339
பொது
தீபம் ஜோதி நமஸ்துப்யம் தீபம் ஸர்வம் தமோபகம்
தீபேன சாத்யதி சர்வம் தீப ரூப ப்ரபோ நம
                    
தனந்த தானந் தந்தன தனதன தனதான 
இருந்த வீடுங் கொஞ்சிய சிறுவரு              முருகேளும்
     இசைந்த வூரும் பெண்டிரு மிளமையும் 
 வளமேவும் 
விரிந்த நாடுங் குன்றமு நிலையென            மகிழாதே
     விளங்கு தீபங் கொண்டுனை வழிபட  அருள்வாயே
குருந்தி லேறுங் கொண்டலின்
வடிவினன்   மருகோனே 
     குரங்கு லாவுங் குன்றுரை குறமகள்      மணவாளா 
திருந்த வேதந் தண்டமிழ் தெரிதரு            புலவோனே 
     சிவந்த காலுந் தண்டையு மழகிய          பெருமாளே.
பதம் பிரித்து உரை 
இருந்த வீடும் கொஞ்சிய சிறுவரும்
உரு கேளும் 
இசைந்த ஊரும் பெண்டிரும் இளமையும்
வளம் மேவும்
இருந்த வீடும் - நான் குடியிருந்த வீடும். கொஞ்சிய சிறுவரும் - நான் கொஞ்சிப் பேசிய குழந்தைகளும்
உரு கேளும் - பொருந்திய சுற்றத்தாரும் இசைந்த ஊரும் - என் மனதுக்கு உகந்த ஊரும் பெண்டிரும் - மனைவி முதலிய பெண்டிர்களும் இளமையும் - எனது இளமையும் வளம் மேவும் - செல்வம் நிறைந்த.
விரிந்த நாடும் குன்றமும் நிலை என மகிழாதே 
விளங்கு தீபம் கொண்டு உனை வழி
பட அருள்வாயே 
விரிந்த நாடும் - பரந்துள்ள நாடும் குன்றமும் - மலைகளும் நிலை என - எப்போதும் நிலைத்து இருக்கும் என்று எண்ணி மகிழாதே - நான் மகிழ்வு உறாமல் விளங்கு தீபம் - ஒளி தரும் தீபங்களை கொண்டு - ஏற்றி உனை வழி பட அருள்வாயே - உன்னை வழி பட அருள் செய்வாயாக.
குருந்தில் ஏறும் கொண்டலின்
வடிவினன் மருகோனே 
குரங்கு உலாவும் குன்று உரை
குற மகள் மணவாளா 
குருந்தில் ஏறும் - குருந்த மரத்தில் ஏறின கொண்டலின் வடிவினன் - மேக வண்ணனாகிய திருமாலின் மருகோனே - மருகனே குரங்கு உலாவும் - குரங்குகள் உலவுகின்ற குன்று உறை - வள்ளி மலையில் வாசம் செய்த குற மகள் மணவாளா - குறப் பெண்ணாகிய வள்ளியின் கணவனே.
திருந்த வேதம் தண் தமிழ் தெரி
தரு புலவோனே 
சிவந்த காலும் தண்டையும் அழகிய
பெருமாளே.
திருந்த - திருத்தமான முறையில் வேதம் - மறைகளை தண் - இன்பமான தமிழ் தெரி தரு - திரு நெறித் தமிழ் எனும் தேவாரமாக உலகோர்
தெரியத் தந்த புலவோனே - ஞானசம்பந்தப் பெருமானாகிய புலவனே சிவந்த காலும் - செம்மை வாய்ந்த திருவடியும் தண்டையும் - அதில் அணிந்த தண்டையும் அழகிய பெருமாளே - அழகு பொலியும் பெருமாளே.
சுருக்க உரை 
வீடு,
குழந்தைகள், சுற்றம் , நாடு, மனைவி, இளமை முதலியவற்றை நிலை என்று நினைத்து மகிழாமல்,
விளக்கு ஏற்றி உன்னை வழிபட அருள்வாய். திருமாலின் மருகனே, மலையில் வாழும் குற மகள்
வள்ளியின் மணவாளா, வேதங்களைத் தமிழில் யாவரும் தெரிந்து கொள்ளும்படி எழுதி ஞான சம்பந்தராக
அவதரித்தவனே, உனது  திருவடிகளை வழிபட அருள்வாயே.
விளக்கக் குறிப்புகள் 
1                                                     குருந்தில் ஏறும்... 
கண்ணன் யமுனையில் நீராடும் மங்கையர்களின் துகிலை எடுத்துக் கொண்டு கரையில் உள்ள குருந்த மரத்தில்
ஏறியதைக் குறிக்கும். 
 
கொல்லையஞ் சாரற் குருந் தொசித்த மாயவன் ---
                                                            சிலப்பதிகாரம்
கொங்க லர்ந்த மலர்க்கு ருந்த
மொசித்த கோவல னெம்பிரான் 
சங்கு தங்கு தடங்க டல்துயில்
கொண்ட தாமரைக் கண்ணினன்...---
                             -திருமங்கை ஆழ்வார் ,பெரியதிருமொழி               . 
2.தமிழ் வேதம் ....
சம்பந்தர் தேவாரம் என்று
கொள்ளலாம்-- ரிக் வேதம் 
ருக்கு ஐயம் போக உரைத்தோன்             --கந்தர் அந்தாதி                 
சுருதித் தமிழ்க் கவி--                    திருப்புகழ், கவடுற்ற.              
3. விளங்கு தீபங் கொண்டுனை வழிபட.....                     
விளக்கினால் பெற்ற இன்பம் மெழுக்கினால்
பதிற்றி ஆகும் 
துளக்கு இல் மலர் தொடுத்தால்
தூய விண் ஏறல் ஆகும் 
விளக்கு இட்டார் பேறு சொல்லின்
மெய்ஞ்ஞெறி ஞானம் ஆகும் 
அளப்பு இல் கதம் சொன்னார்க்கு அடிகள்தாம் அருளும் ஆறே
                                               - திருநாவுக்கரசர் தேவாரம்
குரங்குலாவு குன்று - வள்ளி மலை.

No comments:
Post a Comment