பின் தொடர்வோர்

Tuesday 3 December 2019

394.பட்டுப் படாத


394
பொது

                 தத்தத் தனான         தனதான

பட்டுப் படாத                     மதனாலும்       
   பக்கத்து மாதர்              வசையாலும்     
சுட்டுச் சுடாத                     நிலவாலும்     
   துக்கத்தி லாழ்வ        தியல்போதான்      
தட்டுப் படாத                      திறல்வீரா     
   தர்க்கித்த சூரர்                   குலகாலா 
மட்டுப் படாத                   மயிலோனே  
   மற்றொப் பிலாத            பெருமாளே

பதம் பிரித்து உரை

பட்டு படாத மதனாலும்    
பக்கத்து மாதர் வசையாலும்

பட்டுப் படாத - (மலர்ப் பாணங்களால் தாக்கியும்) தாக்காதது போல மதனாலும் - (உருவம் இல்லாது  நிற்கும்) மன்மதனாலும்.  பக்கத்து மாதர் - அண்டை அயலில் உள்ள மாதர்களின். வசையாலே - பழிப்புரைகளாலும்.

சுட்டு சுடாத நிலவாலும்     
துக்கத்தில் ஆழ்வது இயல்போ தான்

சுட்டுச் சுடாத நிலவாலும் - (தனது கிரணங்களால்) எரித்தும் எரிக்காதது போல் விளங்கும் சந்திரனாலும் துக்கத்தில் ஆழ்வது - நான் துன்பத்தில் மூழ்கித் தவிப்பது. இயல்போ தான் - தகுதியோதான்?

தட்டு படாத திறல் வீரா     
தர்க்கித்த சூரர் குலகாலா

தட்டுப் படாத திறல் வீரா - தடைபடாத வலிமை கொண்ட வீரனே தர்க்கித்த சூரர் - வாதித்து எதிர்த்த சூரர்களின் குலகாலா - குலத்தை வேரோடு அழித்தவனே.

மட்டு படாத மயிலோனே       
மற்று ஒப்பிலாத பெருமாளே.

மட்டுப் படாத - அளவு கடந்த திறம் தாழ்வு படாத. மயிலோனே - மயில் வாகனனே மற்று ஒப்பிலாத பெருமாளே - வேறு இணையே இல்லாத பெருமாளே.

சுருக்க உரை

என்னைத் தாக்கியும் தாக்காதது போல் உருவம் இல்லாமல் நிற்கும் மண்மதனின் மலர்ப் பாணங்களாலும், அண்டை அயலில் உள்ள மாதர்களின் வசை மொழிகளாலும், என்னைச் சுடாமல் சுடும் சந்திரனின் கிரணங்களாலும், நான் துன்பத்தில் முழுகி வாடுவது தகுமோ தான்?
குறைவில்லாத வலிமை கொண்ட வீரனே. வாதித்து எதிர்த்து வந்த சூரனுடைய குலத்துக்கே யமனாக அமைந்தவனே, அளவு கடந்த திறம் படைத்த மயில் வாகனனே. நான் காம மயக்கத்தால் வாடி வருந்துவது தகுமோ?

விளக்கக் குறிப்புகள்
இப்பாடல் அகப் பொருள் துறையைச் சார்ந்தது. மன்மதனின் பாணங்களாவன...மாதர்களின் வசை மொழி, நிலவு, காமனின் மலர்ப் பாணங்கள்.
திருப்புகழ்:  அல்லசலடைந்த, தெருவினில், துள்ளுமதவேட்கை.


No comments:

Post a Comment