பின் தொடர்வோர்

Monday 6 September 2021

468. வலிவாத பித்தமொடு



திருவருணை

 

         தனதான தத்ததன தனதான தத்ததன

             தனதான தத்ததன                 தனதான

 

வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி

   வறள்சூலை குட்டமொடு             குளிர்தாகம்

மலநீரி ழிச்சல்பெரு வயிறீளை கக்குகளை

   வருநீர டைப்பினுடன்                 வெகுக்டி

சிலைநோய டைத்தவுடல் புவிமீதெ டித்துழல்கை

   தெளியாவெ னக்குமினி              முடியாதே

சிவமார்தி ருப்புகழை எனுநாவி னிற்புகழ்

   சிவஞான சித்திதனை              யருள்வாயே

தொலையாத பத்தியுள திருமால்க ளிக்கவொரு

   சுடர்வீசு சக்ரமதை                 யருள்ஞான

துவர்வேணி யப்பன்மிகு சிவகாமி கர்த்தன்மிகு

   சுகவாரி சித்தனருள்               முருகோனே

அலைசூரன் வெற்புமரி முகனானை வத்திரனொ

   டசுராரி றக்கவிடு                 மழல்வேலா

அமுதாச னத்திகுற மடவாள்க ரிப்பெணொடும்

   அருணாச லத்திலுறை              பெருமாளே

 

 பதம் பிரித்து உரை

 வலி வாத பித்தமொடு களம் மாலை விப்புருதி

வறள் சூலை குட்டமொடு குளிர் தாகம்

வலி - இழுப்பு நோய் வாதம் பித்தம்மொடு - பித்த நோய் மற்றும் களம் மாலை - கண்ட மாலை விப்புருதி - சிலந்திப்

புண் வறள் - உடல் மெலிதல் சூலை - வயிற்றுணவு நோய் குட்டமொடு - குட்ட நோய் குளிர் தாகம் - குளிர், தாகம்

ஆகியவை

 மலி நீர் இழிச்சல் பெரு வயிறு ஈளை கக்கு களை

வரு நீர் அடைப்பினுடன் வெகு கோடி

 மலி - மிக்க நீரிழிச்சல் - நீரிழிவு பெரு வயிறு – மகோதரம் ஈளை - கோழை கக்கு - வாந்தி களை - அயர்வு வரு -

வருகின்ற நீர் அடைப்பினுடன் - மூத்திர அடைப்பு ஆகியவற்றுடன் வெகு கோடி - பல கோடிக் கணக்கான

 சிலை நோய் அடைத்த உடல் புவி மீது எடுத்து உழல்கை 

தெளியா எனக்கும் இனி முடியாதே

 சிலை நோய் - கோபித்து எழும் நோய்களை அடைத்த உடல் -

அடைத்துள்ள இந்த உடலை  புவி மீது எடுத்து – பூமியில் பிறந்து எடுத்து உழல்கை - திரிதல் தெளியா - தெளிந்த அறிவு இல்லாத எனக்கும் இனி முடியாதே - என்னாலும் இனி முடியாது

 சிவம் ஆர் திரு புகழை எனு நாவினில் புகழ

சிவ ஞான சித்தி தனை அருள்வாயே

சிவம் ஆர் - மங்கலம் நிறைந்த திருபுகழை – உனது திருப்புகழை எனு நாவினில் - என்னுடைய நாவால் புகழ - புகழ்ந்துரைக்க சிவஞான சித்தி தனை - சிவஞான சித்தியை அருள்வாயே - தந்து அருள்வாயாக

 

தொலையாத பத்தி உ(ள்)ள திருமால் களிக்க ஒரு

சுடர் வீசு(ம்) சக்ரம் அதை அருள் ஞான

தொலையாத - நீங்காத பத்தி உள்ள - பக்தியைக் கொண்ட திருமால் களிக்க - திருமால் மகிழும்படி ஒரு - ஒப்பற்ற சுடர் வீசும் - ஒளியை வீசும் சக்ரம் அதை - சக்கரத்தை அருள் - அவருக்கு அருளிய ஞான - ஞான மயமான

 

துவர் வேணியப்பன் மிகு சிவகாமி கர்த்தன் மிகு 

சுக வாரி சித்தன் அருள் முருகோனே

துவர் - பவள நிறம் கொண்ட வேணியப்பன் – சடையப்பன் மிகு - (புகழ்) மிகுந்த சிவகாமி கர்த்தன் - சிவகாமி அம்மையின் தலைவன் மிகு சுகவாரி சித்தன் - மிக்கக் கடல் போன்ற சித்த மூர்த்தி அருள் முருகோனே – அருளிய முருகனே

 

அலை சூரன் வெற்பும் அரி முகன் ஆனை வத்திரனோடு

அசுரார் இறக்க விடும் அழல் வேலா

 அலை - கடல் சூரன் - சூரன் வெற்பு - கிரவுஞ்ச மலை அரி முகன் - சிங்காமுகன் ஆனை வத்திரனொடு - யானை முகன் (தாரகன்), மற்றும் அசுரார் - அசுரர்கள் யாவரும் இறக்க - இறந்து போகும்படி விடும் - செலுத்திய அழல் வேலா - நெருப்பு வேலனே

அமுத ஆசனத்தி குற மடவாள் கரி பெண்ணோடும்

அருணாசலத்தில் உறை பெருமாளே

 அமுத ஆசனத்தி - அமுத மயமான பீடத்தினளாகிய குறமடவாள் - குறப்பெண்ணாகிய வள்ளி கரிப் பெண்ணொடும் - (ஐராவதம் என்னும்) யானையால் வளர்க்கப்பட்ட

தேவசேனையுடன் அருணாசலத்தில் உறை பெருமாளே - திருவண்ணா மலையில் வீற்றிருக்கும் பெருமாளே

 

சுருக்க உரை

 

வலி, வாதம், பித்தம், கண்டமாலை, சூலை, நீரிழிவு, குட்டம் என்னும் கோடிக் கணக்கான நோய்களுடன் கூடிய இந்த உடலை எடுத்துப் பூமியில் மீண்டும் மீண்டும் பிறந்து திரிதல் இனி என்னல் முடியாது மங்கலம் நிறைந்த உன் திருப்புகழைப் பாட சிவ ஞான சித்தியைத் தந்து அருளுக

நிறைந்த பத்தி கொண்ட திருமாலுக்கு ஒப்பற்ற சுடர் வீசும் சக்கரத்தை அளிதருளிய சடையப்பன் சிவகாமி அம்மையின் தலைவன் கடல் போன்ற சுக வாரியாகிய சித்த மூர்த்தி அருளிய முருகனே கடல், சூரன், கிரவுஞ்சம், சிங்கமுகன், யானை முகன்

இன்னும் பல அசுரர்கள் இறந்து பட நெருப்பு வேலைச்  செலுத்தியவனே அமுத மயமான பீடத்தினளாகிய வள்ளி அம்மை, தேவசேனை ஆகிய இருவருடன் திருவண்ணா மலையில் வீற்றிருக்கும் பெருமாளே உன் திருப்புகழை என் நாவால் பாட சிவஞான சித்தியைத் தந்து அருள வேண்டும்

 

விளக்கக் குறிப்புகள்

 

வலி வாத பித்தமொடு

 வலி -- அமரகண்டம், குமர கண்டம், பிரம கண்டம், காக்கை வலி, முயல்வலி என  ஐவகைப் பட்ட வலிகள்

 

பத்தியுள திருமால் களிக்க ஒரு சுடர் வீசும் சக்கரமதை

 உடல்தடியு மாழி தாவெ னம்புய்

 மலர்கள் தச நூறு தாளி டும்பக

 லொருமலரி லாது கோவ ணிந்திடு செங்கண்மாலுக்

 குதவிய கேசர்                       திருப்புகழ், படர்புவியின் 

 

நீற்றினை நிறையப்பூசி நித்தல் ஆயிரம் பூக்கொண்டு 

ஏற்றுழி ஒரு நாள் ஒன்று குறைய கண் நிறைய இட்ட

ஆற்றலுக்கு ஆழி நல்கி அவன் கொணர்ந்து இழிச்சும் கோயில்  வீற்ரிருந்து அளிப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே

                                            -  திருநாவுக்கரசர் தேவாரம்



பாடலை கேட்க          Rev 9-8-2022

No comments:

Post a Comment