பின் தொடர்வோர்

Friday 30 June 2017

320.மாலி னாலெடுத்த

320
வைத்தீசுரன் கோயில்

          தான தான தத்த தந்த தான தத்த தந்த
          தான தான தத்த தந்த          தனதான

மாலி னாலெ டுத்த கந்தல் சோறி னால்வ ளர்ந்த பொந்தி
   மாறி யாடெ டுத்த சிந்தை                            யநியாய
மாயை யாலெ டுத்து மங்கி நேனை யாஎ னக்கி ரங்கி
   வாரை யாயி நிப்பி றந்து                           இறவாமல்
வேலி நால்வி னைக்க ணங்கள் தூள தாஎ ரித்து உன்றன்
   வீடு தாப ரித்த அன்பர்                             கணமூடே
மேவு யானு னைப்பொல் சிந்தை யாக வேக ளித்து கந்த
   வேளெ யாமெ னப்ப ரிந்து                         அருள்வாயே
காலி னாலெ னப்ப ரந்த சூரர் மாள வெற்றி கொண்ட
   கால பாநு சத்தி யங்கை                           முருகோனே
காம பாண மட்ட நந்த கோடி மாத ரைப்பு ணர்ந்த
   காளை யேறு கர்த்த னெந்தை                      யருள்பாலா
சேலை நேர்வி ழிக்கு றம்பெ ணாசை தோளு றப்பு ணர்ந்து
   சூரை யோது பத்த ரன்பி                          லுறைவோனே
தேவர் மாதர் சித்தர் தொண்டர் ஏக வேளு ருக்கு கந்த
   சேவல் கேது சுற்று கந்த                           பெருமாளே

பதம் பிரித்து உரை

மாலினால் எடுத்த கந்தல் சோறினால் வளர்ந்த பொந்தி
மாறி ஆடு எடுத்த சிந்தை அநியாய

மாலினால் எடுத்த - ஆசையே ஒரு உருவாகி கந்தல் சோறினால் - துணியும் சோறும் கொண்டு வளர்ந்த - வளர்க்கப்படும் பொந்தி - உடல் மாறி ஆடும் - மாறி மாறி எண்ணம் கொள்ளும் சிந்தை - உள்ளம் அநியாய - (இவை தமை) அநியாயமான


மாயையால்  எடுத்து மங்கினேனை ஐயா எனக்கு இரங்கி
வாரும் ஐயா இனி பிறந்து இறவாமல்

மாயையால் எடுத்து - (உலக) மாயையால் எடுத்தவனாகி மங்கினேன் - வாட்டம் உறுகின்றேன் ஐயா - ஐயனே எனக்கு இரங்கி - என் மேல் இரக்கம் கொண்டு வாரும் ஐயா - வருக, ஐயனே இனி - இனிமேல் பிறந்து இறவாமல் - பிறப்பதும் இறப்பதும் இல்லாமல்

வேலினால் வினை கணங்கள் தூள் அதா(க) எரித்து உன் தன்
வீடு தா பரித்த அன்பர் கணம் ஊடே

வேலினால் - வேலாயுதத்தால் வினைக் கணங்கள் - எனது வினைக் கூட்டங்களை தூளதாக எரித்து - தூளாகும்படி எரித்து உன்றன் வீடு தா - உனது மோட்ச வீட்டைத் தந்து அருளுக பரித்த - அன்பு நிறைந்த அன்பர் கணம் ஊடே - அடியார் கூட்டத்தில்

மேவி யான் உனைப்போல் சிந்தையாகவே களித்து கந்த 
வேளே ஆம் என பரிந்து அருள்வாயே

யான் மேவி - நானும் கலந்து உனைப் போல் - உன்னை போல சிந்தையாகவே - (பரிசுத்த) உள்ளம் பெறவே களித்து - மகிழ்ச்சி கொள்ளும் கந்த வேளே - கந்த வேளே ஆம் என - நமக்கு உற்ற தூணையாகும் என்று பரிந்து அருள்வாயே - அன்பு கூர்ந்து அருள் புரிவாயாக

காலினால் என பரந்த சூரர் மாள வெற்றி கொண்ட
கால பாநு சத்தி அம் கை முருகோனே

காலினால் - காற்றினால் எனப் பரந்த - பரந்தது போல பரந்த - பரவியிருந்த சூரர் மாள - சூரர்கள் மடியும்படி வெற்றி கொண்ட - வெற்றி கொண்ட கால - யமன் போன்ற வ்லிமையும் பாநு - சூரியன் போன்ற பேரொளியைக் கொண்ட அம் கை முருகோனே - சத்தி வேலை அங்கையில் கொண்ட முருகனே

காம பாணம் அட்டு அநந்த கோடி மாதரை புணர்ந்த
காளை ஏறு கர்த்தன் எந்தை அருள் பாலா

காம பாணம் அட்ட - மன்மதப் பாணங்களை வருத்தியதால்
அனந்த கோடி -
கணக்கில்லாத மாதரைப் புணர்ந்த - மாதர்களுடன் புணர்ந்த காளை - காளையாகிய திருமாலாகிய இடப வாகனத்தின் மீது  ஏறு கர்த்தன் - ஏறுகின்ற தலைவன்
என்தை அருள் பாலா - என் தந்தையாகிய சிவபெருமான் பெற்ற பாலனே

சேலை நேர் விழி குறம் பெண் ஆசை தோளும் புணர்ந்து
சீரை ஓது(ம்) பத்தர் அன்பில் உறைவோனே

சேலை நேர் - சேல் மீனை ஒத்த விழிக் குறப் பெண் - கண்ணை உடைய குற மாதாகிய வள்ளியை அசை - ஆசையுடன் தோள் உறப் புனர்ந்து - அவள் தோள் பொருந்தச் சேர்ந்து சீரை - உனது புகழை ஓதும் - ஓதுகின்ற பத்தர் - அடியார்களின்
அன்பில் உறைவோனே - அன்பில் வீற்றிருப்பவனே

தேவர் மாதவர் சித்தர் தொண்டர் ஏக வேளூருக்கு உகந்த
சேவல் கேது சுற்று கந்த பெருமாளே


தேவர் மாதர் - தேவர்களும், மாதர்களும் சித்தர் - சித்தர்களும் தொண்டர் - தொண்டர்களும் ஏக - சென்று வணங்க வேளூருக்கு உகந்த - பூள்ளிருக்கு வேளூர் என்னும் தலத்தை மகிழ்ந்த (பெருமாளே) சேவல் கேது - சேவற்கொடி சுற்றும் - சுற்றியிருக்க மகிழும் கந்த பெருமாளே - கந்தப் பெருமாளே

சுருக்க உரை

ஆசையே உருவாகி அமைந்த கந்தையும், சோறு கொண்டு வளர்க்கப்படும் உடல், பல எண்ணங்களைக் கொண்ட உள்ளம் இவைகளை எடுத்தாவனாகி, ஐயனே, வாட்டம் உறுகின்றேன் இனி எனக்குப் பிறப்பும், இறப்பும் இல்லாமல் இருக்கவும், உன் கையில் ஏந்திய வேலால் என் வினைகள் நீங்கித் தூளாகும்படி மோட்ச வீட்டைத் தந்து அருளுக 

உனதடியார் கூட்டத்தில் நானும் கலந்து, பரிசுத்தமான உள்ளம் பெற, கந்த வேளே உற்ற துணையாகும் என்று நான் சிவலோக நிலையை அடைய அன்பு கூர்ந்து அருள் புரிவாயாக மன்மதனுடைய பாணத்தால் பல கோடி மாதர்களைப் புணர்ந்த காளையாகிய திருமாலாகிய விடையின் மேல் ஏறிய சிவபெருமான் அருளிய குழந்தையே சேல் மீன் போன்ற கண்களை உடைய வள்ளியின் தோள்கள் பொருந்தச் சேர்ந்து உறைபவனே தேவர்களும் சித்தர்களும் வணங்கும் புள்ளிருக்கும் வேளூரில் உகந்த பெருமாளே சேவல் கொடி சுற்றியிருக்க மகிழும் பெருமாளே என்னைப் பரிந்து அருள் புரிவாயாக

விளக்கக் குறிப்புகள்

சோறினால் வளர்ந்த பொந்தி 
சோற்றைத் துருத்திச் சுமைசுமப்பக் கண் பிதுங்கக்
காற்றைப் பிடித்து அலைந்தேன் கண்டாய் பராபரமே
                                       தாயுமானவர், பராபரக் கண்ணி

வாரையா வாரும் ஐயா என்பதின் மரூஉ

வேலினால் வினைக் கணங்கள் தூளதா
வினையோட் விடும் கதிர் வேல மறவேன்  -கந்தர் அனுபூதி 
வினை எறியும் வேற் கரமும்   -திருப்புகழ், விரைசொரியு

காளை ஏறு கர்த்தன் எந்தை

திரிபுரங்களை  எரிக்கச் சிவபெருமான் எழுந்தருளிய போது, இறைவன் வெற்றி அடையப் போவது நம்மால் என்று தேவர்கள் நினைத்தனர் இதை உணர்ந்த சிவன் தேரைச் சற்று அழுத்த தெர் ஒடிந்து யாவரும் நிலை கலங்கினர் அப்போது திருமால் காளையாகி இறைவனைத் தாங்கினார்

தடமதில்கள் அவை மூன்றும் தழல் எரித்த அந்நாளில்
இடபம் அது ஆய்த் தாங்கினான் திருமால் காண் சாழலோ
                                       திருவாசகம் திருச்சாழல்

அநந்த கோடி மாதரைப் புணர்ந்த
நரகாசுர வதம் செய்து அவனால் கொண்டு போகப்பட்ட மந்தர மலையின் சிகரமான ரத்ன கிரியில் சிறை வைக்கப்பட்டிருந்த தேவ கன்னிகைகள் பதியாறாயிரம் பேரையும் கண்ணன் மணந்து கொண்டார்

பல்லாயிரம் பெருந்தேவி மாரொடு
பெளவ மெறிதுவரை
எல்லரும் சூழச்சிங் காசனத்தே

இருந்தானைக் கண்டாருளர்     பெரியாழ்வார் திருமொழி 

No comments:

Post a Comment