பின் தொடர்வோர்

Tuesday 18 May 2021

444. நாடித்தேடி


திருவானைக்கா

 

                  தானத் தானத்        தனதான

 

நாடித் தேடித்           தொழுவார்பால் 

   நானத் தாகத்           திரிவேனோ  

மாடக் கூடற்                பதிஞான 

   வாழ்வைச் சேரத்         தருவாயே

பாடற் காதற்              புரிவோனே

   பாலைத் தேனொத்    தருள்வோனே     

ஆடற் றோகைக்          கினியோனே

   ஆனைக்  காவிற்       பெருமாளே

 

பதம் பிரித்து உரை

 

நாடி தேடி தொழுவார் பால்

நான் நத்து ஆக திரிவேனோ

நாடித் தேடி - விரும்பித் தேடி தொழுவார் பால் - (உன்னைத்) தொழும் (அடியவர்களிடத்தில்) நான் நத்து ஆக - நான் விருப்பம் உள்ளவனாக திரிவேனோ - திரிய மாட்டேனோ?

மாட கூடல் பதி ஞான     

வாழ்வை சேர தருவாயே

 மாடக் கூடல் - மாட கூடங்கள் உள்ள மதுரையாகிய பர நாத வெளியில் கூடும் ஞான வாழ்வைச் சேர - ஞான வாழ்வை நான் அடையும்படி தருவாயே - அருள் புரிவாயாக

பாடல் காதல் புரிவோனே

 பாலை தேன் ஒத்த அருள்வோனே

பாடல் - (தமிழ்ப்) பாடல்களில் காதல் புரிவோனே - ஆசை கொண்டுள்ளவனே

பாலை - பால் போன்றதும் தேன் ஒத்த - தேனைப் போன்றதுமான அருள்வோனே - இன்பத்தை அருள்பவனே

ஆடல் தோகைக்கு இனியோனே

ஆனைக் காவல் பெருமாளே

ஆடல் தோகைக்கு - நடனம் ஆடும் மயிலை ஒத்த வள்ளிக்கு இனியோனே – இனியவனே ஆனைக்காவில் பெருமாளே - திருவானைக்காவில் வீற்றிருக்கும் பெருமாளே

 

சுருக்க உரை

 

உன்னை விரும்பித் தேடும் அடியார்களிடத்தில் நான் விருப்பம் உடையவனாகத் திரிய மாட்டேனோ? கூடற்பதி எனப்படும் யோகத் தலமாகிய மதுரையில் கூடும் ஞான வாழ்வை     நான் அடையும்படி அருள் புரிவாயக

தமிழ்ப் பாடல்களில் ஆசை கொண்டவனே! பாலையும் தேனையும் போன்று இனிமையான அருளைப் பாலிப்பவனே! ஆடும் மயிலை ஒத்த வள்ளிக்கு இனிமையானவனே! நான் ஞான வாழ்வைச் சேர அருள் புரிவாயாக

 ஒப்புக 

   ஆடற்றோகைக்கு இனியோனே 

   வேடுவர் சிறுமி ஒருத்திக்கு

    யான் வழி அடிமை எனச் செப்பி.......திருப்புகழ், வாடையில்

 

 விளக்கக் குறிப்புகள்

 

கூடற் பதி - மதுரை இத்தலம் சிவ முத்தித் தலமாகக் (துவாதசாந்த நிலையாகக்)   கருதப்படுகின்றது  (துவாதசாந்தப் பெருவெளியில் துரியங் கடந்த பரநாத மூலத்தலம்) மீனாட்சிபிள்ளை

பாடற் காதல் புரிவோனே

   தமிழில் பாடல் கேட்டருள் பெருமாளே – திருப்புகழ், அளிசுழல 


துவாதசாந்தப் பெருவெளி

 

மூலாதாரத்திலிருந்து பிரம்மரந்திரம் வரை ஷட்-சக்ரம் (ஆறு சக்ரம்) என்று பொதுவில் சொல்கிறோம் இன்னும் ஸூக்ஷுமமாக அலசிக்கொண்டு போகிறபோது, கடைசியில் வரும் ஆஜ்ஞா சக்ரத்திற்கும் ஸஹஸ்ரார சக்ரத்திற்கும் நடுவிலேயே பன்னிரண்டு ஸ்தானங்கள் சொல்லியிருக்கிறது அவற்றில் உச்சியில் ஜீவ-ப்ரம்ம ஐக்கிய ஸ்தானமாக இருப்பதுதான் த்வாதசாந்தம்


'
த்வாதசாந்தம்'என்று தந்திர சாஸ்திரங்களில், யோக சாஸ்திரங்களில் உச்சி நிலையாகச்  சொல்லியிருப்பது மதுரைதான் என்று சொல்லி, மதுரை "த்வாதசாந்தக்ஷேத்ரம்" என்பார்கள்

-
தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்) மகா பெரியர்வர்களின் சொற்பொழிவு

 

No comments:

Post a Comment