பின் தொடர்வோர்

Monday 22 May 2017

311.பசையற்ற

311

விருத்தாசலம்

        தனதத்த தனதத்த தனதத்த தனதத்த
                தனதத்த தனதத்த                          தனதான

பசையற்ற வுடல்வற்ற வினைமுற்றி நடைநெட்டி

    பறியக்கை சொறியப்பல்             வெளியாகிப்

படலைக்கு விழிகெட்ட குருடுற்று மிகநெக்க

    பழமுற்று நரைகொக்கி                    னிறமாகி

விசைபெற்று வருபித்தம் வளியைக்க ணிலைகெட்டு

    மெலிவுற்று விரல்பற்று                 தடியோடே

வெளிநிற்கும் விதமுற்ற இடர்பெற்ற ஜனனத்தை

   விடுவித்து னருள்வைப்ப               தொருநாளே

அசைவற்ற நிருதர்க்கு மடிவுற்ற பிரியத்தி

   னடல்வஜ்ர கரன்மற்று                முளவானோர்

அளவற்ற மலர்விட்டு நிலமுற்று மறையச்செய்

   அதுலச்ச மரவெற்றி                   யுடையோனே

வசையற்று முடிவற்று வளர்பற்றி னளவற்ற

   வடிவுற்ற முகில்கிட்ணன்                மருகோனே

மதுரச்செ மொழிசெப்பி யருள்பெற்ற சிவபத்தர்

   வளர்விர்த்த கிரியுற்ற                    பெருமாளே

 

பதம் பிரித்து உரை

 

பசை அற்ற உடல் வற்ற வினை முற்றி நடை நெட்டி

பறிய கை சொறிய பல் வெளியாகி

 

பசை அற்ற – ஈரமில்லாத (ண்ணெய்பசை யில்லமல்0 உடல் வற்ற - இவ்வுடல் வற்றிப் போகச் செய்த வினை முற்றி - வினை முதிர்ச்சி அடைந்து  (இந்த பிறவியில் வந்த ப்ரார்ப்த கர்மா முடிய) நடை - நடையும் நெட்டி - தள்ளாடுதலை அடைந்து பறிய - நிலை பெயர கை சொறிய - கை சொறிதலையே தொழிலாகக் கொண்டு பல் வெளியாகி - பற்கள்  வெளியே நீண்டு வர

 

படலைக்கு விழி கெட்ட குருடு உற்று மிக நெக்க

பழம் உற்று நரை கொக்கின் நிறமாகி

 

 

படலைக்கு - கண் பூ மறைப்பால் விழி கெட்ட - பார்வை இழந்து குருடு உற்று - குருடாகி மிக நெக்க - மிகவும் நெகிழ்ந்து பழம் உற்று - பழம் போலப் பழுத்து நரை - மயிர் நரைத்து கொக்கின் நிறமாகி - கொக்கைப் போல் வெண்ணிறமாகி

 

விசை பெற்று வரு பித்தம் வளியை கண் நிலை கெட்டு

மெலிவு உற்று விரல் பற்று தடியோடே

 

விசை பெற்று வரும் - வேகத்துடன் வருகின்ற பித்தம் - பித்தத்தாலும் வளியை - வாயுவினாலும் கண் நிலை கெட்டு - கண் இடமும் நிலை தடுமாறிக் கெட்டு மெலிவுற்று - மெலிதலை அடைந்து விரல் பற்று - கைவிரலினால் பிடிக்கப்பட்ட தடியோடே - தடியுடன்

 

வெளி நிற்கும் விதம் உற்ற இடர் பெற்ற ஜனனத்தை

விடுவித்து உன் அருள் வைப்பது ஒரு நாளே

 

 

வெளி நிற்கும் விதம் உற்று - வெளியே நிற்கின்ற தன்மை மிகும்படியாக இடர் பெற்ற - துன்பமே கொண்ட ஜனனத்தை விடுவித்து - பிறப்பைத் தவிர்த்து உன் அருள் வைப்பது ஒரு நாளே - உன் திருவருளைத் தருவதும் ஒரு நாள் உண்டாகுமோ?

 

அசைவு அற்ற நிருதர்க்கு மடி உற்ற பிரியத்தில்

அடல் வஜ்ர கரன் மற்றும் உள வானோர்

 

 

அசைவற்ற - கலக்கம் இல்லாத நிருதர்க்கு - அசுரர்கள் மடிவுற்ற - மடிந்து இறந்தொழிய பிரியத்தின் - விருப்பம் கொண்ட அடல் வஜ்ர கரன் - வலிய வஜ்ராயுதக் கையனாகிய (இந்திரனும்) மற்றும் உள வானோர் - மற்றும் உள்ள தேவர்களும்

 

அளவு அற்ற மலர் விட்டு நிலம் உற்று மறைய செய்

அதுல சமர வெற்றி உடையோனே

 

 

அளவற்ற - அளவு கடந்த மலர் விட்டு - பூக்களைப் பொழிந்து நிலமுற்று - பூமி முழுதும் மறையச் செய் - மறையும்படிச் செய்கின்ற அதுல - நிகர் இல்லாதவனே சமர வெற்றி உடையோனே - பேரிரல் வெற்றி உடையவனே

 

வசை அற்று முடிவு அற்று வளர் பற்றின் அளவு அற்ற 

வடிவு உற்ற முகில் கிட்ணன் மருகோனே

 

வசை அற்று - பழிப்புக்கு இடம் இல்லாமல் முடிவற்று - முடிவில்லாது வளர் - வளர்ந்திருந்த பற்றின் - (பாண்டவர் மீது இருந்த) ஆசையால் அளவற்ற - மிக அதிகமாயிருந்த வடிவுற்ற - வடிவுகளைக் கொண்ட முகில் கிட்ணன் - மேக நிறம் கொண்ட கண்ணனது மருகோனே - மருகனே

 

மதுர செம் மொழி செப்பி அருள் பெற்ற சிவ பத்தர்

வளர் விர்த்த கிரி உற்ற பெருமாளே

 

 

மதுர - இனிமை தரும் செம் மொழி செப்பி - செம்மையான புகழ் மொழிகளைச் சொல்லி அருள் பெற்ற - உனது திருவருளைப் பெற்ற சிவ பத்தர் வளர் - சிவ பக்தர்கள் நிரம்பியுள்ள விர்த்த கிர உற்ற பெருமாளே - முது குன்றம் எனப்படும் விருத்தாசலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே


சுருக்க உரை

ஈரமில்லாத உடல் வற்றிப் போய், நடை தளர்ந்து, தடி ஊன்றி, பற்கள் விழுந்து, குருடாகி, உடல் நெகிழ்ந்து பழம் போலாகி, துன்fபம் நிறைந்த இந்த பிறப்பிலிருந்து என்னை விடுவித்து, உன் திருவருளைத் தருவதும் ஒரு நாள் கிட்டுமோ?

கலக்கம் உற்ற அசுரர்கள் மடிந்து ஒழிய, தேவர்கள் பூமியே மறையும்படி பூக்களைப் பொழியச் செய்த நிகரில்லாதவனே, வெற்றியை உடையவனே, பாண்டவர்களின் மீது இருந்த அன்பால் அவர்கள் பொருட்டுப் பல வடிவங்கள் கொண்ட மேக நிறம் கொண்ட கிருஷ்ணனின் மருகனே, உன்னைப் புகழும் சிவ பக்தர்கள் நிரம்பி உள்ள விருத்தாசலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே உன் அருளைத் தருவது ஒரு நாள் கிட்டுமோ?

விளக்கக் குறிப்புகள்

 படலை - கண் பூவால் மறைக்கப்படுவது 

 நரை கொக்கின் நிறமாகி
 தலைமயிர் கொக்குக் கொக்க நரைத்து.....     திருப்புகழ், தலைமயிர்

 விருத்தாசலம் - விருத்த கிரி - முது குன்றம் - பழ மலை
 சாவாதார் பிறவாதார் தவமே மிக உடையார்
 மூவாத பல் மமுனிவர் தொழும் முதுகுன்று அடைவோமே
                                            -சம்பந்தர் தேவாரம்

 அளவற்ற வடிவுற்ற முகில் கிட்ணன் மருகோனே
 மாயவனும் அன்பின் மனமறிவான் கட்டுக என
 றாய வடிவுபதி னாறாயிரங் கொண்டான்
 தூயவனும் மூலமாந் தோற்ற முணர்ந்தெவ்வுலகுந்

 தாய அடியிணைகள் தன் கருத்தினாற் பிணித்தான் 
                                ---- வில்லி பாரதம், கிருஷ்ணன்தூது     

வினை முற்றி ......       கார்மாவை மூன்று வகைகளாக பிரிக்கிறார்கள் அவை., சஞ்சித கர்மா, ஆகாம்ய கர்மா மற்றும் பிராரப்த கர்மா. பூர்வ ஜென்மங்களில் செய்துள்ள கர்மாவின் பலன்களை சஞ்சித கர்மா என்றனர். சஞ்சித என்றால், ஒரு பை அல்லது ஒரு மூட்டை. இந்த சஞ்சித கர்மா ஒரு மூட்டையாக உள்ளது. இதன் பலங்களை ஒரே பிறவியில்  அனுபவிப்பதில்லை; அதில் ஒரு பகுதி இந்த பிறவி எடுக்க  காரணமாகிறது.. இந்த ஒரு பகுதி பிராரப்த கர்மா எனப்படும்.  ஆகாமி கர்மா – இந்த பிறவியில் செய்யும் நல்ல மற்றும் தீய கர்மாக்கள் ஆகமி கர்மா எனப்படும். இவை பிறவியின் இறுதியில் சஞ்சித கர்மாவோடு சேர்க்கப்படும்.

No comments:

Post a Comment