பின் தொடர்வோர்

Tuesday 3 December 2019

395.பரவைக் கெத்தனை

395
பொது

                தனனத் தத்தன    தனதான

பரவைக் கெத்தனை        விசைதூது
   பகரற் குற்றவ       ரெனமாணுன்
மரபுக் குச்சித                     ப்ரபுவாக
   வரமெத் தத்தர               வருவாயே
கரடக் கற்பக            னிளையோனே
   கலைவிற் கட்குற     மகள்கேள்வா
அரனுக் குற்றது       புகல்வோனே
   அயனைக் குட்டிய  பெருமாளே.

பதம் பிரித்து உரை

பரவைக்கு எத்தனை விசை தூது
பகரற்கு உற்றவர் என மாண் உன்
பரவைக்கு - (சுந்தரரின் பொருட்டு) பரவை நாச்சியாரிடம் எத்தனை முறை (வேண்டுமென்றாலும்) தூது பகர - தூது போய் சொல்லுவதற்கு உற்றவ - ஒருப்பட்டவர் என மாண் - என்ற பெருமை வாய்ந்தவர். (உனது தந்தையாகிய சிவபெருமான்) உன்- உனது

மரபுக்கு உச்சித ப்ரபுவாக
வரம் மெத்த தர வருவாயே

மரபுக்கு - குலத்துக்கு உச்சித - ஏற்ற ப்ரபுவாக - தகுதியும் மேன்மையும் கொண்ட பெரியோனாக
வரம் மெத்த தர - வரங்களை எனக்குத் தந்தருள வருவாயே - வருவாயாக.

கரட கற்பகன் இளையோனே
கலை வில் கண் குற மகள் கேள்வா
கரட - மதம் பாயும் சுவட்டை உடையவனும் கற்பகன் - கற்பக மரம் போல் வேண்டுவோர்களுக்கு வேண்டியவற்றைத் தரும் கணபதியின் இளையோனே - தம்பியே கலை கண் - கலை மான் கண் போன்ற வில் கண் - ஒளி பொருந்திய கண்கள் உடைய குற மகள் - குறப் பெண்ணாகிய வள்ளியின். கேள்வா - கணவனே

அரனுக்கு உற்றது புகல்வோனே
அயனை குட்டிய பெருமாளே.

அரனுக்கு - சிவபெருமானுக்கு உற்றது - அழிவில்லா உண்மைப் பொருளை புகல்வோனே - உபதேசித்தவனே
அயனைக் குட்டிய பெருமாளே - பிரமனைக் குட்டிய பெருமாளே

சுருக்க உரை

சுந்தரரின் பொருட்டு எத்தனை முறை வேண்டுமென்றாலும் பரவை நாச்சியாரிடம் தூதாகச் சென்றவர் என்னும் புகழ் பெற்ற சிவபெருமானுடைய குலத்துக்கு ஏற்ற தகுதியைக் கொண்ட பெரியோனாக. நீயும் விளங்கி, வரங்களை நிரம்பத் தர எழுந்தருளி வருவாயாக.

மதம் பாயும் சுவட்டை உடையவனும், வேண்டுவோர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுக்கும் கணபதியின் தம்பியே, மான் போன்ற கண்ணை உடைய வள்ளிக்குக் கணவனே, சிவ பெருமானுக்கு உண்மைப் பொருளை உபதேசித்தவனே, பிரமனைக் குட்டிய பெருமாளே, எனக்கு வரம் நிறையத் தர வருவாயே.

விளக்கக் குறிப்புகள்
 1.பரவைக்கு எத்தனை தூது.... 
 சுந்தரருக்காக, பரவை நாச்சியாரிடம் சிவபெருமான் இரு முறை தூதாகச் சென்றார்.    சுந்தரருக்காக சிவபெருமான் தூது சென்ற நிகழ்ச்சி பாடல் 68 விளக்கத்தில்    காணாளாம்
அந்த மரபில் வந்தவனே, எனக்கும் வரம் தருக என்றார்.
   ஒப்புக
 அச்சோ என அவச உவகையில் உட் சேர்ந்தல் உடைய பரவையொடு     அக்காகி விரக பரிபவம் அறவே பார்
                                                      ....திருப்புகழ், கத்தூரியகரு.
   பரவை மனை மீதி லன்று ஒரு பொழுது தூது சென்ற
   பரமன் அருளால் வளர்ந்த  குமரேசா….திருப்புகழ், கருவினுரு.
2அயனைக் குட்டிய பெருமாளே...
மறையன் தலை அடையும்படி நடனங்கொளு மாழைக் கதிர்வேலா....                                      திருப்புகழ், முகசந்திர.
3 கலைவிற் கட்குற....
மான் போற் கண் பார்வை பெற்றிடு.....................திருப்புகழ்ம் மான்போற்

No comments:

Post a Comment