பின் தொடர்வோர்

Wednesday 28 July 2021

462. சிவமா துடனே

 462


திருவருணை

 

               தனனா தனனா தனனா தனனா

                 தனனா தனனா                தனதான

 

சிவமா துடனே அநுபோ கமதாய்

  சிவஞா னமுதே                பசியாறித்

திகழ்வோ டிருவோ ரொருரூ பமதாய்

  திசைலோ கமெலா             மனுபோகி

இவனே யெனமா லயனோ டமரோ

  ரிளையோ னெனவே          மறையோத

இறையோ னிடமாய் விளையா டுகவே

  யியல்வே லுடன்மா          அருள்வாயே

தவலோ கமெலா முறையோ வெனவே

  தழல்வேல் கொடுபோ          யசுராரைத்

தலைதூள் படஏழ் கடல்தூள் படமா

  தவம்வாழ் வுறவே           விடுவோனே

கவர்பூ வடிவாள் குறமா துடன்மால்

  கடனா மெனவே            அணைமார்பா

கடையேன் மிடிதுaள் படநோய் விடவே

  கனல்மால் வரைசேர்          பெருமாளே

 

பதம் பிரித்து உரை

சிவ மாதுடனே அநுபோகம் அதாய்

சிவ ஞான அமுதே பசி ஆறி

சிவ மாதுடனே - சிவம் என்கின்ற தலைவியுடன் அநுபோகம் அதாய் - இன்ப நுகர்ச்சி கொண்டவனாய் சிவ ஞான அமுதே - சிவ ஞானம் என்கின்ற அமுதத்தை (உண்டு) பசி ஆறி - (அதனால்) பசி நீங்கி

 

திகழ்வோடு இருவோரும் ஒரு ரூபமதாய்

திசை லோகம் எ(ல்)லாம் அனுபோகி

திகழ்வோடு - விளக்கத்துடன் இருவோரும் – நானும் தலைவியும் ஒரு ரூபமதாய் - ஒரு வடிவத்துடன் திசை லோகம் எலாம் - (எட்டுத்) திசையில் உள்ளவர்களும்உலகினர் யாவரும் அநுபோகி - சுகானுபவம் உடையவன்

 

இவனே என மால் அயனோடு அமரோர்

இளையோன் எனவே மறை ஓத

இவனே என - இவன் ஒருவனே என்று (வியக்கும்படி) அயன் மாலொடு - திருமால், பிரமன் அமரோர் - தேவர்கள் (யாவரும்) இளையோன் எனவே -இவன் இளையோன் என்று வியந்து கூற மறை ஓத - வேதமும் அங்ஙனமே எடுத்துக்கூற

 

இறையோன் இடமாய் விளையாடுகவே

இயல் வேலுடன் மா அருள்வாயே

இறையோன் இடமாய் - சிவபெருமானுடைய பக்கத்தில் விளையாடுகவே - (உன்னைப் போல) நானும் விளையாடஇயல் - (எனக்கு) உழவலன்புடன் வேலுடன் – வேலையும் மா - குதிரையாகிய  மயிலையும் அருள்வாயே தந்து அருளுக

 

தவ லோகம் எ(ல்)லாம் முறையோ எனவே

தழல் வேல் கொடு போய் அசுராரை

தவ லோகம் எலாம் - மிகவும் லோகங்கள் எல்லாம் முறையோஎனவே - முறையோ என்று ஓலமிட தழல் வேல் கொடு போய்  - நெருப்பு வீசும் வேலுடன் சென்று அசுராரை -அசுரர்களின்

 

தலை தூள் பட ஏழ் கடல் தூள் பட மா

தவம் வாழ்வு உறவே விடுவோனே

தலை தூள்பட - தலைகள் தூள்பட ஏழ் கடல் தூள்பட - ஏழுகடல்களும் தூள்பட மா - சிறந்த தவம் - தவத்தினர் வாழ்வுறவே - வாழ்வுறுமாறு விடுவோனே - (அந்த வேலைச்)செலுத்தியவனே

 

கவர் பூ வடிவாள் குற மாதுடன் மால்

கடனாம் எனவே அணை மார்பா

கவர் பூ வடிவாள் - வாழைப் பூ நிறத்தினளான குற மாதுடன் - குறப் பெண்ணாகிய வள்ளியின் மீது மால் – ஆசை கொள்ளுவது கடனாம் எனவே - நமக்குக் கடனாகும் என்றே அணை மார்பா - அவளை அணைந்த மார்பனே

 

கடையேன் மிடி தூள் பட நோய் விடவே

கனல் மால் வரை சேர் பெருமாளே

கடையேன் - கடைப் பட்டவனாகிய என்னுடைய மிடி - வறுமை தூள் பட - தூள் பட்டு ஒழியவும் நோய் விடவே - நோய் தொலையவும் கனல் மால் வரை சேர் - நெருப்புப் பெருமலையாகிய அண்ணாமலையில் பொருந்தி வீற்றிருக்கும் பெருமாளே - பெருமைமிக்கவரே

 சுருக்க உரை

சிவம் என்ற தலைவியுடன் இன்ப நுகர்ச்சி உண்டவனாய், சிவ ஞானம் என்ற அமுதத்தைப் பருகிப், பசி நீங்கி, நானும் இத்தலைவியும் ஒரே ரூபமாக இருப்பவர்கள் என்று அனைவரும் வியக்கும்படி, திருமால், பிரமன், அமரர் யாவரும் இவன் இளையோன் என்று கூற, சிவபெருமான் பக்கத்தில் உன்னைப் போல் நானும்

விளையாட, எனக்கு வேலும் மயிலும் தந்து அருளுக.

நெருப்பு வீசும் வேலுடன் சென்று, அசுரர்கள் தலைகள் தூள்பட, ஏழு கடல்களும் துள் பட, தவத்தினர் நல் வாழ்வு வாழ்வுற, வேலைச் செலுத்தியவனே! வள்ளியின் மீது ஆசை கொள்வது தன் கடமை என்று கொண்டு அவளை அணைத்த மார்பனே! என்னுடைய வறுமை, நோய் அனைத்தும் ஒழிய, நெருப்பு மலையாகிய அண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே! எனக்கு வேலுடன் மயிலும் தருவாயாக

 

 

விளக்கக் குறிப்புகள்

சிவம் என்னும் சொல்லுக்கு பொருள் மங்களம் எது நல்னே வடிவெடுத்தியெருக்கிறதோ

அது சிவம் எவன் நலனே செய்கிறானோ அவன் சங்கரன் - சித்பவானந்தர்

 

ஒப்புக

சிவ மாதுடனே அநுபோகமதாய்

    சிவசுட ரதனைப் பாவை மணமென மருவிக் கோல

 - திருப்புகழ் திருநிலமரு

 

   சிவஞான புண்டரிக மலர்மாது டன்கலவி

    சிவபோக மன்பருக அறியாமல்        திருப்புகழ்,சிவஞானபுண்டரி

 

 சிவஞானமுதே பசியாறி

     (குகனெ குருபர னேயென நெஞ்சிற்

   புகழ அருள்கொடு நாவினி லின்பக்

   குமுளி சிவவமு தூறுக வுந்திப்  பசியாறி – திருப்புகழ், குகனெகுருபர

 

இருவவோ ரொரு ரூப மதாய்

இருவரு முருகிக் காய நிலையென மருவித் தேவ

   ரிளையவ னெனவித் தார மருள்வாயே  திருப்புகழ், திருநிலமரு

 

வேலுடன் மா அருள்வாயே

வேல்மயில் கொடுத்து வேதமு மொருத்த னாமென சிந்தைகூராய்

                                      திருப்புகழ், வெடித்தவார்

 

கவர்பூ வடிவாள் குறமாதுடன் மால்

 

இடக்கடக் குமெய்ப் பொருட் டிருப்புகழ்க் குயிர்ப்பளித்

தெழிற்றினைக் கிரிப்றத் துறைவேலா)திருப்புகழ்,  கடற்செகத்

கானக் கொச்சைச் சொற்குற விக்குக் கடவோனே

-திருப்புகழ், வானப்புக்கு

 மனம் மொழி மெய்களால் தன்னையே நினைந்து தவப்பணி பூண்டிருந்த வள்ளியைப் புரத்தல் தணிகை நாயகருக்குக் கடமையான செயலாக நிகழ்ந்தது 


பாடலை கேட்க         Rev 9-8-2022

No comments:

Post a Comment