பின் தொடர்வோர்

Tuesday 3 December 2019

392.நெடிய வடகுவடு


392
பொது

                 தனன தனதன தனதன தனதன
                  தனன தனதன தனதன தனதன   
                 தனன தனதன தனதன தனதன   தனதான

நெடிய வடகுவ டிடியவு மெழுகிரி   
   நெறுநெ றெனநெரி யவுமுது பணிபதி   
   நிபிட முடிகிழி யவுநில மதிரவும்             விளையாடும்   
நிகரில் கலபியும் ரவியுமிழ் துவசமும்   
   நினது கருணையு முறைதரு பெருமையும்   
   நிறமு மிளமையும் வளமையு மிருசர          ணமும்நீப   
முடியு மபிநவ வனசரர் கொடியிடை
   தளர வளர்வன ம்ருகமத பரிமள   
   முகுள புளகித தனகிரி தழுவிய              திரடோளும்
மொகுமெ கெனமது கரமுரல் குரவணி   
   முருக னறுமுக னெனவரு வனபெயர்   
   முழுது மியல்கொடு பழுதற மொழிவது     மொருநாளே   
கொடிய படுகொலை நிசிசர ருரமொடு   
   குமுகு மெனவிசை யுடனிசை பெறமிகு   
   குருதி நதிவித சதியொடு குதிகொள     விதியோடக்   
குமுறு கடல்குடல் கிழிபட வடுமர   
   மொளுமொ ளெனஅடி யொடலறி விழவுயர்   
   குருகு பெயரிய வரைதொளை படவிடு    சுடர்வேலா  
இடியு முனைமலி குலிசமு மிலகிடு   
   கவள தவளவி கடதட கனகட   
   இபமு மிரணிய தரணியு முடையதொர்   தனியானைக்   
கிறைவ குருபர சரவண வெகுமுக   
   ககன புனிதையும் வனிதைய ரறுவரும்   
   எனது மகவென வுமைதரு மிமையவர்         பெருமாளே.

பதம் பிரித்து உரை

நெடிய வட குவடு இடியவும் எழு கிரி       
நெறு நெறு என நெரியவும் முது பணி பதி 
நிபிட முடி கிழியவும் நிலம் அதிரவும் விளையாடும்

நெடிய - நீண்டதும். வட குவடு இடியவும் - வடக்கே உள்ள மேரு மலை இடி பட்டுப் பொடிபடவும். எழு கிரி - ஏழு மலைகளும். நெறு நெறு என நெரியவும் - நெறு நெறு என்று நெரிவு உறவும்.  முது - முதுமை வாய்ந்ததும். பணி பதி - பாம்புகளுக்குத் தலைவனும் ஆகிய ஆதி சேடனது. நிபிட முடி - நெருங்கிய பணா முடிகள். கிழியவும் - கிழிபட. நிலம் - பூமி. அதிரவும் - அதிரவும். விளையாடும் - விளையாடுகின்ற.

நிகர் இல் கலபியும் ரவி உமிழ் துவசுமும்    
நினது கருணையும் உறை தரு பெருமையும்    
நிறமும் இளமையும் வளமையும் இரு சரணமும் நீப

நிகர் இல் - ஒப்பில்லாத கலபியும் - மயிலும் ரவி - சூரியனை உமிழ் தரு - கக்குகின்ற. துவசமும் - கொடியாகிய சேவலும் நினது கருணையும் - உன்னுடைய கருணையும் உறை தரு - உன்னிடம் நிலைத்து விளங்கும் பெருமையும் - பெருமையும். நிறமும் - ஒளியும் இளமையும் - இளமையும் இரு சரணமும் - இரண்டு திருவடிகளும் நீப - கடம்பும் (அணிந்த).

முடியும் அபிநவ வனசரர் கொடி இடை   
தளர வளர்வன ம்ருகமத பரிமள  
முகுள புளகித தன கிரி தழுவிய திரள் தோளும் 

முடியும் - திருமுடிகளும் அபிநவ - புதுமை நிறைந்த வனசரர் - வேடர்களின் கொடி இடை - வள்ளியின் கொடி போன்ற இடை தளர் - தளர்வுறும்படி. வளர்வன - வளர்கின்ற ம்ருகமத - கஸ்தூரி அணிந்த. பரிமள - நறுமணம் உள்ள முகுள - மலர்ந்த மொட்டுப் போன்ற புளகித - புளகிதம் கொண்ட தன கிரி - மலை போன்ற கொங்கைகளை தழுவிய - தழுவிய திரள் தோளும் - திரண்ட தோள்களும்.


மொகுமொகு என மதுகரம் முரல் குரவு அணி 
முருகன் அறுமுகன் என வருவன பெயர்    
முழுதும் இயல் கொடு பழுது அற மொழிவதும் ஒரு நாளே

மொகு மொகு என - மொகுமொகுவென்று மதுகரம் - வண்டுகள் முரல் - ஒலிக்கின்ற குரவு அணி - குரா மலரை அணியும் முருகன் -  முருகன் அறுமுகன் - ஆறுமுகன் என வருவன - என்று வருவனாகிய பெயர் முழுதும் - உனது திருநாமங்கள் முழுமையும் இயல் கொடு - இயல் தமிழில் அமைத்து பழுது அற - குற்றம் இல்லாமல். மெழிவதும் ஒரு நாளே - நான் ஓதுவதும் ஒரு நாள் கிடைக்குமோ?


கொடிய படு கொலை நிசிசரர் உரமொடு   
குமுகும் என விசையுடன் இசை பெற மிகு   
குருதி நதி வித சதியொடு குதி கொள விதி ஓட

கொடிய - பொல்லாத. படுகொலை - கொடுமையான கொலைகளைச் செய்யும் நிசிசரர் - அசுரர்களது. உரமொடு - மார்புடன் குமுகும் என இசை பெற - குமுகும் என்னும் ஒலி உண்டாகும்படி மிகு குருதி - வேகத்துடன் நிரம்ப இரத்தம் நதி வித சதியொடு - நதி வெள்ளம் போல் தாளத்தோடு குதி கொள - குதித்துப் பாய்ச்சல் கொள்ளவும் விதி - பிரமன். ஓட - அஞ்சி ஓடவும்.


குமுறு கடல் குடல் கிழி பட அடு மரம்    
மொளு மொளு என அடியொடு அலறி விழ உயர்   
குருகு பெயரிய வரை தொளை பட விடு சுடர் வேலா


குமுறு - கலங்கி ஒலிக்கும் கடல் குடல் கிழி பட - கடலின் உட் பாகங்கள் கிழியவும் அடு மரம் - கொல்லும் தன்மையை உடைய (சூரனாகிய) மாமரம். மொளு மொளு என - மொளுமொளுவென்று அடியோடு அலறி விழ - அடிப்பாகம் முதல் அலறி விழவும் உயர் குருகு - உயர்ந்து வளர்ந்த பறவையின் பெயரிய வரை - பெயர் கொண்ட. வரை - கிரௌஞ்ச மலை. தொளை பட - தொளைபடவும் விடு சுடர் வேலா - வேலைச் செலுத்தும் வேலனே.

இடியும் முனை மலி குலிசமும் இலகிடு   
கவள தவள விகட தட கன கட   
இபமும் இரணிய தரணியும் உடையது ஒர் தனி யானைக்கு


இடியும் - இடியும். முனை மலி - கூர்மை மிக்க குலிசமும் - குலிசாயுதமும் இலகிடு - விளங்கும் கவள - கவளமாக ஊண் உண்பதும். தவளம் - வெண்ணிறமானதும். விகட - அழகுள்ளதும் தட - பரந்ததுமான கன கட இபமமும் - மதச் சுவட்டினின்று மிகுந்த மதம் பொழியும் ஐராவதம் என்னும் வெள்ளை யானையும் இரணிய தரணியும் - பொன்னுலகமும் உடையது - தமக்குச் சொந்தமாக உள்ள. ஒரு - ஒப்பற்ற தனி யானைக்கு -  பரிசுத்தமான தேவயானைக்கு


இறைவ குருபர சரவண வெகு முக   
ககன புனிதையும் வனிதையர் அறுவரும்   
எனது மகவு என உமை தரும் இமையவர் பெருமாளே.


இறைவ - தலைவனே குருபர - குருபரனே. சரவண - சரவணனே வெகு முக - பல முகமாய்ப் பரந்து வரும் ககன புனிதையும் - ஆகாய கங்கையும். வனிதையர் அறுவரும் - கார்த்திகைப் பெண்கள் அறுவரும். எனது மகவு என - எங்கள் குழந்தை என்று பாராட்டும்படி. உமை தரும் - பார்வதி பயந்தருளிய இமையவர் பெருமாளே - தேவர்கள் பெருமாளே.
சுருக்க உரை
மேருமலை பொடியாகவும், ஏழு மலைகளும் நெரிவு உறவும், ஆதிசேடனுடைய முடிகள்  கிழிந்து விழவும், மயிலும், சேவலும், கருணையும், பெருமையும் உனது ஒளியும், இளமையும், வளமையும், இரு திருவடிகளும், கடம்பணிந்த முடிகளும், வள்ளி நாயகியின் கொங்கைகளைத் தழுவும் தோள்களும், குரா மலர் அணிந்த முருகன், ஆறுமுகன், என்று உனது திருநாமங்களைக் குற்றமற்ற தமிழில் ஓதும் பாக்கியம் எனக்குக் கிட்டுமோ?
அசுரர்களின் மார்புடன் விழ, அவர்களுடைய இரத்த வெள்ளம் குதித்துப் பாய்ந்து வெளிவரவும், பிரமன் பயந்து ஓடவும்,  கடலின் உட்பாகங்கள் கிழியவும், சூரனாகிய மாமரம் முறிந்து விழவும், கிரௌஞ்ச மலை தொளை படவும் வேலைச் செலுத்திய வேலனே. குலிசாயதமும், ஐராவதம் என்ற வெள்ளை யானையும், பொன்னுலகமும் தனக்குச் சொந்தமாகக் கொண்ட தேவசேனையின் கணவனே, குருபரனே, சரவணனே, ஆகாய கங்கையும், கார்த்திகைப் பெண்களும் தமது குழந்தையாகப் போற்றும் உமா தேவி பெற்ற குழந்தையே, தேவர்கள் பெருமாளே, உன் திரு நாமங்களைப் பாடும் பாக்கியம் எனக்குக் கிட்டாதோ?
ஒப்புக
எழு கிரி நெறு நொறு என நெரியவும்.....
      குன்றோடும் சூழ் அம்பேழும் சூரும்   
      போய் மங்கப் பொருகோபா...              திருப்புகழ்., வெங்காளம்.
ரவி உமிழ் துவசமும்.....
     நயனமும் ரவி உமிழ்   
      கொடியு மகிலமும் வெளிபட...             திருப்புகழ்,கொடியமறலி
முருகன் ஆறுமுகன் என வருவன....    
      முருகன் குமரன் குகன் என்று மொழிந்துருகுஞ்    
     செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்....          கந்தர் அனுபூதி
குருகு பெயரிய வரை....
   பறவைப்  பெயருடைய மலை, கிரௌஞ்சம்.

No comments:

Post a Comment