பின் தொடர்வோர்

Thursday 8 July 2021

460காணாத தூர

 460


திருவண்ணாமலை

 

                    தானான தான தானான தான

                   தானான தானன           தந்ததான

 

காணாத தூர நீணாத வாரி

   காதார வாரம             தன்பினாலே        

காலாளும் வேளும் ஆலால நாதர்

  காலால் நிலாவுமு             னிந்துபூமேல்

நாணான தோகை நூலாடை சோர

  நாடோர்க ளேசஅ               ழிந்துதானே

நானாப வாத மேலாக ஆக

  நாடோறும் வாடிம             யங்கலாமோ

சோணாச லேச பூணார நீடு

 தோளாறு மாறும்வி              ளங்குநாதா

தோலாத வீர வேலால டாத

 சூராளன் மாளவெ              குண்டகோவே

சேணாடர் லோகம் வாழ்மாதி யானை

 தீராத காதல்சி                   றந்தமார்பா

தேவாதி கூடு மூவாதி மூவர்

 தேவாதி தேவர்கள்               தம்பிரானே

 

 பதம் பிரித்து உரை

 காணாத தூர நீள் நாதம் வாரி

காது ஆரவாரம் அதன் பி(ன்)னாலே

காணாத தூர - கண்ணுக்கு எட்டாத தூரம் (பரந்ததான) நீள் நாதம் வாரி - பெரிய ஒலியை உடைய கடலின் காது ஆரவாரம் - கொல்வது போலச் செய்யப்படும் ஆடம்பரமும் அதன் பி(ன்)னாலே - அதன் பின்பாக

 கால் ஆளும் வேளும் ஆலால நாதர்

காலால் நிலாவும் முனிந்து பூ மேல்

கால் ஆளும் - தென்றல் காற்றை ஆளும் (தேராகக் கொண்ட) வேளும் - மன்மதனும் ஆலால நாதர் - ஆலகால விடத்தை உண்ட சிவபெருமானுடைய காலால் - காலால் தேய்க்கப்பட்ட நிலாவும் - சந்திரனும் முனிந்து - கோபிக்க பூ மேல் - இந்தப் பூமியின் மேல்

 நாண் ஆன தோகை நூலாடை சோர

நாடோர்களேf ஏச அழிந்து தானே

 நாண் ஆன தோகை - நாணம் கொண்ட மயில் போன்ற இப் பெண்ணின் நூல் ஆடை சோர - தனது நூல் புடவை நெகிழ நாடோர்கள் ஏச - நாட்டில் உள்ளோர் பழிந்துரைக்க அழிந்து தானே - உள்ளம் அழிந்து அதனால்

நானா அபவாதம் மேலாக ஆக(ம்)

நாடோறும் வாடி மயங்கலாமோ

நானா அபவாத மேலாக – பலவித அவதூறுகள் மேலெழுந்து வெளிப்பட ஆகம் - உடல் நாடோறும் வாடி மயங்கலாமோ - நாள் தோறும் வாடி மயக்கம் உறலாமோ?

 

சோணாசல ஈச பூண் ஆரம் நீடு

தோள் ஆறும் ஆறும் விளங்கு நாதா

சோணாசல ஈச - சோணாசலம் என்னும் திருவண்ணா மலை ஈசனே பூண் ஆரம் - அணிந்துள்ள முத்து மாலை தோள் ஆறும் ஆறும் - பன்னிரண்டு தோள்களும் விளங்கு நாதா - விளங்குகின்ற நாதரே

 தோலாத வீர வேலால் அடாத

சூராளன் மாள வெகுண்ட கோவே

தோலாத - தோல்வி அடையாத வீர - வீரனே வேலால் - வேலாயுதத்தைக் கொண்டு அடாத - தகாத செயல்களைச் செய்யும் சூராளன் - சூரன் என்னும் ஆண்மையாளன் மாள - இறந்து போகும்படி வெகுண்ட கோவே - கோபித்தத் தலைவனே

 

சேண் நாடர் லோகம் வாழ் மாது யானை

தீராத காதல் சிறந்த மார்பா

சேண் நாடர் லோகம்-விண்ணுலகத்தினருடைய உலகில் வாழ் - வாழ்ந்திருந்த மாது யானை - மாது தேவசேனையின் தீராத காதல் - முடிவில்லாத அன்பு சிறந்த மார்பா - விளங்கும் மார்பை உடையவனே

தேவாதி கூடு மூவாதி மூவர்

தேவாதி தேவர்கள் தம்பிரானே

தேவாதி - தேவர்கள் ஆதியோர் கூடு மூவாதி மூவர் - மூன்றெனக் கூடிய ஆதி மூர்த்திகளாகிய மூவர் (பிரமன், விஷ்ணு, உருத்திரன்) தேவாதி தேவர்கள் - தேவேந்திரர்கள் தம்பிரானே - இவர்கள் யாவர்க்கும் தம்பிரானே


சுருக்க உரை

 

கண்ணுக்கு எட்டாத வரையில் பரந்துள்ள பேரொலி செய்யும் கடலும், தென்றல் காற்றை ஆளும் மன்மதனும், விடமுண்ட சிவபெருமான் காலால் தேய்க்கப்பட்ட சந்திரனும் கோபிக்க, இந்தப் பூமியில் நாணம் கொண்ட இப் பெண், புடவை நெகிழஊரார் இழித்துப் பேச, உள்ளம் நொந்து, வாடி மயக்கம் உறலாமோ?

திருவண்ணாமலையில் பன்னிரண்டு தோள்கள் விளங்கும்படி உறையும் ஈசனே! தோல்வி இல்லாத வீரனே! அடாத சூரனை அழித்த வேலனே! விண்ணுலக மாதாகிய தேவசேனையின் ஆறாத காதல் பூண்டவனே! எல்லா தேவர்களுக்கும் தம்பிரானே!இப் பெண் நாள் தோறும் வாடி மயங்கலாமோ?

 

விளக்கக் குறிப்புகள்

 இப்பாடல் அகப் பொருள் துறையைச் சேர்ந்தது

ஆலால நாதர் காலால் நிலவு

தக்கன் யாகத்தில் சந்திரன் வீரபத்திரருடைய காலால் தேய்க்கப்பட்டான்

 சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன் தன் வேள்வியினில்

இந்திரனைத்தோள் நெரித்திட்டு எச்சன் தலைஅரிந்து

               ---- மாணிக்கவாசகர் திருவாசகம் - திருவம்மானை

 நிலாவு முனிந்து பூ மேல்

கடல் ஒலி, மன்மதன், சந்திரன், ஊர்ப்பேச்சு --- காமிகளுக்கு வருத்தம் தருவன.   

ஒப்புக: 

தெருவினில் நடவா மடவார்

திரண்டொ றுக்கும்  வசையாலே

தினகர னெனவே லையிலே

சிவத்து திக்கும்          மதியாலே

பொருசிலை வளையா இளையா

மதன்தொ டுக்குங் கணையாலே---திருப்புகழ், தெருவினில்நடவா




பாடலை கேட்க              Rev 9-8-2022

No comments:

Post a Comment