பின் தொடர்வோர்

Wednesday 28 July 2021

463. செயசெய அருணாத் திரி

 463


திருவருணை

 

            தனதன தனனாத் தனதன தனனத்

              தனதன தனனாத் தனதன தனனத்

              தனதன தனனாத் தனதன தனனத   தனதான

 

செயசெய அருணாத் திரிசிவ யநமச்

  செயசெய அருணாத் திரிமசி வயநச்

  செயசெய அருணாத் திரிநம சிவயத்   திருமூலா

செயசெய அருணாத் திரியந மசிவச்

  செயசெய அருணாத் திரிவய நமசிச்

  செயசெய அருணாத் திரிசிவ யநமஸ்த்  தெனமாறி

செயசெய அருணாத் திரிதனின் விழிவைத்

  தரகர சரணாத் திரியென உருகிச்

  செயசெய குருபாக் கியமென மருவிச்  சுடர்தாளைச்

சிவசிவ சரணாத் திரிசெய செயெனச்

  சரண்மிசை தொழுதேத் தியசுவை பெருகத்

  திருவடி சிவவாக் கியகட லமுதைக்    குடியேனோ

செயசெய சரணாத் திரியென முநிவர்க்

   கணமிது வினைகாத் திடுமென மருவச்

  செடமுடி மலைபோற் றவுணர்க ளவியச்  சுடும்வேலா

திருமுடி யடிபார்த் திடுமென இருவர்க்

  கடிதலை தெரியாப் படிநிண அருணச்

  சிவசுடர் சிகிநாட் டவனிரு செவியிற்    புகல்வோனே

செயசெய சரணாத் திரியெனு மடியெற்

  கிருவினை பொடியாக் கியசுடர் வெளியிற்

  றிருநட மிதுபார்த் திடுமென மகிழ்பொற்    குருநாதா

திகழ்கிளி மொழிபாற் சுவையித ழமுதக்

  குறமகள் முலைமேற் புதுமண மருவிச்

  சிவகிரி அருணாத் திரிதல மகிழ்பொற்    பெருமாளே

 

பதம் பிரித்து உரை

 

செயசெய அருணாத்திரி சிவய நம

செயசெய அருணாத்திரி மசிவயந

செயசெய அருணாத்திரி நமசிவய திருமூலா

செயசெய அருணாத்திரி - ஜெயஜெய அருணாசலா சிவயநம - சிவய நம செயசெய அருணாத்திரி மசிவயந - ஜெயஜெய அருணாசலா மசிவயந செயசெய அருணாத்திரி நமசிவய - ஜெயஜெய அருணாசலா நமசிவய திரு - அழகிய மூலா - மூலப் பொருளே

செயசெய அருணாத்திரி யநமசிவ

செயசெய அருணாத்திரி வயநமசி

செயசெய அருணாத் திரி சிவய நமஸ்த்து என மாறி

செயசெய அருணாத்திரிய யநமசிவ - ஜெயஜெய  அருணாசலா யநமசிவ செயசெய அருணாத் திரிவய நமசி - ஜெயஜெய அருணாசலா வயநமசி செயசெய அருணாத் திரிசிவ யநமஸ்த்து - ஜெயஜெய அருணாசலா சிவய நமஸ்த்து என மாறி - என்று மாறிச் ஜெபித்து

செயசெய அருணாத் திரி தனின் விழி வைத்து

அர கர சரணாத்திரி என உருகி

செயசெய குரு பாக்கியம் என மருவி சுடர் தாளை

செயசெய அருணாத்திரி தனில் - ஜெயஜெய  என்று கூறி அருணாசலத்தில் விழி வைத்து - கண்ணை வைத்து அரகர சரணாத் திரி - அர கர திருவடி மலையே (சிவ மலையே) என உருகி - என்று கூறித் தியானித்து செயசெய குரு பாக்கியம் - ஜெயஜெய என்னும் இந்த மந்திரம் எங்கள் குரு தந்த பாக்கியம் என மருவி - என்று என் உள்ளம் பொருந்தி சுடர் தாளை - ஒளி வீசும் திருவடியை

சிவசிவ சரணாத்திரி செயசெய என

சரண் மிசை தொழுது ஏத்திய சுவை பெருக

திருவடி சிவ வாக்கிய கடல் அமுதை குடியேனோ

சிவசிவ சரணாத் திரி - ஜெயஜெய திருவடி மலையே செய செய என - செயசெய எனப் புகழந்து சரண் மிசை - திருவடியின் மீது வீழ்ந்து தொழுது ஏத்திய - தொழுது போற்றிய சுவை பெருக - இன்பம் பெருக திருவடி - அந்தத் திருவடியின் (ஆண்டவனது) சிவவாக்கிய கடல் அமுதத்தை - சிவ மந்திரத்தால் பெறுகின்ற கடல் அமுதம் போல் இனிய குடியேனோ - பருகி மகிழேனோ?

செயசெய சரணாத் திரி என முநிவர்

கணம் இது வினை காத்திடும் என மருவ

செட முடி மலை போற்று அவுணர்கள் அவிய சுடும் வேலா

செயசெய சரணாத் திரி என - ஜெயஜெய திருவடி மலையே என்று கூறும் முநிவர்க் கணம் - முனிவர்கள் கூட்டங்கள் இது வினை காத்திடும் என மருவி - வினையினின்றும் நம்மைக் காத்திடும் என மருவ - என்று கூடிப் பொருந்தி செடம் முடி மலை போல் - தங்கள் உடலையும் முடியையும் மலை போற்றும் - கிரௌஞ்சம், எழு கிரி என்னும் மலைகள் காப்பாற்ற நின்ற அவுணர்கள் - அவுணர்கள் அவிய - மடிந்து விழ சுடும் வேலா - சுட்டெரித்த வேலாயுதனே

திரு முடி அடி பார்த்திடும் என இருவர்க்கு

அடி தலை தெரியாப்படி நிண அருண

சிவ சுடர் சிகி நாட்டவன் இரு செவியில் புகல்வோனே

திரு முடி அடி பார்த்திடும் என - திருமுடியையும் திருவடியையும் கண்டு பிடியுங்கள் எனக் கூறி இருவர்க்கு - திருமால், பிரமன் ஆகிய இருவருக்கும் அடி தலை தெரியாப்படி - அடியும் முடியும் தெரியாத வண்ணம் நிண - நின்ற அருணச் சிவ சுடர் - செந்நிறச் சிவ சுடராகிய சிகி நாட்டவன்- நெருப்புக் கண்ணை உடைய சிவபெருமானுடைய இரு செவியில் - இரண்டு காதுகளிலும் புகல்வோனே - உபதேசம் செய்தவனே

செயசெய சரணாத் திரி எனும் அடியெற்கு

இரு வினை பொடியாக்கிய சுடர் வெளியில்

திரு நடம் இது பார்த்திடும் என மகிழ் பொன் குரு நாதா

செயசெய சரணாத்திரி எனும் - ஜெயஜெய  திருவடி மலையே (சிவமலையே) எனத் துதிக்கின்ற அடியெற்கு - அடியேனுக்கு இருவினை பொடியாக்கிய - (எனது) இரு வினைகளையும் பொடியாக்கிய சுடர் வெளியில் - ஒளி வெளியில் திரு நடம் இது பார்த்திடும் என - திருநடம் இதோ பார்ப்பாயாக எனக் கூறி மகிழ் - மகிழ்ந்திடும் பொன் குரு நாதா - அழகிய குரு நாதரே

திகழ் கிளி மொழி பால் சுவை இதழ் அமுத

குற மகள் முலை மேல் புது மணம் மருவி

சிவகிரி அருணாத்திரி தலம் மகிழ் பொன் பெருமாளே

திகழ் கிளி மொழி - விளங்கும் கிளி மொழி போலவும் பால் சுவை - பாலின் சுவை போலவும் இதழ் அமுத - வாயிதழின் ஊறல் அமுதம் போலவும் அமைந்த குற மகள் முலை மேல் - குறப் பெண்ணாகிய வள்ளியின் கொங்கையில் மீது உள்ள புது மணம் மருவி - புது மணத்தை அனுபவித்து சிவ கிரி அருணாத் திரி தலம் - சிவ மலையாகிய அருணாசலத் தலத்தில் மகிழ் - மகிழ்கின்ற பொன் பெருமாளே - அழகிய பெருமாளே

 

 சுருக்க உரை

 

ஜெயஜெய அருணாசலா, சிவயநம, மசிவயந, நமசிவய, அழகிய மூலப் பொருளே, யநமசிவ, வயநமசி, சிவய நமஸ்த்து என்று மாறி மாறிச் செபித்து, ஜெயஜெய  என்று கூறி அருணாசலத்தில் மனக்கண்ணை வைத்து, ஹர ஹர திருவடி மலையே (சிவமலையே) என்று தியானித்து, உள்ளம் உருகி, இந்த மந்திரம் எங்கள் குரு தந்த பாக்கியம் எனக் கொண்டு, உன் ஒளி வீசும் திருவடியைத் தொழுது போற்றிய இன்பம் பெருக, சிவ மந்திரத்தால் பெருகும் அமுதக் கடலை நான் பருகி மகிழ்வேனோ?

ஜெயஜெய  திருவடி மலையே என்று சொன்னால் வினைகள் நீங்கும் என்று முனிவர்கள் கூடிப் பொருந்த, அசுரர்கள் மடிந்து விழ அவர்களைச் சுட்டெரித்த வேலாயுதனே! திருமுடியையும், திருவடியையும் திருமாலும் பிரமனும்  காணாதபடி நின்ற சிவனுக்கு உபதேசம் செய்த குரு நாதா! கிளி போன்ற மொழியைப் பேசும் குற மகள் வள்ளியின் கொங்கையின் புது மணத்தை அனுபவித்துச் சிவமலையாகிய அருணாசல தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! நான் சிவமாக்கிய கடலமுதத்தைக் குடிப்பேனோ?

 

 

 விளக்கக் குறிப்புகள்

 

சிவயநம என்னும் பஞ்சாட்சர மாறுதல்கள் கவனிக்கத் தக்கவை 

  நகார மகார சிகார நடுவாய்

  வகாரம் இரண்டும் வளியுடன் கூடி

  ஒகார முதற்கொண் டொருக்கால் உரைக்க

  மகார முதல்வன் மனத்தகத் தானே                    திருமந்திரம்  

 

   வளி - சீவனாகிய, , மகார முதல்வன் நாதத்துக்குத் தலைவனான சிவன்

 

நகாரத்தை முதலாக வைத்துக் கூறுவது வேத முறை

சிகாரத்தை  முதலாக வைத்துக் கூறுவது ஆகம முறை

சிவாயவெ னுநாமமொ ருகாலுநி னையாததி

மிராகரனை வாவென் றருள்வாயே)            திருப்புகழ், அவாமருவினா

புயப்பணி கடப்பந் தொடைச்சி கரமுற்றின்

புகழ்ச்சிய முதத்திண் புலவோனே              திருப்புகழ், கரிக்குழல்விரி

 

செயசெய சரணாத்திரி யென முநிவர்க் கணமிது

       சரண அத்திரி - திருவடி மலை என்று பொருள்படும்

 

அரகர சரணாத்திரி என உருகி

இந்த இடத்திலும், திருவடி சிவவாக்கிய கடல் அமுதை என்ற இடத்திலும் திருவடி என்னும் சொற்றொடர் சிவனைக் குறிக்கும் 

பாடலை கேட்க      Rev 9-8-2022


No comments:

Post a Comment