பின் தொடர்வோர்

Tuesday 10 October 2017

326.அப்படியேழு மேழும்

326
பொது
பிறவி அற இந்த பாடலை பாடலாம் எனபர் பெரியவர்கள்

          தத்தன தான தானன தத்தன தான தானன
            தத்தன தான தானன                  தனதான
        

அப்படி யேழு மேழும்வ குத்தவ ழாது போதினி
    னக்ரம்வி யோம கோளகை              மிசைவாழும்
அக்ஷர தேவி கோவின்வி திப்படி மாறி மாறிய
    னைத்துரு வாய காயம               தடைவேகொண்
டிப்படி யோனி வாய்தொறு முற்பவி யாவி ழாவுல
   கிற்றடு மாறி யேதிரி                  தருகாலம்
எத்தனை யூழி காலமெ னத்தெரி யாது வாழியி
   னிப்பிற வாது நீயருள்                 புரிவாயே
கற்பக வேழ மேய்வன பச்சிள ஏனல் மீதுறை
    கற்புடை மாது தோய்தரு                       மபிராம
கற்புர தூளி லேபன மற்புய பாக சாதன
    கற்பக லோக தாரண                           கிரிசால
விப்ரச மூக வேதன பச்சிம பூமி காவல
    வெட்சியு நீப மாலையு                   மணிவோனே
மெத்திய ஆழி சேறெழ வெற்பொடு சூர னீறெழ
   விக்ரம வேலை யேவிய              பெருமாளே
 
பதம் பிரித்து உரை
 
அப்படி ஏழும் ஏழும் வகுத்து வழாது போதினின்
அக்ரம் வியோம கோளகை மிசை வாழும்

அப்படி - அவ்வகையில் ஏழு ஏழும் - பதினான்கு உலகங்களும் வழாது - தவறில்லாமல் வகுத்து - படைத்து போதினின் - தாமரை மலரில் அக்ரம்முதன்மைத் தானமான வியோம கோளம் மிசை - அண்ட கோளத்திலும் வாழும் - வாழ்கின்றவரும்

அக்ஷர தேவி கோவின் விதிப்படி மாறி மாறி
அனைத்து உரு ஆய காயம் அது அடைவே கொண்டு


அக்ஷர தேவி கோவின் - சரஸ்வதியின் கணவனுமான பிரமதேவன் இட்ட- விதிப்படி  எழுதியுள்ள விதியின்படி மாறி மாறி - (பிறப்புக்கள்) மாறி மாறி- அனைத்து உரு - எல்லா உருவங்களையும் கொண்ட காயமது - உடல்களை அடைவே கொண்டு - முறையே நான் எடுத்து

இப்படி யோனி வாய் தொறும் உற்பவியா விழா
உலகில் தடுமாறியே திரிதரு காலம்

இப்படி யோனி தொறு - இவ்வாறாக (எண்பத்து நான்கு நூறாயிரம்) யோனி பேதங்களிலும் உற்பவியா - தோன்றிப் பிறந்தும் விழா - பின்னர் இறந்தும்- உலகில் தடுமாறி - இங்ஙனம் உலகில் தடுமாற்றம் அடைந்து  திரிதரு காலம் - அலைகின்ற காலம்

எத்தனை ஊழி காலம் என தெரியாது வாழி
இனி பிறவாது நீ அருள் புரிவாயே
எத்தனை யூழி காலம் எனத் தெரியாது - எத்தனை ஊழி காலம் என்று எனக்குத் தெரியாது- வாழி - (இறைவனே) நீ வாழ்வாயாக- இனிப் பிறவாது - நான் இனிப் பிறவாமல்- நீ அருள் புரிவாயே - நீ அருள் புரிவாயாக-


கற்பகம் வேழம் ஏய்வன பச்சிள ஏனல் மீது உறை
கற்புடை மாது தோய் தரும் அபிராம

கற்பகம் - தென்னை வேழம் - கரும்பு ஏய்வன - (இவைகளுக்கு) ஒப்பாக (நீண்டு வளர்ந்துள்ள) பச்சிளம் ஏனல் - பசிய இளந் தினைகள் உள்ள புனத்தில் வீற்றிருந்த கற்புடை மாது - கற்பு நிறைந்த வள்ளி தோய் தரு அபி ராம - அணைதரும் அழகனே


கற்புர தூளி லேபன மல் புய பாக சாதன
கற்பக லோல தாரண கிரி சால

கற்பக தூளி லேபன - பச்சைக் கற்பூரப் பொடி பூசிய மற் புய - மல் யுத்தத்துக்கு ஏற்ற புயத்தை உடையவனே பாக சாதனன் - இந்திரனுடைய கற்பக லோகம் - கற்பக மரங்கள் உள்ள பொன்னுலகத்துக்கு தாரண - நிலைத்த வாழ்வைத் தந்தவனே கிரி சாலம் - மலைக் கூட்டத்தில் விளங்குபவனே


விப்ர சமூக வேதன பச்சிம பூமி காவல
வெட்சியு(ம்) நீப மாலையும் அணிவோனே

விப்ர சமூக - அந்தணர் கூட்டத்தில் இருப்பவனே வேதன - வேதத்தில உள்ளவனே பச்சிம - மேற் புறத்தில் உள்ள - பூமி காவல - பூமியின் காவலனே ( விண்ணுலகத்தின் காவலனே) வெட்சியும் நீப மாலையும் அணிவோனே - வெட்சியும் கடப்ப மலையையும் அணிபவனே
பச்சிம பூமி  – பச் இம பூமி – பூமி பொலிவு உள்ள பொன் உலகின் எனவும் பொருள் கொள்ளலாம்

        
மெத்திய ஆழி சேறு எழ வெற்பொடு சூரன் நீறு எழ
விக்ரம வேலை ஏவிய பெருமாளே-
 
மெத்திய ஆழி - (நீர்) நிரம்பிய கடல் சேறு எழ - சேறு பட்டு எழவும் வெற்பொடு - எழு கிரிகளும் சூரன் நீறு எழ - சூரனும் பொடிபட்டு அழியவும் விக்ரம வேலை - பராக்ரமம் பொருந்திய வேலை ஏவிய பெருமாளே - செலுத்திய பெருமாளே

சுருக்க உரை .
பதினான்கு உலகங்களையும் தவறுதல் இல்லாத வகையில் வகுத்து
அண்ட கோளத்திலும் வாழ்பவனும், சரஸ்வதிக்குத் தலைவனுமாகிய
பிரமனின் விதிப்படி, மாறி மாறி பல உடல் உருவங்களை எடுத்துப் பிறந்து, இறந்து, தடுமாறும் நான் இனி பிறவா வண்ணம் அருள்புரிவாயாக
பசிய தினைப் புனத்தில் வீற்றிருந்த கற்பு நிறைந்த வள்ளி அணைதரும்
அழகனே, வாசனைப் பொருள்கள் அணிந்தவனே, மல் யுத்தம் புரிவதற்கு ஏற்ற  புயங்களை உடையவனே, இந்திரனின் பொன்னுலகை நிலைக்கச் செய்தவனே, மலைகளில் வாழ்பவனே, அந்தணர்கள் கூட்டத்தில் இருப்பவனே, வேதத்தில் உள்ளவனே, பூமியின் காவலனே, வெட்சியும், கடப்பமும் அணிபவனே, கடல் சேறு படவும், எழு கிரிகளும் சூரனும் அழிபட வேலை எய்தியவனே, நான் இனிப் பிறவாது அருள் புரிவாயாக.
  
விளக்கக் குறிப்புகள்
கோவின் விதிப்படி மாறி மாறி---
ஏட்டின் விதிப்டி யேகொடு மாபுர
வீட்டி லடைத்திசை வேகசை மூணதி
லேற்றி யடித்திட வேகட லோடம தெனவேகி  திருப்புகழ்: ஏட்டின்விதி

பதினான்கு உலகங்கள்
மேலுலகம் 7. பூலோகம், புவலோகம், சுவலோகம், சனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம்
கீழுலகம் 7. அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், இராசதலம், பாதாளம்

அக்ரம் - நுணி





No comments:

Post a Comment