பின் தொடர்வோர்

Wednesday 8 January 2020

400.புத்தகட்து


400
பொது

              தத்தனத் தாத்தத் தாத்த   தனதான

புத்தகத் தேட்டிற் றீட்டி        முடியாது
   பொற்புறக் கூட்டிக் காட்டி யருள்ஞான
வித்தகப் பேற்றைத் தேற்றி      யருளாலே
   மெத்தெனக் கூட்டிக் காக்க நினைவாயே
தத்தைபுக் கோட்டிக் காட்டி  லுறைவாளைச்
   சற்கரித் தேத்திக் கீர்த்தி  பெறுவேனோ
கைத்தலத் தீக்குப் பார்த்து       நுழையாத
   கற்பகத் தோப்புக் காத்த   பெருமாளே.

பதம் பிரித்து உரை

புத்தகட்து ஏட்டில் தீட்டி முடியாது
பொற்பு உற கூட்டி காட்டி அருள் ஞான
புத்தகத்து - புத்தகங்களிலும் ஏட்டில் - ஏட்டிலும் தீட்டி - எழுத முடியாது - முடியாத பொருளை பொற்பு உற - அழகு பொருந்த கூட்டிக் காட்டி - கூட்டுவித்துக் காட்டியும் அருள் ஞான - அருள் மாயமாகிய.

வித்தக பேற்றை தேற்றி அருளாலே
மெத்தென கூட்டி காக்க நினைவாயே
வித்தகப் பேற்றை - நன்மையன பாக்கியத்தை தேற்றி - தெளிய வைத்து அருளாலே - உனது திருவருளால் மெத்தெனக் கூட்டி - பக்குவமாக என்னைக் கூட்டி வைத்து காக்க - என்னைப் பாதுகாக்க நினைவாயே - நினைந்தருள வேண்டுகின்றேன்.

தத்தை புக்கு ஓட்டி காட்டில் உறைவாளை
சற்கரித்து ஏத்தி கீர்த்தி பெறுவேனோ
தத்தை - கிளிகளை. புக்கு - அவை தினைப் புனத்தில் இருக்கும் இடங்களுக்குச் சென்று ஓட்டி - ஆயல் ஓட்டி காட்டில் உறைவாளை - தினைக் காட்டில் இருந்த வள்ளியை சற்கரித்து - உபசரித்து ஏத்தி - புகழ்ந்து. கீர்த்தி பெறுவோனே - பேரும் புகழும் பெற்றவனே.

கை தலத்து ஈ குப்பு ஆர்த்து நுழையாத
கற்பக தோப்பு காத்த பெருமாளே.

கைத் தலத்து ஈ குப்பு - தும்பி வண்டுக் கூட்டம். ஆர்த்து - ஒலி செய்து. நுழையாத - நுழைய முடியாத. கற்பகத் தொப்பு - கற்பக மரத் தோப்பு உள்ள பொன்னுலகை.  காத்த பெருமாளே - காப்பாற்றிய பெருமாளே.

சுருக்க உரை

புத்தகத்திலும், ஏட்டிலும் எழுத முடியாத பொருளை, அழகு பொருந்தக் கூட்டுவித்துக் காட்டியும், நன்மைப் பேற்றினைத் தெளிவித்தும், உனது அருளால் பக்குவமாக எனக்கு அதைக் கூட்டி வைத்தும் என்னைப் பாதுகாக்க வேண்டுகின்றேன்.

தினைப் புனத்தில் இருக்கும் கிளிகளை ஆயல் ஓட்டி, அந்தக் காட்டில் இருந்த வள்ளியை உபசரித்துப் புகழ்ந்து, பேரும் புகழும் பெற்றவனே, ஈக்களும் நுழைய முடியாத கற்பக மரங்கள் இருக்கும் பொன்னுலகைக் காத்த பெருமாளே,. என்னைக் காக்க நினைவாயாக.

விளக்கக் குறிப்புகள்

சற்கரித்து ஏத்திக் கீர்த்தி பெறுவோனே...
அடியாருக்கு எளியராய் அமைந்து தானே வந்து வள்ளியை மணம் புரிந்ததைக்   குறிக்கும்.
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
  முலைமேல ணைக்க வருநீதா...                   திருப்புகழ், செகமாயை.
வள்ளிச்சன் மார்க்கம் விள்ளைக்கு நோக்க
   வல்லைக்கு ளேற்று மிளையோனே...             திருப்புகழ், கள்ளக்கு.
திருப்புகழ்க்கு உயிர்ப்பளித்து
  எழில் தினைக் கிரிப் புறத்து உறைவேலா... திருப்புகழ், கடற்செகத்.
இலவுக் கிளையெனும் வாய்வளி  நாயகி
   குழையத் தழுவிய மேன் மையி னாலுயர்
   இசைபெற் றருளிய காமுக னாகிய வடிவோனே... திருப்புகழ்,கலகக்கயல்.




No comments:

Post a Comment