பின் தொடர்வோர்

Thursday 27 May 2021

446 அருக்கார்

 


திருவருணை

 

             தனத்தா தனத்தத் தனத்தா தனத்தத்

               தனத்தா தனத்தத்                         தனதான

 

அருக்கார் நலத்தைத் திரிப்பார் மனத்துக்

   கடுத்தாசை பற்றித்             தளராதே

அடற்கா லனுக்குக் கடைக்கால் மிதித்திட்

   டறப்பே தகப்பட்              டழியாதே

கருக்காரர் நட்பைப் பெருக்கா சரித்துக்

   கலிச்சா கரத்திற்               பிறவாதே

கருத்தா லெனக்குத் திருத்தா ளளித்துக்

   கலைப்போ தகத்தைப்         புகல்வாயே

ஒருக்கால் நினைந்திட் டிருக்கால் மிகுந்திட்

   டுரைப்பார்கள் சித்தத்       துறைவோனே

உரத்தோ ளிடத்திற் குறத்தேனை வைத்திட்

   டோளித்தோடும் வெற்றிக்        குமரேசா

செருக்கா தருக்கிச் சுரச்சூர் நெருக்கச்

   செருச்சூர் மரிக்கப்          பொரும்வேலா

திறப்பூ  தலத்திற் றிரட்சோ ணவெற்பிற்

   றிருக்கோ புரத்திற்            பெருமாளே

 

 

பதம் பிரித்து உரை

 

அருக்கார் நலத்தை திரிப்பார் மனத்துக்கு

அடுத்த ஆசை பற்றி தளராதே

அருக்கார் - அருமை வாய்ந்த நலத்தை - உடல்) நலத்தை திரிப்பார் - கெடுப்பவர்களான (விலை மாதர்களுடைய) மனத்துக்கு - மனத்துக்கு அடுத்து - இயைந்த ஆசை பற்றி - ஆசை கொண்டு தளராதே - சோர்வு அடையாமல்

 

அடல் காலனுக்கு கடை கால் மிதித்துட்டு

அற பேதகப் பட்டு அழியாதே

அடல் - வலிமை வாய்ந்த காலனுக்கு - நமனுக்கு கடைக்கால் - (என் உயிரைக் கொள்வதற்கு வேண்டிய) அடிப்படையை மிதித்திட்டு - கோலி அறப் பேதகப் பட்டு - மிகவும் மனம் வேறு பாடு அடைந்து அழியாதே - அழியாமலும்

 

கருக்காரர் நட்பை பெருக்கா சரித்து

கலி சாகரத்தில் பிறவாதே

கருக்காரர் - பிறவிக்கு ஏதுவான செய்கையோரது நட்பைப் பெருக்கா - நட்பை மிகக் கொண்டாடி சரித்து - கைக்கொண்டு கலி - துன்ப சாகரம் - கடலில் பிறவாதே - பிறவாமலும்

 

கருத்தால் எனக்கு திரு தாள் அளித்து

கலை போதகத்தை புகல்வாயே

கருத்தால் எனக்கு - நீ என் மீது அன்பு வைத்து திருத்தாள் அளித்து - உனது திருவடியைத் தந்து கலைப் போதகத்தை - கலை ஞானத்தை புகல்வாயே - உபதேசிப்பாயாக

 

ஒருக்கால் நினைந்திட்டு இருக்கால் மிகுத்திட்டு

உரைப்பார்கள் சித்தத்து உறைவோனே

ஒருக் கால் நினைந்திட்டு - ஒரு முறை உன்னைத் தியானித்து இருக் கால் - (உனது) இரண்டு திரு வடிகளையும் (ருக் ( இருக்கு)  மந்திரங்களால் ஓதுதல் எனலுமாம்) மிகுத்திட்டு உரைப்பார்கள் - நிரம்ப உரைப்பவர் களுடைய சித்தத்து உறைவோனே - மனதில் உறைபவனே

 

உர தோள் இடத்தில் குற தேனை வைத்திட்டு

ஒளித்து ஓடும் வெற்றி குமரேசா

உர - வலிமையான தோளிடத்தில் - தோளில் குறத் தேனை வைத்திட்டு - தேன் போல் இனிய குறப் பெண்ணான வள்ளியை ஒளித்தோடும் - மறைந்து ஓடின வெற்றிக் குமரேசா - வெற்றி பொருந்திய குமரேசனே

 

செருக்கால் தருக்கி சுர சூர் நெருக்கு அ

செரு சூர் மரிக்க பொரும் வேலா

செருக்கால் - ஆணவம் கொண்டு தருக்கி - கர்வம் கொண்டு சுரச் சூர் -  தெய்வத் தன்மை உடைய தேவர்களை நெருக்கு - ஒடுக்கிய அச் செருச் சூர் -  போருக்கு வந்த அந்த சூரன் மரிக்க - இறக்க  பொரும் வேலா - சண்டை செய்த வேலனே

 

திற பூதலத்தில் திரள் சோண வெற்பில்

திரு கோபுரத்தில் பெருமாளே

திற - நிலை பெற்ற பூதலத்தில் - பூமியில் திரள் சோண வெற்பில் - திரண்ட திரு அண்ணாமலையில் திருக் கோபுரத்தில் பெருமாளே - அழகிய கோபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே

 

சுருக்க உரை

 

 அருமையான உடல் நலத்தைக் கெடுக்கும் பொது மகளிரின் மீது இயைந்த ஆசை கொண்டு தளர்ச்சி அடையாமலும், வலிய காலன் என் உயிரைக் கொள்ள வரும்போது மனம் தளராமலும், பிறவிக்கு ஏதுவான செய்கையோரது நட்பைக் கொள்ளாமலும்பிறவிக் கடலில் வீழாமலும் என்  மீது மனம் வைத்து உன் திருவடியைத் தியானிக்க கலை ஞானத்தை எனக்கு உபதேசிப்பாயாக.

வலிமையான தோள்களில் வள்ளியை மறைத்து ஓடிய குமரேசனே! ஆணவம் கொண்டு, தேவர்களைத் தாக்கிய சூரன் அழியும்படி போர் செய்தவனே! இப் பூமியில் திருவண்ணாமலையில் அழகிய கோபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! எனக்குக் கலை ஞானத்தை அருள்வாயாக

 

ஒப்புக

இருக்கால் மிகுத்திட்டு உரைப்பார்கள்

ஒருகால் நினைக்கில் இருகாலுந் தோன்றும்

முருகாவென் றோதுவார் முன் ---- திருமுருகாற்றுப்படை

 

சோண வெற்பில் 

மலை அண்ணா மலை என்று பெயர் பெற்றது

No comments:

Post a Comment