பின் தொடர்வோர்

Wednesday 3 November 2021

475.இருவினையின்

 சிதம்பரம்

 

                     தனதனன தனன தந்தத் தனதானா

 

இருவினையின் மதிம யங்கித்       திரியாதே

  எழுநரகி லுழலு நெஞ்சுற்       றலையாதே

பரமகுரு அருள்நி னைந்திட்      டுணர்வாலே

  பரவுதரி சனையை யென்றெற்   கருள்வாயே

தெரிதமிழை யுதவு சங்கப்       புலவோனே

  சிவனருளு முருக செம்பொற்    கழலோனே

கருணைநெறி புரியு மன்பர்க்    கொளியோனே

  கனகசபை மருவு கந்தப்        பெருமாளே

 

 பதம் பிரித்து உரை

 

இரு வினையின் மதி மயங்கி திரியாதே

எழு நரகிலும் உழலு(ம்) நெஞ்சு உற்று அலையாதே

இருவினையின் - நல்வினை, தீவினை என்ற இரு வினைகளினால் மதி மயங்கி - (என்னுடைய) அறிவு மயக்கம் கொண்டு திரியாதே - (நான்) திரியாமலும் எழு நரகில் உழலும் - ஏழு நரகங்களிலும் கலக்கம் உறுதற்கு நெஞ்சு உற்று அலையாதே - மனத்தைப் படைத்து (நான்) அலையாமலும்

 

பரம குரு அருள் நினைந்திட்டு உணர்வாலே

பரவு தரிசனையை என்று எற்கு அருள்வாயே

பரம குரு - பரமேசுரனாகிய அருணாசலேசர் ஆகிய குரு அருள் நினைந்திட்டு - திருவருளை நினைவில் வைத்து உணர்வாலே - ஞானத் தெளிவால் பரவு - போற்றுதற்குரிய (உன்) தரிசனையை - தரிசனக் காட்சியை என்று - எப்பொழுது

எற்கு அருள்வாயே - எனக்கு அருள் புரிவாய்

 

தெரி தமிழை உதவு சங்க புலவோனே

சிவன் அருள் முருக செம் பொன் கழலோனே

தெரி தமிழை - யாவரும் தெரிந்து மகிழத் தக்கத் தமிழை உதவு(ம்) - ஆராய்ந்து உதவிய  சங்கப் புலவோனே - சங்கப் புலவனாக விளங்கியவனே சிவன் அருளும்  முருக - சிவபெருமான் பெற்றருளிய முருகனே செம் பொன் கழலோனே - செம்பொன்னாலான கழலைத் தரித்தவனே

 

கருணை நெறி புரியும் அன்பர்க்கு எளியோனே

கனக சபை மருவு கந்த பெருமாளே

கருணை நெறி புரியும் - அருள் நெறியைப் பற்றும் அன்பர்க்கு எளியோனே - அடியார்களுக்கு எளிமையானவனே கனக சபை மருவும் கந்தப் பெருமாளே - கனக சபையில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே

 

 சுருக்க உரை

 

இரு வினைகளால் என் அறிவு மயங்கித் திரியாமலும், நரகில் புகத் தக்க மனத்தைப் படைத்து நான் அலையாமலும், மேலான குருவின் திருவருளை நினைவில் வைத்துஞானத் தெளிவால் சிறந்த உனது தரிசனத்தை என்று எனக்கு அருள் புரிவாய். 

சங்கப் புலவனாக வந்து தமிழை ஆய்ந்தவனே! சிவபெருமான் அருளிய முருகனே!

பொற்கழல் அணிந்தவனே அருள் நெறியில் ஒழுகும் அடியவர்களுக்கு எளிமையானவனே கனக சபையில் வீற்றிருக்கும் பெருமாளே! எனக்கு என்று உன் தரிசனத்தைத் தந்து அருள்வாய்

 

 

 விளக்கக் குறிப்புகள்

இரு வினையின் மதி மயங்கி

இருவினை மும்மலமும் அற இறவியொடு பிறவிஅற

ஏகபோகமாய் நீயும் நானுமாய்

இறுகும்வகை பரமசுகம் அதனைஅருள் இடைமருதில்

ஏகநாயகா, லோக நாயகா....         ---  (அறுகுநுனி) திருப்புகழ்.

 

கனக சபை  

 பொன்னம்பலம் ஐந்து சபைகளுள் ஒன்று ரத்ன சபை – திருவாலங்காடு,      வெள்ளி அம்பலம் - மதுரை தாமிரம் - நெல்லை சித்திர சபை      திருக்குற்றாலம்

 ஏழு நரகங்கள். கூடாசலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து என்பன.

 தெரிதமிழை உதவு சங்கப் புலவோனே ---

காலக் சீர் கேடினால் தமிழில் இருந்த பொருள் இலக்கணம் சிதைந்து மறைந்தது. அது கண்டு பாண்டிய மன்னன் வருந்தினான். சோமசுந்தரக் கடவுள் அவனுடைய வேண்டிக்கொண்டத்தற்கு இணங்கிபொருள் இலக்கணமாக இறையனார் அகப்பொருள்’ என்ற அறுபது சூத்திரங்கள் அடங்கிய அரிய நூலை அருளிச்செய்தார் 

அந்நூலுக்குச் சங்கப் புலவர்கள் வேறு வேறு உரைகள் செய்தார்கள். தாம் தாம் செய்த உரையே உயர்ந்தது என அவர்கட்குள்ளேயே கலகம் பிறந்தது. எல்லோரும் சோமசுந்தரப் பெருமான் திருமுன் சென்று பொருள் விளக்க வேண்டி நின்றார்கள் 

சொக்கலிங்கத்தினின்று இறைவன் ஒரு புலவர் வடிவில் தோன்றி, ” புலவர்களே! நீங்கள் வருந்த வேண்டாம். இம்மதுரை மாநகரில் வணிகர் குலத்தில் தனபதி என்பானுக்கும் குணசாலினிக்கும் தவத்தால் தோன்றிய ஒரு தெய்வப் புதல்வன் இருக்கின்றான். அவன் ஊமை. அவனனிடம் உமது உரைகளையும் படித்துக்காட்டுங்கள்.  அவன் எது உயர்ந்தது என உறுதியாக அறுதியிட்டு அறிவிப்பான் என்று சொல்லி மறைந்தார் 

புலவர்கள் ஊமை மகன் எப்படி உரைப்பான்? என்று வியந்த படியே சங்கப் புலவர்கள் மேளம் தாளம் குடை விருது சாமரை பல்லக்கு முதலிய வரிசைப் பொருள்களுடன் சென்று உருத்திரசன்மர் என்ற அந்த செட்டிக் குமரனைப் பணிந்து, செஞ்சந்தனம் பூசி, செம்பட்டு ஆடையும், செம்மலர் மாலையும் புனைவித்து, பல்லக்கில் ஏற்றிக் கொணர்ந்து சங்கப் பலகைமீது எழுந்தருளச் செய்து, சுற்றிலும் அமர்ந்து, தத்தம் உரைகளை படித்துக்காட்டினர்.. 

சிலர் கூறும் உரைகளைக் கேட்டு அந்த ஊமைச் சிறுவன் முகத்தைச் சுளித்தனன்; சிலர் கூறும் உரைகளைக் கேட்டு உதட்டை அசைத்தனன்; சிலர் கூறும் உரைகளைச் சில இடத்தில் ஆமோதிப்பான் போல் சிறிது தலையை அசைத்தான்; சிலர் கூறும் உரைகளைக் கேட்டு கண் மலர்ந்து பார்த்தனன்.

நக்கீரன், கபிலன், பரணன் என்ற முப்பெரும் புலவர்களது உரைகளைக் கேட்டு அடி முதல் முடி வரை உடல் புளகிதமுற்று, ஆனந்தக் கண்ணீர் சொரிந்து, சிரம் அசைத்து கரந்தட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்து ஆமோதித்தானன் என்று வரலாறு கூறுகிறது.

No comments:

Post a Comment