பின் தொடர்வோர்

Saturday 4 April 2020

416. மோது மறலி


416
பொது

                 தான தனதனன தான தாத்தன
                      தான தனதனன தான தாத்தன
                      தான தனதனன தான தாத்தன     தனதான

மோது மறலியொரு கோடி வேற்படை
   கூடி முடுகியெம தாவி பாழ்த்திட
   மோக முடையவெகு மாதர் கூட்டமு                மயலாரும்
மூளு மளவில்விசை மேல்வி ழாப்பரி
   தாப முடனும்விழி நீர்கொ ளாக்கொடு
   மோக வினையில்நெடு நாளின் மூத்தவ  ரிளையோர்கள்
ஏது கருமமிவர் சாவெ னாச்சிலர்
   கூடி நடவுமிடு காடெ னாக்கடி
   தேழு நரகினிடை வீழ்மெ னாப்பொறி              யறுபாவி
ஏழு புவனமிகு வான நாட்டவர்
   சூழு முநிவர்கிளை தாமு மேத்திட
   ஈச னருள்குமர வேத மார்த்தெழு              வருவாயே
சூது பொருதரும னாடு தோற்றிரு
   வாறு வருஷம்வன வாச மேற்றியல்
   தோகை யுடனுமெவி ராட ராச்சிய               முறைநாளிற்
சூறை நிரைகொடவ ரேக மீட்டெதி
   ராளு முரிமைதரு மாறு கேட்டொரு
   தூது செலஅடுவ லாண்மை தாக்குவ                னெனமீள
வாது சமர்திருத ரான ராட்டிர
   ராஜ குமரர்துரி யோத னாற்பிறர்
   மாள நிருபரொடு சேனை தூட்பட                      வரிசாப
வாகை விஜயனடல் வாசி பூட்டிய
   தேரை முடுகுநெடு மால்ப ராக்ரம
   மாயன் மருகஅமர் நாடார் பார்த்திப             பெருமாளே

பதம் பிரித்து உரை

மோது மறலி ஒரு கோடி வேல் படை
கூடி முடுகி எமது ஆவி பாழ்த்திட
மோகம் உடைய வெகு மாதர் கூட்டமும் அயலாரும்

மோது மறலி - தாக்குகின்ற யமன். ஒரு - தனது ஒப்பற்ற. கோடி வேல் படை - கூரிய வேற்படையுடன். கூடி முடுகி - வேகமாக வந்து. எமது ஆவி - எனது உயிரை. பாழ்த்திட - (உடலினின்றும்) பிரிக்க. மோகம் உடைய - (என் மேல்) ஆசை கொண்டிருந்த. வெகு மாதர் கூட்டமும் - பல மாதர்களின் கூட்டமும். அயலாரும் பிறரும்.

மூளும் அளவில் விசை மேல் விழா
பரிதாபமுடனும் விழி நீர் கொளா கொடு
மோக வினையில் நெடு நாளின் மூத்தவர் இளையோர்கள்

மூளும் அளவில் - (துக்கம்) மூண்டு எழுந்தவுடன். விசை - வேகத்துடன். மேல் விழா - மேலே விழுந்து. பரிதாபமுடனும் - இரக்கத்துடனே. விழி நீர்க் கொளா - கண்ணீர் கொண்டு நிற்க. கொடு - கொடிய. மோக வினையில் - உலக மயக்கத்தின் காரணமாக. நெடு நாளின் - பல நாள். மூத்தவர் இளையோர்கள் - மூத்தவர்களும், இளைமையானவர்களும்.

ஏது கருமம் இவர் சாவு எனா சிலர்
கூடி நடவும் இடு காடு எனா கடிது
ஏழு நரகின் இடை வீழும் என பொறுயறு பாவி

ஏது கருமம் இவர் சாவு எனா - இவர் இறந்ததற்கு என்ன காரணம் என்ற விசாரணை பிறவாத வகைக்கும். சிலர் கூடி நடவும் - பிணத்துக்குப் பின் சிலர் கூடி நடவுங்கள். இடு காடு எனா - சுடு காட்டுக்கு என்று சிலர் கூறாத வகைக்கும். கடிது - (இவனை) விரைவாக. ஏழு நரகினிடை - ஏழு நரகினிடையே. வீழும் எனா - வீழ்த்துங்கள் என்று. பொறியறு பாவி - (இவன்) புலன்களை நல்ல வழியில் செலுத்தாத பாவி (என்று யம புரியில் கூறாத வகைக்கும்).

ஏழு புவனம் மிகு வான நாட்டவர்
சூழும் முநிவர் கிளை தாமும் ஏத்திட
ஈசன் அருள் குமர வேதம் ஆர்த்து எழ வருவாயே

ஏழு புவனம் - ஏழு உலகங்களும். மிக - சிறந்த. வான நாட்டவர் - தேவ உலகோரும். சூழும் - சூழ்ந்துள்ள. முனிவர் கிளை தாமும் - முனிவர் கூட்டங்களும். ஏத்திட - போற்றி நிற்க. ஈசன் அருள் குமர - சிவபெருமான் அருளிய குமரனே. வேதம்  ஆர்த்து எழ - வேதம் ஒலித்து எழ. வருவாயே - எழுந்தருள்வாயே.

சூது பொரு தருமன் நாடு தோற்று இரு
ஆறு வருஷம் வன வாசம் ஏற்று இயல்
தோகை உடனும் விராட ராச்சியம் உறை நாளில்

சூது பொரு - சூதாட்டம் ஆடிய. தருமன் - தரும ராஜர். நாடு தோற்று - தன் நாட்டை இழந்து. இரு ஆறு வருஷம் - பன்னிரண்டு ஆண்டுகள். வன வாசம் ஏற்று - காட்டில் வாழும் வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு. இயல் தோகையுடனுமே - உழவலன்பும் உடைய மயில் போன்ற துரோபதையுடன். விராட ராச்சியம் உறை நாளில் - விராட அரசனுடைய நாட்டில் காலம் கழித்து வந்த நாளில்.

சூறை நிரை கொடு அவர் ஏக மீட்டு எதிர்
ஆளும் உரிமை தருமாறு கேட்டு ஒரு
தூது செல அடு வல் ஆண்மை தாக்குவன் என் மீள

நிரை - பசுக்களை. சூறை கொடு - கொள்ளை அடித்துக் கொண்டு. அவர் ஏக - துரியோதனாதியர் செல்ல. மீட்டு - அப்பசுக்களை மீட்டு. எதிர் - எதிர்ச் சென்று. ஆளும் உரிமை - அரசாட்சி உரிமையை. தருமாறு - தரும்படி. கேட்டு - கேட்க. ஒரு - ஒப்பற்ற. தூது செல - தூதை அனுப்ப. அடு வல் ஆண்மை - போருக்கு உரிய வலிய ஆண்மையோடு. தாக்குவன் என  - தாக்குதலை ஒழிய (அரசுரிமையைத் தரமாட்டேன்) என்று துரியோதனன் கூற. மீள - தூதினின்றும் மீளவும்.

வாது சமர் திருதரானராட்டிர
ராஜ குமரர் துரியோதனால் பிறர்
மாள நிருபரொடு சேனை தூட்பட வரி சாப

வாது - தர்க்கித்து. சமர் - போருக்கு வந்த. திருதரானராட்டிர ராஜ குமரர் - திருதராஷ்டிர ராஜனுடைய குமாரர்களான. துரியோதனாற் பிறர் - துரியோதனனும் அவன் தம்பிகளும். மாள - இறந்து பட. நிருபரோடு - பிற அரசர்களோடும். சேனை தூள் பட - சேனைகள் எல்லாம் தூளாக. வரி - கட்டப்பட்ட. சாபம் - வில்லினால் வரும்.

வாகை விஜயன் அடல் வாசி பூட்டிய
தேரை முடுகி நெடு மால் பராக்ரம
மாயன் மருக அமர் நாடர் பார்த்திப பெருமாளே.

வாகை - வெற்றியைக் கொண்ட. விஜயன் - அருச்சுனனுடைய. அடல் - வலிய. வாசி பூட்டிய - குதிரைகள் பூட்டிய. தேரை - இரதத்தை. முடுகு - செலுத்திய. நெடுமால் - பெரிய திருமால். பராக்ரம மாயன் - வல்லமை பொருந்திய மாயோனின். மருக - மருகனே. அமர் நாடர் - விண்ணுலகத்தோருக்கு. பார்த்திப - அரசராகிய. பெருமாளே - பெருமாளே.

சுருக்க உரை

யமனானவன் தனது கூரிய வேற்படையுடன் வேகமாக வந்து என் உயிரை உடலிருந்து பிரிக்க, என் மேல் ஆசை கொண்டிருந்த மாதர்கள் துக்கம் மிகுந்து, கண்ணீர் விட்டு இரக்கத்துடன் நிற்க, மூத்தவர்களும் சிறியவர்களும், இவனிறக்க என்ன காரணம் என்று கேட்பதற்குமுன், சுடு காட்டுக்குச் சீக்கிரம் எடுத்து போங்கள் என்று சிலர் சொல்வதற்குமுன், இவனை ஏழு நரகில் வீழ்த்துங்கள் என்று கூறுவதற்குமுன், தேவர்களும், முனிவர்களும் சூழ வந்து போற்றி நிற்க, சிவ பெருமான் அருளிய குருமூர்த்தியே, வேதம் ஒலிக்க எழுந்தருள்வாயாக.

சூதாட்டம் ஆடிய தருமர், தன் நாட்டை இழந்து, பன்னிரண்டு ஆண்டுகள் வன வாசம் செய்ய மேற்கொண்டு, திரௌபதையுடன் விராட நாட்டில் காலம் கழித்து வந்த நாளில், துரியோதனன் முதலானோர் பசுக் கூட்டங்களைக் கொள்ளை அடித்துக் கொண்டு போக, அப்பசுக்களை மீட்டு, ஒப்பற்ற தூதுவனை அனுப்பித், தமக்கு அரசு உரிமையக் கேட்க, அதை மறுத்து போருக்கு வந்த துரியோதனனும், அவன் தம்பிகளும், சேனைகளும் தூளாகச் செய்து வெற்றி அடைந்த அருச்சனனுடைய தேரைச் செலுத்திய திருமாலின் மருகனே, தேவர்கள் பெருமாளே, வேதங்கள் ஒலிக்க என் முன்னே எழுந்தருள்வாயாக.

விளக்கக் குறிப்புகள்
இப்பாடலில் பாரதக் கதை சுருக்கமாக கூறப்பட்டுள்ளது.

ஏழு நரகினிடை வீழ்...
    எரிவாய் நரகில் புகுதா தபடிக்
    கிருபா தமெனக் கருள்வாயே...திருப்புகழ் அரக்கார்நல.
     கும்பியிலே விழுந்திட – திருப்புகழ், மூல மந்திரம்
 [ ( ஏழு நரகங்கள் - கூடசாலம், கும்பி பாகம், அள்ளல், அதோ கதி, ஆர்வம், பூதி, செந்து.
பாவிகளை சூளையில் சுடுவது போல வாட்டும் நரகம் கும்பி பாகம். இவற்றின் உட் பிரிவுகள் நூற்றுக் கணக்கானவை. உதாரணமாக,  ரௌரவம் - பிறன் பொருட்களைக் கவர்ந்தோர் ருறு எனும் மிருகங்களால் தண்டிக்கப் படுவர். வைதரணி சீழ் ரத்தம் ஓடும் நதி. உலகில் கோதானம் செய்பவர்களை ஒரு பசு வந்து அக்கரைக்குக் கொண்டு செல்லும். இது எல்லாம் புராண கற்பனை என்று எண்ண வேண்டாம் அவை உண்மையே என்று ஆன்றோர் பலர் எச்சரித்து இருக்கிறார்கள். எரிவாய் நரக குழியும் துயரும், விடாய்ப்பட கூற்றுவன் ஊருக்குச் செல்ல வழியும் பகரீர் பகரீர் மறந்தவற்கே - கந்தர் அலங்காரம். கொல்லிடு கொல்லிடு குத்தென்று எனக் கூறிய மாக்களை வல்லிடுக் காலர் வலிக் கயிற்றால் கட்டி செல்லிடு நில் என்று தீ வாய் நரகிடை நில் அடும் என்று நிறுத்துவர் தாமே - திருமந்திரம். )  -  நடராஜன் ]

  

No comments:

Post a Comment