பின் தொடர்வோர்

Tuesday 29 September 2020

427கறையிலங்கு

 

427

காஞ்சீபுரம்

 

              தனதனந் தத்தத் தத்தன தத்தந்

              தனதனந் தத்தத் தத்தன தத்தந்

              தனதனந் தத்தத் தத்தன தத்தந்            தனதான

 

          கறையிலங் குக்ரச் சத்தித ரிக்குஞ்

         சரவணன் சித்தத் துக்குளொ ளிக்குங்

           கரவடன் கொற்றக் குக்கட வத்தன்                        தனிவீரக்

      கழலிடும் பத்மக் கட்செவி வெற்பன்

         பழநிமன் கச்சிக் கொற்றவன் மற்றுங்

           கடகவஞ் சிக்குக் கர்த்தனெ னச்செந்                  தமிழ்பாடிக்

      குறையிலன் புற்றுக் குற்றம றுக்கும்

         பொறைகள்நந் தற்பப் புத்தியை விட்டென்

            குணமடங் கக்கெட் டுக்குண மற்றொன்                றிலதான

      குணமடைந் தெப்பற் றுக்களு மற்றுங்

          குறியொடுஞ் சுத்தப் பத்தரி ருக்குங்

             குருபதஞ் சித்திக் கைக்கருள் சற்றுங்             கிடையாதோ

      பிறைகரந் தைக்கொத் துப்பணி மத்தந்

          தலையெலும் பப்புக் கொக்கிற கக்கம்

             பிரமனன் றெட்டற் கற்றதி ருக்கொன்       றையும்வேணிப்

      பிறவுநின் றொக்கத் தொக்கு மணக்குஞ்

         சரணியம் பத்மக் கைக்கொடி முக்கண்

            பெறுகரும் பத்தக் கத்தருள் நற்பங்                        கயவாவி

      திறைகொளுஞ் சித்ரக் குத்துமு லைக்கொம்

          பறியுமந் தத்தைக் கைக்கக மொய்க்குந்

             த்ரிபுரைசெம் பட்டுக் கட்டுநு சுப்பின்                 திருவான

      தெரிவையந் துர்க்கிச் சத்தியெ வர்க்குந்

         தெரிவருஞ் சுத்தப் பச்சைநி றப்பெண்

             சிறுவதொண் டர்க்குச் சித்திய ளிக்கும்          பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

கறை இலங்கும் உக்ர சத்தி தரிக்கும்

சரவணன் சித்தத்துக்குள் ஒளிக்கும்

கரவடன் கொற்ற குக்கடவத்தன் தனி வீர

 

கறை இலங்கும் = (இரத்தக்) கறை விளங்கும். உக்ர = உக்கிரம் பொருந்திய சத்தி = வேற்படையை தரிக்கும் = ஏந்தும். சரவணன் = சரவண மூர்த்தி சித்தத்துக்குள் ஒளிக்கும் = மனத்தில் ஒளிந்து கொண்டிருக்கும். கரவடன் = திருடன் கொற்ற = வீரம் வாய்ந்த.

குக்கடவத்தன் = கோழிக் கொடியை ஏந்திய கையன். தனி வீர = ஒப்பற்ற வீர.

 கழல் இடும் பத்ம கண் செவி வெற்பன்

பழநி மன் கச்சி கொற்றவன் மற்றும்

கடக வஞ்சிக்கு கர்த்தன் எனசெம் தமிழ் பாடி

 

கழல் இடும் = கழலை அணிந்துள்ள. பத்ம = தாமரை போன்ற திருவடியை உடையவன் கண் செவி வெற்பன் = பாம்பு மலையான் (திருச் செங்கோட்டு மலையான்). பழநி மன் = பழனி மலையான். கச்சிக் கொற்றவன் = கச்சி வீரன். மற்றும் = பின்னும் கடக = கைவளை அணிந்த. வஞ்சிக்குக் கர்த்தன் = வள்ளிக் கொடி போன்ற வள்ளிக்குத் தலைவன். செம் தமிழ் பாடி = செந்தமிழ்ப் பாக்களைப் பாடி.

 குறை இல் அன்புற்று குற்றம் அறுக்கும்

பொறைகள் நந்த அற்ப புத்தியை விட்டு என்

குணம் அடங்க கெட்டு குணம் மற்று ஒன்று இலதான

 

குறை இல் = குறைவு படாத அன்பு உற்று = அன்பு பூண்டு குற்றம் அறுக்கும் = குற்றங்களை விளக்க வல்ல பொறைகள் நந்த = பொறுமைக் குணம் சிறந்து மேம்பட அற்பப் புத்தியை

விட்டு = அற்பமான புத்தியை ஒழித்து என் குணம் அடங்கக் கெட்டு = என்னுடைய தீய குணங்கள் எல்லாம் கெட்டு குணம் மற்று ஒன்று இலதான = குணம் வேறு ஒன்று இல்லாததான.

 குணம் அடைந்து எப்பற்றுக்களும் அற்று

குறியொடும் சுத்த பத்தர் இருக்கும்

குரு பதம் சித்திக்கைக்கு அருள் சற்றும் கிடையாதோ

 

குணம் அடைந்து = ஒரே நிலையான சாத்துவிகக் குணம் ஒன்றையே அடைந்து எப் பற்றுக்களும் அற்றும் = எல்லாவிதமான ஆசைகளையும் ஒழித்து குறியொடும் = கடவுள் குறி ஒன்றையே கருதும். சுத்தப் பத்தர் இருக்கும் = பரிசுத்தமான பத்தர்கள் இருக்கும் குரு பதம் = பெருமை பொருந்தும் ஞான நிலை. சித்திக்கைக்கு = எனக்குக் கை கூடுவதற்கு. அருள் சற்றும் கிடையாதோ = உனது திருவருள் சற்றேனும் கிடைக்காதோ?

 பிறை கரந்தை கொத்து பணி மத்தம்

தலை எலும்பு அப்பு கொக்கின் இறகு அக்கம்

பிரமன் அன்று எட்டற்கு அற்ற திரு கொன்றையும் வேணி

 

பிறை = சந்திரன். கரந்தைக் கொத்து = திருநீற்றுப் பச்சைக் கொத்துக்கள் பணி = பாம்பு மத்தம் = ஊமத்தம் தலை எலும்பு = கபால எலும்பு. அப்பு = கங்கை நீர். கொக்கு இறகு = கொக்கின் இறகு. அக்கம் = ருத்ராக்ஷ மாலை பிரமன் அன்று எட்டற்கு அற்ற = பிரமன் முன்பு எட்டுதற்கு அரிதாக இருந்த. திருக் கொன்றையும் = அழகிய கொன்றை இவை எல்லாம்.

வேணி = அணிந்த சடை.

 பிறவு நின்று ஒக்க தொக்கு மணக்கும்

சரணி அம் பத்ம கை கொடி முக்கண்

பெறு கரும்பு அ தக்கது அருள் நல் பங்கய வாவி

 

பிறவும் = மற்றவைகளும் நின்று ஒக்க தொக்கு = விளங்கி ஒன்று சேர்ந்து கூடி. மணக்கும் சரணி = (சிவபெருமான் வீழ்ந்து வணங்குவதால் அவர் தலையில் உள்ள பொருள்களின்) மணம் வீசும் திருவடி உடையவள் அம் = அழகிய பத்மக் கை = தாமரை போன்ற திருக்கரத்தை உடைய கொடி = கொடி போன்றவள் முக் கண் பெறு = மூன்று கண்கள் கொண்ட கரும்பு = கரும்பு போன்றவள் அத்தக்க(த்)து அருள் = அந்தத் தக்கதான பொருளை (அடியேனுக்கு) அருள் செய்பவள் நல் வாவிப் பங்கயம் = நல்ல திருக் குளத்துத் தாமரையையும்.

 திறை கொளும் சித்ர குத்து முலை கொம்பு

அறியும் அம் தத்தை கைக்கு அகம் மொய்க்கும்

த்ரிபுரை செம்பட்டு கட்டு நுசுப்பின் திருவான

 

திறை கொளும் = கப்பம் கட்டச் செய்யும் ( = வென்று அடக்கும்) சித்ர = அழகிய. குத்து முலைக் கொம்பு = திரண்டு குவிந்த கொங்கையைக் கொண்ட கொம்பு போன்றவள். அறியும் = ஞானமுள்ளவள். அம் = அழகிய. தத்தை = கிளி. கைக்கு அகம் மொய்க்கும் = கையில் பயின்று இருக்கும். த்ரிபுரை = சந்திர கண்டம், சூரிய கண்டம், அக்கினி கண்டம் என்னும் முப்பிரிவை உடைய சக்கரத்துக்குத் தலைவி. செம் பட்டுக் கட்டும் = செம்பட்டு ஆடை கட்டியிருக்கும். நுசுப்பின் = இடைடை உடைய. திருவான= இலக்குமிகரம் பொருந்திய.

 தெரிவை அம் துர்க்கி சத்தி எவர்க்கும்

தெரி அரும் சுத்த பச்சை நிற பெண்

சிறுவ தொண்டர்க்கு சித்தி அளிக்கும் பெருமாளே.

 

தெரிவை = நங்கை. அம் = அழகிய. துர்க்கி = துர்க்கா தேவி. சத்தி = சத்தி. எவர்க்கும் = எல்லோருக்கும். தெரி அரும் = தெரிவதற்கு அரிதான. சுத்தப் பச்சை நிறப் பெண் = சுத்தமான பச்சை நிறம் கொண்ட பெண் ஆகிய பார்வதி தேவியின். சிறுவ = பிள்ளையே. தொண்டர்க்கு = அடியார்களுக்கு. சித்தி அளிக்கும் பெருமாளே = வீடு பேற்றைத் அளிக்கும் பெருமாளே.

  சுருக்க உரை

 

வேற்படை விளங்கும் சரவண மூர்த்தி! அடியார் மனத்துள் உறையும் கள்வன்! கோழிக் கொடியை உடையவன்! வீரக் கழல்கள் அணிந்த தாமரை போன்ற திருவடியை உடையவன்! பழனி அரசன்! வள்ளியின் கணவன்! என்றெல்லாம் செந்தமிழ்ப் பாக்களைப் பாடி, என் குற்றங்கள் விலகி, அற்பப் புத்தி நீங்கி, சத்துவ குணம் ஒன்றே நிலை நின்று, பற்றுக்கள் ஒழிந்து, இறைவனையே குறியாகக் கருதும் பத்தர்கள் இருக்கும் ஞான நிலையில் பொருந்தி நிற்கும் பேறு எனக்குச் சற்றேனும் கிடைக்காதோ?

 

 

சிவபெருமான் தலையிலிருந்து விழும் மலர்களால் மணக்கும் பாதங்களை உடையவள், கொடி போன்றவள், அடியார்களுக்குத் தக்கபொருள்களை அளிப்பவள், கிளி போன்ற பச்சை நிறம் வாய்ந்தவள், இத்தகைய பார்வதி பெற்றெடித்த  திருக்குமரனே!

தொண்டர்க்கு வீடு பேற்றினை அளிக்கும் பெருமாளே! பத்தர்கள் இருக்கும் குரு பதம் அடியேனுக்குக் கிடைக்குமோ? 

 

விளக்கக் குறிப்புகள்

 

சித்தத்துள் ஒளிக்கும் கரவடன்...

உள்ளமெல்லாம் உள்கி நின்று ஆங்கே

உடனாடும் கள்ளம் வல்லான் --- சம்பந்தர் தேவாரம்.

 

.பொறைகள் நந்த அற்ப புத்தியை விட்டு ....

சிவசிவ சங்கர மாவை ஏனுந்திற லோய்பொறைவா

சிவசிவ சங்கர மான்பட்ட வாவொளி சேர்ந்தபின்னே    -- கந்தர் அந்தாதி .

 

குறியொடும் சுத்தப் பத்தர்...

குணம் பொல்லேன் குறியும் பொல்லேன்     ---- திருநாவுக்கரசர் தேவாரம்.

குறி கலந்த இசைபாடல்  -                                         --- சம்பந்தர் தேவாரம்.

 

முக்கண் பெறு கரும்பு.....

முக்கண்ணியைத் தொழுவார்க் கொரு தீங்கில்லையே   -- அபிராமி அந்தாதி

அத்தக்கத்து அருள்.....

      அத் தக்கது என்பது சந்தம் நோக்கி தக்கத்து என நின்றது.




No comments:

Post a Comment