பின் தொடர்வோர்

Monday 4 June 2018

332. ஆராதன


332
பொது
 
        தானாதன தானந்த தத்த தானாதன தானந்த தத்த
         தானாதன தானந்த தத்த              தனதான
 
 ஆராதன ராடம்ப ரத்து மாறாதுச வாலம்ப னத்து
      மாவாகன மாமந்தி ரத்து                                   மடலாலும்
 ஆறார்தெச மாமண்ட பத்தும் வேதாகம மோதுந்த லத்து
       மாமாறெரி தாமிந்த னத்து                                மருளாதே
  நீராளக நீர்மஞ்ச னத்த நீடாரக வேதண்ட மத்த
        நீநானற வேறின்றி நிற்க                                    நியமாக
  நீவாவென நீயிங்க ழைத்து பாராவர வாநந்த சித்தி
       நேரேபர மாநந்த முத்தி                                   தரவேணும்
 வீராகர சாமுண்டி சக்ர பாராகண பூதங்க ளிக்க
        வேதாளச மூகம்பி ழைக்க                                   அமராடி
  வேதாமுறை யோவென்ற ரற்ற ஆகாசக பாலம்பி ளக்க
       வேர்மாமர மூலந்த றித்து                                வடவாலும்
  வாராகர மேழுங்கு டித்து மாசூரொடு போரம்ப றுத்து
       வாணாசன மேலுந்து ணித்த                           கதிர்வேலா
   வானாடர சாளும்ப டிக்கு வாவாவென வாவென்ற ழைத்து
       வானோர்ப ரிதாபந்த விர்த்த                         பெருமாளே.


பதம் பிரித்து உரை

1 ஆராதனர் ஆடம்பரத்தும் மாறாது சவ ஆலம்பனத்தும்
  ஆவாகன மா மந்திரத்து மடலாலும்

ஆராதனர் - பூசை செய்வோர்களின். ஆடம்பரத்தும் - பகட்டான தோற்றங்களைக் கண்டும்.
மாறாது - இடைவிடாது செய்யும். சவ - சபத்தில் (உள்ள).
ஆலம்பனத்தும் - பற்றுக் கோடு (ஆசையாலும்).
ஆவாகன - தெய்வம் எழுந்தருள வேண்டி எழுதப்படும்.
மா மந்திரத்து - சிறந்த மந்திரத்தைக் கொண்ட.
மடலாலும் - தகட்டை (தாயித்து) வகைகளைக் கண்டும்.

2 ஆறார் தெச மா மண்டபத்தும் வேத ஆகமம் ஓதும் தலத்தும்
  ஆமாறு எரிதாம் இந்தனத்தும் மருளாதே

ஆறார் தெசம் - ஆறும் பத்தும் கூடிய (பதினாறு கால்கள் கொண்ட). மா மண்டபத்தும் - சிறந்த மண்டபக் காட்சியாலும். வேத ஆகமம் ஓதும் தலத்தும் - வேதாகமங்கள் முழங்கும் இடத்தைக் கண்டும். ஆமாறு - ஹோமாதிகளுக்கு ஆகும் படி. எரி தாம் இந்தனத்தும் - உரிய ஸமித்து ஆகியவற்றைக் கண்டும். மருளாதே - கலங்காமல்.
[ஆறார் தெச மா மண்டபத்தும் - ஆறாவது நிலையாக ‘ய’ என்றேழுத்துடன்  ( ஓம் நமசிவாய என்பதில் ஆறவது எழுத்து ய) கூடி விளங்கும் ஆக்ஞையை நாடி நிற்கும் நிலைமை என்பார் வாரியார் ஸ்வாமிகள்]
3 நீராளகம் நீர் மஞ்சனத்த நீள் தாரக வேதண்ட மத்த
  நீ நான் அற வேறு அன்றி நிற்க நியமாக

நீராளகம் - நீர் மிகுதி பெருகும். நீர் மஞ்சனத்த - அடியார்களின் கண்ணீரிலே திரு முழுக்கு கொள்பவனே. நீள் தாரக - சிறப்பு மிக்க ஓம் என்னும் பிரணவ மந்திரத்துக்கு
உரியவனே. வேதண்ட - மலைகளுக்கு உரிய குறிஞ்சி நில
வேந்தனே. மத்த - அதிகம் உற்சாகம் உள்ளவனே. நீ நான் அறவே நின்றி நிற்க - நீ என்றும் நான் எனறும் உள்ள துவைதம் எனப்படும் இருமைத் தன்மை நீங்கி அத்துவித நிலையில் நிற்பதற்கு. நியமாக - முறைமைப்படி.

4 நீ வா என நீ இங்கு அழைத்து பாரா வரம் ஆனந்த சித்தி
  நேரே பரமாநந்த முத்தி தரவேணும்

நீ வா என - நீ வா என்ற என்னை நீ. இங்கு அழைத்து - இவ்விடத்திலேயே அழைத்து. பாரா வரம் - கடல் போன்ற. ஆனந்த சித்தி - ஆனந்த நிலைமையைக் கூட்டுவித்து. நேரே - உடனே. பரமானந்த முத்தி - பேரானந்த நிலையாகிய வீட்டு பேற்றை. தர வேணும் - தந்தருள வேண்டும்.

5 வீராகர சாமுண்டி சக்ர பாரா கணம் பூதம் களிக்க
  வோதாள சமூகம் பிழைக்க அமராடி

வீராகர - வீரத்துக்கு இருப்பிடமானவனே. சாமுண்டி - துர்க்கை. சக்ர - சக்ர வடிவமாக வகுக்கப்பட்டு நிற்கும். பாராகணம் - காவல் கணங்களான பூதங்கள்.
களிக்க - மகிழவும். வேதாள சமூகம் - பேய்க் கூட்டங்கள்.
பிழைக்க - (பிணங்களை உண்டு) பிழைக்கும்படியும்.
அமர் ஆடி - சண்டை செய்து.

6 வேதா முறையோ என்று அரற்ற ஆகாச கபாலம் பிளக்க
  மா மர மூல வேர் தறித்து வடவா ஆலும்

வேதா - பிரமன். முறையோ என அரற்ற - இது முறையோ என்று கூச்சலிட. ஆகாச கபாலம் - அண்ட கூடம். பிளக்க -
பிளவுபட. மாமர மூல வேர் - மாமரத்தின் அடி வேரையே. தறித்து - வெட்டி. வடவா - வடவா முகாக்கினி.
ஆலும் - விடமும் (தங்கியுள்ள).

7 வாராகரம் ஏழும் குடித்து மா சூரொடு போர் அம்பு அறுத்து
  வாணாசனம் மேலும் துணித்த கதிர் வேலா

வாராகரம் ஏழும் குடித்து - கடல் ஏழையும் குடித்து. மா சூரொடு - பெரிய சூரனுடனே. போர் அம்பு அறுத்து - அவன் போரில் செலுத்திய அம்புகளை அறுத்து. வாணாசனம் - (பாணாசனம) பாணங்கள் தங்கும் இடமான வில்லையும். மேலும் - கூடவே. துணித்த - வெட்டித் தள்ளிய.
கதிர் வேலா - ஒளி வீசும் வேலனே.

8 வான் நாடர் அரசாளும் படிக்கு வா வா என வா என்று அழைத்து
  வானோர் பரிதாபம் தவிர்த்த பெருமாளே.

வானாடு - தேவர் உலகத்தை. அரசாளும்படிக்கு - ஆட்சி செய்வதற்கு. வா வா என - வாருங்கள் வாருங்கள் என்று அழைத்து. வானோர் பரிதாபம் தவிர்த்த - தேவர்களின் துக்கத்தை நீக்கிய. பெருமாளே - பெருமாளே.


சுருக்க உரை


ஆடம்பரமான பூசைகளைக் கண்டும், செப மந்திரங்களை ஓதியும்
, தெய்வம் எழுந்தருள வேண்டி செய்யப்படும் தாயித்து வகைகளாலும்,  சிறந்த மண்டபக் காட்சிகளாலும், வேத ஆகமங்கள் ஓதப்படும் இடங்களாலும், வேள்விகளில் எரிக்கப்படும் சமித்துகளாலும் மருட்சி கொள்ளாமல், அடியார்களின் கண்ணீரின் திருமுழுக்கில் மகிழ்பவனே, ஓம் என்னும் மந்திரத்திரத்துக்கு உரியவனே. குறிஞ்சி நிலத் தலைவனே, நீ வேறு நான் வேறு என்ற இருமைகளின் வேற்றுமைகள் இன்றி அத்துவித நிலையைப் பெற, என்னை அழைத்து உனது கடல் போன்ற ஆனந்த வீட்டுப் பேற்றைத் தந்தருள வேண்டுகின்றேன்.
வீரனே, பூதங்கள் மகிழவும், போரில் இறக்கும் பிணங்களை
உண்டுபேய்கள் களிக்கவும், சண்டை செய்து சூரர்களை அடியோடு அழித்த ஒளி வீசும் வேலாயுதத்தை உடையவனே, தேவர்கள் பொன்னுலகை ஆளும்படி அவர்கள் துக்கத்தை நீக்கிய பெருமாளே, வீட்டுப் பேற்றை அருள்வாயாக.

விளக்கக் குறிப்புகள்
1நீராளக நீர்மஞ்சனத்த நீடாரக....
முதல் இரண்டு அடிகளால் ஆடம்பர பூசை முதலிய ஆடம்பரங்களால் மருளக் கூடாது என்பதை உணர்த்துகிறார்.
நீராள மாய்உருக உள்அன்பு தந்ததும்
நின்றது அருள் இன்னும் இன்னும்
நின்னையே துணை என்ற என்னையே காக்கஒரு
நினைவுசற்று உண்டாகிலோ                          --- தாயுமானவர்
.
மொழிகுழற அழுதுதொழு துருகுமவர் விழியருவி
முழுகுவதும் வருகவென அறைகூவி யாளுவதும்
                                                                     ----சீர்பாத வகுப்பு.
2.நீநானற வேறின்றி நிற்க நியமாக....
நீ வேறெ னாதிருக்க நான் வேறெ னாதிருக்க
                                                  —திருப்புகழ் 109 நாவேறுபாம

ஏக போகமாய் நீயு நானுமாய் இறுகும் வகை
                                                        --- திருப்புகழ்  (அறுகுநுனி)

3.வேதாஅசமூகம் பிழைக்க.....
வேதாள சமூகம் பிழைக்க - போர் மடிந்தால் தான் பேய்களுக்கு உண்பதற்கு  அசுரப் பிணங்கள் நிறைய கிடைக்கும்.

பிரளய காலத்தில் உலகம் அழியும் முன் வட துருவத்திலிருந்து வரும் நெருப்பு வடவாக்கினி என்பர்
ஒப்புக: நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே
மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே - தாயுமானவர்

No comments:

Post a Comment