பின் தொடர்வோர்

Tuesday 8 January 2019

371.செழுந்தாது

371
பொது

            தனந்தான தானான தனந்தான தானான
            தனந்தான தானான                   தனதான

செழுந்தாது பார்மாது மரும்பாதி ரூபோடு
     சிறந்தியாதி லுமாசை                      யொழியாத
திறம்பூத வேதாள னரும்பாவ மேகோடி
      செயுங்காய நோயாள                       னரகேழில்
விழுந்தாழ வேமூழ்க இடுங்காலன் மேயாவி
     விடுங்கால மேநாயென்                வினைபாவம்
விரைந்தேக வேவாசி துரந்தோடி யேஞான
     விளம்போசை யேபேசி                   வரவேணும்
அழுங்கோடி தேவர்க ளமர்ந்தார வானீடி
     அழன்றேகி மாசீத                         நெடுவேலை
அதிர்ந்தோட வேகாலன் விழுந்தோட வேகூர
     அலங்கார வேலேவு                       முருகோனே
கொழுங்கானி லேமாதர் செழுஞ்சேலை யேகோடு
     குருந்தேறு மால்மாயன்                   மருகோனே
குறம்பாடு வார்சேரி புகுந்தாசை மாதோடு
     குணங்கூடி யேவாழு                       பெருமாளே

பதம் பிரித்து உரை

செழும் தாது பார் மாது அரும்பு ஆதி ரூபோடு
சிறந்து யாதிலும் ஆசை ஒழியாத

செழும் தாது - செழுமையான பொன் பார் - மண் மாது - பெண் (என்னும் மூவாசைகளும்) அரும்பு ஆதி ரூபோடு - முதலில் அரும்பு விட்டுப் பின்னர் வளருவது போன்ற உருவத்துடன் சிறந்து - மேலும் மேலும் விளங்கி யாதிலும் ஆசை ஒழியாதே - எதிலுமே ஆசை நீங்காத

திறம் பூத வேதாளன் அரும் பாவமே கோடி
செ(ய்)யும் காய நோயாளன் நரகு ஏழில்

திறம் - கோட்பாட்டினை உடைய பூத வேதாளன் - பேய் பிசாசு (நான்) அரும் பாவமே கோடி செய்யும் - கொடிய பாவங்களைக் கோடிக் கணக்கில் செய்பவன் காய நோயாளன் - உடலில் நோய் கொண்டவன் நரகு ஏழில் - ஏழு நரகங்களிலும்

விழுந்து ஆழவே மூழ்க இடும் காலன் மேவி ஆவி
விடும் காலமே நாயேன் வினை பாவம்

விழுந்து ஆழவே மூழ்கி - விழுந்து ஆழ்ந்து முழுகும்படி இடும் காலன் - தள்ளுகின்ற யமன் மேவி - என்னை அணுக ஆவி விடும் காலமே - நான் உயிர் விடும் காலத்தில் நாயேன் - அடியேனுடைய வினைபாவம் - வினை பாவம் ஆகியவை

விரைந்து ஏகவே வாசி துரந்து ஓடியே ஞான
விளம்பு ஓசையே பேசி வர வேணும்
விரைந்து ஏகவே - அதி வேகத்தில் என்னை விட்டு அகலும்படி வாசி - குதிரையாகிய மயிலை துரந்து ஓடியே - வேகமாகச் செலுத்தி ஞான விளம்பு - ஞான மொழிகளைச் சொல்லும் ஓசையே பேசி - ஒலியே கேட்கும்படியே பேசி வர வேணும் - வந்தருள வேண்டும்

அழும் கோடி தேவர்கள் அமர்ந்து ஆர வான் நீடி
அழன்று ஏகி மா சீத நெடு வேலை

அழும் கோடி தேவர்கள் - அழுத கோடிக் கணக்கான தேவர்கள் அமர்ந்து ஆர வான் நீடி - விண்ணில் நீண்ட காலம் அமர்ந்து வாழ்ந்திருக்கவேண்டி அழன்று ஏகி - கொதிப்புடன் கோபித்துச் சென்று மாசீத - மிகவும் குளிர்ச்சியான நெடு வேலை- பெரிய கடலில்

கொழும் கானிலே மாதர் செழும் சேலையே கோடு
குருந்து ஏறு மால் மாயன் மருகோனே

கொழும் கானிலே - செழிப்பான காட்டிலே மாதர் செழும் சேலையே - பெண்களின் சேலையே கோடு - நல்ல ஆடைகளை எடுத்துக் கொண்டு  குருந்து ஏறும் - குருந்த மரத்தில் ஏறிய மால் மாயன் - மாயனாகிய திருமாலின் மருகோனே - மருகோனே

குறம் பாடுவார் சேரி புகுந்து ஆசை மாதோடு
குணம் கூடியே வாழு(ம்) பெருமாளே

குறம் - குறம் என்னும் பாடல் வகையை பாடுவார் - பாடுபவர்களாகிய குறவர்களின் சேரி புகுந்து - சேரியில் புகந்து ஆசை மாதொடு - உன் ஆசைக்கு உகந்த வள்ளியுடன் குணம் கூடியே வாழும் பெருமாளே - அவள் குணத்துக்கு மகிழ்ந்து அவளுடன் கூடியே வாழ்கின்ற பெருமாளே

சுருக்க உரை

பொன், மண், பெண்  ஆகிய மூவாசை களோடு தோன்றி, வளர்ந்து, பின் யாதிலும் ஆசை நீங்காத இயல்புடைய பேயாளன் நான் உடலில் நோய்
கொண்டவன் ஏழு நரகங்களிலும் விழுந்து, முழுகும் படித் தள்ளுகின்ற மன் என் உயிரைக் கொண்டு போக வரும் போது, அடியேனுடைய வினை களும் பாவங்களும் அகலும்படி, மயிலின் மீது ஏறி, ஞான மொழிகளைப் பேசி என் முன் வந்து அருள வேண்டும்

கோடிக் கணக்கான தேவர்கள் வானில் அமர்ந்து அமைதியுடன் வாழ, கோபித்துச் சென்று, அசுரர்கள் மீது கூர்மையான வேலைச் செலுத்திய முருகனே காட்டில் குளித்துக் கொண்டிருந்த கோபியர்களின் ஆடைகளை எடுத்துச் சென்று திரு விளையாடல் செய்த மாயனாகிய திருமாலின் மருகனே, குறம் என்ற பாட்டு வகையைப் பாடும் குறவர் களின் சேரியில் புகுந்து உன் ஆசைக்கு உகந்த வள்ளியுடன், அவள் குணத்துக்கு மகிழந்து கூடி வாழும் பெருமாளே, ஞான ஒலி பேசி வரவேணும்

ஒப்புக

சேலையே கோடு
குருந்தினில் ஏறி மங்கையர்
கண்கள் சிவந்திடவே கலந்தரு முறையாலே –
                         திருப்புகழ், வஞ்சனைமிஞ்சிய

குருந்தி லேறுங் கொண்டலின் வடிவினன் மருகோனே -             திருப்புகழ், இருந்தவீடு

குறம் – பாட்டு வகை. குறத்தி குறிபார்த்துக் கூறல், தலைவி மகிழ்தல்.




No comments:

Post a Comment