பின் தொடர்வோர்

Tuesday 8 January 2019

370.சூதினுணவாசை

370
பொது

               தானதன தானதன தானதன தானதன
               தானதன தானதன                    தனதான

சூதினுண வாசைதனி லேசுழலு மீனதென
   தூசுவழ கானவடி                                                   வதனாலே
சூதமுட னேருமென மாதர்நசை தேடுபொரு
   ளாசைதமி லேசுழல                              வருகாலன்
ஆதிவிதி யோடுபிற ழாதவகை தேடியென
   தாவிதனை யேகுறுகி                                     வருபோது
ஆதிமுரு காதிமுரு காதிமுரு காஎனவு
   மாதிமுரு காநினைவு                                         தருவாயே
ஓதுமுகி லாடுகிரி யேறுபட வாழசுரர்
   ஓலமிட வேயயில்கொ                                            டமராடீ
ஓநமசி வாயகுரு பாதமதி லேபணியும்
   யோகமயி லாஅமலை                                 மகிழ்பாலா
நாதரகு ராமஅரி மாயன்மரு காபுவன
   நாடுமடி யார்கள்மன                          துறைவோனே
ஞானசுர வானைகண வாமுருக னேயமரர்
   நாடுபெற வாழவருள்                                  பெருமாளே

பதம் பிரித்து உரை

சூதின் உணவு ஆசை தனிலே சுழலும் மீன் அது என
தூசு அழகான வடிவு அதனாலே

சூதின் - வஞ்சனையாக (தூண்டிலில்) வைக்கப்பட்ட உணவு ஆசைதனில்- உணவை உண்ணும் ஆசையில் சுழலும் மீன்அது என - சுழன்று வரும் மீனைப் போல தூசு - ஆடையின் அழகான வடிவு அதனாலே - அழகுடன் கூடிய உருவத்தால்

சூதம் உடல் நேரும் என மாதர் நசை தேடு பொருள்
ஆசை த(ம்)மிலே சுழல வரு காலன்
சூதம் உடன் நேரும் என - மாந்தளிரின் நிறத்தை ஒக்கும் என்று சொல்லும் படியான மாதர் நசை - (விலை) மாதர்கள் மீதுள்ள காம ஆசை காரணமாக தேடு - தேடுகின்ற பொருள் ஆசை தமிலே - பொருள் ஆசைகளில் சுழல - மனம் அலைச்சல் உறும் நாளில் வரும் காலன் - வருகின்ற யமன்

ஆதி விதியோடு பிறழாத வகை தேடி எனது
ஆவி தனையே குறுகி வரு போது

ஆதி - பிரமனால் எழுதப்படட விதியோடு பிறழாத வகை - விதிக்குத் தவறாத வகையில் தேடி - என்னைத் தேடி எனது ஆவி தனையே - என்னுடைய ஆவியை குறுகி வரு போது - அணுகி வரும்போது

ஆதி முருகா ஆதி முருகா ஆதி முருகா எனவும்
ஆதி முருகா நினைவு தருவாயே

ஆதி முருகா ஆதி முருகா ஆதி முருகா எனவும் - ஆதி முருகா என்று என்று திரும்பித் திரும்ப கூற ஆதி முருகா - ஆதி முருகனே நினைவு தருவாயே - அந்த ஞாபகத்தை எனக்குத் தர வேண்டுகிறேன்

ஓது முகில் ஆடு கிரி ஏறுபட வாழ் அசுரர்
ஓலமிடவே அயில் கொடு அமராடீ

ஓது முகில் ஆடு - ஈரமுள்ள மேகம் பரவிச் செல்லும் கிரி - கிரௌஞ்ச மலை ஏறு பட - பொடியாக வாழ் அசுரர் - தமது வாழ்க்கை ஆழ்ந்தழிய நின்ற அசுரர்கள் ஓலமிடவே - பயந்து கூச்சலிட அயில் கொடு அமராடீ - வேல் கொண்டு போர் செய்தவனே

ஓ(ம்) நமசிவாய குரு பாதம் அதிலே பணியும்
யோக மயிலா அமலை மகிழ் பாலா

ஓ நமசிவாய குரு - ஓம் நமசிவாய எனப்படும் பஞ்சாஷரத்துக்கு உட் பொருளானவரான குரு மூர்த்தியாகிய சிவபெருமான் பாதம் அதிலே பணியும் - உது திருவடிகளில் பணியும்படியான யோக மயிலா - தகுதியைக் கொண்ட மயிலோனே அமலை - மலம் அற்ற (மாசு அற்ற)பார்வதி மகிழ் பாலா - மகிழும் குழந்தையே

நாத ரகுராம அரி மாயன் மருகா புவன(ம்)
நாடும் அடியார்கள் மனது உறைவோனே

நாத - தலைவனே ரகுராம அரி - ரகுராமராகிய திருமாலாம் மாயன் மருகா - மாயனுடைய மருகனே புவன - பூமியில் நாடும் அடியார்கள் - உன்னை விரும்பிப் போற்றும் அடியார்களின் மனது உறைவோனே - மனத்தில் உறைபவனே

ஞான சுர ஆனை கணவா முருகனே அமரர்
நாடு பெற வாழ அருள் பெருமாளே

ஞான - ஞான வடிவான சுர - தேவசேனையின் கணவா - மணவாளனே முருகனே - முருகனே அமரர் நாடு பெற- தேவர்கள் தமது நாடாகிய பொன் னுலகைப் பெற்று வாழ - வாழ அருள் பெருமாளே - அருள் புரிந்த பெருமாளே

சுருக்க உரை

வஞ்சனையாகத் தூண்டிலில் வைக்கப்பட்ட உணவின் மீதுள்ள அசையால் வலையில் அகப்படும் மீனைப் போல், அழகுடன் கூடிய உருவத்தால் விலை மாதர்களின் மீது காமப் பற்றை வைத்து, அதற்காகப் பொருள் தேடி அலைச்சல் உறும் நாளில், காலன் விதி தவறாத படி என்னுயிரைக் கொண்டு போக வரும்போது, ஆதி முருகா என்று பல முறை கூறும் ஞாபகத்தை எனக்குத் தந்தருள வேண்டுகிறேன்

கிரௌஞ்ச மலை பொடிபட, அசுரர்கள் தமது வாழ்க்கை அழிவதைக் கண்டு ஓலமிட
வேல் கொண்டு போர் புரிந்தவனே,
ஓம் நமசிவாய என்னும் பஞ்சாக்ஷரத்தின் ஆதியான சிவபெருமான் பணியும் உயர் நிலையைக் கொண்ட மயிலோனே,
பார்வதி தேவி மகிழும் குழந்தையே, ரகுராமனாகிய திருமாலின் மருகனே,
ஞான வடிவான தேவசேனையின் கணவனே,
தேவர்கள் தமது பொன்னுலகத்தைப் பெற்று வாழ அருள் புரிந்தவனே,
ஆதிமுருகாஎன்று சொல்ல நினைவு தருவாயே.

ஒப்புக

1.  ஓநமசிவாய குரு பாதமதி
ஓம் நமசிவாய - ஸ்தூல பஞ்சாக்ஷரம். 
முதல் நின்ற நகார மகாரங்கள் பாசத்தையும், இடை நின்ற வகாரங்கள் பதியையும், கடை நின்ற யகாரம் பசுவையும் குறிக்கும்
                         - வசுசெங்கல்வராய பிள்ளை
போற்றியோம் நமச்சிவாய புயங்கனே
                          திருவாசகம், திருச்சதகம்
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்
நமச்சிவாயவே நான் அறி விச்சையும்
நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே-
                              திருநாவுக்கரசர் தேவாரம்
2.  நாடும் அடியார்கள் மனது உறைவோனே
மருவும் அடியார்கள் மனதில் விளையாடு மரகத மயூரப் பெருமாள்காண்திருப்புகழ், திருமகள்
3.  ஆதி முருகாஆதி சற்குண சீலா நமோநம -  . திருப்புகழ், ஓது முத்தமிழ்
              ஆதி முருகா ஆதி முருகா ஆதி முருகா எனவும் ஆதி
              முருகா நினைவு தருவாயே – “அவன் அருளாலே
              அவன்தாள் வணங்கி” – மாணிக்க வாசகர்



No comments:

Post a Comment