பின் தொடர்வோர்

Tuesday 30 November 2021

478. எழுகடல்

 



478. எழுகடல்

 

சிதம்பரம்

478

 

               தனதன தனன தனதன தனன

                 தனதன தனன                  தனதான

 

 எழுகடல் மணலை அளவிடி னதிக

     மெனதிடர் பிறவி                 அவதாரம்

 இனியுள தபய மெனதுயி ருடலு

     மினியுடல் விடுக                 முடியாது

 கழுகொடு நரியு மெரிபுவி மறலி

     கமலனு மிகவு                 மயர்வானார்

 கடலுன தபய மடிமையு னடிமை

     கடுகியு னடிகள்                   தருவாயே

 விழுதிக ழழகி மரகத வடிவி

     விமலிமு னருளு                முருகோனே

 விரிதல மெரிய குலகிரி நெரிய

      விசைபெறு மயிலில்         வருவோனே

 எழுகடல் குமுற அவுணர்க ளுயிரை

      யிரைகொளும் அயிலை      யுடையோனே

 இமையவர் முநிவர் பரவிய புலியு

      ரினில்நட மருவு              பெருமாளே.

 

 

  பதம் பிரித்து உரை

 

எழு கடல் மணலை அளவிடில் அதிகம்

எனது இடர் பிறவி அவதாரம்

எழு கடல் மணலை = ஏழு கடல்களில் உள்ள மணலை அளவிடில் = அளவிட்டுப் பார்த்தால் அதிகம் = அந்த அளவினும் அதிகமாக உள்ள எனது இடர் பிறவி = என்னுடைய துன்பம் தரும் பிறவிகள் என்னும் அவதாரம் = பிறவித் தோற்றங்கள்.


இனி உனது அபயம் எனது உயிர் உடலும்

இனி உடல் விடுக முடியாது


இனி உனது அபயம் = இனி நான் உனக்கே அடைக்கலம் எனது உயிர் உடலும் = என்னுடை உயிரும் உடலும் இனி = இனியும் உடல் விடுக முடியாது = பிறப்பெடுத்து உடலை விட (என்னால்) முடியாது.

 

கழுகொடு நரியும் எரி புவி மறலி

கமலனும் மிகவும் அயர்வானார்

 கழுகொடு நரியும் = கழுகும்

நரியும்  எரி  =  நெருப்பும் . புவி = மண்ணும் மறலி = யமனும் கமலன் = பிரமனும் மிகவும் அயர்வானார் = (இவர்கள் எல்லோரும்) சோர்வு அடைந்து விட்டார்கள்

 

கடன் உனது அபயம் அடிமை உன் அடிமை

கடுகி உன் அடிகள் தருவாயே

கடன் உனது அபயம் = என் கடமை உன்னிடம் அடைக்கலம் புகுவதே அடிமை உன் அடிமை = நான் அடிமை பூண்பதும் கடுகி = விரைவில் உன் அடிகள் தருவாயே = உன் திருவடிகளைத் தந்து அருளுக.


 விழு திகழ் அழகி மரகத வடிவி

விமலி முன் அருள் முருகோனே


விழு = சிறந்து. திகழ் அழகி = விளங்கும் அழகி மரகத வடிவி = மரகத வடிவம் கொண்டவள் விமலி = பரிசுத்த மானவள் (ஆகிய பார்வதி). முன் அருளும் முருகோனே = முன்பு ஈன்றெடுத்த குழந்தையே.

 

விரி தலம் எரிய குலகிரி நெரிய

விசை பெறு மயிலில் வருவோனே

 

விரி தலம் = விரிந்த இடமாகிய (கடல்பூமி). எரிய = எரி கொள்ள குல கிரி நெரிய = கிரௌஞ்ச மலை நெரிந்து பொடிபட. விசை பெறு = வேகமாய்    மயிலினில் வருவோனே = மயில் மீது வருபவனே.

 எழு கடல் குமுற அவுணர்கள் உயிரை

இரை கொளும் அயிலை உடையோனே

 

எழு கடல் குமுற = ஏழு கடல்களும் கொந்தளிக்க அவுணர்கள் உயிரை = அசுரர்களுடைய உயிரை இரை கொ(ள்)ளும் அயிலை = உணவாகக் கொண்ட வேலாயுதத்தை உடையோனே = உடையவனே.

 இமையவர் முநிவர் பரவிய புலியூரினில்

நடம் மருவு பெருமாளே.

 இமையவர் முனிவர் = தேவர்களும் முனிவர்களும்  பரவிய = போற்றிப் பணிந்த புலியூரினில் = புலியூரில் நடம் மரவு பெருமாளே = நடனம் செய்கின்ற பெருமாளே.

 

  சுருக்க உரை

கணக்கற்ற பிறவிகள் எடுத்த நான் இனி உனக்கு அடைக்கலம்இனியும்  பிறப்பெடுத்து உடலை விட  என்னால்  முடியாதுபிரமனும், கழுகும்நரியும்,யமனும்,என்னைப்பலமுறை  படைத்தும்பலமுறை பிரித்தும் மிகவும் அலுத்துப்போய் விட்டார்கள்.

அடியனாகிய என்னுடைய கடன் உன்னிடம் அடைக்கலம் புகுவதேஉனது திருவடிகளைத்    தந்தருளுவாயாக.   அழகியான பார்வதி  பெற்ற குழந்தையே! கடலும்கிரௌஞ்சமும் பொடிபட விரைவில்  மயிலில் வந்தவனே! அசுரர்கள் உடலை அழிக்க வேலை   எய்தியவனே தேவர்கள் போற்றும் பெருமாளே!..

 

 ஒப்புக

 அப்படி ஏழும் ஏழும் வகுத்து வழாது போதினின்

அக்ரம் வியோம கோளகை மிசை வாழும்

அக்ஷர தேவி கோவின் விதிப்படி மாறி மாறி

அனைத்து உரு ஆய காயம் அது அடைவே கொண்டு

இப்படி யோனி வாய் தொறும் உற்பவியா விழா

உலகில் தடுமாறியே திரிதரு காலம்

எத்தனை ஊழி காலம் என தெரியாது வாழி

இனி பிறவாது நீ அருள் புரிவாயே

                          -                 திருப்புகழ், அப்படியேழுமேழும்

 

இமையோர் முனிவர் பரவிய...

மரகத முழுகிய காகோத ராஜஈ

மநுநெறி யுடன்வளர் சேணாடர் கோனுட னும்பர்சேரும்

                                                             --திருப்புகழ், அவகுண.

 

வேதத் தோன்முத லாகிய தேவர்கள்

பூசித் தேதொழ வாழ்புலி யூரினில்

                                                     ---திருப்புகழ், ஆரத்தோடணி.

  

மாதா உடல் சலித்தாள்வல்வினையேன் கால் சலித்தேன்,

வேதாவும் மை சலித்து விட்டானே --- நாதா

இருப்பையூர் வாழ் சிவனைஇன்னம் ஓர்அன்னை

கருப்பை ஊர் வாராமல் கா.                                    --- பட்டினத்தார்.

 

விளக்க குறிப்பு

 

கடன் உனது அபயம் ---

 உயிர்களுக்குத் தனு கரண புவன போகங்களைக் கொடுத்த  இறைவனுக்கு,  அவ் உயிர்களை உய்யக் கொள்வது கடனே  ஆகும் மக்களைக் காப்பது மாதா பிதாக்களுக்குக் கடன் போல. மரம்வைத்தவனுக்கு அவைகளைத் தண்ணீர் விட்டு வளர்த்தல் போல. 

 

காக்கக் கடவிய நீகாவாது இருந்தக்கால் ஆர்க்குப் பரம் ஆம் அறுமுகவா..... களிகூரும் உனைத் துணை தேடும் அடியேனை சுகப்படவே வை கடன்ஆகும்இதுக் கனம் ஆகும்

                                   .                              திருப்புகழ், நிலையாத.







No comments:

Post a Comment