பின் தொடர்வோர்

Wednesday 6 June 2018

333.ஆவி காப்பது


333
பொது


          தான தாத்தன தாத்தன தான தாத்தன தாத்தன
            தான தாத்தன                           தனதானா


ஆவி காப்பது மேற்பத மாத லாற்புரு டார்த்தமி
      தாமெ னாப்பர மார்த்தம                         துணராதே
ஆனை மேற்பரி மேற்பல சேனை போற்றிட வீட்டொட
     நேக நாட்டொடு காட்டொடு                      தடுமாறிப்
பூவை மார்க்குரு காப்புதி தான கூத்தொடு பாட்டொடு
      பூவி னாற்றம றாத்தன                           கிரிதோயும்
போக போக்யக லாத்தொடு வாழ்ப ராக்கொடி ராப்பகல்
      போது போக்கியெ னாக்கையை               விடலாமோ
தேவி பார்ப்பதி சேர்ப்பர பாவ னார்க்கொரு சாக்ரஅ
      தீத  தீக்ஷைப ரீக்ஷைக                          ளறவோதுந்
தேவ பாற்கர நாற்கவி பாடு லாக்ஷண மோக்ஷதி
     யாக ராத்திகழ் கார்த்திகை                    பெறுவாழ்வே
மேவி னார்க்கருள் தேக்கது வாத சாக்ஷஷ டாகூர
     மேரு வீழ்த்தப ராக்ரம                              வடிவேலா
வீர ராக்கத ரார்ப்பெழ வேத தாக்ஷக னாக்கெட
     வேலை கூப்பிட வீக்கிய                        பெருமாளே.
 
பதம் பிரித்தல்


ஆவி காப்பது மேல் பதம் ஆதலால் புருடார்த்தம்
  இதாம் எனா பரமார்த்தம் அது உணராதே

ஆவி காப்பது - உயிரைக் காத்து உய்விப்பது. மேல் பதம் ஆதலால் - தகுதியான செயல் ஆதலால். புருடார்த்தம் – புருஷார்த்தம் -அறம், பொருள், இன்பம், வீடு எனப்பட்ட உறுதிப்பொருள்கள். இதாம் எனா - இது ஆம் என்று உணர்ந்து. பரமார்த்தம் அது உணராதே - மேலாம் உண்மைப் பொருளைத் தெரிந்து கொள்ளாமல்.

ஆனை மேல் பரி மேல் சேனை போற்றிட வீட்டொடு
  அநேக நாட்டொடு காட்டொடு தடுமாறி

ஆனை மேல் பரி மேல் - யானையின் மீதும் குதிரையின் மீதும். பல சேனை போற்றிட - பல படைகள் போற்றி செய்ய. வீட்டோடு - வீட்டிலும். அநேக நாட்டொடு - பல நாட்டிலும். காட்டொடு - காட்டிலும். தடுமாறி - உலவித் தடுமாறுதல் உற்று.

பூவைமார்க்கு உருகா புதிதான கூத்தொடு பாட்டொடு
  பூவின் நாற்றம் அறா தன கிரி தோயும்

பூவைமார்க்கு - மாதர் மயக்கில். உருகா - மனம் உருகி. புதிதான கூத்தொடு - புதிய புதிய கூத்துடனும். பாட்டொடு - பாட்டுடனும். பூவின் நாற்றம் அறா - மலர்களின் நறு மணம் நீங்காத. தனகிரி தோயும் - கொங்கையாகிய மலைகளில் தோய்கின்ற.

போக போக்ய கலாத்தொடு வாழ் பராக்கொடு இராப்பகல்
  போது போக்கி என் ஆக்கையை விடலாமோ

போக போக்ய - இன்பம் அனுபவிப்பதிலும். கலாத்தொடு - ஊடல்களிலும். வாழ் - வாழ்கின்ற. பராக்கொடு - விளையாடல்களில். இராப்பகல் - இரவும் பகலும். போது போக்கி - பொழுதைப் போக்கி. என் ஆக்கையை - என்னுடைய உடலை. விடலாமோ-விட்டுப் போதல் நன்றோ?

தேவி பார்ப்பதி சேர் பர பாவனார்க்கு ஒரு சாக்ர
  அதீத தீக்ஷை பரீக்ஷைக அற ஓதும்

தேவி பார்ப்பதி - தேவியாகிய பார்வதி. சேர் - சேர்கின்ற. பர - மேலான. பாவனார்க்கு - தூயவனாகிய சிவபெருமானுக்கு. ஒரு - ஒப்பற்ற. சாக்கிர அதீத – ஜாக்கிர அதீத-ஆன்மா தத்துவங்களுடன் கூடி நிற்கும் நிலைக்கு மேற்பட்டதான. தீக்ஷை பரீக்ஷைக -  உபதேசங்களையும், உபதேச விளக்கங்களையும். அற - முழுவதும். ஓதும் - ஓதிய.

தேவ பாற்கர நாற் கவி பாடு லாக்ஷணம் மோக்ஷ தியாக
  ரா திகழ் கார்த்திகை பெறு வாழ்வே

தேவ - தேவனே. பாற்கர - ஞான சூரியனே. நாற் கவி பாடும் - ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்ற நான்கு வகைக் கவிகளை ஞான சம்பந்தராகப் பாடிய. லக்ஷண - அழகு வாய்ந்தவனே. மோக்ஷ தியாக - வீடு பேறு அளிக்கும் அருள் வள்ளலே. ரா - இரவில். திகழ் - விளங்கும். கார்த்திகை பெறு வாழ்வே - கார்த்திகைப் பெண்கள் பெற்ற செல்வமே.

மேவினார்க்கு அருள் தேக்க துவாதச அக்ஷ ஷடாக்ஷர
  மேரு வீழ்த்த பராக்ரம வடிவேலா
மேவினார்க்கு அருள் தேக்க - விரும்பி உன்னை
அடைந்தவர்களுக்கு அருள் பொழியும். துவாதச அக்ஷ - பன்னிரு கண்களை உடையனே. ஷடாக்ஷர - ஆறு திரு எழுத்துக்கு உரியவனே. மேரு - மலை (இங்கு கிரௌஞ்சம்). வீழ்த்த - வெட்டித் தள்ளிய. பராக்ரம வடிவேலா - வல்லமை படைத்தவனே.

வீர ராக்கதர் ஆர்ப்பு எழ வேத தாக்ஷகள் நா கெட
  வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே.

வீர - வீரனே. ராக்கதர் ஆர்ப்பு எழ - அசுரர்கள் அலறும் கூச்சல் எழுப்பவும். வேத தாக்ஷகள் - வேதத் தலைவனாகிய பிரமனது. நா - சொல். கெட - ஒடுங்கவும் (பொருள் தெரியாது மயங்கவும்). வேலை கூப்பிட - கடல் ஓலமிடவும். வேலை வீக்கிய - வேலாயுதத்தை வேகமாக செலுத்திய. பெருமாளே - பெருமாளே.


சுருக்க உரை
அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் உறுதிப் பொருள்கள் என உணர்ந்து, மேலான உண்மைப் பொருளைத் தெரிந்து கொள்ளாமல், யானை, குதிரை இவற்றின் மேல் ஏறி, வீடு, நாடு, காடு ஆகியவற்றில் இன்பத்தைத் தேடி தடுமாற்றம் அடைந்து, மாதர் மயக்கில் உருகி, இரவும் பகலும், பொழுது போக்குவதிலேயே காலம் கழித்து என் உடலை விட்டுப் போதல் நன்றோ?
தேவியான பார்வதியுடன் கூடிய தூயவனாகிய சிவ பெருமானுக்கு, ஆத்ம  தத்துவங்களையும் விளக்கங் களையும் ஓதிய தேவனே, ஞான சூரியனே, நாலு வகையான கவிதைகளையும் ஞான சம்பந்தராக அவதரித்துப் பாடிய அழகனே, வீட்டுப் பேற்றை அளிக்கும் கருணை வள்ளலே.
உன்னை அடைந்தவர்களுக்கு அருள் நிறைய கொடுப்பவனே, கிரௌஞ்ச மலையை அழித்த கூரிய வேலாயுதனே, அசுரர்கள் கூச்சலிடவும், பிரமனுடைய நா ஒடுங்கவும், கடல் கலங்கவும் வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே. மாதர்களுடன் வீணாகப் பொழுது போக்காமல் இருக்க அருள் புரிக


விளக்கக் குறிப்புகள்

கார்த்திகை பெறு வாழ்வே....
     உவகையொடு கிர்த்திகையர் அறுவரும் எடுக்கஅவர்
     ஒருவரொடு வர்க்கவணொர் ஓர்புத்ரன் ஆனவனும்
--வேடிச்சி காவலன்  வகுப்பு 3.


No comments:

Post a Comment