பின் தொடர்வோர்

Sunday 16 September 2018

341.உலகத்தினில்

341
பொது

          தனதத்தன தானன தந்தன
            தனதத்தன தானன தந்தன
            தனதத்தன தானன தந்தன               தனதான

உலகத்தினில் மாதரு மைந்தரும்
   உறுசுற்றமும் வாழ்வொடு றுங்கிளை
   உயர்துக்கமு மோடுற வென்றுற         வருகாலன்
உதிரத்துட னேசல மென்பொடு
   உறுதிப்பட வேவள ருங்குடில்
   உதிரக்கனல் மீதுற என்றனை      யொழியாமுன்
கலகக்கலை நூல்பல கொண்டெதிர்
  கதறிப்பத றாவுரை வென்றுயர்
  கயவர்க்குள னாய்வினை நெஞ்சொடு  களிகூருங்
கவலைப்புல மோடுற என்துயர்
  கழிவித்துன தாளிணை யன்பொடு
  கருதித்தொழும் வாழ்வது தந்திட      நினைவாயே
இலகப்பதி னாலுல கங்களும்
  இருளைக்கடி வானெழு மம்புலி
  யெழில்மிக்கிட வேணியில் வந்துற      எருதேறி
இருகைத்தல மான்மழு வும்புனை
  யிறையப்பதி யாகிய இன்சொலன்
  இசையப்பரி வோடினி தன்றரு   ளிளையோனே
மலைபட்டிரு கூறெழ வன்கடல்  
  நிலைகெட்டபி தாவென அஞ்சகர்
  வலியற்றசு ரேசரு மங்கிட           வடிவேலால்
மலைவித்தக வானவ ரிந்திரர்
  மலர்கைக்கொடு மாதவ ருந்தொழ
  வடிவுற்றொரு தோகையிற் வந்தருள் பெருமாளே

பதம் பிரித்தல்

உலகத்தினில் மாதரும் மைந்தரும்       
உறு சுற்றமும் வாழ்வொடு உறும் கிளை
உயர் துக்கமும் ஓடு உறவு என்று வரும் காலன்

உலகத்தினில்-உலகில் மாதரும்மைந்தரும் - மனைவி முதலிய பெண்களும்  புதல்வர்களும் உறு சுற்றமும் - நெருங்கிய சுற்றத்தாரும் வாழ்வொடு - நல்ல வாழ்வுடன் வாழும் உறும் கிளை - பிற சுற்றத்தாரும் உயர் துக்கமுமோடு - மிக்க வருத்ததுடன் உறவு என்று உற வரு - பந்துக்கள் என்று வந்து சேரும்படிவரு - வருகின்ற காலன் - யமன்

உதிரத்துடனே சலம் என்பொடு
உறுதிப்படவே வளரும் குடில்
உதிர கனல் மீது உற என்று எனை ஒழியா முன்

உதிரத்துடனே - இரத்தத்துடன் சலம் - நீர் என்பொடு - எலும்பு இவைகளுடன் உறுதிப்படவே - நல்ல திட்டத்துடன் வளரும் குடில் - வளர்ந்துள்ள அந்த உடல் உதிர - அழிய கனல் மீது உற - நெருப்பில்  சேரும்படி என்றனை - என்னை ஒழியா முன் - இந்த வாழ்க்கையை விட்டு நீக்குதற்கு முன்பாக

கலக கலை நூல் பல கொண்டு எதிர்
கதறி பதறா உரை வென்று உயர்
கயவர்க்கு உளனாய் வினை நெஞ்சொடு களிகூரும்

கலகக் கலை நூல் - கலகத்தக்கு இடம் தரும் சமய நூல்கள் பல கொண்டு - பலவற்றைக் கற்று எதிர் கதறி - எதிர் பேசியும் பதறா - பதறியும் உரை வென்று உயர் - பேச்சில் வல்லவனாய் வென்று, மேம்பட்டு கயவர்க்கு உளனாய் - கீழ் மக்களுக்கு உள்ள புத்தியைக் கொண்டவனாய் வினை நெஞ்சொடு - தீ வினைக்கு உரிய எண்ணத்துடன் களி கூரும் - செருக்கு மிகும்

கவலை புலமோடு உற என் துயர்
கழிவித்து உன தாள் இணை அன்பொடு
கருதி தொழும் வாழ்வது தந்திட நினைவாயே

கவலைப் புலமோடு - சஞ்சலம் உறும் அறிவுடன் (நான் இருக்க) என் துயர் - (நீ) என்னுடைய துக்கத்தை கழிவித்து - நீக்கி உனது தாளினை - உனது இரண்டு திருவடிகளை அன்பொடு கருதி - அன்புடன் நான் தியானித்து தொழும் - வணங்கும்
வாழ்வு அது - நல் வாழ்வை தந்திட நினைவாயே - தந்து நினைந்தருள வேண்டுகின்றேன்

இலக பதினாலு உலகங்களும்
இருளை கடி வான் எழு அம்புலி
எழில் மிக்கிட வேணியில் வந்து உற எருது ஏறி

இலக – விளங்கும்படி பதினாலு உலகங்களும் - பதிநாலு உலகங்களிலும் இருளை – இருட்டை கடி - விலக்கி ஒழித்து வான்எழு அம்புலி - ஆகாயத்தில் எழுகின்ற சந்திரன் எழில் மிக்கிட - அழகு மிகுந்து பொலிய வேணியில் - சடையில் வந்து உற - வந்து பொருந்த எருது ஏறி - இடப வாகனத்தின் மேல் ஏறி

இரு கைத்தலம் மான் மழுவும் புனை
இறை அப்பதியாகிய இன் சொலன்
இசைய பரிவோடு இனிது அன்று அருள் இளையோனே

இரு கைத்தலம் - இரண்டு கைகளிலும் மான் மழுவும் புனை - மானும், மழுவும் விளங்கும்படி இறை - கடவுள் அப் பதியாகிய - அந்தத் தலைவராகிய இன் சொலன் - இனிய சொற்களைக் கொண்ட சிவபெருமானுடைய இசைய - மனதுக்குப் பொருந்தும்படிபரிவோடு - அன்புடன் இனிது - இன்பகரமாக அன்று - முன்பு அருள் - உபதேசித்த
இளையோனே - இளையோனே
 
மலை பட்டு இரு கூறு எழ வன் கடல்
நிலை கெட்டு அபிதா என அம் சகர்
வலி அற்ற அசுரேசரும் மங்கிட வடிவேலால்

மலை பட்டு - கிரௌஞ்ச மலை பிளவு பட்டு கூறு எழ - இரண்டு பிளவு உண்டாக வன் கடல் - வலிய கடல் நிலை கெட்டு - நிலை குலைந்து  அம் சகர் - அழகிய சகத்தோர் அபிதா என - அடைக்கலம் என்று  (முறையிட) வலி அற்று - வலிமை இழந்து அசுரேசரும் - அசுரத் தலைவர்களும் மங்கிட - பொலிவு இழந்து நிலை குலைய வடி வேலால் - கூரிய வேலாயுதத்தால்
 
மலை வித்தக வானவர் இந்திரர்
மலர் கைகொடு மாதவரும் தொழ
வடிவுற்ற ஒரு தோகையில் வந்து அருள் பெருமாளே

மலை வித்தக - போர் செய்த ஞான வித்தகனேவானவர் - தேவர்களும் இந்திரர் - இந்திரர்களும் மலர் கைக்கொடு - மலர் ஏந்திய கரங்களால் மா தவரும் - சிறந்த தவசிகளும் தொழ - வணங்கி நிற்க வடிவுற்ற ஒரு - அழகு பொருந்திய ஒப்பற்ற தோகையில் - மயிலின் மீது வந்து அருள் பெருமாளே - அருளும் பெருமாளே

சுருக்க உரை
பிரியும் போது உலகில் மனைவியும் மைந்தரும், சுற்றத்தினரும் வருந்தும் சமயம், தானும் உறவு என்று யமன் என் உயிரைக் கொண்டு போவதற்கு வரும் சமயம், வலிமையாக இருந்த என் உடலைக் கொண்டு எரிப்பதற்கு முன்னால், பல நூல்களைக் கற்று, சமயத் தருக்கங்களைப் பேசி, வென்று செருக்குற்று, சஞ்சலம் உறும் அறிவுடன் இருக்கும் என் துக்கத்தை நீக்கி, உன் இரு திருவடிகளில் உற்ற நல் வாழ்வைத் தந்தருள வேண்டுகிறேன் 

உலக இருளைப் போக்கும் சந்திரனைத் தன் சடையில் வைத்தவரும், இரு திருக் கரங்களில் மானும், மழுவும் ஏந்தியவரும் ஆகிய சிவபெருமான் இன்புற அவருக்கு உபதேசித்த இளையோனே, உலகத்தோர் அடைக்கலம் என்று முறையிட கிரௌஞ்ச மலையைப் பிளந்து, உயிர் அசுரர்களை அழித்த பெருமாளே, ஞான வித்தகனே, வானவர் தொழ மயில் மீது வந்து அருளும் பெருமாளே எனக்கு நல் வாழ்வு தந்திடுவாயாக
விளக்கக் குறிப்புகள்

1.கலகக் கலை
கலையே பதறிக் கதறித் தலையூடலையே படுமா றதுவாய்                            -- கந்தர் அனுபூதி
கதற்று மநேகங் கலைக் கடலு\டுஞ் சுழலாதே
                               -- திருப்புகழ், பெருக்கவு

2.இருகைத்தல மான் மழுவும் புனை :சிவன் மழு தரித்தது, புலித்தோலை தரித்தது முதலிய வரலாறுகள் கூறப்பட்டுள்ளன.  தாருக வனத்து முனிவர்கள் சிவனை வெறுத்து வேள்வி செய்தனர். சிவ பெருமான் பலியேற்க முனிவர்கள் இருக்கும் இடம் சென்றபோது, அவருடைய பெண்டிர்கள். அவர் அழகைக் கண்டு மோகம் கொண்டனர். முனிவர்கள் கோபித்து அவரைக் கொல்ல ஒரு கொடிய வேள்வியை ஆற்றினர் வேள்வியால் எழுந்த புலியை பரமன் கொன்று, அதன் தோலை உடுத்திக் கொண்டார். பின்னர் வேள்வியினின்று மூண்ட, மழு, மான், பாம்பு, பூதங்கள், வெண்டலை, துடி, முயலகன், தீ இவைகள் ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பப்பட்டன. சிவன் மானையும், மழுவையும் கையில் பற்றி ஏந்தினார்  

No comments:

Post a Comment