பின் தொடர்வோர்

Sunday 5 September 2021

467. பேதகவிரோத

 

467

திருவருணை

           தானதன தானத் தானதன தானத்

               தானதன தானத்               தனதான

 

பேதகவி ரோதத் தோதகவி நோதப்

   பேதையர்கு லாவைக்              கண்டுமாலின்

பேதைமையு றாமற் றேதமக லாமற்

    பேதவுடல் பேணித்                தென்படாதே

சாதகவி காரச் சாதலவை போகத்

   தாழ்விலுயி ராகச்                சிந்தையாலுன்

தாரைவடி வேலைச் சேவல்தனை யேனற்

   சாரல்மற மானைச்                சிந்தியேனோ

போதகம யூரப் போதகக டாமற்

   போதருணை வீதிக்                 கந்தவேளே

போதகக லாபக் கோதைமுது வானிற்

   போனசிறை மீளச்                  சென்றவேலா

பாதகப தாதிச் சூரன்முதல் வீழப்

   பாருலகு வாழக்                   கண்டகோவே

பாதமலர் மீதிற் போதமலர் தூவிப்

   பாடுமவர் தோழத்                   தம்பிரானே

 

பதம் பிரித்து உரை 

பேதக விரோத தோதக விநோத

பேதையர் குலாவை கண்டு மாலின்

 

பேதக - மனம் வேறுபட்ட 

விரோதபகைமை 

தோதகவஞ்சகம்இவைகளைக் கொண்ட 

விநோத - விசித்திரமான 

பேதையர் - பேதையராகிய மங்கையர்கள் 

குலாவைமகிழ்ச்சியுடன் உறவாடுதலை 

கண்டுபார்த்து 

மாலின்மோகத்தால் 

பேதைமை உறா மற்று ஏதம் அகலாமல்

பேத உடல் பேணி தென் படாதே

 

பேதைமை உறா - அறியாமை உற்று 

மற்று ஏதம் அதனால் குற்றம் குறைகள் 

அகலாமல்என்னை விட்டு நீங்காமல் 

பேதம் - மாறுதலை அடையும் 

உடல் பேணி உடலை விரும்பிப் பாதுகாத்து 

தென் படாதேவெளியே உலவாமல்

சாதக(ம்) விகார சாதல் அவை போக

தாழ்வில் உயிராக சிந்தையால் உன்

 

சாதக(ம்) - பிறப்பும் 

விகாரம் - (பாலன்குமரன்கிழவன் என்னும் வேறுபாடும் 

சாதல்இறப்பும்  

அவை போக – ஆகிய இவைகள் தொலைய 

தாழ்வு இல் - குறைவு இல்லாத உயிராக - என் உயிர் விளங்க 

சிந்தையால் – மனத்தால் 

தாரை வடிவேலை சேவல் தனை ஏனல்

சாரல் மற மானை சிந்தியேனோ

 

உன் தாரை - உனது புகழ் கொண்ட 

வடி வேலை – கூர்மையான வேலையும் 

சேவல் தனைசேவலையும் 

ஏனல் சாரல்தினைப் புன மலைச் சாரலில் இருந்த 

மற மானைவேடர்களின் மான் போன்ற 

வள்ளியையும் சிந்தியேனோதியானிக்க மாட்டேனோ?

 

போதக மயூர போதக போது அக அகடு மன்

போது அருணை வீதி கந்த வேளே 

போதகம் - யானை 

மயூர(ம்) - மயில் (இவைகளின் மேல்) போது 

அக(ம்) - மலர் ஆசனம் இட்ட 

அகடு மன் போது -நடு இருப்பிடத்தில் எழுந்தருளி வருகின்ற 

அருணை வீதி -அண்ணாமலை வீதியில் உள்ள 
கந்த வேளே – கந்தப் பெருமானே 

போதக கலாப கோதை முது வானில்

போன சிறை மீள சென்ற வேலா

 

போதகம் - யானையாகிய ஐராவதம் வளர்த்த 

கலாபக் கோதை - மயில் போன்ற தேவசேனை 

வாழ்ந்த முதுபழைய 

வானில் – விண்ணுலகத்தார்

 போன - சென்றிருந்த 

சிறை மீளசிறையினின்றும் அவர்கள் மீண்டு வர 

சென்ற போருக்கு 

எழுந்த வேலா - வேலனே

 

பாதக பதாதி சூரன் முதல் வீழ

பார் உலகு வாழ கண்ட கோவே

 

பாதாக - பெரிய பாபச் செயல்களைச் செய்த 

பதாதி - காலாட்படைகளை உடைய 

சூரன் முதல் வீழ - சூரன் முதலானோர் வீழ்ந்து மடிய 

பார் உலகு வாழமண்ணுலகும்விண்ணுலகும்

வாழும் பொருட்டு கண்ட 

கோவேகருணை புரிந்த தலைவனே 

பாத மலர் மீதில் போது மலர் தூவி

பாடும் அவர் தம்பிரானே 

 பாத மலர் மீதில்உனது திருவடி மலரை நினைந்து போது 

மலர் தூவி - ஞான பூசனை செய்து 

பாடும் அவர் தோழ பாடும் தொண்டர்களுடைய தோழனே 

தம்பிரானே - தம்பிரானே

 

சுருக்க உரை

பகைமையும் வஞ்சகமும் கொண்ட விலை மாதர்களுடன் உறவாடுவதால் என்அறியாமை அதிகரித்துஅதனால் ஏற்படும் குற்றங்கள் என்னை விட்டு நீங்காதுஉடலை விரும்பிப் போற்றிநான் வாழாமல்பிறப்பும்இறப்பும் தொலைந்து என் உயிர் விளங்கும் பொருட்டுஉனது கூர்மையான வேலையும்சேவலையும்வேடப் பெண் வள்ளியையும் தியானிக்க மாட்டேனோ?

யானைமயில் இவைகளை நடுவில் அமைத்துத் திருவண்ணாமலை வீதியில் உள்ள கந்தவேளே! ஐராவதம் என்ற யானை வளர்த்த தேவசேனை வாழ்ந்த விண்ணுலகத்தோர் சிறையினின்று மீளும்படி போருக்கு எழுந்த வேலனே! சூரனும் அவனுடைய

சேனைகளும் மடியவும்மண்ணும் விண்ணும் வாழவும் கருணை புரிந்த தலைவனே! உனது திருவடி மலரை நினைத்துஞான பூசனை செய்யும் தொண்டர்களுடைய தோழனே! தம்பிரானே! வேல்சேவல்இவைகளையும்வள்ளி அம்மையையும் தியானிக்க மாட்டேனோ?

விளக்கக் குறிப்புகள்

போதகம் மயூரப் போது அக

அருள் செய்வதற்கும் போர் புரிவதற்கும் எழுந்தருளும் போது முருக வேள் பிணிமுகம்  என்னும் யானை மீது செல்வார் என்பர்

கடுஞ்சின விறல்வேள் களிறூர்ந் தாங்கு      --------    பதிற்றுப் பத்து  

மாறாவென்றிப் பிணிமுக ஊர்தி ஒண்செய்யோனும் ------                                                                                                                   புறநானூறு  

சேயுயர் பிணிமுகம் ஊர்ந்தமர் உழக்கி                -    -----      பரிபாடல் 

ஓடாப் பூட்கை பிணிமுகம் வாழ்த்தி

வேண்டுநர் வேண்டியாங் கெய்தினர் வழிபட- திருமுருகாற்றுப் படை 

சாதக விகாரச் சாதல் - துன்பமான பிறப்பு இறப்பு


பாடலை கேட்க                   rev 9-8-2022 

 


No comments:

Post a Comment