பின் தொடர்வோர்

Wednesday 8 January 2020

402.பூதகலாதிகள்


402
பொது

        தானன தானன தந்த தானன தானன தந்த
        தானன தானன தந்த                தனதான

பூதக லாதிகள் கொண்டு யோகமு மாகம கிழ்ந்து
   பூசைகள் யாதுநி கழ்ந்து                பிழைகோடி
போம்வழி யேதுதெ ரிந்து ஆதிய நாதியி ரண்டு
   பூரணி காரணி விந்து                   வெளியான
நாதப ராபர மென்ற யோகியு லாசம றிந்து
   ஞானசு வாச முணர்ந்து               வொளிகாண
நாடியொ ராயிரம் வந்த தாமரை மீதில மர்ந்த
   நாயகர் பாதமி ரண்டு                 மடைவேனோ
மாதுசர் வேஸ்வரி வஞ்சி காளிபி டாரிவி பஞ்சி
  வாணிவ ராகிம டந்தை                    யபிராமி
வாழ்சிவ காம சவுந்த்ரி யால்மெ லாமுக பஞ்சி
   வாலைபு ராரியி டந்த                  குமையாயி
வேதபு ராணம்வி ளம்பி நீலமு ராரியர் தங்கை
   மேலொடு கீழுல கங்கள்               தருபேதை
வேடமெ லாமுக சங்க பாடலொ டாடல்ப யின்ற
   வேணியர் நாயகி தந்த                பெருமாளே.

பதம் பிரித்து உரை

பூத கலாதிகள் கொண்டு யோகமும் ஆக மகிழ்ந்து
பூசைகள் யாது நிகழ்ந்து பிழை கோடி
பூத - ஐம்பூதங்களின் சம்பந்தமான. கலாதிகள் கொண்டு -  சாத்திரங்கள் முதலானவைகளை ஆய்ந்தறிந்து.  யோகமுமாக மகிழ்ந்து - யோகவகை கூடிட மகிழ்ந்து.  பூசைகள் யாதும் - பூசைகள் யாவற்றையும். நிகழ்ந்து -  செய்து. பிழை கோடி - கோடிக் கணக்கான பிழைகள்.

போம் வழி ஏது தெரிந்து ஆதி  அநாதி இரண்டு
பூரணி காரணி விந்து வெளியான
போம் வழி - நீங்கும்படியான வழி. ஏது தெரிந்து - இன்னதென்று காரணம் உணர்ந்து. அதி அநாதி இரண்டு -  முதலும், முதலற்றதுமாய் உள்ள இரண்டுமாய் நிற்கின்ற.
பூரணி - முழு முதல்வி. காரணி - சகலத்துக்கும் மூல  காரணமாக இருப்பவளாகிய பரா சத்தியும்.  விந்து  வெளியான நாதம் - விந்து வெளியான நாதம்.

நாத பராபரம் என்ற யோகி உ(ல்)லாசம் அறிந்து
ஞான சுவாசம் உணர்ந்து ஒளி காண

பராபரம் என்ற - (விந்து சம்பந்தமான நாத ஒலி கூடி  முழங்கும் இடத்தில்) பரம் பொருளாகக் காட்சி தர. யோகி  - யோகிகள். உல்லாசம் அறிந்து - (காணும்) அந்த  பரமானந்த ஒளியை அறிந்து அனுபவித்து. ஞான சுவாசம்  உணர்ந்து - ஞான மூச்சியால் ஞான யோக நிலையை  அறிந்து ஒளி காண - நாத நல்லொளி தோன்ற

நாடி ஒரு ஆயிரம் வந்த தாமரை மீதில் அமர்ந்த
நாயகர் பாதம் இரண்டும் அடைவேனோ
நாடி - அதை விரும்பி. ஓராயிரம் வந்த தாமரை மீதில் - ஒரு ஆயிரம் இதழோடு கூடிய குரு கமலத்தின் மீது.  அமர்ந்த - உள்ள. நாயகர் - பெருமானது. பாதம் இரண்டும்  அடைவேனோ - இரண்டு திருவடிகளை அடைவேனோ?

மாது சர்வேஸ்வரி வஞ்சி காளி பிடாரி விபஞ்சி
வாணி வராகி மடந்தை அபிராமி
மாது - மாது. சர்வேஸ்வரி - எல்லாவற்றுக்கும் ஈசுவரி.  வஞ்சி - வஞ்சிக் கொடி போன்றவள். காளி - காளி. பிடாரி  - பிடாரி. விபஞ்சி - விபஞ்சி என்னும் வீணையை  ஏந்தியவள். வாணி - சரசுவதி. வராகி - சக்தி. மடந்தை -  மாது. அபிராமி - அழகி.

வாழ் சிவகாம சவுந்தரி ஆலம் மேலாம் பஞ்ச முக
வாலை புராரி இடம் தகு உமை ஆயி
வாழ் - வாழ்வு பொலியும். சிவகாம சவுந்தரி – சிவகாம  சௌந்தரி. ஆலம் மேலாம் - பிரளய கால வெள்ளத்தின்  மேலாகிய. பஞ்ச முக் வாலை - ஐந்து முகம் கொண்ட  பாலாம்பிகை. புராரி - திரி புரத்தை எரித்த சிவனது .  இடம் தகு உமை - இடது பாகத்துக்குத் தக்க உமா தேவி.  ஆயி - (எமது) தாய்.

வேத புராணம் விளம்பி நீல முராரியர் தங்கை
மேலொடு கீழ் உலகங்கள் தரு(ம்) பேதை

வேத புராணம் விளம்பி - வேதங்களையும்,    புராணங்களையும் சொன்னவள் நீல முராரியர் – முரன் என்னும் அசுரனுக்குப் பகைவனாகிய திருமாலின் தங்கை
- தங்கை  மேலோடு கீழ் உலகங்கள் - பதினான்கு
உலகங்களையும். தரும் பேதை - அளித்த மாது
வேடம் எ(ல்)லாம் உக சங்க பாடலொடு ஆடல் பயின்ற
வேணியர் நாயகி தந்த பெருமாளே.

வேடம் எல்லாம் - (ஆடலுக்கு உரிய) வேஷங்களெல்லாம்  உக - நிலை கலங்க. சங்க பாடலோடு –  சபையில்  பாடல்களும். ஆடல் பயின்ற - ஆடல்களும் பயின்ற  வேணியர் - சடையை உடைய சிவ பெருமான் நாயகி - தேவி (ஆகிய பார்வதி) தந்த பெருமாளே – பெற்ற பெருமாளே.

சுருக்க உரை

ஐம்பூதங்கள் சம்பந்தப்பட்ட சாத்திரங்கள் முதலியவற்றை ஆய்ந்து அறிந்து, யோக வகை கூடிட மகிழ்ந்து, பூசைகளெல்லாம் செய்து, என் பிழைகள் நீங்க வழி இன்னதென்று உணர்ந்து, முதலும் அந்தமும் இல்லாததாய் நிற்கும் பூரணி, எல்லாவற்றுக்கும் காரணப் பொருளாக இருக்கும் பராசக்தி, விந்து சம்பந்தமான் நாத ஒலி கூடி முழங்கும் இடத்தில் பரம் பொருளாகக் காட்சி தர, ஒரு ஆயிரம் இதழோடு கூடிய குரு கமலத்தின் மீதுள்ள பெருமானது இரண்டு திருவடிகளை அடைவேனோ?

சர்வேஸ்வரி, காளி, பிடாரி, விபஞ்சி, அபிராமி, சிவகாம சுந்தரி, பாலாம்பிகை, திரு புரம் அழித்த சிவ பெருமானது இடப் பாகத்தில் இருக்கத் தகுதியானள், உமை, தாய், எல்லா உலகங்களையும் பெற்ற மாது, ஆடலும், பாடலும் பயின்ற சடைப் பெருமானது தேவி, இத்தகைய பார்வதி பெற்ற பெருமாளே, உன் பாதங்களை அடைவேனோ?

ஒப்புக
ஆதி அநாதி இரண்டு பூரணி ....
ஆதி அனாதி ஆய பராசக்தி
பாதி பராபரை மேலுறை பைந்தொடி                     ....திருமந்திரம்

ஞான சுவாசம் உணர்ந்து நாடி....
ஞானத்தில் யோகமே நாதாந்த நல் ஒளி
ஞானக் கிரியையே நன்முத்தி நாடலே                   ....திருமந்திரம்

விளக்கக் குறிப்புகள்
விபஞ்சி - தேவி கையில் இருக்கும் வீணை.
ஆலமேலாம் - பிரளய கால வெள்ளத்தின் மேலாகிய.

ஆயிரம் வந்த தாமரை மீதில்...
ஆறு ஆதாரங்களோடு சஹஸ்ராரம் என்பது ஆக்ஞேய சக்கரத்துக்கு மேலே, தலையில் பிரம்ம கபாலத்தில், ஆயிரம் இதழ் கமலமுள்ள பிந்து ஸ்தானமாக கிய பாவனைக்கு உரியது என்பர்

ஒப்புக
   நூறு பத்தினுட நெட்டுஇத
  ழாகி யேழுமள விட்டருண விற்பதியின் விந்துநாத...  .
                                                                திருப்புகழ்,ஆசைநாலுசது
 
 மேலைவெளி யாயி ரத்து நாலிருப ராப ரத்தின்
 மேவியரு ணாச லத்தி னுடன்மூழ்கி...திருப்புகழ், சூலமெனவோடு.

இடந்தகுமை - இடம் தகு உமை.




No comments:

Post a Comment