பின் தொடர்வோர்

Wednesday 21 June 2017

319.எத்தனை கோடி

319
வைத்தீசுரன்கோயில்

(புள்ளிருக்கு வேளூர்)


                  தத்தன தானதான தத்தன தானதான
                  தத்தன தானதான                      தனதான


எத்தனை கோடிகோடி விட்டுட லோடியாடி
     யெத்தனை கோடிபோன                 தளவேதோ
இப்படி மோகபோக மிப்படி யாகியாகி
     யிப்படி யாவதேது                        இனிமேலோ
சித்திடில் சீசிசீசி குத்திர மாயமாயை
     சிக்கினி லாயுமாயு                       மடியேனைச்
சித்தினி லாடலோடு முத்தமிழ் வாணரோது
     சித்திர ஞானபாத                        மருள்வாயே
நித்தமு மோதுவார்கள் சித்தமெ வீடதாக
     நிர்த்தம தாடுமாறு                       முகவோனே
நிட்கள ரூபர்பாதி பச்சுரு வானமூணு
     நெட்டிலை சூலபாணி                  யருள்பாலா
பைத்தலை நீடுமாயி ரத்தலை மீதுபீறு
     பத்திர பாதநீல                            மயில்வீரா
பச்சிள பூகபாளை செய்க்கயல் தாவுவேளூர்
     பற்றிய மூவர்தேவர்                    பெருமாளே
    

பதம் பிரித்து உரை

      எத்தனை கோடி கோடி விட்டு உடல் ஓடி ஆடி
      எத்தனை கோடி போனது அளவு ஏதோ

    எத்தனை கோடி கோடு விட்டு - எத்னையோ கோடிக்கணக்கான உடல் ஓடி ஆடி - உடல்களை விட்டுப் புது உடலில் ஓடிப் புகுந்து எத்தனை கோடி போனது - எத்தனையோ கோடிப் பிறப்புகள் வந்து போய் விட்டன அளவு ஏதோ - இதற்கு அளவும் உண்டோ? (இல்லை என்றபடி)


     இப்படி மோக போகம் இப்படி ஆகி ஆகி
     இப்படி ஆவது ஏது இனி மேல்(ஓ)

இப்படி மோக போகம் - இவ்வாறு மோகமும், போகமும் கலந்து இப்படி ஆகி ஆகி - இவ்வாறு பிறந்து பிறந்து இப்படி ஆவது ஏது - இப்படி ஆய்க் கொண்டு வருவது ஏனோ? இனி மேலோ - இனிமேல் (ஓ)


     சித்திடில் சீசி சீ சி குத்திரம் மாய மாயை
     சிக்கினில் ஆயும் மாயும் அடியேனை
சித்திடில் - சிந்தித்துப் பார்த்தால்  சீசி சீசி குத்திர மாய - இழிவான இந்த மாயமான மாயை - வாழ்க்கை சிக்கினில் ஆயும் - இதன் சிக்கில் அகப்பட்டு மாயும் அடியேனை - இறக்கின்ற அடியேனை


     சித்தினில் ஆடலோடு முத்தமிழ் வாணர் ஓது
     சித்திர ஞான பாதம் அருள்வாயே
சித்தினில் ஆடலோடு - அறிவுத் துறையில் பயில்வித்து முத்தமிழ் - முத்தமிழ் வல்ல வாணர் - புலவர்கள் ஓது(ம்) - ஓதிப் போற்றும் சித்திர ஞான பாதம் அருள்வாயே - அழகிய ஞான மயமான திருவடியைத் தந்தருளுக

      நித்தமும் ஓதுவார்கள் சித்தமே வீடு அதாக
     நிர்த்தம் அது ஆடுமாறு முகவோனே

நித்தமும் ஓதுவார்கள் - நாள் தோறும் உன்னை ஓதிப் போற்றுபவர்களின் சித்தமெ - உள்ளமே வீடு அதாக - இருப்பிடமாக நிர்த்தம் அது - அதில் நடனம் புரியும் ஆறு முகவோனே - ஆறு முகம் உடையவனே


     நிட்கள ரூபர் பாதி பச்சு உருவான மூணு
  சூல பாணி அருள் பாலா

    நெட்டிலை நிட்கள - அருவமும் ரூபர் - உருவமும் உள்ளவர் பாதி பச்சு உருவான - பாதி உருவம் பச்சை நிறத்தினர் மூணு நெட்டிலை - மூன்று நீண்ட இலைகளை உடைய சூலபாணி - சூலத்தைக் கையில் ஏந்திய சிவபெருமான் அருள் பாலா - பெற்ற குழந்தையே

    பை தலை நீடும் ஆயிரத்தலை மீது பீறும்
     பத்திர பாத நீல மயில் வீரா

பைத் தலை - (ஆதிசேடனது) படம் கொண்ட தலைகள் நீடும் - பெரிய ஆயிரத் தலை மீது - ஆயிரம் தலைகளின் மேலே பீறும் - கீறிக்கிழிக்கும் பத்திர பாதம் - நொச்சி இலை போன்ற கால்களை உடைய நீல மயில் வீரா - நீல மயல் வாகனனே

     பச்சு இள பூக பாளை செய் கயல் தாவு வேளூர்
    பற்றிய மூவர் தேவர் பெருமாளே

பச்சிள - பசிய இளம் பூகம் பாளை - கமுக மரத்தின் மடலின் மீது செய் - வயலில் உள்ள கயல் தாவு - கயல் மீன்கள் தாவுகின்ற வேளூர் - வேளூர் என்னும் தலத்தில் பற்றிய - விரும்பி வீற்றிருக்கும் மூவர் - அரி, அயன், அரன் ஆகிய மூவரும் தேவர் - தேவர்களும் போற்றும் பெருமாளே - பெருமாளே

சுருக்க உரை

அளவில்லாத பிறவிகள் எடுத்து வருந்தும் அடியேனை அறிவுத் துறையில் பயில்வித்து உன் ஞானமாகிய திருவடியைத் தந்தருளுக

நாள்தோறும் உன்னைப் பணிபவர்கள் உள்ளத்தில் நடனம் புரிபவனே, அருவமும் உருவமும் ஆக உள்ள சூலத்தைக் கையில் ஏந்தியவரான சிவபெருமானின் குழந்தையே, பாம்பின் தலைகளைக் கீறிக் கிழக்கும் நொச்சி இலை போன்ற கால்களை உடைய நீல மயில் வீரனே, தேவர்கள் பெருமாளே, உன்னுடைய ஞான பாதங்களை அருள்வாயே


விளக்கக் குறிப்புகள்


சீசி சீசி குத்திர 
படுவன பலவுங் குற்றம் பாங்கிலா மனிதர் வாழ்க்கை
கெடுவதிப் பிறவி சீசீ       -- திருநாவுக்கரசர் தேவாரம்
நித்தமும் ஓதுவார்கள் சித்தம்
சொற் கோலத்தே நாற்காலைச் சேவிப்பார்
சித்தத் துறைவோனே     ருப்புகழ்,  பொற்பூவைச்சீரை
பத்தரி பாதம் நீல மயில்
மயிலின் அடியை நொச்சியின் இலைக்கு உவமை கூறுவது
மயிலடி யிலைய மாக்குரல் நொச்சி      ---குறுந்தொகை


No comments:

Post a Comment