பின் தொடர்வோர்

Tuesday 8 January 2019

372.ஞானாவிபூஷணி

372
பொது

             தானான தானன தானன தானன
             தானான தானன தானன தானன
             தானான தானன தானன தானன       தனதான

ஞானாவி பூஷணி காரணி காரணி
  காமாவி மோகினி வாகினி யாமளை
   மாமாயி பார்வதி தேவிகு ணாதரி உமையாள்தன்
நாதாக்ரு பாகர தேசிகர் தேசிக
  வேதாக மேயருள் தேவர்கள் தேவந
  லீசாச டாபர மேசர் சர்வேசுரி            முருகோனே
தேனார்மொ ழீவளி நாயகி நாயக
  வானாடு ளோர்தொழு மாமயில் வாகன
  சேணாளு மானின்ம னோகர மாகிய    மணவாளா
சீர்பாத சேகர னாகவு நாயினன்
  மோகாவி காரவி டாய்கெட ஓடவெ
  சீராக வேகலை யாலுனை ஓதவும்    அருள்வாயே
பேணார்கள் நீறதி டாஅம ணோர்களை
  சூராடி யேகழு மீதினி லேறிட
  கூனான மீனனி டேறிட கூடலில்      வருவோனே
பேராண்மை யாளனி சாசரர் கோனிரு
  கூறாக வாளிதொ டுரகு நாயகன்
  பூவாய னாரணன் மாயனி ராகவன்     மருகோனே
வாணாள்ப டாவரு சூரர்கள் மாளவெ
  சேணாடு ளோரவர் வீடதி டேறிட
  கோனாக வேவரு நாதகு ரூபர                குமரேசா
வாசாக கோசர மாகிய வாசக
  தேசாதி யோரவர் பாதம தேதொழ
  பாசாவி நாசக னாகவு மேவிய            பெருமாளே

பதம் பிரித்து உரை

ஞானா விபூஷணி கார் அணி காரணி
காமா விமோகினி வாகினி யாமளை
மா மாயி பார்வதி தேவி குணாதரி உமையாள் தன்
ஞானா விபூஷணி - ஞானத்தையே அணிகலனாகக் கொண்டவள்
கார் அணி - கரிய நிறம் கொண்ட
காரணி -  எல்லாவற்றுக்கும் காரணமாக இருப்பவள் காமா விமோகினி - காமத்தை உயிர்களுக்கு ஊட்டும் சிறந்த மோகினி வாகினி - பாதிரி மரநிழலில் சிவனைப் பூசித்த உமை யாமளை - பச்சை நிறத்தி மா மாயி - மாயையில்  வல்லவள் பார்வதி தேவி - பார்வதி தேவி குணாதரி - நற் குணங்களை உடையவள் உமையாள் தன் - (ஆகிய) உமா தேவியின்

நாதா க்ருபாகர தேசிகர் தேசிக
வேதாகமே அருள் தேவர்கள் தேவ நல்
ஈசா சடா பரமேசர் சர்வேசுரி முருகோனே
நாதா - தலைவரும் க்ருபாகர தேசிகர் - அருளுக்கு இருப்பிடமான சிவபெருமானுக்கு தேசிக - குருவே வேதாகமே அருள் - (சிவனுக்கு) வேத ஆகமங்களை அருளிய தேவர்கள் தேவ – தேவ தேவனே நல் ஈசா - நல்ல ஈசனே சடா - சடையை உடைய பரமேசர் - பரமேசுரர் சர்வேசுரி - எல்லாவற்றுக்கும் தலைவியாகிய ஈசுவரி இருவருடைய முருகோனே - குழந்தையே

சீர்பாத சேகரன் ஆகவு நாயினன்
மோகா விகார விடாய்கெடஓடவெ .
சீராகவே கலையால் உனை ஓதவும் அருள்வாயே
சீர் பாத சேகரன் ஆகவும் - உனது திருவடியை என் தலை மேல் சூடியவனாகிய நாயினன் – நாயாகிய நான் மோகா விகார விடாய் - காம விகார தாகம் கெட ஓடவே - கெட்டு ஓட்டம் பிடிக்க சீராகவே - நன்றாக கலையால் - கலை ஞானத்துடன் உனை ஓதவும் - உன்னை நான் பாட அருள்வாயே - அருள்வாயாக

தேன் ஆர் மொழி வ(ள்)ளி நாயகி நாயக
வான் நாடு உளோர் தொழு மா மயில் வாகன
சேண் ஆளும் மானின் மனோகரம் ஆகிய  மணவாளா
தேன் ஆர் மொழி - தேன் போலும் இனிய மொழிகளைப் பேசும் வ(ள்)ளி நாயகி நாயக - வள்ளி நாயகிக்குக் நாயகனே[கணவனே] வான் நாடு உளோர் - விண்ணுலகத்தில் உள்ளோர்கள் தொழு மா மயில் வாகன - வணங்கும் சிறந்த மயில் வீரனே சேண் ஆளும் மானின் - விண்ணுலகத்தை ஆளும் இந்திரனின் மகளான தேவசேனையின் மனோகரமாகிய - இனிமையான மணவாளா - கணவனே

பேணார்கள் நீறு அது இடா அமணோர்களை
சூர் ஆடியே கழு மீதினில் ஏறிட
கூன் ஆன மீனன் ஈடு ஏறிட கூடலில் வருவோனே
பேணார்கள் - (உன்னைப்) போற்றாதவர்களும் நீறு அது இடா - திரு நீற்றை அணியாதவர்களுமாகிய அமணோர்களை - சமணர்களை சூர் ஆடியே - அச்சத்துடன் மனகலக்கம் ( mind blogging) கொள்ளுமாறு செய்து கழு மீதினில் ஏறிட - கழுவில் ஏறும்படி செய்து கூன் ஆன - கூனனாயிருந்த மீனன் - மீன் கொடியை உடைய பாண்டியன் ஈடு ஏறிட - ஈடேறுமாறு கூடலில் வருவோனே - மதுரைக்கு (ஞானசம்பந்தராகப்) போனவனே

பேர் ஆண்மையாளன் நிசாசரர் கோன் இரு
கூறாக வாளி தொடு ரகுநாயகன்
பூ வாயன் நாரணன் மாயன் இராகவன் மருகோனே
பேர் ஆண்மையாளன் - மிக்க வீரம் கொண்டவனான நிசாசரர் கோன் - அரக்கர்கள் அரசனான இராவணன் இரு கூறாக - இரண்டு பிளவாக வாளி தொடு - அம்பைச் செலுத்திய ரகு நாயகன் - ரகு ராமன் பூ வாய - தாமரை மலரிதழ் ஒத்த வாயை உடைய நாரணன் - நாராயண மூர்த்தி மாயவன் - மாயவன் (ஆகிய) இராகவன் மருகோனே - இராகவனுடைய மருகனே

வாழ் நாள் படா வரு சூரர்கள் மாளவே
சேண் நாடு உளோர் அவர் வீடு ஈடேறிட
கோன் ஆக வரு நாத குரு பர குமரேசா
வாழ் நாள் படா வரு - வாழ் நாள் அழியும்படி வந்த சூரர்கள் மாளவே - சூரர்கள் இறக்க சேண் நாடு உளோர் அவர் - விண்ணுலகத்தில் வாழும் தேவர்கள் வீடு அது ஈடேறிட - வீடாகிய பொன்னுலகம் ஈடேறி வாழ கோனாகவே வரு - தலைவனாக வந்த நாத - நாதனே குருபர குமரேசா - குருபரனே, குமரேசனே

வாசா மகோசரமாகிய வாசக
தேச ஆதியோர் அவர் பாதம் அதே தொழ
பாசா விநாசகனாகவும் மேவிய பெருமோளே

வாசா மகோசரமாகிய - வாக்குக் எட்டாத வாசக - திருவாக்கை உடையவனே தேசாதியோர் அவர் - நாடுகள் பலவற்றிலும் உள்ளவர்கள் பாதமதே தொழ - (உனது) திருவடிகளைத் தொழுது நிற்க பாசா விநாசகனாகவும் - பாசங்களை நீக்குபவனாக விளங்கி மேவிய - வீற்றிருக்கும் பெருமாளே - பெருமாளே

சுருக்க உரை

ஞானத்தை அணிகலனாகக் கொண்டவள் காரணி, காமா விமோகினி, வாகினி, பச்சை நிறத்தி, நற் குணங்களை உடைய பார்வதி ஆகிய உமா தேவியின் நாதா அருள் பொழியும் குருவான சிவபெருமானுக்கும் குருவே வேதாகமங்களைச் சிவபெருமானுக்கு அருளிய குருவே சடையைத் தரித்த நல் ஈசன் ஆகிய பரமேஸ்வரன், ஈசுவரி ஆகியோரின் குழந்தையே தேன் போல் இனிய மெழி பேசும் வள்ளி நாயகியின் தலைவனே விண்ணுலகத் தலைவனான இந்திரனின் மகளான தேவசேனைக்கு மணவாளா உன் திருவடியை என் தலை மேல் சூடியவனாகிய அடியேனுடைய காம விகார தாகம் கெட்டு ஒழிய அருள் புரிவாயாக

உன்னை மதியாதவரும், திரு நீறு அணியாதவருமாகிய சமணர்களைக் கழுவில் ஏறும்படி செய்து, கூன் பாண்டியன் ஈடேறுமாறு ஞான சம்பந்தராக அவதரித்தவனே அரக்கர் மன்னனாகிய இராவணன் உடல் இரு கூறாகப் பிளக்க ஒரு அம்பைச் செலுத்திய இராமனின் மருகனே சூரர்கள் இறக்கவும், தேவர்கள் பொன்னுலகுக்குப் போய் வாழவும் தலைவனாக வந்த நாதனே வாக்குக்கு எட்டாத திருவாக்கை உடையவனே உனது பாதங்களைத் தொழுபவர் பாவங்களை ஒழிப்பவனே பெருமாளே ஞானத்தால் நான் உனைப் பாட அருள்வாயே

விளக்கக் குறப்புகள்

இப்பாடலில் உமா தேவியின் குணங்கள் கூறப்பட்டுள்ளன
வாகினி
திருப்பாதிரிப் புலியூர் என்னும் தலத்தில் பார்வதி சிவபெருமானது அருளைப் பெற பாதிரி மரத்தின் நிழலில் தவம் செய்தாள்
பாடலேசன் பருமணிக் கோயிலுள் ஏட விழ்ந்தவர் பாதிரி யின்னிழல் எண்ணருந் தவஞ் செய்தனள் காணவே - திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம்

பாதிரி மரநிழலில் சிவனைப் உமை பூசித்த வரலாறு:  

பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது. சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து உலகத்துக்கு வெளிச்சம் தந்தார். இந்த தவற்றினால் பார்வதியை உலகத்துக்குச் சென்று தன்னை நோக்கி தவம் இருக்கச் சொன்னார் சிவபெருமான்.

பார்வதி காஞ்சிபுரத்தில் சாதாரண பெண்ணாக பிறந்து கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணல் லிங்கம் செய்து பூஜித்தார். பார்வதியின் தவத்தை உலகினுக்கு அறியச் செய்ய சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளத்தை உண்டாக்கினார். பார்வதி தனது மணல் லிங்கத்தை வெள்ளம் அடித்து செல்லாமல்  இருக்க கட்டி அணைத்துக் கொண்டார்.

சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்று பார்வதிக்கு அருள் புரிந்து, இரண்டு படி நெல்லைக் கொடுத்து காமாட்சி என்ற பெயரில் காமகோட்டத்தில் 32 அறங்களைச் செய்ய பணித்தார். பார்வதி வழிபட்ட மணல் லிங்கம்தான் பிரித்வி லிங்கம். காமகோட்டம் தான் காமாட்சி அம்மன் கோவில். பார்வதி கட்டித்  தழுவியதால் இங்கு உள்ள சிவபெருமானை தழுவக் குழைந்தார் என்றும் அழைப்பர்.




No comments:

Post a Comment