பின் தொடர்வோர்

Friday 14 May 2021

440. வம்பறா

 


காஞ்சீபுரம்

 

            தந்த தாத்தன தன்ன தனந்தன

            தத்தத் தத்தத்            தனதானா

 

வம்ப றாச்சில கன்ன மிடுஞ்சம

   யத்துக் கத்துத்              திரையாளர்

வன்க லாத்திரள் தன்னை யகன்றும

   னத்திற் பற்றற்               றருளாலே

தம்ப ராக்கற நின்னை யுண்ர்ந்துரு

   கிப்பொற் பத்மக்           கழல்சேர்வார்

தங்கு ழாத்தினி லென்னையு மன்பொடு

   வைக்கச் சற்றுக்             கருதாதோ

வெம்ப ராக்ரம மின்னயில் கொண்டொரு

   வெற்புப் பொட்டுப்             படமாசூர்

வென்ற பார்த்திப பன்னிரு திண்புய

   வெட்சித் சித்ரத்              திருமார்பா

கம்ப ராய்ப்பணி மன்னு புயம்பெறு

   கைக்குக் கற்புத்              தவறாதே

கம்பை யாற்றினி லன்னை தவம்புரி

   கச்சிச் சொக்கப்             பெருமாளே

 

பதம் பிரித்து உரை

 

வம்பு அறா சில கன்னம் இடும்

சமயத்து கத்து திரையாளர்

 

வம்பு அறா சில - தீம்பு வார்த்தைகள் சில நீங்காததும் கன்னம் இடும் - கொள்ளை கொள்ளுவது போன்ற சமயத்து – சமய வாத கத்து(ம்) - கத்தும் கூச்சல் திரையாளர் - கடல் ஒலியை எழுப்புவோருடைய

 

வன் கலா திரள் தன்னை அகன்று

மனத்தில் பற்று அற்று அருளாலே

 வன் கலாத் திரள் - வலிய கலைக் கூட்டத்தில் இருந்து தன்னை

அகன்று - நீங்கி மனத்தில் பற்று அற்று - மனதில் யாதொரு ஆசையும் இல்லாமல் அருளாலே - உன் திருவருளால்

 

தம் பராக்கு அற நின்னை உணர்ந்து உருகி

பொன் பத்ம கழல் சேர்வார்

 

தம் பராக்கு அற - (தம்மைப் பற்றிய) யாம் என்னும் நோக்கம் அற நின்னை உணர்ந்து - உன்னை உணர்ந்து உருகி – மனம் உருகி பொன் - அழகிய பத்மக் கழல் சேர்வார் தம் – தாமரைத் திருவடிகளைச் சிந்திப்பவர்களுடைய


தம் குழாத்தினில் என்னையும் அன்போடு

வைக்க சற்று கருதாதோ

 

குழாத்தினில் - கூட்டத்தில் என்னையும் அன்போடு வைக்க - என்னையும் அன்புடன் சேர்த்து வைக்க சற்றுக் கருதாதோ - சிறிதளவு (முருகா), நீ நினைக்கலகாதா?

 வெம் பராக்ரமம் மின் அயில் கொண்டு ஒரு

வெற்பு பொட்டு பட மா சூரர்

 

வெம் பராக்ரம - மிக்க வீரமும் மின் அயில் – ஒளியும் கொண்ட ஒரு - ஒப்பற்ற வெற்பு - கிரவுஞ்ச மலை

பொட்டுப்பட - பொடிபட மா - மாமரமாக நின்ற சூர் - சூரனை

  

வென்ற பார்த்திப பன்னிரு திண் புய

வெட்சி சித்ர திரு மார்பா

 

வென்ற பார்த்திப - வென்ற அரசே! பன்னிரு திண் புய - பன்னிரண்டு திண்ணிய புயங்களை உடையவனே! வெட்சி - வெட்சி மாலை அணிந்த சித்ரத் திருமார்பா - அழகிய திரு மார்பனே!


கம்பராய் பணி மன்னும் புயம்

பெறுகைக்கு கற்பு தவறாதே

 

கம்பராய் - ஏகாம்பரர் என்னும் பெயரை உடையவராய் பாணி -

பாம்புகள் மன்னும் - நிலைத்திருக்கும் புயம் பெறுகைக்கு - புயத்தை பெறும் பொருட்டு கற்புத் தவராதே - தன்னை மணக்கக் கற்பு நிலை மாறாமல்

 கம்பை ஆற்றினில் அன்னை தவம் புரி

கச்சி சொக்க பெருமாளே


கம்பை ஆற்றினில் - கம்பை ஆற்றில் அன்னை - அன்னையாகிய பார்வதி தவம் புரி - தவம் செய்திருந்த கச்சி – கச்சியில் உறையும் சொக்கப் பெருமாளே - அழகிய பெருமாளே

 

சுருக்க உரை

 

தீம்பு வார்த்தைகள் நீங்காது, கொள்ளை கொள்வது போல் சமய வாதங்களைக் கடல் ஒலியை எழுப்புவோருடைய கூட்டங்களிலிருந்து விலகி, மனத்தில் யாதொரு ஆசையும் இல்லாமல், யாம் என்னும் நோக்கம்அற, உன்னை உணர்ந்து, எனது அழ கிய தாமரைத் திருவடிகளச் சிந்திப்பவர்களுடன் என்னையும் சேர்க்க, முருகனேசற்று நினைக்கலாகாதா?

மிக்க வலிமையும், ஒளியும் கொண்ட கிரவுஞ்ச மலை பொடிபடவும், மாமரமாக நின்ற சூரனை வென்றவனுமாகிய் அரசே! வெட்சி மாலை அணிந்தவனே! ஏகாம்பரர் என்னும் பெயர் உடையவரும், பாம்புகளை அணிந்தவருமாகிய சிவபெருமானை மணக்கும் பொருட்டு, கம்பை ஆற்றில் பார்வதி அம்மையார் தவம் புரிந்த கச்சியில் வீற்றிருக்கும் அழகிய பெருமாளே! உன்னைச் சிந்திப்போரின் கூட்டத்தில் அடியேனையும் சேர்த்து அருள்க

 

 

விளக்கக் குறிப்புகள்

 

கன்னமிடும் சமயத்துக் கத்துத் திரையாளர்

 

சமயவாதிகளின் கூச்சல்களை அருணகிரி நாதர் வெறுப்பதைத் திருப்புகழில் பலஇடங்களில் காணலாம்

 

அகல்வினை உட்சார் சட்சமயிகளோடு வெட்கா டட்கிடு

மறிவிலி வித்தா ரத்தன மவிகார)              திருப்புகழ், அகல்வினை

 

கலைகொடு பவுத்தர்உலகாயர்

கலகமிடு தர்க்கர் வாம பயிரவர் விருத்தரோடு

கலகலென மிக்க நூல்க  ளதனாலே            திருப்புகழ்,  கலைகொடு

 

சங்கைக்கத் தோடு சிலுகிடு சங்கிச்சட் கோல

சங்கற்பித் தோதும் வெகுவித கலைஞான         திருப்புகழ்,  சங்கைக்க

 

கலகல கலெனக் கண்ட பேரொடு

சிலுகிடு சமயப் பங்க வாதிகள்

கதறிய வெகுசொற் பங்க மாகிய பொங்களாவும் திருப்புகழ், அலகியவுண

 

தங்கு குழாத்தினில் என்னையும்

 

போதமிலேனை அன்பாற் கெடுதலிலாத் தொண்டரிற் கூட்டியவா

                                                   - கந்தர் அலங்காரம்

 நற்றொண்டர்க் கிணை யாகவு னருள்தாராய் – திருப்புகழ், அகத்தினை

 

 

No comments:

Post a Comment