமளமிக

 




445

திருவானைக்கா

 

             தனதன தனதன தாந்த தானன

               தனதன தனதன தாந்த தானன

               தனதன தனதன தாந்த தானன   தனதான

 

பரிமள மிகவுள சாந்து மாமத

  முருகவிழ் வகைமலர் சேர்ந்து கூடிய

  பலவரி யளிதுயில் கூர்ந்து வானுறு   முகில்போல

பரவிய இருள்செறி கூந்தல் மாதர்கள்

  பரிபுர மலரடி வேண்டி யேவிய

  பணிவிடை களிலிறு மாந்த கூளனை நெறிபேணா

விரகனை யசடனை வீம்பு பேசிய

 விழலனை யுறுகலை யாய்ந்தி டாமுழு

 வெகுளியை யறிவது போங்க பாடனை    மலமாறா

வினையனை யுரைமொழி சோர்ந்த பாவியை

 விளிவுறு நரகிடை வீழ்ந்த மோடனை

 வினவிமு னருள்செய்து பாங்கி னாள்வது மொருநாளே

கருதலர் திரிபுர மாண்டு நீறெழ

  மலைசிலை யொருகையில் வாங்கு நாரணி

  கழலணி மலைமகள் காஞ்சி மாநக   ருறைபேதை

களிமயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி

  கடலுடை யுலகினை யீன்ற தாயுமை

  கரிவன முறையகி லாண்ட நாயகி     யருள்பாலா

முரணிய சமரினில்  மூண்ட ராவண

 னிடியென அலறிமு னேங்கி வாய்விட

 முடிபல திருகிய நீண்ட மாயவன்       மருகோனே

முதலொரு  குறமகள் நேர்ந்த நூலிடை

  யிருதன கிரிமிசை தோய்ந்த காமுக

  முதுபழ மறைமொழி யாய்ந்த தேவர்கள் பெருமாளே

 

பதம் பிரித்து உரை

 

பரிமளம் மிக உள சாந்து மா மத

முருகு அவிழ் வகை மலர் சேர்ந்து கூடிய

பல வரி அளி துயில் கூர்ந்து வானுறு முகில்போல

பரிமள மிக உள - நறுமணம் மிக்க சாந்து - (கலவைச்) சாந்து மா(ன்)மதம் - கஸ்தூரி முருகு அவிழ் - வாசனை வீசும் வகை மலர் - நல்ல பூக்கள் சேர்ந்து கூடிய - இவைகளில் பொருந்திக் கூடிய பல வரி - பல இரேகைகளைக் கொண்ட அளி துயில் கூர்ந்து - வண்டுகளின் துயில் கொண்டதும் வான் உறு - ஆகாயத்தில் உள்ள முகில் போல - மேகம் போன்றதும்

பரவிய இருள் செறி கூந்தல் மாதர்கள்

பரிபுர மலர் அடி வேண்டி ஏவிய

பணி விடைகளில் இறுமாந்த கூளனை நெறி பேணா

பரவிய - பரந்துள்ள இருள் செறி - இருளைப் போல் கரிய கூந்தல் மாதர்கள் - கூந்தலை உடைய மாதர்களின் பரிபுர - சிலம்பு அணிந்த மலர் அடி - மலர் போன்ற அடிகளை வேண்டி - விரும்பி ஏவிய - அவர்கள் இட்ட வேலைகளை பணி விடைகளில் - பணியாளாகச் செய்வதில் இறுமாந்த - பெருமை கொள்ளும் கூளனை - பயனற்றவனை நெறி பேணா - ஒழுக்க முறையை அனுஷ்ட்டிக்காத

விரகனை அசடனை வீம்பு பேசிய

விழலனை உறு கலை ஆய்ந்திடா முழு

வெகுளியை அறிவது போம் கபாடனை மலம் மாறா

விரகனை - தந்திர சாலியை அசடனை - மூடனை வீம்பு பேசிய - கர்வப் பேச்சு பேசும் விழலனை - உதவாக் கரையை உறு கலை - உரிய கலை நூல்களை ஆய்ந்திடா - ஆய்ந்து அறியாத முழு வெகுளியை - முழு வெருப்பு கொண்டவனை அறிவது போம் - அறிவு போன கபாடனை - வஞ்சகனை மலம் மாறா - குற்றங்கள் நீங்காத

வினையனை உரை மொழி சோர்ந்த பாவியை

விளிவு உறு நரகு இடை வீழ்ந்த மோடனை

வினவி முன் அருள் செய்து பாங்கின் ஆள்வதும் ஒரு நாளே

வினையனை - வினை நிரம்பியவனை உரை மொழி - சொல்லும் சொல் சோர்ந்த பாவியை - பேச்சு தவறிய பாவியை விளிவுறு - இறந்து சேரும் நரகிடை - நரகத்தில் வீழ்ந்த - விழுந்துள்ள மோடனை - மூடனை வினவி - ஆய்ந்து கவனித்து அருள் செய்து - திருவருள் பாலித்து பாங்கின் ஆள்வது - நன்கு ஆண்டருளுவது ஒரு நாளே - காலமும் ஒன்று உண்டா?

கருதலர் திரி புரம்  மாண்டு நீறு எழ

மலை சிலை ஒரு கையில் வாங்கு நாரணி

கழல் அணி மலை மகள் காஞ்சி மா நகர் உறை பேதை

கருதலர் - பகைவர்களின் திரி புரம் மாண்டு - முப்புரங்களை அழித்து நீறு எழ - தூளாக மலை சிலை ஒரு கையில் - மலையை ஒரு கையில் வில்லாக வாங்கு – வளைத்த  நாரணி      நாரணி         [குளிர்ச்சியுடைய தேவி- வாரியார் ஸ்வாமிகள்] கழல் அணி - சிலம்பணிந்த மலை மகள் - மலை மகள் காஞ்சி நகர் உறை - காஞ்சி நகரில் விளங்கும் பேதை - தேவி காமாக்ஷி

களி மயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி

கடல் உடை உலகினை ஈன்ற தாய் உமை

கரி வனம் உறை அகிலாண்ட நாயகி அருள் பாலா

களி மயில் - இன்பம் நிறைந்த மயில் போன்றவள் சிவனுடன் வாழ்ந்த மோகினி - சிவபெருமானுடன் வாழும் அழகி கடல் உடை உலகினை ஈன்ற - கடலை ஆடையாகக் கொண்ட உலகை ஈன்ற தாய் உமை - தாய உமா தேவி கரிவனம் உறை - திருவானைக்காவில் வீற்றிருக்கும் அகிலாண்ட நாயகி - அகிலாண்ட நாயகி அருள் பாலா - அருளிய குழந்தையே

முரணிய சமரினில் மூண்ட ராவணன்

இடி என அலறி முன் ஏங்கி வாய்விட

முடி பல திருகிய நீண்ட மாயவன் மருகோனே

முரணிய - மாறுபட்ட சமரினில் - போரில் மூண்ட ராவணன் - முற்பட்டெழுந்த இராவணன் இடி என - இடி ஒலியுடன் அலறி - அலறியும் முன் - அதற்கு முன் ஏங்கி - கவலைப்பட்டும் வாய்விட - வாய்விட்டு அழ முடி பல திருகிய - (அவனுடைய) பல தலைகளையும் அரிந்துத் தள்ளிய நீண்ட மாயவன் - விஸ்வரூபம் எடுத்த திருமாலின் மருகோனே - மருகனே

முதல் ஒரு குற மகள் நேர்ந்த நூல் இடை

இரு தன கிரி மிசை தோய்ந்த காமுக

முது பழ மறை மொழி ஆய்ந்த தேவர்கள் பெருமாளே

 

முதல் - முன்பு ஒரு - ஒப்பற்ற குற மகள் - குற மகள் வள்ளியின் நேர்ந்த - நுண்ணிய நூல் இடை - நூல் போன்ற இடை மீதும் இரு தன கிரி மிசை - இரண்டு கொங்கைகளின் மீதும் தோய்ந்த - தோய்ந்த காமுக - ஆசையாளனே முது பழ - மிகப் பழையதான மறை மொழி ஆய்ந்த - வேதங்களை ஆய்ந்துள்ள தேவர்கள் பெருமாளே - தேவர்கள் பெருமாளே

 

சுருக்க உரை

 

மலர்களின் நறு மணம் வீசிவதும், கரு நிறம் கொண்டதுமான கூந்தலை உடைய மாதர்களை விரும்பி, அவர்கள் இட்ட வேலைகளைச் செய்வதில் பெருமை கொள்ளும் ஒழுக்கம் அற்றவன், வீணன், மூடன், உபயோகம் இல்லாதவன், கலை நூல்களை ஆய்ந்து அறியாதவன், வஞ்சகன், வினை நிரம்பியவன், பேச்சு தவறியவன் அத்தகைய என்னை ஆய்ந்து கவனித்து, முன்னதாக உனது திருவருளைப் பாலித்து என்னை ஆண்டருளுவதும் ஒரு காலம் உண்டா?

திரி புரங்களை அழித்து, மேரு மலையை வில்லாகக் கொண்ட நாரணி, மலை மகள், காஞ்சியில் உறைபவள், சிவ பெருமானுடன் வாழும் அழகி, உலகை ஈன்ற தாய், திருவானைக்காவில் வீற்றிருக்கும் உமா தேவி அருளிய குழந்தையே!

 இராவணனின் முடிகளை அரிந்துத் தள்ளிய திருமாலின் மருகனே! குற மகள் வள்ளியின் கொங்கைகளைத் தோய்ந்த ஆசையாளனே! வேதங்களை ஆய்ந்துள்ள தேவர்களின் பெருமாளே! என்னை ஆள்வதும் ஒரு நாளே


  

ஒப்புக

திரிபுரம் மாண்டு நீறெழ

இமய கிரி மயில் குலவரை தனுவென

அதிகை வருபுர நொடியினி லெரிசெய்த அபிராமி---திருப்புகழ் முகிலுமிரவி

குவடு குனித்துப் புரஞ்சு டுஞ்சின வஞ்சை நீலி---திருப்புகழ். தலைவலை

விளக்க குறிப்பு

 முது பழ மறை மொழி: வேதன் அநாதி. ஆதலால் காலத்தால் கட்டுப்படாதது. மறை – அநேக நுண் பொருள்கள் இலைமறை காய்போல் மறைந்திருப்பதனால் வேதம் மறையெனப்பட்டது.

மலை சிலை ஒரு கையில் வாங்கு நாரணி : தேவர்கள் திரிபுரத்தை அழிக்குமாறு மேரு மலையை வில்லாக சிவ பெருமானுக்கு கொடுத்தார்கள். அதை சிவன் இடது கையால் வளைத்தார். இடது கை பார்வதிதேவியுடையது. ஆததால் வில்லை வளைத்தது பார்வதி தேவி. வாங்குதல் - வளைத்தல் 


 


No comments:

Post a Comment