பின் தொடர்வோர்

Saturday 5 October 2019

390.நீரும் என்பு


390
பொது

              தான தந்த தான தான தான தந்த தான தான
                தான தந்த தான தான                        தனதான

நீரு மென்பு தோலி னாலு மாவ தென்கை கால்களோடு
   நீளு மங்க மாகி மாய                                        வுயிரூறி 
நேச மொன்று தாதை தாய ராசை கொண்ட  போதில் மேவி
   நீதி யொன்று பால னாகி                           யழிவாய்வந்
தூரு மின்ப வாழ்வு மாகி யூன மொன்றி லாது மாத   
   ரோடு சிந்தை வேடை கூர                               உறவாகி
ஊழி யைந்த கால மேதி யோனும் வந்து பாசம் வீச 
   ஊனு டம்பு மாயு மாய                             மொழியாதோ 
சூர னண்ட லோக மேன்மை சூறை கொண்டு போய் விடாது 
   தோகை யின்கண் மேவி வேலை                    விடும்வீரா 
தோளி லென்பு மாலை வேணி மீது கங்கை சூடி யாடு 
   தோகை பங்க ரோடு சூது                      மொழிவோனே 
பாரை யுண்ட மாயன் வேயை யூதி பண்டு பாவ லோர்கள்   
   பாடல் கண்டு ஏகு மாலின்                           மருகோனே 
பாத கங்கள் வேறி நூறி நீதி யின்சொல்  வேத வாய்மை 
   பாடு மன்பர் வாழ்வ தான                            பெருமாளே

பதம் பிரித்து உரை

நீரும் என்பு தோலினாலும்  ஆவது என் கை கால்களோடு
நீளும் அங்கமாகி மாய உயிர் ஊறி
நீரும் என்பு தோலினாலும் ஆவது - நீர், எலும்பு, தோல் இவைகளால் ஆக்கப்பட்டதாகிய என் கை கால்களோடு - என்னுடைய கை, கால்கள் இவைகளோடு நீளும் - நீண்ட அங்கமாகி - அங்கங்களை உடையவதாகி மாய உயிர் ஊறி - மாயமான உயிர் ஊறப் பெற்று.

நேசம் ஒன்று தாதை தாயர் ஆசை கொண்ட போதில் மேவி 
நீதி ஒன்று பாலனாகி அழிவாய் வந்து

நேசம் ஒன்று - ஆசை பொருந்திய தாதை, தாயர் - தந்தை தாய் ஆகிய இருவரும் ஆசை கொண்ட போதில் - காதல் கொண்ட சமயத்தில் மேவி - கருவில் உற்று நீதி ஒன்று - ஒழுக்க நெறியில் நிற்கும். பாலனாகி - பிள்ளையாய்த் தோன்றி அழிவாய் வந்து - அழிதற்கே உரியவனாய்ப் பூமியில் பிறந்து.

ஊரும் இன்ப வாழ்வும் ஆகி ஊனம் ஒன்று இலாது மாதரோடு  
சிந்தை வேடை கூர உறவாகி

ஊரும் இன்ப வாழ்வுமாகி -அனுபவிக்கும் இன்ப வாழ்வை உடையவனாகி ஊனம் ஒன்று இலாது - குறை ஒன்றும் இல்லாமல் மாதரோடு - மாதர்களுடன் சிந்தை வேடை கூர - மன வேட்கை மிக்கு எழ. உறவாகி – அவர்களுடன் சம்பந்தப்பட்டு.

ஊழி இயைந்த கால(ம்) மேதியோனும் வந்து பாசம் வீச  
ஊன் உடம்பு மாயும் மாயம் ஒழியாதோ

ஊழ் இயைந்த - ஊழ் வினையின்படி அமைந்த.  கால(ம்) - முடிவு காலத்தில். மேதியோனும் - எருமை வாகனனான
யமனும். வந்து பாசம் வீச - வந்து பாசக் கயிற்றை வீச. ஊன் உடம்பு - (இந்த) மாமிச உடல். மாயும் - அழிந்து போகும். மாயம் ஒழியாதோ - முடிவு பெறாதோ?

சூரன் அண்ட லோகம் மேன்மை சூறை கொண்டு போய் விடாது 
தோகை பங்கரோடு சூது மொழிவோனே

சூரன் அண்ட லோகம் - சூரன் அண்டங்களாம் லோகங்களின்
மேன்மை - மேலான சூறை கொண்டு - தலைமையைக் கொள்ளை அடித்து போய் விடாது - போய் விடாமல்
தோகையின் கண் மேவி - மயிலின் மேல் ஏறி  வேலை விடும் வீரா - வேலாயுதத்தைச் செலுத்திய வீரனே

பாரை உண்ட மாயன் வேயை ஊதி பண்டு பாவலோர்கள் 
பாடல் கண்டு ஏகும் மாலின் மருகோனே

பாரை உண்ட மாயன் - இப்பூமியை உண்டவனான மாயவன் வேயை ஊதி - புல்லாங் குழலை ஊதியவன். பண்டு - முன்பு. பாவலோர்கள் - (திருமழிசை ஆழ்வார் ஆகிய) புலவர்களின் பாடல் கண்டு - பாடலைக் கண்டு மகிழ்ந்து ஏகும் - (பின்னர் அவர்களின் வேண்டு கோளுக்கு இரங்கி) அவர்கள் பின்பு
செல்பவனாகிய மாலின் மருகோனே - திருமாலின் மருகனே.

பாதகங்கள் வேறி நூறி நீதியின் சொல் வேத வாய்மை 
பாடும் அன்பர் வாழ்வதான பெருமாளே.

பாதகங்கள் - பாபங்களை வேறி - குலைந்து. நூறி - பொடி படுத்தி. நீதியின் சொல் - நீதிச் சொற்களைக் கொண்டு வேத வாய்மை - வேத உண்மைகளை எடுத்து பாடும் அன்பர் - பாடும் அன்பர்களுக்கு வாழ்வதான பெருமாளே - செல்வப் பொருளான பெருமாளே.
`
சுருக்க உரை

நீர், எலும்பு, தோல் முதலியவற்றால் ஆக்கப்பட்ட கை, கால்களோடு, அங்கங்களுடன் கூடிய உடல் கொண்டு, அவ்வுடலில் உயிர் உறையப் பெற்று. தந்தை தாய் ஆகிய இருவரும் காதல் கொள்ளும் சமயத்தில் கருவாய்த் தோன்றி, ஒழுக்க நெறியில் பிள்ளையாகப் பூமியில் பிறந்து, நல்ல வாழ்வை உடையவனாகி, குறை இல்லாமல் வளர்ந்து, மாதர்களுடன் ஆசை மிகுந்து, உறவாடி, ஊழ் வினையின் பயனாக முடிவு வரும் சமயத்தில் யமன் வந்து பாசக் கயிற்றை வீச, இந்த மாய உடல் அழிந்து போகும் மாயமாகிய பிறப்பு முடிவு பெறாதோ? சூரன் அண்டங்களை எல்லாம் கொள்ளை அடித்துப் போகாமல் வேலைச் செலுத்திய வீரனே.

தோளில் எலும்பையும், சடையில் கங்கையையும் தரித்து ஆடல் புரியும் பார்வதி பாகனான சிவபெருமானுக்குப் பிரணவத்தை உபதேசித்தவனே,

பூமியை உண்டவனும், புல்லாங்குழலை ஊதியவனும், திருமங்கை ஆழ்வார் வேண்டுகோளுக்கு இரங்கி, புலவர்கள் பின் சென்றவனும் ஆகிய திருமாலின் மருகனே,

பாவங்களைக் குலைந்து, பொடியாக்கி, வேத உண்மைகளை எடுத்து ஓதும் அன்பர்களுக்குச் செல்வமாக உள்ள பெருமாளே,
   
   என் பிறப்பாகிய மாயம் ஒழியாதோ?

விளக்கக் குறிப்புகள்

1. சூது மொழிவோனே...
      பிரணவம் மௌனமறை ஆதலால் அது சூது  எனப்பட்டது.
     (மவூன மறை ஓதுவித்த குருநாதா)...திருப்புகழ் (வடவையன).

2.   பண்டு பாவலோர்கள் பாடல் கண்டு....
காஞ்சியில் திருமழிசை ஆழ்வாரிடம் கணிகண்ணன் என்பவர் பணிவிடை செய்து  வந்தார். ஒரு கிழவி ஆழ்வார் அருளால் முதுமை நீங்கியதை அறிந்த அரசன், ஆழ்வாரை அணுகித் தனக்கும் அவ்வாறு அருள் செய்ய வேண்டுமென்று கேட்க, ஆழ்வார் கணிகண்ணரை அணுகுமாறு கூறினார். கணிகண்ணர் மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்காமல் போகவே, அரசர் கணிகண்ணரை அவ்வூரை விட்டுப் போகும்படி உத்தரவு இட்டார். இத்னை கேட்டு வருத்தமுற்ற திருமழிசை ஆழ்வார்,
 கணிகண்ணன் போகின்றான் காமருபூங் கச்சி 
 மணிவண்ணா நீகிடக்க வேண்டா துணிவொன்றிச் 
 செந்நாப் புலவன்யான் செல்கின்றேன் நீயுமுன்றன் 
 பைந்நாகப்பாய் சுருட்டிக் கொள்  என்று பெருமாளைக் கேட்டுக்   கொண்டார். 
பெருமாள் போனவுடன் நாடு பொலிவு இழந்தது. அரசன் மீண்டும் ஆழ்வாரை அணுகி வேண்ட, அவரும் பதிகம் பாடி நாட்டைச் செழிக்கச் செய்தார். 
 கணிகண்ணன் போக்கிழந்தான்  காமருபூங் கச்சி
 மணிவண்ணா நீகிடக்க வேண்டும் துணிவுடைய 
 செந்நாப் புலவனும் போக்கிழந்தான் நீயுமுன்றன் 
 பைந்நாகப் பாய் படுத்துக் கோள்.  இவரே சொன்ன வண்ணம் செய்த பெருமாள்  எனப்படுவர்.

                                                    

No comments:

Post a Comment