பின் தொடர்வோர்

Wednesday 27 April 2022

497. காரணமதாக

  

497





காரணமதாக

 

காரணம தாக வந்து                            புவிமீதே

    காலனணு காதி சைந்து              கதிகாண

நாரணனும் வேதன் முன்பு             தெரியாத

    ஞானநட மேபு ரிந்து                    வருவாயே

ஆரமுத மான தந்தி                        மணவாளா

    ஆறுமுக மாறி ரண்டு           விழியோனே 

சூரர்கிளை மாள வென்ற                திர்வேலா

    சோலைமலை மேவி நின்ற    பெருமாளே

 

 

பதம் பிரித்து உரை

 

காரணம் அதாக வந்து  புவிமீதே
காலன் அணுகாது இசைந்து கதிகாண

 

காரணம் அது ஆக -ஊழ்வினையின் காரணமாக

புவி மீது  வந்து - இந்த பூமியில் வந்து பிறந்து,

காலன் அணுகாது -  காலன் என்னை நெருங்காத வண்ணம்

இசைந்து – தாங்கள் மனம் பொருந்தி

கதி காண - நான் நற்கதியை அடைய

நாரணனும் வேதன் முன்பு தெரியாத
ஞானநடமே புரிந்து வருவாயே
    

நாரணனும் - திருமாலும்

வேதன் - பிரம்ம தேவனும்

முன்பு தெரியாத    முன்பு கண்டறியாத

ஞான நடமே புரிந்து -  ஞான நடனம் செய்து

வருவாயே - வருவீர்களே

ஆரமுதம் ஆன தந்தி மணவாளா
ஆறுமுகம் ஆறு இரண்டு விழியோனே
   

ஆர் அமுதம் ஆன - நிறைந்த அமுது ஆகிய

தந்தி - தேவயானையின்

மணவாளா - இனிய மணவாளனே
ஆறுமுகம் - ஆறு திருமுகங்களையும்

ஆறி ரண்டு விழியோனே -  பன்னிரண்டு கண்களையும் உடையவனே  

 

சூரர்கிளை மாள வென்ற கதிர்வேலா
சோலைமலை மேவி நின்ற பெருமாளே.

 

சூரர் கிளை  மாள  - சூரர் கூட்டங்கள் இறக்கும்படியாக

வென்ற - வெற்றி கொண்ட

கதிர் வேலா - ஒளிமிக்க வேலனே

சோலைமலை - பழமுதிர்சோலை மலையில்  

மேவி நின்ற பெருமாளே - எழுந்தருளிய பெருமையின்  மிகுந்தவரே

 

சுருக்கவுரை

நிறைந்த அமுது ஆகிய தேவயானையின் இனிய மணவாளனே! ஆறு திரு முகங்களையும் பன்னிரண்டு கண்களையும் உடையவனே!  சூரர் கூட்டங்கள் இறக்கும்படியாக வெற்றி கொண்ட ஒளிமிக்க வேலனே! பழமுதிர்சோலை மலையில் எழுந்தருளிய பெருமையின் மிகுந்தவரே! ஊழ் வினையின் காரணமாக இந்த பூமியில் வந்து பிறந்த என்னை, காலன் நெருங்காத வண்ணம் தாங்கள் மனம் பொருந்தி நான் நற்கதியை அடைய, திருமாலும்  பிரம்ம தேவனும் முன்பு கண்டறியாத ஞான நடனம் செய்து வருவீர்.


rev 30-5-2022

பாடலை கேட்க 

 




No comments:

Post a Comment