பின் தொடர்வோர்

Sunday 16 September 2018

340.இனமறை

340
பொது

                     தனதனன தந்தனந் தனதனன தந்தனந்
                        தனதனன தந்தனந்          தந்ததான
           
இனமறைவி தங்கள்கொஞ் சியசிறுச தங்கைகிண்
     கிணியிலகு தண்டையம்                   புண்டரீகம்
எனதுமன பங்கயங் குவளைகுர வம்புனைந்
     திரவுபகல் சந்ததஞ்                         சிந்தியாதோ
உனதருளை யன்றியிங் கொருதுணையு மின்றிநின்
     றுளையுமொரு வஞ்சகன்                      பஞ்சபூத
உடலதுசு மந்தலைந் துலகுதொறும் வந்துவந்
     துழலுமது துன்புகண்                        டன்புறாதோ
கனநிவத தந்தசங் க்ரமகவள துங்கவெங்
    கடவிகட குஞ்சரந்                         தங்கும்யானை
கடகசயி லம்பெறும் படியவுணர் துஞ்சமுன்
     கனககிரி சம்பெழுந்                             தம்புராசி
அனலெழமு னிந்தசங் க்ரமமதலை கந்தனென்
      றரனுமுமை யும்புகழ்ந்                         தன்புகூர
அகிலபுவ னங்களுஞ் சுரரொடுதி ரண்டுநின்
      றரிபிரமர் கும்பிடுந்                          தம்பிரானே



இன மறை விதங்கள் கொஞ்சிய சிறு சதங்கை கிண்கிணி   
இலகு தண்டை அம் புண்டரீகம்
இன மறை விதங்கள் - வேத ஒலி வகைகளை கொஞ்சிய - எடுத்துக் காட்டுகின்ற இலகு - விளங்கும் தண்டை - சிறிய சதங்கை அம் - அழகிய புண்டரீகம் - தாமரை அனைய உனது திருவடியை

  எனது மன பங்கயம் குவளை குரவம் புனைந்து
  இரவு பகல் சந்ததம் சிந்தியாதோ
எனது மன பங்கயம் - எனது மனம் என்னும் தாமரை குவளை - செங்கழுநிர் குரவம் - குராமலர் புனைந்த - (இவைகளைக் கொண்டு) அலங்கரித்து சந்ததம் - எப்பொழுதும் சிந்தியாதோ - தியானிக்காதோ?

உனது அருளை அன்றி இங்கு ஒரு துணையும் இன்றி நின்று
உளையும் ஒரு வஞ்சகன் பஞ்ச பூத

உனது அருளை இன்றி - உனது திருவருள்   இல்லாது இங்கு ஒரு துணையும் இன்றி நின்று - இங்கு வேறொரு துணையும் இல்லாமல் நின்று உளையும் - வேதனைப்படும் ஒரு வஞ்சகன் - ஒரு வஞ்சகனாகிய நான் பஞ்ச பூத - மண், நீர், தீ, காற்று, விண் ஆகிய ஐந்து பூதங்களால்

 உடல் அது சுமந்து அலைந்து உலகு தொறும் வந்து வந்து
 உழலும் அது துன்பு கண்டு அன்பு உறாதோ
உடல் அது - ஆகிய உடலை சுமந்து - சுமந்து அலைந்து - அலைந்து உலகு தொறும் - உலகு ஒவ்வொன்றிலும் உழலும் அது - அலைச்சல் உறும்துன்பு கண்டு - அந்தத் துன்பத்தைக் கண்டு
அன்பு உறாதோ - (உனக்கு என் மீது) அன்பு பிறவாதோ


 கனம் நிவத தந்த சங்க்ரம கவள துங்கம் வெம்
 கடம் விகட குஞ்சரம் தங்கும் யானை
கனம் – பெருமையுடன் நிவத - உயர்ச்சியை உடைய தந்த - தந்தங்களை உடைய சங்க்ரம கவள - உணவு உண்டைகளை உண்ணும் துங்கம் – பரிசுத்தமான வெம் - கொடிய கடம் - மதம் கொண்ட விகடம் - அழகுள்ள குஞ்சரம் தங்கும் யானை - ஐராவதம் என்னும் யானை மீது வீற்றிருக்கும்  தேவசேனை


 கடகம் சயிலம் பெறும்படி அவுணர் துஞ்ச முன்
 கனக கிரி சம்பெழுந்து அம்பு ராசி
கடகம் - (உனது) கங்கணம் அணிந்த சயிலம் - மலை போன்ற திருப்புயத்தை பெறும்படியும் - பெறும்படியும்அவுணர் துஞ்ச - அசுரர்கள் மடிய முன் - முன்பு
கனக கிரி - பொன் மலையாகிய கிரௌஞ்சம் சம்பெழுந்து - பாழ்பட்டு (அது இருந்த இடத்தில்) சம்புப் புல் எழவும் அம்புராசி - கடல்


 அனல் எழ முனிந்த சங்க்ரம மதலை கந்தன் என்று
 அரனும் உமையும் புகழ்ந்து அன்பு கூர
அனல் எழ - தீப்பட்டு வற்றவும் முனிந்த - கோபித்தசங்க்ரம மதலை - போருக்கு உற்ற பிள்ளை கந்தன் என்று - கந்தன் என்று அரனும் உமையும் - சிவபெருமானும் பார்வதியும் புகழ்ந்து அன்பு கூர - (உன்னைப்) புகழ்ந்து அன்பு மிக்கிருக்க

 அகில புவனங்களும் சுரரொடு திரண்டு நின்று
 அரி பிரமர் கும்பிடும் தம்பிரானே

அகில புவனங்களும் - சகல பூமியில் உள்ளவர்களும் சுரரொடு - தேவர்களுடன் திரண்டு  நின்று - கூட்டமாய்க் கூடி நின்று அரி பிரமர் - திருமாலும், பிரமனும் கும்பிடும் தம்பிரானே - வணங்கும் தலைவனே

தம்பிரான் என்பதற்கு கடவுள், ஞாநி, தனக்குதானே தலைவன், நம்பவர்களுக்குகெல்லாம் தலைவன், கட்டளைப்படி நடப்பவன் என்ற பொருள்கள் உண்டு

சுருக்க உரை

வேதங்கள் போற்றும் உன் திருவடியை என் மனம் எப்போதும் தியானிக்காதோ? உனது திரு அருள் இல்லாது வேறொரு துணையும் இல்லாது நின்று, நிலையில்லா உடலைச் சுமந்து, நான் அலைச்சல் உறும் துன்பத்தைக் கண்டு என் மீது உனக்கு அன்பு பிறவாதோ? 
உன் வலிமை வாய்ந்த புயங்களைத் தெய்வ யானை அம்மை பெறும்படியும், அவுணர்கள் மடியும் படியும், கிரௌஞ்ச மலை அழியவும், சிவனும் உமையும் புகழ்ந்து அன்பு மிக்கிருக்க, எல்லா உலகங்களில் உள்ள யாவரும், தேவர்களும், பிரமனும் கும்பிடுகின்ற பெருமாளே என் பிறவித் துன்பத்தைக் கண்டு அதை விலக்க உன் அன்பு பிறவாதோ?

விளக்கக் குறிப்புகள்
1 மறை விதங்கள் கொஞ்சிய 
செழுமறை யஞ்சொற் பரிபுரம்--  திருப்புகழ்,  இளையவர்நெஞ்ச
மறைசதுர் விதந்தெரிந்து வகை சிறு சதங்கை கொஞ்சும்
                                         திருப்புகழ், அனைவருமருண்டு
நாதசதகோடி மறை ஓலமிடு நூபுரம் —திருப்புகழ்,  ஆதவிதமார 

2 உனதருளை அன்றி
ஆறு மாமுகப் பிரான் அன்றி இவ்விடை வேறொரு துணையிலை

மெய்ம்மைஈது-                                          - கந்த புராணம்

No comments:

Post a Comment