பின் தொடர்வோர்

Saturday 4 April 2020

421.வேத வித்தகா


421
பொது

தான தத்தனா தானா தனாதன
தான தத்தனா தானா தனாதன
தான தத்தனா தானா தனாதன       தந்ததான

வேத வித்தகா சாமீ நமோநம
   வேல்மி குத்தமா சூரா நமோநம
   வீம சக்ரயூ காளா நமோநம                    விந்துநாத
வீர பத்மசீர் பாதா நமோநம
   நீல மிக்ககூ தாளா நமோநம
   மேக மொத்தமா யூரா நமோநம            விண்டிடாத
போத மொத்தபேர் போதா நமோநம
   பூத மற்றுமே யானாய் நமோநம
  பூர ணத்துளே வாழ்வாய் நமோநம      துங்கமேவும்
பூத ரத்தெலாம் வாழ்வாய் நமோநம
   ஆறி ரட்டிநீள் தோளா நமோநம
   பூஷ ணத்துமா மார்பா நமோநம              புண்டரீக
மீதி ருக்குநா மாதோ டுசேயிதழ்
   மீதி ருக்குமே ரார்மா புலோமசை
   வீர மிக்கஏழ் பேர்மா தர்நீடினம்         நின்றுநாளும்
வேத வித்தகீ வீமா விராகிணி
   வீறு மிக்கமா வீணா கரேமக
   மேரு வுற்றுவாழ் சீரே சிவாதரெ               யங்கராகீ
ஆதி சத்திசா மாதே விபார்வதி
   நீலி துத்தியார் நீணா கபூஷணி
   ஆயி நித்தியே கோடீ ரமாதவி            என்றுதாழும்
ஆர்யை பெற்றசீ ராளா நமோநம
   சூரை யிட்டுநீள் பேரா நமோநம
   ஆர ணத்தினார் வாழ்வே நமோநம      தம்பிரானே

பதம் பிரித்து உரை

வேத வித்தகா சாமீ நமோநம
வேல் மிகுத்த மா சூரா நமோநம
வீம(ம்) சக்ர யூகாளா நமோநம விந்து நாத

வேத வித்தகா - வேதத்தில் வல்ல பேரறிஞனே சாமீ - சாமியே  நமோநம - உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன் வேல் மிகுத்த - வேலயுதத்தைச் சிறப்புற ஏந்தும் மா - சிறந்த. சூரா - சூரனே. நமோநம - ---- வீமம் - அச்சம் தரக் கூடிய  சக்ர - சக்கர வடிவமாக அமைந்த. யூகாளா - படை வகுப்பை ஆண்டவனே நமோநம - ---- விந்து நாத - (சிவபெருமானுடைய நவ பேத வடிவுகளில்) அருவத் திரு மேனியாகிய நாத விந்துவாகிய. வீர - வீரனே.

வீர பத்ம சீர் பாதா நமோநம
நீல மிக்க கூதாளா நமோநம
மேகம் ஒத்த மாயூரா நமோநம விண்டிடாத

பத்ம சேர் - தாமரை போன்ற அழகுள்ள. பாதா - திருவடிகளை உடையவனே நமோநம - -----. நீலம் மிக்க - நீல நிறம் கொண்ட கூதாளா - கூதாளப் பூ மாலையனே நமோநம - ----- மேகம் ஒத்த - மேக நிறம் கொண்ட மாயூரா - மயில் வாகனனே நமோநம - ----- விண்டிடாத - வெளியே சொல்லுதற்கரிய

போத மொத்த பேர் போதா நமோநம
பூதம் மற்றுமே ஆனாய் நமோநம
பூரணத்துள்ளே வாழ்வாய் நமோநம துங்க மேவும்

போத - ஞான நிலையை. மொத்த பேர் - கூடினவர்களின் போதா - ஞானப் பொருளே நமோநம - உன்னை வணங்குகின்றேன் வணங்குகின்றேன் பூதம் - ஐந்து பூதங்களாய். மற்றுமே ஆனாய் - பிறவாகவும் விளங்குபவனே. நமோநம - ----. பூரணத்துளே வாழ்வாய் - பூரணப் பொருளாய் எல்லாமாய் வாழ்பவனே நமோநம - ----- துங்க மேவும் - பரிசுத்தம் உள்ள

பூதரத்து எல்லாம் வாழ்வாய் நமோநம
ஆறு இரட்டி நீள் தோளா நமோநம
பூஷணத்து மா மார்பா நமோநம புண்டரீக

பூதரத்து எல்லாம் வாழ்வாய் - மலைகளில் எல்லாம் வாழ்பவனே நமோநம ------ ஆறு இரட்டி - பன்னிரண்டு நீள் தோளா - பெரிய தோள்களை உடையவனே நமோநம ------- பூஷணத்து - ஆபரணங்கள் அணிந்த மா - அழகிய. மார்பா - மார்பனே நமோநம - ------- புண்டரீக - (வெள்ளைத்) தாமரையின்.

மீது இருக்கு நா மாதோடு சேய் இதழ்
மீது இருக்கும் ஏர் ஆர் மா புலோமசை
வீர மிக்க ஏழ் பேர் மாதர் நீடு இனம் நின்று நாளும்

மீது இருக்கும் - மேல் வீற்றிருக்கும் நா மாதோடு - கல்விக்குத் தலைவியாகிய சரஸ்வதியுடன் சே இதழ் மீது இருக்கும் - சிவந்த இதழ்களை உடைய செந்தாமரை மலர் மீது வீற்றிருக்கும் ஏர் ஆர் - அழகு நிறைந்த மா - இலக்குமியும் புலோமசை - இந்திராணியும் வீர மிக்க - வீரம் மிகுந்த ஏழ் பேர் மாதர் - சப்த மாதர்களும் நீடு இனம் நிற்கும் - அவர்களுடன் கூடி நிற்கும் எல்லாத் தெய்வ மகளிரும் எதிரே நின்று நாளும் - நாள் தோறும்

வேத வித்தகி வீமா விராகிணி
வீறு மிக்க மா வீணா கரே மகா
மேரு உற்று வாழ் சீரே சிவாதரே அங்க ராகீ

வேத வித்தக - வேத ஞானியே. வீமா - பயங்கரியே விராகிணி - பற்று அற்றவளே வீறு மிக்க - சிறப்பு நிரம்ப உள்ள மா - அழகிய வீணா கர - வீணையைக் கையில் ஏந்தியவளே மக - பெரிய மேரு உற்று வாழ் - மேருவில் விளங்கி வாழும் சீரே - சிறப்பை உடையவளே சிவாதரே - சிவனுடைய உடலில் பங்கு கொண்டவளே அங்க ராகீ - பரிமளத் திரவியங்களைப் பூசியுள்ளவளே

ஆதி சத்தி சாமா தேவி பார்வதி
நீலி துத்தி ஆர் நீள் நாக பூஷணி
ஆயி நித்தியே கோடீர மாதவி என்று தாழும்

ஆதி சத்தி - ஆதி சக்தியே சாமா தேவி - சாம வேதம் போற்றும் தேவியே பார்வதி -  உமையே நீலி - பச்சை நிறம் கொண்டவளே துத்தி ஆர் - புள்ளிகள் நிறைந்த நீள் நாக பூஷணி - பெரிய பாம்புகளை அலங்காரமாக அணிந்தவளே ஆயி - தாயே நித்தியே - என்றும் இருப்பவளே கோடீர மாதவி - சடை உள்ள துர்க்கா தேவி என்று தாழும் - என்று கூறி வணங்கும்.

ஆர்யை பெற்ற சீராளா நமோநம
சூரை அட்டு நீள் பேரா நமோநம
ஆரணத்தினார் வாழ்வே நமோநம தம்பிரானே.

ஆர்யை பெற்ற - உயர்வான தேவி பெற்ற சீராளனே - அழகானவனே நமோநம - ------ சூரை அட்டு - சூரனை வதைத்து நீள் பேரா - பெரும் புகழ் பெற்றவனே நமோநம - --------. ஆரணத்தினார் வாழ்வே - வேதம் கற்றவர்களின் செல்வமே. நமோநம - ------ தம்பிரானே - தம்பிரானே.

சுருக்க உரை

வேதம் வல்ல பேரறிவாளனே. வேலைச் சிறப்புடன் ஏந்தும் சூரனே. போரில் அச்சம் தரும் படை வகுப்பை ஆண்டவனே. சிவபெருமனுடைய வடிவங்களுள் அருவத் திருமேனியாகிய நாத விந்துவாகிய வீரனே. நீல நிறமான கூதளப் பூ மாலையோனே. மயில் வாகனனே. ஞானப் பொருளே. பஞ்ச பூதங்களையும் மற்ற பிறவாகவும் விளங்குபவனே. பூரணப் பொருளே. மலைகளில் வாழ்பவனே. ஆபரணங்கள் அணிந்த மார்பனே. உன்னை மீண்டும் மீண்டும் வணங்குகின்றேன்.

வெள்ளைத் தாமரையில் வாழும் சரஸ்வதி, செந்தாமரையில் வாழும் இலக்குமி, இந்திராணி ஆகியோர்களும், சப்த மாதர்களும் தினமும், வேத ஞானியே, பயங்கரியே, அழகிய வீணையைக் கையில் ஏந்தியவளே, மேரு மலை போல் வாழும் சிறப்பை உடையவளே, சிவபெருமானுடைய உடலில் பங்கு கொண்டவளே, ஆதி சக்தியே, சாம வேதம் போற்றும் தேவியே, நீலியே, பாம்புகளை அலங்காரமாக அணிந்தவளே, என்றும் அழிவில்லாதாவளே என்று வணங்கும் உமா தேவி பெற்ற சீராளனே, உன்னை நான் பல முறை வணங்குகின்றேன். சூரனை வதைத்துப் பெரும் புகழ் பெற்றவனே. வேதம் கற்றோரின் செல்வமே. தம்பிரானே. உன்னை வணங்கிப் போற்றுகிறேன்.

விளக்கக் குறிப்புகள்

வீம சக்ரயூகாளா....
யூகம் - படையின் அணி வகுப்பு. சக்ர வியூகம் - சக்கர வடிவமாகச் சேனையை
 ஒழுங்குபட நிறுத்தல்.

ஒப்புக
தேவியைக் கலைமகள், திருமகள் ஆகியோர் போற்றுவது....
தவள ரூப சரச்சு ரதி யிந்திரைதி புலோமசை க்ருத்திகை ரம்பையர் சமுக சேவித துர்க்கை பயங்கரி....திருப்புகழ் குவளைபூச.

விந்து நாத....
விந்து - சத்தி பேதம். நாதம் - சிவபேதம்.
ஒப்புக: நாத விந்துக லாதி நமோநம...திருப்புகழ், நாதவிந்து

நமோநம....
  நமோநம என்று வணங்குவதைக் கையாளும் சில பாடல்கள்.
 சத்தி பாணீ நமோநம, நாதவிந்துகலாதி, வேத வித்தகா, ஓது முத்தமிழ், போத   நிர்க்குண,

சப்த மாதர்கள் - அபிராமி, மகேசரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி.

 வீணா கர   தேவி கையில் வீணை உண்டு. இது விபஞ்சி எனப்படும். ஏழு தந்திகளை உடையது. கலை மகள் கையில் உள்ள வீணைக்கு ஒரு தந்தி அதற்கு கரவிந்தை எனப்படும். லக்ஷ்மியின் கையில் 5 தந்திகளை கொண்ட இருப்பது தான் “வீணை”.




No comments:

Post a Comment