பின் தொடர்வோர்

Sunday 2 December 2018

358.குகையில்

358
பொது
          தனதனன தானனந் தனந்த
          தனதனன தானனந் தனந்த                
          தனதனன தானனந் தனந்த          தனதான

குகையில்நவ நாதருஞ் சிறந்த
   முகைவனச சாதனுந் தயங்கு
   குணமுமசு ரேசருந் தரங்க                முரல்வேதக்
குரகதபு ராரியம்ப் ரசண்ட
   மரகதமு ராரியுஞ் செயங்கொள்
   குலிசகைவ லாரியுங் கொடுங்க           ணறநூலும்
அகலியபு ராணமும்ப் ரபஞ்ச
   சகலகலை நூல்களும் பரந்த
   அருமறைய நேகமுங் குவிந்தும்           அறியாத
அறிவுமறி யாமையுங் கடந்த
   அறிவுதிரு மேனியென் றுணர்ந்துன்
   அருணசர ணாரவிந்தமென்       றடைவேனோ
பகைகொள்துரி யோதனன் பிறந்து
   படைபொருத பாரதந் தெரிந்து
   பரியதொரு கோடுகொண் டுசண்ட வரைமீதே
பழுதறவி யாசனன் றியம்ப
   எழுதியவி நாயகன் சிவந்த
   பவளமத யானைபின் புவந்த        முருகோனே
மிகுதமர சாகரங் கலங்க
   எழுசிகர பூதரங் குலங்க
   விபரிதநி சாசரன் தியங்க                   அமராடி
விபுதர்குல வேழமங் கைதுங்க
   பரிமளப டீரகும் பவிம்ப
   ம்ருகமதப யோதரம் புணர்ந்த       பெருமாளே


பதம் பிரித்து உரை

குகையில் நவ நாதரும் சிறந்த
முகை வனச சாதனும் தயங்கு
குணமும் அசுரேசரும் தரங்கம் முரல் வேத

குகையில் - (மலைக்) குகையில் நவ நாதரும் - ஒன்பது சித்த நாதர்களும் சிறந்த - மேம்பட்ட முகை வனச - (திருமாலின் கொப்பூழாகிய) தாமரை மொட்டில் சாதனும் - தோன்றிய (பிரமனும்) தயங்கு - விளங்கும் குணமும் - முக்குணங்களும் அசுரேசரும் - அசுரர் தலைவர்களும் தரங்கம் - கடல் போல முரல் - ஒலிக்கின்ற வேத - வேதத்தை

குரகத புராரியும் ப்ரசண்ட
மரகத முராரியும் செயம் கொள்
குலிச கை வலாரியும் கொடுங்கண் அற நூலும்

குரகத - ( திரிபுரத்தை எரித்த போது தேரின்) குதிரையாகக் கொண்ட புராரியும் - அப்புரங்களை அழித்த சிவனும் ப்ரசண்ட - வீரம் மிக்கவரும் மரகத - பச்சை நிறத்தவரும் முராரியும் - முரன் என்ற அசுரனை அழித்தவரும் ஆகிய திருமாலும் செயம் கொள் - வெற்றி பெற்ற குலிச கை - குலிசாயுதத்தைக் கையில் கொண்டவனும் வலாரியும் - வலாரி என்ற அசுரனை அழித்தவனுமாகிய இந்திரனும் கொடுங்கண் - கடுமையான திட்டங்களை விதிக்கும் அற நு|லும் - தரும சாத்திர நூல்களும்

அகலிய புராணமும் ப்ரபஞ்ச
சகல கலை நூல்களும் பரந்த
அரு மறை அநேகமும் குவிந்தும் அறியாத

அகலிய புராணமும் - விரிவான புராணங்களும் ப்ரபஞ்ச சகல கலை நூல்களும் - உலகிலுள்ள கலை நூல்களும் பரந்த - விரிந்துள்ள அரு மறை அநேகமும் - அரிய வேதம் முதலிய நூல்கள் பலவும் குவிந்தும் - இவையெல்லாம் ஒன்று கூடிச் சேர்ந்து முயன்றும் அறியாத - அறிய முடியாத

அறிவும் அறியாமையும் கடந்த
அறிவு திருமேனி என்று உணர்ந்து உன்
அருண சரண் அரவிந்தம் என்று அடைவேனோ?

அறிவும் அறியாமையும் - அறிவு அறியாமை ஆகிய இரண்டிற்கும் கடந்த - அப்பாற்பட்ட அறிவு திருமேனி - அறிவு எதுவோ அதுவே உனது திரு மேனியாகும் என உணர்ந்து - என்று நான் உணர்ந்து உன் அருண சரண் அரவிந்தம் - உன்னுடைய சிவந்த தாமரை அன்ன திருவடியை என்று அடைவேனோ - என்று சேர்வேனோ?

பகை கொள் துரியோதனன் பிறந்து
படை பொருத பாரதம் தெரிந்து
பரியது ஒரு கோடு கொண்டு சண்ட வரை மீதே

பகை கொள் - பகைமை உணர்ச்சி கொண்ட  துரியோதனன் பிறந்து - துரியோதனன் தோன்றி படை - படைகளுடன் பொருத - போர் செய்த பாரதம் தெரிந்து - பாரத வரலாற்றை அறிந்து பரியது - பருத்த ஒரு - ஒற்றை கோடு கொண்டு - கொம்பு கொண்டு சண்ட -  மிக வலிமை வாய்ந்த வரை மீதே - மேரு மலை மேலே

பழுது அற வியாசன் அன்று இயம்ப
எழுதிய விநாயகன் சிவந்த
பவள மத யானை பின்பு வந்த முருகோனே

பழுது அற - பிழை இன்றி வியாசன் அன்று இயம்ப - வியாச முனிவர் அன்று சொல்லிவர எழுதிய விநாயகன் - விநாயக மூர்த்தியும் சிவந்த - சிவந்த பவள - பவள நிறத்தைக் கொண்ட மத யானை - மத யானையுமாகிய கணபதியின் பின்பு வந்த முருகோனே - பின்பு தோன்றிய குழந்தையே

மிகு தமர சாகரம் கலங்க
எழு சிகர பூதரம் குலுங்க
விபரித நிசாசரன் தியங்க அமர் ஆடி

மிகு தமர சாகரம் - அதிக ஒலி செய்யும் கடல் கலங்க - கலங்க எழு சிகர பூதரம் குலுங்க - சிகரங்களைக் கொண்ட ஏழு மலைகளும் குலுங்கி அசைவுற விபரித நிசாசரன் - மாறுபட்ட புத்தியைக் கொண்ட சூரன் தியங்க - கலக்கமுறும்படி அமர் ஆடி - போர் புரிந்து

விபுதர் குல வேழ மங்கை துங்க
பரிமள படீர கும்ப விம்ப
ம்ருக மத பயோதரம் புணர்ந்த பெருமாளே

விபுதர் குல - தேவர் குலத்திடையே வாழ்ந்தவளும் வேழ மங்கை - ஐராவதம் என்ற யானையால் வளர்க்கப்பட்டவளும் ஆகிய தேவசேனையின் துங்க - பரிசுத்தமானதும் பரிமள - நறு மணம் கொண்டதும் படீர - சந்தனம் அணிந்ததும் கும்ப - குடம் போன்றதும் விம்ப - ஒளி கொண்டதும் ம்ருக மத - கத்தூரி அணிந்ததுமான பயோதரம் - கொங்கையை புணர்ந்த பெருமாளே - அணைந்த பெருமாளே
சுருக்க உரை

குகையில் வசிக்கும் ஒன்பது சித்த நாதர்களும், தாமரை மலரில் வாழும் பிரமனும், முக்குணங்களும், அசுரர் தலைவர்களும், வேதத்தைக் குதிரையாகியக் கொண்ட சிவனும், திருமாலும், இந்திரனும், தரும நூல்களும், விரிவான புராணங்களும், வேதங்களும், ஒன்று கூடி முயன்றும் அறிய ஒண்ணாத, அறிவு அறியாமை ஆகிய இரண்டையும் கடந்த அறிவு எதுவோ, அதையே திருமேனியாகும் என்று உணர்ந்து உன் திருவடியை என்று சேர்வேனோ?
பாரதக் கதையை வியாசர் சொல்ல அன்று மேரு மலையில் ஒற்கை கொம்பினால் எழுதிய விநாயகருக்குத் தம்பியே மாறுபட்ட சூரனுடன் போர் புரிந்து, ஏழு மலைகளையும் அழித்தவனே ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட தேவசேனையின் தனங்களை அணைந்தவனே உன் தாமரைத் திருவடிகளை நான் என்று அடைவேன்?





No comments:

Post a Comment